Skip to main content

இலக்கிய வெறுப்பை சமாளிப்பது எப்படி?

நான் எழுத வந்து ஒன்பது வருடங்கள் ஆகின்றன. நான் கடைபிடிக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கை இது: இலக்கியவாதிகள் அல்லது வாசகர்களுடன் மது அருந்த மாட்டேன். அல்லது நான்குக்கு மேல் இலக்கியவாதிகள் குழுமியிருக்கும் அறைக்குள் மாட்டிக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் இந்த இரு சந்தர்பங்களிலும் இலக்கியவாதிகளுக்கே பிரத்யேகமாக உள்ள வெறுப்பு ஒரு ஆவி போல் வெளியே வருவதை காண நேரிடும்.

 இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை: நம் இலக்கியவாதிகளுக்குள் கண்மூடித்தன்மான வெறுப்பு பீறிடுகிறது. இந்த வெறுப்பை யார் மீது காட்டலாம் என அவகாசம் தேடிக் காத்திருப்பார்கள். பொதுவாக யாராவது சர்ச்சையில் மாட்டினால் அதற்கு சம்மந்தமில்லாதவர்கள் வந்து அவர் மீது இந்த வெறுப்பை தாராளமாய் கக்குவார்கள். மது சந்திப்புகளின் போது ஒரு கொள்கை ரீதியான கேள்வி கேட்கிறேன் எனும் போர்வையில் உங்களை காயப்படுத்தும் ஒரு கருத்தை சொல்வார்கள். இதை சொல்பவர்கள் உங்களுக்கு மிகவும் பிரியமானவர்களாக இருப்பார்கள். மிகுந்த மரியாதை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் உங்களை காயப்படுத்த எந்த காரணமும் இராது. ஆனாலும் ஒரு கண்மூடித்தனமாய் மூட்டமான கோபத்தை உங்கள் மீது அவர்கள் வைத்திருப்பார்கள். வாய்ப்பு கிடைத்தால் என்கவுண்டர் செய்வர்கள். என்கவுண்டருக்கு முன்பும் பின்பும் ஒரு பரிசுத்தமான புன்னகையை உதட்டில் தவழ விடுவார்கள். பல ஹாலிவுட் படங்களில் வரும் சைக்கோ கொலைகாரர்களைப் போல் இனிமையான குரலை கொண்டிருப்பார்கள்.
இலக்கிய வட்டாரத்தில் பலருக்கும் ஏற்படும் கசப்புக்கு, காயங்களுக்கு இந்த வெறுப்பே காரணம். யாருக்கும் யார் மீது தனிப்பட்ட கோபம் இல்லை; புகார்கள் இல்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் டிராகுலாவாக தயங்க மாட்டார்கள். கடித்த பின்பும் உங்கள் மீது டிராகுலா முழுமையான காதலுடனே இருப்பார். உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார். ஆனால் இருட்டில் மீண்டும் தனியாக மாட்டினால் கடிக்க தவற மாட்டார். இந்த வன்மத்துக்கு தீர்வே இல்லை.
இதற்கு விதிவிலக்கு உண்டா?
1)   வெள்ளந்தியான எழுத்தாளர்கள், 2) எல்லாரிடமும் நட்பு கொள்வதில் இயல்பான ஊக்கம் கொண்டவர்கள், 3) லட்சியவாதிகள்.
4) தினமும் பக்கம்பக்கமாய் எழுதுகிறவர்களும் விதிவிலக்கு (நிறைய எழுதும் போது மனதில் உள்ள விஷம் தீர்ந்து விடும்). தமிழில் அதிகமாக சர்ச்சையில் மாட்டும் எழுத்தாளர்களிடம் இந்த வெறுப்பு உண்மையில் இல்லை. அவர்களை நம்பி நீங்கள் எந்த பாதாளத்திலும் கூட செல்லலாம். இத்தகையோரை இனம் காண ஒரு சுலப வழி உண்டு.
நீங்கள் ஏதாவது ஒரு சர்ச்சையில் மாட்டினால் அதில் சற்றும் சம்மந்தப்படாத சிலர் எங்கிருந்தோ எழுந்து வருவார்கள். உங்களை கடுமையாய் சாடி எழுதுவார்கள். அல்லது அப்படி உங்களை சாடும் படி பிறரை தூண்டுவார்கள். உங்கள் மீது கண்டனங்கள் எழும் போது அவர்கள் அப்படி மகிழ்ச்சி கொள்வார்கள். இத்தனைக்கும் உங்களுக்கும் அவர்களுக்கும் எந்த தனிப்பட்ட விரோதமும் இராது. வெளியே பார்த்தால் ஒதுங்கிப் போய் விடுவார்கள் நீங்களாக சென்று பேசினால் நட்பு பாராட்டுவார்கள். ஆனால் உங்களை காயப்படுத்த ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தால் மட்டும் பொந்தில் இருந்து எழுந்து வருவார்கள்.
இவர்களின் பிரச்சனை என்ன?
1)   பொதுவாக எழுத்தாளன் துக்கத்தாலும், எரிச்சலாலும், கசப்பாலும் பீடிக்கப்பட்டவன். இந்த எதிர் உணர்வுகள் தாம் படைப்பு சக்தியாக அவனுக்குள் மாற்றம் கொள்கின்றன. ஆனால் எழுதாத போது இந்த எதிர் உணர்வுகள் எழுத்தாளனை அரித்துத் தின்னத் துவங்கும். அப்போது யார் மீது பொறாமை கொள்கிறார்களோ அல்லது யார் சொல்லும் கருத்து தமக்கு எரிச்சல் ஏற்படுத்துகிறதோ அவர்கள் மீது அல்லது சும்மா எதிரில் மாட்டும் யாராவது ஒருவர் மீது கசப்பை கக்குவார்கள். Zodiac படத்தில் வரும் சீரியல் கொலைகாரன் சொல்வான்: “எனக்கு தலைவலி அதிகமாகும் போது கொலை செய்வேன். தலைவலி உடனே போய் விடும்.” இவர்கள் அந்த வகை.
2)   இவர்கள் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருப்பார்கள். அதை இலக்கிய வட்டத்திலும் பலரும் படித்து விட்டு வேண்டுமென்றே தன்னை உதாசீனிப்பதாய் கற்பிதம் கொள்வார்கள். அந்த கற்பிதத்தை வலுவாக நம்புவார்கள். ஆக, தன் தொகுப்பு பற்றி பேசாதவர்கள் அனைவரையும் கடும் விரோதத்துடன் காண்பார்கள். அல்லது நீங்கள் அவரை பாராட்டியிருப்பீர்கள். ஆனால் அதை ஒரு விமர்சனமாய் எழுதி பதிவு செய்ய உங்களுக்கு அவகாசம் இருக்காது. உங்களை சாகடிக்க முடிவெடுப்பார்கள். இப்படி ஒரு அற்ப காரணம் தான் வெறுப்பின் பின்னிருக்கும். பத்திரிகை ஆசிரியராய் இருப்பவர்கள், விமர்சகர்கள் இது போன்ற வெறுப்பாளரிடம் சிக்க வாய்ப்புகள் அதிகம்.
3)   கருத்து சொல்பவர்களை இவர்களுக்கு கண்டாலே அலர்ஜி. நீங்கள் உகாண்டாவின் அரசியல் பற்றி ஒரு பின்னூட்டமோ நிலைத்தகவலோ இட்டிருக்கலாம். ஆனால அதன் மூலம் உங்களை ஜென்மவிரோதியாய் கருதும் பலபேர் தோன்றி காத்திருப்பதை அறிய மாட்டீர்கள்.
4)   முகாம் அரசியல். நீங்க இன்ன முகாமை சேர்ந்தவர் என முத்திரை குத்தி விட்டால் உங்களுக்கு எங்கு அடி விழுந்தாலும் அதைக் கண்டு கைதட்ட பத்து பேர் தோன்றுவார்கள். பிறகு அவர்கள் கூட்டு சேர்ந்து நாலு ஊமைக்குத்து குத்துவார்கள். என்ன பிரச்சனை என்றே பல சமயம் அடிப்பவர்களுக்கு தெரிந்திராது. ”நீ என் நண்பனின் நண்பனின் எதிரின் நண்பனின் விரோதி, அதனால் சாவுடா” என்பதே இவர்களின் நிலைப்பாடாக இருக்கும்.

இந்த வெறுப்பை எப்படி எதிர்கொள்வது?
இன்று முகநூல் மூலம் இந்த வெறுப்பு பதிவாகிறது. ஒரு கருத்துப்போர் நடக்கிறது எனும் போர்வையில் தனிப்பட்ட வஞ்சமே வெளிப்படுகிறது. உங்கள் மீதான தாக்குதலுக்கு நீங்கள் பதிலளிக்கையில் நீங்களும் இந்த பாவனையில் பங்கு கொள்ள நேரிடும். முதல் படியாய், இது போன்ற பதிவுகளுக்கு பின்னூட்டங்களுக்கு பதில் கூறக் கூடாது. மாறாக, இவர்களை நேரில் கண்டோ போனில் அழைத்தோ பேசி விட வேண்டும். பதிவர்கள் இதை சற்றும் எதிர்பார்க்க மாட்டார்கள். நேரில் பேசும் போது அவர்களின் பொய் அம்பலம் ஆகி விடும். உங்கள் மீதான வெறுப்பு அவர்கள் குரலில் வெளிப்பட்டு விடும். மேலும் பொதுவெளியில் வைத்து உங்களை வறுத்தெடுக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கப்படும். இன்னொரு சிறந்த வழி உள்ளது. இவர்கள் வேலை பார்க்கும் அலுவலகம், இவர்களின் உயரதிகாரியை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் புகார் செய்யுங்கள். அல்லது நேராக இவர்களின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரிடம் பேசுங்கள். இது கேட்க சிறுபிள்ளைத்தனமாய் தெரியலாம். ஆனா இலக்கிய வெறுப்பாளர்களின் வாலை ஒட்ட நறுக்க இம்மூன்றும் சிறந்த வழிகள். இவை நான் கண்டுபிடித்தவை அல்ல. சில இலக்கியவாதிகள் ஏற்கனவே பிரயோகித்து வெற்றி கண்டுள்ள மார்க்கங்கள் இவை. நான் முதல் வழியையே இப்போதெல்லாம் பயன்படுத்துகிறேன். ஏனென்றால் நம் மீது வெறுப்பை துப்புபவர்கள் நம் நண்பர்களே. நேரடியாய் நாம் விசாரிக்கும் போது அவர்களுக்கு லஜ்ஜையாய் இருக்கும். குறைந்தது, இவனைப் பற்றி திட்டி எழுதினால் போனைப் போட்டு காதைக் கடிப்பானே என தயங்குவார்கள். எழுத்தில் பதில் சொல்லவே கூடாது.


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...