கரூர் சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். கூட்ட நெரிசடியில் மக்கள் மிதிபட்டு இறக்கிறார்கள். ஒரு நிதானமான, கனிவான மனிதர் தன்னைத் தலைவராகவும் கருதக் கூடியரென்றால் அந்த இடத்தில் இருந்து ஓட மாட்டார். நிலைமையைப் பரிசீலிப்பார். அம்மக்களைக் காப்பாற்றுவதற்கும் மருத்துவ உதவி செய்வதற்கும் தன்னால் ஆனவற்றைச் செய்வார். அடுத்து நடந்த 'விபத்திலோ' 'குற்றத்திலோ' தன் பங்கு என்னவென யோசிப்பார். கூட்டம் நடந்த இடத்தைத் தேர்ந்ததிலோ அளித்ததிலோ தவறுகள் இருக்கலாம். ஆனால் கூட்டம் அதிகமாவதை அறிந்ததும் அதை சரிவர ஒழுங்குபடுத்துவதும் கூட்டம் அதிகமானால் அவர்களைப் படிப்படியாக வெளியேற்றி விபத்தைத் தவிர்ப்பதும் ஒரு ஒருங்கிணைப்பாளரின் பொறுப்பு. ஆக எப்படிப் பார்த்தாலும் விஜய்க்கு அதில் பங்குண்டு. அவர் தன்னால் நேரடியாக அது நிகழவில்லை என நினைத்தாலும் கூட அவருக்கு அதில் பங்குண்டு எனும்போது மக்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். இதயத்தில் இருந்து சிந்திப்போர் அப்படியே இருப்பர். ஆனால் விஜய் ஒரு வித்தியாசமான மனிதர் - சிலருக்கு இயல்பிலேயே பிறரிடத்தில் தன்னை வைத்துப் பார்த்து இரங்குகிற, வருத்தப்படுகிற திறன் இருக்காது. இது ஒன்று மூளைக் குறைபாடாகவோ (வலப்பக்க மூளையில் உள்ள சில பகுதிகள்) அல்லது மனப்பிரச்சினையாகவோ இருக்கும். பொதுவாக மன பிரச்சினை அதிகமானோரால் அடுத்தவர் பிரச்சினையைப் பார்க்க இயலாது என்பார்கள் (narcissism, antisocial disorder), bipolar disorder). விஜய்யின் பிரச்சினை என்னவென்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் மக்களுடன் பரவலாகப் போய் பழக் இயலாதவராக, அடுத்தவர்களின் துன்பங்களில் கலந்துகொண்டு இரக்கம் கொள்ள இயலாதவராக அவர் உள்ளதைப் பார்க்கையில் அவர் ஒரு நார்சிசிஸ்டாக, சமூக எதிர்ப்பண்புகள் கொண்டவராக இருக்கவே வாய்ப்பதிகம்.
எனக்கு கரூர் அசம்பாவிதத்திற்கு அவர் பொறுப்பா என்பதைவிட அவர் அப்போது வெளிப்படுத்திய நடத்தையே அதிக கொடூரமானதாகத் தெரிகிறது. ஏனென்றால் உள்ளுக்குள் ஒரு மரணத்திற்கும் தனக்குமுள்ள பொறுப்பை உணர முடியாதவர்களே ஹிட்லர், முசோலினி ஆகிறார்கள். ஹிட்லரைப் பற்றி ஒன்று சொல்வார்கள் - அவர் தன் உறவுக்காரரான ஒரு இளம் பெண்ணை நேசித்தார். கிட்டத்தட்ட கட்டாயப்படுத்தி தன்னுடன் வைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் அப்பெண் வேறொருவரை நேசிப்பது அறிந்ததும் கொன்று விட்டார். அதைக் குறித்து அவர் துளியும் குற்றவுணர்வு அடையவில்லை. அதுவே அவருக்கு நியாயமாகப் பட்டது - தன்னை மறுத்துவிட்டு ஒருவருக்கு வாழ அருகதையே இல்லையென நினைத்தார். இதுவேதான் தன் சிந்தாத்தத்தின்படி யூதர்களுக்கும் வாழ அருகதையே இல்லையென நினைக்க வைத்தது. இப்படி நினைப்போர் புறமே கொலை நிகழுமுன்னே அதை அகத்தே நிகழ்த்திவிடுவர். கொலை என்பது இன்னொருவரின் இடத்தை மறுப்பது, இன்னொருவரின் இருப்புக்கான நியாயம் இல்லையென நம்புவது. புறக்கொலையை விட அகக்கொலை இன்னும் மோசமானது. விஜய் ஒரு கூட்டத்திற்கு வரும்போது அங்கே தன்னைக் காணத் திரண்டுள்ள ஆயிரக்கணக்கானோரைக் காண்கையில் இவர்கள் எல்லாம் தன்னை நோக்கிப் பரவசம் கொள்ளும் ஒரே காரணத்திற்காகவே உயிருடன் இருக்கிறார்கள் எனத் தோன்றும். அவர்கள் இறந்துபோனாலும் தனக்காக இறக்கவே அவர்கள் பிறந்திருக்கிறார்கள் என அந்த தர்க்கத்தை நீட்டிப்பார்கள். மனித நேயமெல்லாம் இதற்கு குறுக்கே வராது. நடத்தையைத் தாண்டி இது ஒரு மனநிலை.
நான் மற்றொரு உதாரணம் சொல்கிறேன்: மனு ஷர்மா.
மனு ஷர்மா 1999இல் தில்லியில் ஒரு பாருக்கு நள்ளிரவில் போய் விஸ்கி கேட்கிறார். பாரில் சர்வீஸ் செய்யும் பெண்ணான ஜெஸிக்கா லால் அவரிடம் நேரமாகிவிட்டது, கிளம்புங்கள் என்கிறார். மனு ஷர்மா பெரும்பணக்கார, அரசியல்வாதி தகப்பனாரின் மகன். அவருக்கு வாழ்க்கையில் யாருமே எதையுமே மறுத்ததில்லை. அவரால் பிறரது துன்பங்களைப் புரிந்துகொள்ள இயலாது. அப்பண்பே அவருக்கு இல்லை. அவர் ஆயிரம் ரூபாய் டிப்ஸ் கொடுப்பதாகச் சொல்கிறார். ஜெஸிக்கா அப்போதும் மறுத்துவிட அவர் ஒரு துப்பாக்கியை எடுத்துச் சுட்டு விடுகிறார். ஜெஸிக்கா கொல்லப்பட அக்குற்றத்துக்கு மனு ஷர்மா சிறைசெல்வதற்கு 7 ஆண்டுகள் ஆகிவிடுகிறது - தலைமறைவாவது, சான்றுகளை மறைப்பது என தப்பிக்க பல மார்க்கங்களை நாடுகிறார். ஆனால் இக்குற்றம் வெகுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்த வேறுவழியின்றி சிறைக்குச் செல்கிறார். அவர் வெளிவந்தபின் செய்வதுதான் இங்கு கவனிக்கத்தக்க சம்பவம்: அவர் தன் பெயரை சித்தார்த் ஷர்மா என்று மாற்றிக்கொண்டு தன் அப்பாவின் மது உற்பத்தி தொழிலை விரிவுபடுத்துகிறார். அவர் அண்மையில் ஒரு புது ஸ்காட்ச் விஸ்கியை அறிமுகப்படுத்தினார். அதன் பெயர் "இந்திரி". இந்த விஸ்கி பாட்டிலின் லோகோதான் சிறப்பு - அதில் ஒரு பொட்டு இருக்கும். அதைப் பார்க்கவும் இந்திரியில் உள்ள எழுத்துருவையும் பார்க்க ஒரு பெண் பொட்டு வைத்துக் கொண்டிருப்பதைப் போலிருக்கும். அது எதையோ மக்களுக்கு நினைவுபடுத்தியது. எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்தவர்களுக்கு அது ஜெஸிக்காவின் தோற்றம் என்று தெரிந்தது. ஜெஸிக்கா அவரது படங்களில் அவ்வாறு பொட்டு வைத்திருப்பது பிரபலம். மனு எனும் சித்தார்த் ஏன் தன் குற்றத்தை, தன் வாழ்வின் கறுப்புப் பக்கத்தை, கடந்து வராமல் அதில் திளைத்திடவும் தான் உருவாக்கிய விஸ்கிக்கு அப்பெண்ணின் அடையாளத்தைக் கொடுக்கவும் முற்பட்டார். அதில் ஒரு சீண்டல் உண்டு - நான் இப்பெண்ணின் பெயரில் 'வேட்டையாடப்பட்டேன்', இப்பெண்ணின் நினைவிலே உங்களைச் சீண்டுவேன். என் விஸ்கியைக் குடிப்போர் அவளது ரத்தத்தையும் தானே குடிக்கிறீர்கள் எனும் விளையாட்டுத்தனம் அது. ஆனால் இப்படி ஒருவரது நினைவை வைத்து விளையாட ஒருவித குரூரம் வேண்டும். கரூர் சம்பவத்திற்குப் பின் சிறிதும் குற்றவுணர்வின்றி விஜய் மீண்டும் மேடைகளில் தோன்றி களமாடுவதைப் பார்க்க எனக்கு இதுதான் நினைவுக்கு வந்தது - 41 பேரின் உயிருக்கும் தனக்கும் எச்சம்மந்தமும் இல்லை, அது 'ஆளும் அரசு ஆடிய அரசியல் விளையாட்டு', தான் வருத்தப்படவே அவசியமில்லை, குற்றவுணர்வு கொள்ள தேவையில்லை என்பதே அவரது தோரணையாகவும் அவரது ரசிகர்களின் நியாயப்படுத்தலாகவும் இருந்தது. நாடி நரம்பெல்லாம் குரூரம் நிறைந்தவர்களால்தாம், மனதில் ஈரமே இல்லாதவர்களால்தாம் இப்படியெல்லாம் செய்ய இயலும்.
இதனால்தான் விஜய்யால் தேர்தலில் வெற்றிபெற்றதும் மக்களிடம் உடனடியாக நன்றி சொல்ல இயலவில்லை என நினைக்கிறேன். அவர் ஆபத்தை / விபரீதத்ததைக் கண்டு மட்டும் தப்பி ஓடுவதில்லை. மகிழ்ச்சியைக் கண்டும்தான். எது தீவிரமாக நடக்கும்போதும் தனக்குள், தன் மனதுக்குள் இருக்கும் ஒரு இருளான ரகசிய அறைக்குள் அவர் அடைக்கலம் தேடுகிறார். மேலும், தனக்கு அளிக்கப்பட்ட வெற்றி தனக்கான ஒரு உரிமைத்தகுதி (entitlement) என அவர் நினைக்கிறார். நீண்டகாலமாகவே தன்னை அவ்வாறு உயர்த்திடுவதற்கான தகுதி தனக்குண்டு, மக்கள் இப்போதுதான் உணர்ந்திருக்கிறார்கள் என ஒரு நம்பிக்கை உள்ளோர் இத்தனைக் காலம் அது நடக்காதது குறித்த கோபமும் வஞ்சமும் கொண்டிருப்பர். வெற்றி வரும்போது (அது பிறரால் வந்தாலும்) அவர்கள் அதை தனக்குள்ளேயே கொண்டாடிக் கொள்வது அதனால்தான். தன்னை வளர்த்து நட்சத்திரமாக்கின அப்பாவையும் அவர் அப்படியே நடத்தினார். அப்பா தன்னை வளர்க்கவில்லை. தாம் அவ்வாறு வளர்வதற்கான உரிமைத் தகுதி தனக்கு இருந்தது, ஆனால் தம் அப்பாவோ ஒரு இடைஞ்சலாகவும் எரிச்சலூட்டும் வழிகாட்டியாகவுமே இருந்தார் என இத்தகையோர் நினைப்பர். தன்னை எதிர்ப்போரை விஜய்யால் ஒருபோதும் மன்னிக்க இயலாது. தன்னை நிபந்தனையற்று நேசிப்போரை மட்டுமே ஏற்றுக்கொள்ள இயலும் என்று அவரை அறிந்தோர் கூறுகிறார்கள். இதெல்லாமே entitled நடத்தைத்தான். இவர்களுடைய உலகில் பிறர் ஒருபோதும் இருக்கவியலாது. தாமும் தன்னை வழிபடுவோரும் மட்டுமே இருக்க இயலும். அப்படி வழிபடுவோருக்கும் வேறு வழியில்லை, அதுவே அவர்களின் தலைவிதி, அதுவே ஒரே நியதி என நினைப்பர்.
இத்தகைய ஒருவர் சினிமாவிலும் மேடையிலும் தன்னை கூலான, விளையாட்டுத்தனமான, தன்னம்பிக்கையான, கனிவான, இளைஞர்களையும் எளியவர்களையும் அரவணைத்துப் போகிற, திறன் மிக்க ஒருவராகக் காட்டிக் கொண்டு அந்த முகமூடியின் பின்னால் ஒளிந்து கொள்கிறார். அதனாலே இந்த முகத்திரை கிழியும்போது அவர் ஓடி ஒளிகிறார். அவர் மக்களிடம் இருந்து மட்டுமல்ல தன்னிடம் இருந்து ஒளிகிறார். இத்தகையோர் தம் தனிப்பட்ட எண்ணங்களை, உணர்வுகளை, நடத்தையோ ரகசியமாக வைத்திருப்பதும், ஊடகங்களிடம் அதிகம் பேசத் தவிர்ப்பதும் இதனாலே. இவர்களால் சிறந்த நண்பர்களாக, சிறந்த காதலர்களாக, மகன்களாக, சமூக மனிதராக, தலைவராக இருக்க இயலாது.
இந்த மாதிரி ஒரு மனிதரைப் பிடித்து முதல்வர் ஆக்குகிறார்கள். கொஞ்சமாவது அறிவும் சுயசிந்தனையும் கொண்ட சமூகத்தில் இத்தகையோருக்கு பத்து வாக்குகள் கூட கிடைக்காது. இதுவும் ஒரு கல்லை முதல்வராக்குவதும் ஒன்றுதான். இன்னொரு கேள்வி: விஜய்க்கும் மோடிக்கும் ஆளுமை அளவிலோ இரக்கமற்ற நடத்தையிலோ நார்சிசத்திலோ எந்த வேறுபாடும் இல்லை. விஜய்க்கு வாக்களித்தவர்கள் ஏன் மோடியை மட்டும் எதிர்க்கிறார்கள்? அது நியாயமே இல்லை. இவர் நடிகராக இருந்து அரசியல் நடிப்பவர். அவர் பிறவி நடிகர். இருவருமே எத்தனை நூறு பேர்களின் ரத்தத்தில் இருந்தும் துளியும் கூச்சமின்றி எழுந்து வந்து அதிகாரத்தை அணைப்பவர்கள். ஆகையால் இதே மக்கள் அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு அமோக ஆதரவைக் கொடுக்க வேண்டும். அதுவே நியாயம்.
இதில் ஆகப்பெரிய கொடுமை இவருக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து இவருடன் கூட்டணி வைக்க முன்வருவது, பேரம் பேசுவது. அவர் இவரைப் போன்றே சமூகப் பொறுப்போ கருணையோ அற்ற மனிதராகவே இருக்க வேண்டும். மாநில நலன், மதவாத எதிர்ப்பு, வலதுசாரி அரசியலை எதிர்க்கிற ஒரு அரசியலை எப்படி இவரை வைத்துக் கொண்டு ராகுல் காந்தி அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரைச் செய்ய இயலும்? இந்த ராகுல் காந்தியைத்தான் நாம் மோடிக்கு மாற்றாக எண்ணி கனவு காண்கிறோமா? பொறுப்பில்லாத தொலைநோக்கில்லாத மனிதர்!
கருத்துகள்