Skip to main content

எம்.ஜி.ஆரை சந்திப்பது

Image result for எம்.ஜி.ஆர்

 எங்கள் அலுவலக செக்யூரிட்டி தன் பாக்கெட்டில் எப்போதும் எம்.ஜி.ஆர் முகம் பொறித்த பேனா வைத்திருப்பார். அவரிடம் பேனா கேட்டால் இந்த பேனா சரியா எழுதாதுங்க என ஒருமுறை எடுத்து உதறி விட்டு மீண்டும் பாக்கெட்டில் வைத்துக் கொள்வார். நான் அவரிடம் “நீங்க எம்.ஜி.ஆரை நேரில் பார்த்ததுண்டா?” எனக் கேட்டேன். தலையாட்டினார். ஏதாவது பொதுக்கூட்டத்தில் சந்தித்திருப்பார் என நினைத்து விசாரித்தேன். அவர் நேரில் பார்த்து பேசியுள்ளதாய் சொன்னார்.

 செக்யூரிட்டி அப்போது ராமநாதபுரத்தில் நடைபாதையில் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். நடைபாதை கடைக்காரர்களுக்கு போலிசால் தினம் தொந்தரவு. அதனால் நூற்றுக்கு மேல் கடைக்காரர்கள் கூடி எம்.ஜி.ஆரிடம் புகார் தெரிவிக்க போகிறார்கள். எம்.ஜி.ஆர் அப்போது முதலமைச்சர். ஆனால் இவர்களோ ஏதோ பஞ்சாயத்து தலைவரை பார்க்க போவது போல் கிளம்புகிறார்கள். எம்.ஜி.ஆர் தன் தோட்ட வீட்டில் இருப்பார். பாதுகாப்புக்கு போலீஸ் கிடையாது. அவரது சண்டைப்பயிற்சியாளர் தான் ஒரே பாதுகாப்பு துணை. உள்ளே சென்று இவர்கள் எம்.ஜி.ஆரிடம் முறையிடுகிறார்கள். எம்.ஜி.ஆர் போலீஸ் அதிகாரி ஒருவரை அழைத்து விசாரிக்கிறார். “சும்மா மிரட்டியிருப்பாங்க. கேஸ் எல்லாம் போட்டிருக்க மாட்டாங்க” என அதிகாரி சல்ஜாப்பு சொல்ல எம்.ஜி.ஆர் அவரை கடுமையாய் எச்சரிக்கிறார். பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது என உறுதியாய் கூறுகிறார்.
 எம்.ஜி.ஆர் வீட்டுக்கு அவரை தேடி செல்பவர்களுக்கு எப்போதும் இரண்டு பந்திகளில் உணவு விளம்பப்படும். ஒன்று சைவம். இன்னொன்று அசைவம். அவர்களை எம்.ஜி.ஆர் உணவருந்தி விட்டு போகச் சொல்கிறார். அது மட்டுமல்ல முன்னூறு ரூபாய் கொடுத்து பகிர்ந்து கொள்ள கேட்கிறார்.
இதையெல்லாம் நேரில் பார்த்தவரே சொன்னாலும் இதில் கொஞ்சம் புனைவுத்தன்மை உள்ளதை என்னால் ஊகிக்க முடிந்தது. பொதுவாய் எம்.ஜி.ஆர் பற்றி சொல்லப்படும் கதைகளை தொகுத்தால் அது புனிதரைப் பற்றின ஒரு புராண இதிகாசம் ஆகி விடும்.
எனக்கு உண்மையில் ஆச்சரியமளித்தது அன்றைய அரசியல் தலைவர்கள் உண்மையில் இந்தளவுக்கு சந்திக்க சுலபமானவர்களாய் இருந்தார்களா என்பது தான். இன்று ஒரு எம்.எல்.ஏ, வட்டச்செயலாளர் போகட்டும் ஒரு பிரபல எழுத்தாளரைக் கூட அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் சந்திக்க முடியாது. ஜெயலலிதாவை அவர் கட்சியின் சிறுதலைவர்களே எளிதில் பார்க்க இயலாது. நடைபாதை வியாபாரிகள் எல்லாம் அவர் வசிக்கும் தெரு பக்கமே போக முடியாது.
பொதுமக்கள் கூட இன்று நேரமின்மையால் தவிக்கிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் ஒரு தங்க நாணயம் போல் மக்களுக்கு தோன்றுகிறது. சும்மா இருக்கும் எழுத்தாளனுக்கு கூட வாரம் மூன்று கூட்டங்கள் இருக்கிறது தன் இருப்பை காட்டிக் கொள்ள. சிறு சிறு வேலைகள் ஆயிரம் நம்மை காத்திருக்கின்றன.
அது மட்டுமல்ல, பரஸ்பரம் சந்தேகம், பாதுகாப்பு பயம் அதிகரித்து விட்டது.
செக்யூரிட்டி நான் கேட்காமலே சொன்னார் “நாங்க இன்னிக்கும் எம்.ஜி.ஆருக்காகத் தான் அந்த முத்திரயில ஓட்டு போடுறோம். இந்த அம்மா நாட்டுக்கு நல்லது பண்றாங்க தான். ஆனா இவங்களுக்கு ரொம்ப ஹெட்வெயிட்டு சார். எம்.ஜி.ஆர் அப்படி இல்ல”
எனக்கு என்னமோ இது நம் காலத்தின் பிரச்சனை எனத் தோன்றுகிறது. நாம் இன்று எண்ணற்ற கதவுகளால் மூடப்பட்ட உலகில் வாழ்கிறோம். சுலபத்தில் அணுகப்படக் கூடியவராய் இருப்பவர் கூட பெயரளவில் தான் அப்படி இருக்கிறார். ஒருவர் உங்களை வெளியே பார்த்ததும் புன்னகைத்து அரவணைத்து விசாரிக்கிறார் என்பதாலே அடுத்த நாள் அவர் வீட்டுக்கு அனுமதி வாங்காமல் போய் நிற்க முடியாது. இன்று ஒவ்வொரு சிறு வட்டத்திற்கு உள்ளும் ஒரு அந்தஸ்து படிநிலை உள்ளது. சுலபத்தில் சந்திக்க முடிகிறவர் மதிப்பற்றவர் என நினைக்கிறோம். நிறைய நேரம் உள்ளவர் உதவாக்கரை என கருதுகிறோம். அதனால் எப்போதும் வேலையில் இருப்பவராய், நேரமே இல்லாதவராய், முன் திட்டமிட்ட சந்திக்க வேண்டியவராய் நம்மை மாற்றிக் கொண்டிருக்கிறோம். இன்று ஒருவர் கூட “எப்போ வேணும்னாலும் வாங்க பார்க்கலாம்” என சொல்ல மாட்டார்கள். “போன் பண்ணுங்க பாஸ்” என்பார்கள். உலகம் மாறி விட்டது.

நாமே இப்படி இருக்கும் போது தலைவர்கள்?

Comments

Senthil Prabu said…
romba correct abilash..

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...