Skip to main content

”கபாலியும்” ரஞ்சித்தை பல்லக்கில் ஏற்றிக் கொண்டு போகிறவர்களின் அரசியலும்

Image result for kabali

முதலில் இதை சொல்லி விடுகிறேன். எனக்கு ”கபாலி” ட்ரெய்லர் பிடித்திருந்தது. குறிப்பாய் அந்த வசனம்: கபாலி என்றால் பழைய படத்தில் நம்பியார் டேய் கபாலி என்றதும் ஓடிப் போய் எசமான் என்று நிற்கிறவன்னு நினைச்சியா என வில்லனை நோக்கி ரஜினி பேசும் இடம். ரஜினியிடம் இப்போதும் அந்த நெருப்பு அணையாமல் இருக்கிறது. அதுவும் இறுக்கமான உடலை சட்டென நெகிழ்வாக்கி குழைத்து குனிந்து கைகளை குவித்து அவர் மிமிக்றி செய்யும் படுவேகம். அப்போது முகத்தை மட்டும் உணர்ச்சியில்லாமல் கண்களில் கோபத்தை தக்க வைப்பது. அந்த வசனத்தில் உள்ள நுணுக்கமான சாதி விமர்சனத்தையும் ரசித்தேன். தேவர் சாதியினர் பட்டவர்த்தமாய் தம்மை முன்வைப்பதற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு.
இந்த டிரெய்லரை ஒட்டி முகநூலில் ரஞ்சித்தின் சாதியை கொண்டாடி முன்வைக்கப்படும் பதிவுகளை விமர்சித்து ஸ்வர வைத்தீ வெளியிட்ட வீடியோவையும் பார்த்தேன். எனக்கு அவர் சொல்வதில் உடன்பாடு உண்டு. ரஞ்சித் தெளிவாகவே இருக்கிறார். அவர் சாதிப் பெருமைக்காக படம் எடுப்பதில்லை. “மெட்ராஸ்” படத்தில் வி.சி.க மீது நுணுக்கமான விமர்சனம் இருந்தது. எனக்குத் தெரிந்து சுயசாதியின் பிரச்சனைகளை கூர்மையாக பேசின ஒரே இயக்குநர் ரஞ்சித் தான். ஆனால் தலித் ஆதரவாளர்களும் முற்போக்காளர்களும் இந்த சுயவிமர்சனத்தை ஒதுக்கி வைத்து விட்டு “தலித் வாழ்க்கை ஒரு தலித்தால் படமாக்கப்பட்டு விட்டது” என்பதை கொண்டாடுவதிலேயே குறியாக இருந்தனர். ”காட்சிப்பிழை” இதற்காக ஒரு தனி சிறப்பிதழே கொண்டு வந்தது. படத்தை ஆய்வு செய்ய அல்ல, தலித் சாதி அடையாளத்தை பதிவு செய்வதை ஒரு வரலாற்று நிகழ்வாய் மாற்றுவதற்கு. முழுக்க தலித்துகள் மட்டுமே வேலை செய்த படம் என்று ஒருவர் முகநூலில் அதை பாராட்டி இருந்தார். இப்போது “கபாலி” டிரெய்லர் வெளியாகும் போதும் இந்த சாதி புரொமோஷன் ஆரம்பித்திருக்கிறது. ஸ்வர வைத்தீ இதைத் தான் கண்டிக்கிறார்.
முன்னர் பிராமண ஆதிக்கம் கொண்ட படங்கள் வந்தன. அதன் பிறகு தேவர்கள், நாடார்கள், கௌண்டர்கள் என இடைநிலை சாதிகள் வெளிப்படையாகவே தம்மை கொண்டாடும் படங்கள் வந்தன. கடந்த சில வருடங்களில் இந்த வெளிப்படைப் போக்கு குறைந்திருக்கிறது. மதுரைப்படங்கள், மண்சார்ந்த படங்கள் எனும் போர்வையில் இப்படங்கள் வருகின்றன. அதையும் மீறி சாதிய ஆதிக்கமும் வன்முறையும் சித்தரிக்கப்படும் போது அதை விமர்சிக்கிறோம். நேற்றைய ஹிந்துவில் ரவிக்குமார் எவ்வாறு “தேவர் மகன்” போன்ற படங்கள் தலித்துகள் மீதான வன்முறைக்கு வித்திட்டன என கருத்து சொல்லி இருக்கிறார். என் ஐயமெல்லாம் தலித் ஆதரவாளர்கள் ரஞ்சித்தின் படங்களை ஒரு பதாகை போல் பயன்படுத்துவது ஆதிக்க சாதியினரின் அதெ கத்தியை கையில் தூக்குவது ஆகாதா என்பதே.
உன் சாதிப் பெருமையை நீ பேசு, என் சாதிப்பெருமையை நான் பேசுகிறேன் எனும் சூழல் ஆரோக்கியமானதா? இது நம்மை அந்நியப்படுத்தாதா? தலித்துகள் நாங்கள் தனிக்குழுவாய் இயங்கி படம் எடுக்கிறோம், எங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறோம் என்பதான பிம்பங்கள் பிறருக்கு எரிச்சல் ஏற்படுத்தாதா?
ஏனென்றால் “கல்யாண சமையல் சாதம்” போன்ற படங்கள் ரொம்ப பிராமணீயமாக இருக்கிறது என விமர்சிக்கப்பட்ட போது ஹிந்துவில் பரத்வாஜ் ரங்கன் ஒரு கேள்வி எழுப்பினார்: தேவர்கள் தம் சாதி வழக்கங்களை, வட்டார வழக்கை படமாக்கினால் அது பண்பாட்டு சினிமா, பிராமணர்கள் செய்தால் அது ஆதிக்க அரசியலா என்றார். தத்தமது சாதியின் வரலாற்றை பேசுவதில் சிக்கல் இல்லை. ஆனால் அங்கு பிற மக்களுக்கும் இடம் அளிக்க வேண்டும். முழுக்க சுயசாதி உணர்வு மட்டுமே நிரம்பி இருக்கக் கூடாது. எந்த படைப்பும் பிறருக்கு சுவாசிப்பதற்கான இடத்தை அளிக்க வேண்டும். “அட்டைக்கத்தியில்” அந்த இடம் இருந்தது. அது தலித் பிரச்சனையை, வரலாற்றை பேசும் படம் மட்டுமே அல்ல. அதில் சமகால வாழ்வின் பின்நவீனத்துவ கூறு சித்தரிக்கப்பட்டிருந்தது. “மெட்ராஸ்” படத்தை தமிழகத்தை அனைத்து சாதியினரும் ரசித்தது அதில் தன் சமூகத்தின் அரசியலில், வன்முறைக்குள் மாட்டின ஒரு எளிய இளைஞனின் அவஸ்தையும் பயமும் சித்தரிக்கப்பட்டதாய் அவர்கள் அதை கற்பனை பண்ணிக் கொண்டதால் தான். ஆனால் தலித் ஆதரவாளர்களுக்கு இதெல்லாம் முக்கியமாய் படவில்லை. அவர்கள் ”மெட்ராஸை” மற்றொரு “தேவர் மகனாய்” மாற்றிக் கொண்டார்கள். இது அப்படத்துக்கு செய்யும் அநீதி என அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அப்படத்தின் மையமே எப்படி தலித் சாதி அரசியல் இங்கு சீரழிந்து, தன் கண்ணையே குத்துவதாய் ஆயிற்று என்பது தானே. அதை இவர்கள் கவனமாய் பேசாமல் தவிர்த்து, “மெட்ராஸை” தலித் வாழ்க்கை ஆவணமாய் மட்டுமே பார்த்து முன்வைத்ததன் அரசியல் தான் என்ன?

 எப்போதும் இயக்குநர்களாலோ பார்வையாளர்களாலோ சிக்கல் இல்லை. படத்தின் மீது பல வண்ண பெயிண்ட் அடிக்கும் (ஒருவர் எப்படி நீலம் “மெட்ராஸ்” முழுக்க வண்ணமாய் பயன்படுத்தப்பட்டிருந்தது என சிலாகித்திருந்தார். இதில் என்ன பெரிய தத்துவம் இருக்கிறது வியக்க?) ஆட்களால் தான் பிரச்சனைகள் உருவாகின்றன. ரஞ்சித் தன் அரசியலை சுயசாதி விமர்சனத்தோடு நுணுக்கத்தோடு, சாதிய தம்பட்டம் அடிக்காமல் தான் முன்வைக்கிறார். ஆனால் அவரை பல்லக்கில் ஏற்றி கொண்டு போகிறவர்களை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது!

Comments

G. கோபி said…
Good words sir,


already you said about kabali movie otherwise medras movie is denote for saathi arasiyal
oru eluthaalanin allathu yethenum oru thurai sarntha padaippalan sathi matrum arasiyalai
purinthu vaithirukkavendum anal samuga matrum pothu thala reethiya thangalukkana suya adaiyalathirkkaga mattume yethenum padaippai anuguvathu yenpathu migavum arivatra thanmai ranjithai vida avarukku sathi matrum arasiyal sayam pusubavargal samugathirkku migavum apaththanvargal. Nallathoru parvai matrum vimarsanamum kuda

Gopiriyan

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...