செய்தி: //ஆளுநர் மாளிகையின் கெடுபிடிகள் மற்றும் அதிமுக-திமுக இடையேயான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சியை வழங்க வேண்டும் என்பதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்தார். அதன் ஒரு பகுதியாக தனது கூட்டணியில் இருந்த விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-விற்கு ஆதரவளிக்க அவர் முழு சுதந்திரம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இன்று மாலை விசிக தனது ஆதரவை தவெக-விற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. இதன் மூலம் விஜய்யின் தலைமையிலான அரசு அமைவது உறுதியாகியுள்ளது.//
ஸ்டாலின் ஆசியுடன் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தவெகவுக்கு என்பதே ஒரு சுவாரஸ்யமான கதையாடல்தான். ராகுல் காந்தி செய்த சீண்டலின் அடுத்த கட்டம் இது. 'வஞ்சிக்கப்பட்ட வாலிபனைத்' தம் நாடகத்தின் 'நடிகனாக்கி' விட்டார்கள். விஜய் இந்த 'நாடகத்தில்' வேடத்தை ஏற்றுக்கொண்டு இதை ஆரம்பித்தால் அவரால் தனக்கான வசனங்களை ஒப்பித்து காட்சிகளில் நடிக்கவும் முடியாது, எதிராக எதையும் பேசி திரைக்கதையை மாற்றவும் இயலாது. இந்த 'நாடகம்' அரங்கேறினால் அதற்குள் பல முரணான வசனங்களும் காட்சிகளும் நிகழ்த்தப்பட்டே ஆகும்.
திமுக தலைமையின் கணக்கு இப்படி இருக்கும்: விஜய்யால் இப்போதுள்ள நிலையில் சுலபமாக ஆட்சி அமைக்க இயலாது. கட்சியை உடைக்க எடப்பாடி உடன்பட மாட்டார். தன் எம்.எல்.ஏக்களை அவர் எப்படியோ கட்டுப்படுத்தி விடுவார். கலக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையும் போதுமானதாக ஒருவேளை அமைந்தாலும் அது எப்போதும் பிய்த்துக் கொண்டு போகும் எனத் தெரியாது. மேலும் அவர்கள் பாஜகவின் கைப்பாவைகள். அந்த ஆட்சியில் தொடர்ந்து தவெகவின் பாஜக ஆதரவு அரசியல் மீது திமுக அணிக் கட்சிகள் தாக்குதல் தொடுத்துக் கொண்டே இருக்கும். கட்சியை உடைத்ததால் எடப்பாடி அதிமுகவும் அத்தாக்குதலில் இணைந்து கொள்ளும். இதுவே திமுக கூட்டணிக் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரிப்பதானால் அது பாஜகவுக்கு செக் வைத்தது போலாகும். கூடவே அது தவெகவுக்கும் ஒரு செக் தான் - அவர்களை மறைமுகமாகக் கட்டுப்படுத்தி பாஜக சார்பு முடிவுகளை எடுக்கவிடாமல் பண்ண முடியும்.
பாஜக விஜய் மீது வழக்குகளைப் போட்டு நெருக்கடி கொடுத்தால் விஜய் வேறுவழியின்றி பாஜக பக்கம் சாய்ந்தால் திமுக கூட்டணியினர் கட்சியை முற்றுகையிட்டு அழுத்தம் கொடுக்க முடியும். ஆட்சியைக் கவிழ்க்க முடியும். அப்போது தேர்தல் வந்தாலும் அதை திமுக கூட்டணியால் நியாயப்படுத்த முடியும் (தமிழ் நாட்டின் உரிமைகளைக் காப்பாற்ற தவெகவினரின் துரோகத்தைத் தடுக்க செய்ய வேண்டியதாகிற்று).
இப்போது ஆட்சி அமைக்க முடியாமல் மறுதேர்தல் வந்தால் அது திமுகவுக்குப் பாதகமே. அதிமுக-பாஜக ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தால் அதனால் தமக்கு (விசாரணை, கைது என) சில சிக்கல்கள் கூட அடுத்த தேர்தல் நெருங்கும்போது வரலாம் என திமுக தலைமை யோசித்திருக்கலாம். அல்லது இது பாஜகவைக் கடுப்பேற்றவும் ஆட்சியை ஒரே சமயத்தில் வெளியே இருந்து ஆதரித்தும் எதிர்த்தும் அரசியல் செய்யவுமாக அவர்கள் உத்தேசிப்பதனால் எடுத்த முடிவாக இருக்கலாம்.
எனக்கென்னவோ காங்கிரஸும் திமுகவும் சேர்ந்தே இந்த நாடகத்தை மறைமுகமாக நடத்துவதாகத் தோன்றுகிறது. அல்லது தற்செயலாகவும் இருக்கலாம். பாஜகவின் திராவிட ஆட்சி ஒழிப்புத் திட்டத்தை ஹைஜேக் செய்யும் அரசியலாக இருக்கலாம். திராவிட கட்சிகளின் அஸ்தமனம் இத்தேர்தலுடன் ஆரம்பித்து விட்டது என எழுதியவர்களுக்கு இதையெல்லாம் பார்த்தால் கடுப்படிக்கும். எதையோ தூக்கி மூஞ்சியில் அடித்ததைப் போலிருக்கும்.
அதேநேரம் விஜய் இதையெல்லாம் மனதளவில் ஏற்றுக் கொண்டு ஆட்சியமைக்க அனுமதி கோருவாரா? பாஜக எதாவது புதிய முட்டுக்கட்டை இடுமா?
எதிரியின் எதிரி நண்பன் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் முதல் எதிரியின் நண்பனான தன் இரண்டாவது எதிரியை நண்பனாக்கி முதல் எதிரியை சுற்ற விடுவதை இப்போதே பார்க்கிறேன். தேர்தலுக்கு முந்தைய அரசியலைவிட தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சுவாரஸ்யமாக இருக்கிறது.
பி.கு: திருமா முதல்வராக்கப்படுவார் என்பதை நம்பவில்லை. துணை முதல்வராக்கலாம். ஆனால் அது ஜல்லிகட்டுக் காளை உரிமையாளர்களை இன்னும் வெறியேற்றுமே!
கருத்துகள்