முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனிதா: உயிர்த்தியாகம் கேட்கிறதா தமிழ் மனம்?


இந்த பதிவு அனிதாவின் தற்கொலைக் காரணங்கள் பற்றியது அல்ல. அனிதாவின் தற்கொலையை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதே என் கேள்வி.
இது தற்கொலை அல்ல, ஒரு அரசியல் அறைகூவல், லட்சியத்துக்கான உயிர்த்தியாகம், சமூக நீதிக்கான களப்பலி என சில நண்பர்களிடன் என்னிடம் கூறினர். தொடர்ந்து முகநூலில் இந்த கோணத்தில் எழுதப்பட்ட ஏகப்பட்ட பதிவுகளைக் கண்டேன். நம் சமூகத்தில் உடலை வருத்தியோ அழித்தோ நடக்கும் போராட்டங்கள் மிகப்பெரிய உணர்வெழுச்சியை கிளப்புவதை கவனித்திருக்கிறேன். காந்தியின் அரசியில் போராட்ட வடிவமே இது தான். பகத்சிங், கோட்சே (அவரும் ஒரு சுதந்திர போராளி தான்), வாஞ்சிநாதன் துவங்கி முத்துக்குமரன், அனிதா வரை எத்தனை எத்தனையோ பேர் தன் உயிரை தியாகம் செய்து நம் சமூகத்தின் ஆழ்மனதை அசைத்திருக்கிறார்கள். நாம் திடுக்கிட்டு விழித்து சில நிமிடங்கள் கதறி இருக்கிறோம். கோபத்தில் கத்தி இருக்கிறோம். நம் அரசியல் பிரக்ஞையை தற்காலிகமாய் விழிக்க வைக்கிறது என்பதற்காகவே இத்தகைய உயிர்த்தியாகங்களுக்கு தனி மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த உயிர்பலிகள் பெரிய அரசியல் எழுச்சிகளுக்கு வலிகோலும் என்று பல்லாயிரம் பேர் இன்றும் நம்புகிறோம்.
 ஆனால் அப்படியான பெரும் மாற்றங்கள் உயிர்த்தியாகங்களின் அடிப்படையில் இந்தியாவில் நிகழ்ந்துள்ளனவா, அவை எவை எனும் கேள்விகள் எழுப்பினால் அதற்கு தெளிவான நேர்ம்றையான பதில்கள் இராது. மாறாக, உயிர்த்தியாகங்கள் சிறு சிறு அலைகளாய் நம் அரசியல் மனதின் பின்னால் எழுந்து வந்து நம்மை ஒருமுகப்படுத்துகின்றன, முக்கியமான் அரசியல், சமூக மாற்றங்களுக்கு உயிர்ப்பூட்டுகின்றன என ஒரு தரப்பினர் நம்புகிறார்கள். சமூக அரசியல் இயக்கங்களுக்கு உயிர்த்தியாகங்கள் விசையை அளிக்கலாம் என்பதை ஏற்கிறேன். ஆனால் உயிர்த்தியாகங்கள் இன்றியும் இந்த இயக்கங்கள் செவ்வனே செயல்பட முடியும். உதாரணமாய், நமது தேசத்தின் மாபெரும் அரசியல் இயக்கமான காந்திய இயக்கம் உயிர்பலியை கோரவில்லை (எதிர்பாராமல் நடந்தவை தவிர. அந்த பலிகளையும் காந்தி கொண்டாடவில்லை.). போராட்டங்களின் போது மக்கள் இறக்கும் தருவாய் ஏற்பட்டால் காந்தி உடனே போராட்டங்களை நிறுத்தி விடுவார். அவரது உண்ணாநிலை போராட்டங்களும் அவ்வாறே மிகக்கச்சிதமாய் உடலின் சாத்தியங்களை உணர்ந்து நடத்தப்பட்டன. எந்த அளவு பட்டினியை உடல் தாங்கும், அதற்கு உடலை எப்படியெல்லாம் தயாரிக்க வேண்டும் என காந்தி அறிந்து செயல்பட்டார். உடல்நலமில்லாமல் ஆகும் போது அவர் உண்ணாநிலை போராட்டம் செய்ய மாட்டார். ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் காந்தியை கடுமையாய் பாதித்தன. மக்களின் உயிர்களை தியாக தீபங்களாய் எரிய விடுவோம் என அவர் கூவவில்லை. அந்த படுகொலைகளே நடந்திருக்கக் கூடாது, இனி ஆங்கிலேய அரசுக்கு ஆளும் தகுதி இல்லை என்று அறிவித்தார்.
தமிழகத்தின் மட்டுமல்ல இந்தியாவின் மாபெரும் சமூக அரசியல் இயக்கங்களில் ஒன்று பெரியாரின் பகுத்தறிவு இயக்கம். இந்த மாநிலத்தின் தலைவிதியையே மாற்றி அமைந்த போராட்ட வரலாறு திராவிட கழகத்தினுடையது. ஆனால் நான் அறிந்து அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு உயிர்பலிகள் தேவைப்படவில்லை.
உயிர்த் தியாகங்களுக்கு ஒரு பங்கு உள்ளன. ஆனால் அவை இன்றியமையாதவை அல்ல. ஒருவேளை கொரில்லா இயக்கங்களில் உயிர்பலிகள் தேவையிருக்கலாம். ஆனால் நாம் ஒரு மக்களாட்சி சமூகம் அல்லவா?
அனிதாவின் தற்கொலையைப் பற்றி கண்கலங்க, சொற்களில் கண்ணீர் பிசுபிசுப்புடன் எழுதும் பலரும் அவர் தற்கொலை செய்திருக்க வேண்டாம் என கூறவில்லை. “ஏனம்மா நீ போனாய்?” என்கிறவர்கள் “நீ போயிருக்கக் கூடாது” என திடமாக கூறவில்லை. நம்மில் பலருக்குள்ளும் அவரது தற்கொலையை ஏற்று அதை ஒரு தீரச்செயலாய் பாராட்டும் விழைவு துடிக்கிறது. போர்க்களத்தில் அமர்ந்து தலைவிரிக் கோலமாய் பிணத்தில் மடியில் கிடத்தில் அழுது மன்றாடும் புறநானூற்று காலத் தாயைப் போல் நடந்து கொள்கிறோம்: “போய் விட்டாயே தங்கமே!” என்று தான் அவள் புலம்புவாள். “நீ போகாமல் இருந்திருக்கலாமே” என அழ மாட்டாள். ஏனெனில் மகனின் உயிர்பலி சமூகத்துக்கு அவசியம் என அவள் நம்பினாள்.
இன்று அனிதாவுக்காக புலம்பும் பலருக்குள்ளும் அந்த பழங்குடி தமிழ்த் தாய் தான் இருக்கிறாள். அவள் மரணத்தை நாம் மறைமுகமாய் ஆதரிக்கிறோம். இந்த நோக்கம் நமக்கே புலனாகும் தருணங்களில் “இது தற்கொலை அல்ல, அரசுகள் நிகழ்த்திய சமூக படுகொலை” என வாதத்தை திருப்புகிறோம். இது சமூகக் கொலை என்றால் ஏன் அவள் உயிர்த்தியாகம் தேவை தான் என முரணாக நம் மனம் ஒரே சமயம் யோசிக்கிறது?
நமக்குள் இன்னமும் அந்த பழங்குடி மனம் விழித்துக் கொண்டு தான் இருக்கிறது என்பதை இச்சம்பவம் காட்டுகிறது. அனிதாவை குலசாமியாக பார்க்கத் தூண்டுவது நடுகற்களை வழிபட்ட ஒரு சமூகம் தானே? எந்த கொந்தளிக்கும் பிரச்சனைக்கும் நமது துயரத்தின் தரப்பிலோ, நமது வெஞ்சினத்தை வெளிப்படுத்தும் முகமாகவோ ஒருவர் தன்னுயிரை நீக்க வேண்டும் என நம் சமூக பழங்குடி மனம் எப்போதும் ஏங்குகிறது. அது நிகழ்ந்ததும் ஒரு நடுகல்லை முகநூலில் அமைக்கிறோம். முத்துக்குமரனுக்கு வைத்த நடுகல் அருகே அனிதாவுக்கும் இனி ஒன்று இருக்கும்.

அனிதாவை பலியாக்கியது மத்திய அரசும், டம்மி அதிமுக ஆட்சியும் தான். ஆனால் அந்த பலியை விழைந்தது நீங்கள் தானே?

கருத்துகள்

வேகநரி இவ்வாறு கூறியுள்ளார்…
நீட் தேர்வு -அனிதா தற்கொலை உங்க பதிவுகள் படித்தேன் நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. தற்கொலைகளை கொண்டாடி, மேலும் உசுப்பு ஏற்றும் செயல்களை தான் அரசியல் கட்சிகளும், ஜாதிகட்சிகளும், புரச்சிகாரர்களும் தமிழகத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே சிந்தனை கொண்டவர்கள்.ஒரே குட்டையில் ஊறியவர்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...