சமீபத்தில் ஒரு மின் சக்கர நாற்காலி வாங்கும் பொருட்டு நண்பர்களிடம் உதவி கோரி வந்தேன். இது குறித்து எழுதவும் செய்தேன். அப்போது ஒரு அறக்கட்டளை நடத்தும் நண்பரையும் நாடினேன். அவரது எதிர்வினை சுவாரஸ்யமாக இருந்தது: அவர் தயங்கினார்; உங்களுக்கு இவ்விசயத்தில் உதவினால் பிறர் கேள்வி கேட்பார்களே என்றார். எனக்கு அவரது கவலையின் காரணம் விளங்கியது. பரவாயில்லை என்றேன். வேண்டுமென்றால் கடனாக தருகிறேன் என்றார். அவர் நல்ல மனம் படைத்தவர். அதனால் கடன் தர முன்வருகிறார். ஆனால் ஊனமுற்றவருக்காக உபகரணம் வாங்க உதவுவதில் அந்த தயக்கம் எங்கிருந்து வருகிறது? இதை ஒரு குற்றமாக சமூகம் கருதும் என அவர் ஏன் அஞ்சுகிறார்?