முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம்.ஜி.ஆரை சந்திப்பது

Image result for எம்.ஜி.ஆர்

 எங்கள் அலுவலக செக்யூரிட்டி தன் பாக்கெட்டில் எப்போதும் எம்.ஜி.ஆர் முகம் பொறித்த பேனா வைத்திருப்பார். அவரிடம் பேனா கேட்டால் இந்த பேனா சரியா எழுதாதுங்க என ஒருமுறை எடுத்து உதறி விட்டு மீண்டும் பாக்கெட்டில் வைத்துக் கொள்வார். நான் அவரிடம் “நீங்க எம்.ஜி.ஆரை நேரில் பார்த்ததுண்டா?” எனக் கேட்டேன். தலையாட்டினார். ஏதாவது பொதுக்கூட்டத்தில் சந்தித்திருப்பார் என நினைத்து விசாரித்தேன். அவர் நேரில் பார்த்து பேசியுள்ளதாய் சொன்னார்.

 செக்யூரிட்டி அப்போது ராமநாதபுரத்தில் நடைபாதையில் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். நடைபாதை கடைக்காரர்களுக்கு போலிசால் தினம் தொந்தரவு. அதனால் நூற்றுக்கு மேல் கடைக்காரர்கள் கூடி எம்.ஜி.ஆரிடம் புகார் தெரிவிக்க போகிறார்கள். எம்.ஜி.ஆர் அப்போது முதலமைச்சர். ஆனால் இவர்களோ ஏதோ பஞ்சாயத்து தலைவரை பார்க்க போவது போல் கிளம்புகிறார்கள். எம்.ஜி.ஆர் தன் தோட்ட வீட்டில் இருப்பார். பாதுகாப்புக்கு போலீஸ் கிடையாது. அவரது சண்டைப்பயிற்சியாளர் தான் ஒரே பாதுகாப்பு துணை. உள்ளே சென்று இவர்கள் எம்.ஜி.ஆரிடம் முறையிடுகிறார்கள். எம்.ஜி.ஆர் போலீஸ் அதிகாரி ஒருவரை அழைத்து விசாரிக்கிறார். “சும்மா மிரட்டியிருப்பாங்க. கேஸ் எல்லாம் போட்டிருக்க மாட்டாங்க” என அதிகாரி சல்ஜாப்பு சொல்ல எம்.ஜி.ஆர் அவரை கடுமையாய் எச்சரிக்கிறார். பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது என உறுதியாய் கூறுகிறார்.
 எம்.ஜி.ஆர் வீட்டுக்கு அவரை தேடி செல்பவர்களுக்கு எப்போதும் இரண்டு பந்திகளில் உணவு விளம்பப்படும். ஒன்று சைவம். இன்னொன்று அசைவம். அவர்களை எம்.ஜி.ஆர் உணவருந்தி விட்டு போகச் சொல்கிறார். அது மட்டுமல்ல முன்னூறு ரூபாய் கொடுத்து பகிர்ந்து கொள்ள கேட்கிறார்.
இதையெல்லாம் நேரில் பார்த்தவரே சொன்னாலும் இதில் கொஞ்சம் புனைவுத்தன்மை உள்ளதை என்னால் ஊகிக்க முடிந்தது. பொதுவாய் எம்.ஜி.ஆர் பற்றி சொல்லப்படும் கதைகளை தொகுத்தால் அது புனிதரைப் பற்றின ஒரு புராண இதிகாசம் ஆகி விடும்.
எனக்கு உண்மையில் ஆச்சரியமளித்தது அன்றைய அரசியல் தலைவர்கள் உண்மையில் இந்தளவுக்கு சந்திக்க சுலபமானவர்களாய் இருந்தார்களா என்பது தான். இன்று ஒரு எம்.எல்.ஏ, வட்டச்செயலாளர் போகட்டும் ஒரு பிரபல எழுத்தாளரைக் கூட அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் சந்திக்க முடியாது. ஜெயலலிதாவை அவர் கட்சியின் சிறுதலைவர்களே எளிதில் பார்க்க இயலாது. நடைபாதை வியாபாரிகள் எல்லாம் அவர் வசிக்கும் தெரு பக்கமே போக முடியாது.
பொதுமக்கள் கூட இன்று நேரமின்மையால் தவிக்கிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் ஒரு தங்க நாணயம் போல் மக்களுக்கு தோன்றுகிறது. சும்மா இருக்கும் எழுத்தாளனுக்கு கூட வாரம் மூன்று கூட்டங்கள் இருக்கிறது தன் இருப்பை காட்டிக் கொள்ள. சிறு சிறு வேலைகள் ஆயிரம் நம்மை காத்திருக்கின்றன.
அது மட்டுமல்ல, பரஸ்பரம் சந்தேகம், பாதுகாப்பு பயம் அதிகரித்து விட்டது.
செக்யூரிட்டி நான் கேட்காமலே சொன்னார் “நாங்க இன்னிக்கும் எம்.ஜி.ஆருக்காகத் தான் அந்த முத்திரயில ஓட்டு போடுறோம். இந்த அம்மா நாட்டுக்கு நல்லது பண்றாங்க தான். ஆனா இவங்களுக்கு ரொம்ப ஹெட்வெயிட்டு சார். எம்.ஜி.ஆர் அப்படி இல்ல”
எனக்கு என்னமோ இது நம் காலத்தின் பிரச்சனை எனத் தோன்றுகிறது. நாம் இன்று எண்ணற்ற கதவுகளால் மூடப்பட்ட உலகில் வாழ்கிறோம். சுலபத்தில் அணுகப்படக் கூடியவராய் இருப்பவர் கூட பெயரளவில் தான் அப்படி இருக்கிறார். ஒருவர் உங்களை வெளியே பார்த்ததும் புன்னகைத்து அரவணைத்து விசாரிக்கிறார் என்பதாலே அடுத்த நாள் அவர் வீட்டுக்கு அனுமதி வாங்காமல் போய் நிற்க முடியாது. இன்று ஒவ்வொரு சிறு வட்டத்திற்கு உள்ளும் ஒரு அந்தஸ்து படிநிலை உள்ளது. சுலபத்தில் சந்திக்க முடிகிறவர் மதிப்பற்றவர் என நினைக்கிறோம். நிறைய நேரம் உள்ளவர் உதவாக்கரை என கருதுகிறோம். அதனால் எப்போதும் வேலையில் இருப்பவராய், நேரமே இல்லாதவராய், முன் திட்டமிட்ட சந்திக்க வேண்டியவராய் நம்மை மாற்றிக் கொண்டிருக்கிறோம். இன்று ஒருவர் கூட “எப்போ வேணும்னாலும் வாங்க பார்க்கலாம்” என சொல்ல மாட்டார்கள். “போன் பண்ணுங்க பாஸ்” என்பார்கள். உலகம் மாறி விட்டது.

நாமே இப்படி இருக்கும் போது தலைவர்கள்?

கருத்துகள்

Senthil Prabu இவ்வாறு கூறியுள்ளார்…
romba correct abilash..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...