Skip to main content

சிந்திக்க அனுமதிக்காத சினிமா



 நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கையில் நம் எண்ணங்களையும் கருத்துக்களையும் உணர்வுகளையும் தொகுத்துக் கொள்ள அவகாசமொன்றை அது அளிக்கிறது. அதனாலே வாசிக்க வாசிக்க தெளிவாகவும் கூர்மையாகவும் சிந்திக்கிற, நினைத்ததைத் தொகுத்துச் சொல்கிற, பளிச்சென்று முடிவெடுக்க இயல்கிறது. வாசிப்பவர்கள் நினைத்ததை எல்லாம் உணர்வுவயப்பட்டுச் செய்பவர்கள் அல்லர். அதுவே பக்குவம். ஆனால் சினிமா இதை அனுமதிப்பதில்லை. சினிமா நமக்குள் பிம்பங்களையும் ஒலிகளையும் அனுப்பியவாறே இருக்கிறது. இவையே எண்ணங்களாகவும் கருத்துக்களாகவும் உணர்வுகளாகவும் இருப்பதால் நம்மால் இவற்றைப் பரிசீலிக்க இயல்வதில்லை. அங்கு கற்பனைக்கும் சிந்தனைக்குமான இடம் மிகமிகக் குறைவு. வாசித்து ஒரு சொல் நமக்குள் சென்று அது ஒலியாக, பிம்பமாக மாறி உணர்வாகவோ சிந்தனையாகவோ உருக்கொள்ள சில நுண் வினாடிகள் எடுக்கும். சினிமா அதை அனுமதிக்காமல் ரெடி மேடாக எல்லாவற்றையும் அளிக்கிறது. அதாவது சினிமா பார்க்க நீங்கள் பாமரராக இருந்தாலே போதும். சொல்லப்போனால் 99% வெகுஜனப் படங்கள் உங்களை ஒரு பாமரராகக் கருதியே கதை சொல்கின்றன. நீங்கள் உங்களை அவ்வாறு மாற்றியே ரசிக்க முடியும். தமிழில் வெற்றி பெற்ற எந்த படத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு அங்குலமும் பாமரத்தனம் மட்டுமே இருக்கும். இதனாலே இலக்கியத்தில் இருந்து சினிமாவுக்கு வரும்போது அதை ஆழமாக உள்வாங்க முடிகிறது (அதாவது அது ஒரு குப்பையெனப் புரிந்துகொள்ள முடிகிறது). ஆனால் சினிமாவில் இருந்து இலக்கியத்துக்கு வந்தால் அதைப் படிக்கக் கூட இயலாது: ஒன்றுமே புரியாது.

நான் மேலே சினிமாவைக் குறித்துச் சொல்வதை இன்று திறன்பேசிப் பயன்பாடு, ரீல்ஸ் மீதான ஈடுபாடு குறித்த ஆய்வுகள் சொல்கின்றன. இவை நம் மூளையின் அமைப்பையே மாற்றுவதாகக் கூறுகின்றன. இவற்றால் மக்கள் கவனம் அற்றவர்களாக, யோசிக்கவும் பேசவும் எழுதவும் முடியாதவர்களாக மாறுவதாக இன்றைய ஆய்வுகள் சொல்கின்றன.
தமிழில் ஒரு பெரிய பிரச்சினை நாம் சினிமாவை இவ்விதமாகப் பார்ப்பதில்லை என்பது. நமது சிந்தனையாளர்கள், புரட்சியாளர்கள் இவ்வாறு சினிமாவை விமர்சிக்கவில்லை. ஆகையால் நாம் சினிமாவைக் கொண்டாடத் தொடங்கி அதை மதமாக்கி விட்டோம். விளைவாக ஒரு பாமரச் சமூகம் ஆகிவிட்டோம்.
குடியை விட சினிமா மோகமே கேடுகெட்டது. மது ஒழிப்பைவிட சினிமா ஒழிப்பே அவசியம். நம் மாநிலத்தி இத்தனை குடிகாரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் நமது ஊரில் மக்கள் நசுங்கிச் செத்ததோ சட்டம் ஒழுங்கு கெட்டதோ இல்லை. சினிமா மோகத்தால் நடந்திருக்கிறது. குடிகாரர்கள் ஒன்று சேர்ந்து ஒரு மலினமான நடிகரை முதல்வராக்கவில்லை. சினிமா ரசிகர்கள் செய்திருக்கிறார்கள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...