முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐ.பி.எல் 2017 – ரெண்டாவது வாரம்


 நான் இதை எழுதும் போது எட்டு புள்ளிகளுடன் வெற்றிப்படிக்கட்டில் முதல் படியில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. அதற்கு சற்று பின்னால் ஆறு புள்ளிகளுடன் கொல்கொத்தா அணி உள்ளது. தில்லி, பூனே, பஞ்சாப், ஹைதராபாத் (சன் ரைசர்ஸ்) ஆகிய அணிகள் தலா நான்கு புள்ளிகளுடன் அடுத்த இடத்தை வகிக்கின்றன. ஆக வலுவான அணிகள் முன்னிலையில் உள்ளன.

 ஆனால் இந்த புள்ளி விபரம் கூறுவது போல் முன்னிலை எப்படி அத்தனை துல்லியமாய் இருக்கவில்லை. வெற்றி தோல்விகள் கலவையாக அமைந்தன. மும்பை, கொல்கொத்தா போன்ற வலுவான அணிகள் மண்ணைக் கவ்வவும் செய்தன. சிறிய அணிகள் ஜொலிக்கவும் செய்தன. ஒரு நெருக்கடியான நிலை ஏற்படும் போது மும்பை, கொல்கொத்தா அணிகளின் அனுபவமிக்க நட்சத்திர வீரர்கள் தத்தம் அணிகளை கரைசேர்த்தனர். ஆனால் சிறிய அணிகளுக்கு இந்த சௌகர்யம் இருக்கவில்லை. பூனே அணி ஸ்மித்தையும் பவுலர்களையும் முழுக்க நம்பி இருக்கிறது. பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய அணிகள் ஒன்று சேர்ந்து சிறப்பாய் ஆடும் போது அட்டகாசமான அணிகளாகவும் சொதப்பும் போது ஒன்றாய் நீரில் மூழ்கும் கப்பலாகவும் தோன்றுகின்றன. அணி தடுமாறும் போது பல்வேறு கட்டங்களில் தோள் கொடுத்து மீட்கும் ரட்சகர்கள் இந்த அணிகளில் குறைவு.
 தில்லி அணியை பொறுத்தமட்டில் சஹீர்கானின் அணித்தலைமையும், கள அமைப்புகளும், ஒரு வேகவீச்சாளராக அவரது கட்டுப்பாடும் கலை நுணுக்கங்களும் வியக்க வைக்கின்றன. சஹீர் பந்து வீசுவதைக் காணும் போது தற்போது இந்திய அணியில் ஆடி வரும் வேகவீச்சாளர்களை விட சிறப்பாய் வீசுகிறாரே, இவர் ஏன் ஓய்வு பெற்றார் என நமக்கு ஏக்கம் ஏற்படாமல் இல்லை.
பாதாளத்தில்…
இரண்டே புள்ளிகளுடன் அதர பாதாளத்தில் கிடக்கும் இரு அணிகள்: பங்களூர் மற்றும் குஜராத்.
பங்களூர் அணியின் கேப்டன் கோலி ஆட்டத்தொடரின் துவக்கத்தில் காயம் காரணமாய் விலகினார். அவர் இடத்தில் வாட்சன் தலைமை தாங்கினார். இப்போது கோலி திரும்ப ஆடத் துவங்கி உள்ளார். முக்கியமான பேட்ஸ்மேன் எ.பி டிவில்லியர்ஸும் முழுமையான உடல்திறத்துடன் இல்லை. கிறிஸ் கெய்லின் ஆட்டநிலை சிறப்பாக இல்லை. இப்படி பேட்டிங், அணித்தலைமை எதிலும் ஸ்திரத்தன்மை இல்லாதது பங்களூர் அணியை பாதித்துள்ளது.
குஜராத் அணியின் தலைவர் சுரேஷ் ரெய்னா கடந்த ஆறு மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். அதற்கு காரணம் அவரது குழந்தை உடல்நலமற்று இருந்தது. இது ரெய்னாவை மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதித்தது. அவரும் காயமுற்றார். ரஞ்சி கோப்பையிலும் ரெய்னா ஆடவில்லை. இந்திய கிரிக்கெட் அணிக்காய் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் இருந்தும் ரெய்னா நீக்கப்பட்டார். இப்போது ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ள ரெய்னாவின் உடல்நிலையும் ஆட்டநிலையும் சிறப்பாக இல்லை. ரெய்னா இப்போது பார்க்க தொப்பையுடன் தஞ்சாவூர் பொம்மை போல் இருப்பது காண அவரது ரசிகர்களுக்கு வியப்பாக இருக்கும். ரெய்னாவின் தடுமாற்றங்கள் அவரது அணியை பாதித்துள்ளன. மேலும் குஜராத் அணி என்பது ஒரு சமநிலையான அணி அல்ல. அந்த அணியில் போதுமான மத்திய வரிசை பேட்ஸ்மேன்கள் இல்லை. பிஞ்ச், டுவெய்ன் ஸ்மித் போன்ற துவக்க வரிசை பேட்ஸ்மேன்கள் மத்திய வரிசையில் ஆடுவது அணியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பூரிக்கான கிழங்கை எடுத்து சமோசா செய்தது போன்ற அணி இது. விளைவாக அவர்களின் ஆட்டம் பரிதாபமாய் உள்ளது. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தான் ஒரே ஆறுதல். அவரது பேட்டிங் பட்டாசாக உள்ளது.
அதிக ரன் அடித்த பேட்ஸ்மேன்களில் மும்பை அணியின் ரானா முன்னிலையில் இருக்கிறார். இவர் ஒரு அதிரடியான அதேவேளை நிலையான பேட்ஸ்மேன். தனது நிலைத்த ஆட்டம் மூலம் மும்பை அணியின் முதுகெலும்பாக மாறி உள்ளார். இவரை அடுத்த கம்பீர், ஸ்மித், பொலார்ட், சாம்ஸன் ஆகியோரின் பேட்டிங்கும் சிறப்பாக உள்ளது. தில்லி அணியில் ஆடும் சாம்ஸன் கேரளாவை சேர்ந்தவர். அவர் பூனே அணிக்கு எதிராக 63 பந்துகளில் அடித்து 102 ஒரு அற்புதமான சதம். சற்றும் அலுங்காமல் நலுங்காமல் அவர் சிக்ஸர் அடிக்கும் பாணி, பந்துக்கு முன் கூட்டியே தயாராகி நின்று நினைத்த இடத்தில் அட்டகாசமாய் டைமிங் செய்து அவர் சிக்ஸர் விளாசுவது பார்க்க கோடி கண்கள் வேண்டும். அதே போல் கொல்கொத்தா அணிக்காக ஆடும் மனீஷ் பாண்டே மும்பைக்கு எதிராக 47 பந்துகளில் அடித்த 81 குறிப்பிடத்தக்கது. ஒரு மெத்தனமான ஆடுதளத்தில் ஆரம்பத்தில் டைமிங் இன்றி திணறிய பாண்டே மெல்ல மெல்ல பார்முக்கு வந்து இறுதியில் தன் அசகாய ஹிட்டிங் மூலம் அணியை ஒரு நல்ல ஸ்கோருக்கு கொண்டு போனார். முறையே 10 மற்றும் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள புவனேஷ்வர் குமார் மற்றும் இம்ரான் தாஹிர் பவுலர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளார்கள்.

வரும் வாரத்தில் மும்பை, கொல்கொத்தா அணிகள் மேலும் வெற்றிகளை குவிக்குமா அல்லது சிறிய அணிகளான பூனே, தில்லி, சன்ரைசர்ஸ் ஆகியவை முன்னிலை பெறுமா என காண்போம்.
நன்றி: கல்கி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...