முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னாச்சு?


நண்பர் ஆஸாத் ஒரு மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டிருந்தார்: “உடம்புக்கு ஒன்றுமில்லையே?” நான் பிளாகை அப்டேட் செய்து ரெண்டு வாரம் ஆகிறது. அதனால் தான்.

Dear Abilash,

How are you and your family ?

We all are okay and experienced with mild earth quake.

Past two weeks there is no new addition found in your web site.

Any health issue ? I think you are busy in mid exams.

Take care.

With Regards,

M.AZAD,
Kuwait.

 உடம்பு சௌக்கியமாக இருக்கிறது. காலைத் தவிர. இரு வாரங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து சென்னைக்கு வர பேருந்து நிலையம் நோக்கி ஆட்டோவில் போய்க் கொண்டிருந்தேன். ஆட்டோவில் போகும் போது எனக்கு ஒரு கெட்டப் பழக்கம்: ஓரமாய் சாய்ந்து அமர்வேன். ஆடுகிற ஆட்டத்தில் என்னை சமனம் செய்து கொள்ள் அப்படி ஒரு ஏற்பாடு. அப்படி அமர்கையில் சிலநேரம் கால் கொஞ்சம் வெளியே நீட்டிக் கொள்ளும். ஏதாவது வண்டி வருவது கண்டால் உடனே உள்ளிழுத்துக் கொள்வேன். இம்முறையும் அப்படியே. ஆட்டோக்காரர் ஓவர் துடிப்பான ஆசாமி. விர்விர்ரென போய்க் கொண்டிருந்தார். சாலை நடுவே ரெண்டு அரைத்தூண்கள். நான் என்னவென்றே கணிக்கும் முன் அவர் இரண்டுக்கும் இடையில் ஆட்டோவை நுழைத்து, தமன்னாவின் இடையை தழுவுவது போல் வளைந்து வெளி வந்தார். வெளியே லேசாய் நீட்டியிருந்த இடதுகால் பாதம் தூணில் மோதி வலி தலையில் மின் அதிர்ச்சி போல் சொடுக்கியது. ஏதோ பெரிய பிரச்சனை தான் என அந்த நொடியே உணர்ந்து கொண்டேன்.
கடுமையான வலி. தலைகுனிந்து சில நிமிடங்கள் முனகி அழுத பின் தான் நிலைப்பெற்றேன். ஆட்டோக்காரர் தண்ணீர் எல்லாம் தந்து உபசரித்தார். ஆனால் “பேருந்து நிலையம் வேண்டாம், ஆஸ்பத்திரி போங்க” என்றேன். அவர் இன்னும் அதிக வேகத்தில் ரேஸ் விட்டார். அவரை அமைதிப்படுத்தி அலுங்காமல் குலுங்காமல் ஆஸ்பத்திரியை வந்தடைய படாதபாடு பட்டேன்.
ஆஸ்பத்திரியில் கால் எலும்பில் மெல்லிதாய் ஒரு கீறல் ஏற்பட்டுள்ளது என்றார்கள். மாத்திரை கொடுத்தார்கள். ஊசி போட்டார்கள். வலி குறைந்தது. ஆனால் பயம் என்னை அனகோண்டா போல் கவ்வியது. பெங்களூருக்கு வந்து தனியாய் வீடு எடுத்து தங்கிய பின் முதன்முதலாய் இப்போது தான் காயம் ஏற்படுகிறது. உதவிக்கு யாரும் இல்லை. சென்னையில் மனைவிக்கும் உடல் நலமில்லாமல் இருந்தது. ஊரில் என் பாட்டியை என் அம்மாவின் பொறுப்பில் விட்டிருந்தார்கள். அவராலும் என்னை பார்த்துக் கொள்ள வர முடியாது. ஞாயிறும் திங்களும் விடுமுறை. சாப்பிட வெளியே போக முடியாது. சமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க வேண்டும். வலி அடுத்த நாள் கடுமையானால் என்னால் தனியாக வீட்டு வேலைகளை கவனிக்க முடியுமா? செவ்வாய் கிழமையில் இருந்து கல்லூரிக்கு போக முடியுமா?
 கூட பணி புரியும் நண்பர் ரத்னமணி தான் உதவினார். காய்கறி, உணவு, மருந்து என எல்லாம் வாங்கிக் கொடுத்தார். இரண்டு நாட்களும் வந்து விசாரித்துப் போனார். ஒருவழியாய் சமாளித்தேன். என் அதிர்ஷ்டம் வலியும் வெகுவாய் குறைந்து வந்தது. இப்போது வகுப்பில் நின்று பேச முடிகிறது.
இந்த விபத்து என் கவனத்தை தடம் மாற்றி விட்டது.
 இன்னொரு பக்கம், என் வகுப்புகள். இந்த செமஸ்டரில் நான் முதன்முறையாய் ஒரு core paper கற்பிக்கிறேன். இலக்கிய கோட்பாடுகள். அடுத்த வருடம் வரை பொது ஆங்கிலம் மட்டுமே கற்பிக்க வாய்ப்பளிப்பார்கள் என்றே நினைத்தேன். ஆனால் இன்ப அதிர்ச்சியாய் இப்போதே ஒரு பிரதானமான பாடத்தை எடுக்கத் தந்து விட்டார்கள். அதற்கான வாசிப்பு, தயாரிப்பு ஆகியவை என் கணிசமான ஓய்வு நேரத்தை எடுத்துக் கொண்டன.
முதலில் அமைப்பியல் பற்றி விவாதித்தேன். அமைப்பியலை சுலபமாய் புரிந்து கொள்ளும் வண்ணம் சினிமா காட்சிகள், டிவி விளம்பரங்கள் என பல பண்பாட்டுப் பிரதிகளை வகுப்பில் காட்டி அமைப்பியலைக் கொண்டு அவற்றை அலச முயன்றேன். இன்றைய வகுப்பில் மோடி, மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகிய தலைவர்கள் தம் தோற்றத்தை எப்படி கட்டமைத்தார்கள்; அதிலுள்ள வேறுபாடுகள் என்ன, இந்த பிம்பங்களின் பின்னால் சமூக பண்பாட்டு, சித்தாந்த கட்டமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என விவாதித்தோம். இன்னொரு வகுப்பில் அந்நியன் படத்தில் எப்படி வர்ணம் பற்றின நம்பிக்கை அம்பி அந்நியனாய் உருமாறுவதை நியாயப்படுத்த, நம்ப வைக்க உதவுகிறது என பேசினோம். 90களில் கோக் விளம்பரங்கள், பேட்மேன் படத்தில் வரும் விவிலிய கட்டமைப்புகள் என விவாதித்து விவாதித்து கடந்த இரு வாரங்களில் நானே நிறைய விசயங்களை புதுசாய் கற்றுக் கொண்டேன்.
கடந்த சில வருடங்களாய் எனக்கு பாடம் எடுப்பதில் அலுப்பு ஏற்பட்டிருந்தது. அதற்கு பல காரணங்களை கற்பித்திருந்தேன். ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி விட்டன இந்த கோட்பாட்டு வகுப்புகள். நான் இதுவரை இவ்வளவு ஆர்வமாய், மனம் ஊன்றிப் போய் பாடம் எடுத்ததில்லை. நான் எந்தளவுக்கு லயித்துப் போயிருக்கிறேன் என்றால் எழுதுவதையே மறந்து விட்டேன்.
இரண்டு கட்டுரை நூல்களை தொகுக்கும் பணியும் நடந்தது. ”தொண்ணூறுகளின் சினிமா” மற்றும் “பெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா?” இரண்டாவது, கடந்த எட்டு வருடங்களில் பெண்களின் உளவியல் பற்றி நான் எழுதின கட்டுரைகளின் தொகுப்பு. இந்த பணியும் என்னை முழுக்க இழுத்துக் கொண்டது.
ஆஸாத்தின் மின்னஞ்சலைக் கண்ட போது தான் “அடடே நம்  பிளாகையே மறந்து விட்டோமே” என நினைத்துக் கொண்டேன். உடனே ஒரு கட்டுரையை பதிவேற்றி விட்டு இப்போது இந்த குறிப்பை எழுதுகிறேன்.

தோசைக்கல் சூடாகி, மாவும் ரெடியாகி விட்டது. இனி தினமும் தோசை வரும்!

கருத்துகள்

ஜீவி இவ்வாறு கூறியுள்ளார்…
குமுதத்தில் என்று நினைக்கிறேன். பார்த்தேனே, உங்களை?..
premkumar இவ்வாறு கூறியுள்ளார்…
Take care your health Sir
Sendhilkumar AV இவ்வாறு கூறியுள்ளார்…
Abilash..Take care !!!
ஒரு சந்தேகம் அந்த சிறு விபத்துக்கும் ...இந்த அமைப்பியல் தத்துவத்துக்கும் என்ன சம்பந்தம் ?
Senthil Prabu இவ்வாறு கூறியுள்ளார்…
Happy that you're back!!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...