முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வணிகப்படங்களும் கலைப்படங்களும்

அன்புள்ள அபிலாஷ்,

நலம்தானே.

ராசி திரைப்படம் பற்றிய தங்களின் பதிவை வாசித்தேன். சிகரெட் மற்றும் சுருட்டை வைத்து ரம்பாவின் நோக்கத்தை காட்சிப்படுத்தியது ஒரு மெல்லிய புன்னகையை வரவழைத்தது. அந்தப்படத்தின் இயக்குனர் இதைப் படித்தாலும் "நான் இப்படியா யோசித்தேன்" என்று வியக்கக்கூடும். இதில் நான் ரசித்தது எப்படி ஒரு சிறு விஷயத்தைக்கூட அது வெளிப்படும் விதத்தை தாண்டி  ரசிக்கமுடியும் என்பது. நம் கண்களால் காணும் காட்சிகளுக்கும் அதன் ரசனைக்கும் ஒரு எல்லை உண்டு, அதைத்தாண்டி கற்பனை செய்யவும் ரசிக்கவும் ஒரு அகக்கண் தேவை என்று தோன்றுகிறது


பார்வைக்கும் ரசனைக்குமான இந்த தொடர்பு இப்பொழுது அற்றுக்கொண்டே வருகிறது. எல்லாவற்றையும் மேலோட்டமாக பார்க்க பழகிவிட்டோம். ரசிப்பது எப்படி என்று சொல்லித்தர முடியுமா, ரசித்துதான் காட்டவேண்டும்.

என் இரண்டு வயது மகன் பேனாவில் தரைமுழுதும் கிறுக்குவான். பின்பு அந்த கிறுக்கல்களிலிருந்து அவனுக்கு தெரிந்த வடிவங்களை கண்டுகொள்வான். உங்கள் பதிவு அதைத்தான் நினைவூட்டியது. உடைந்த கண்ணாடிகளைக்கொண்டு கலெடோஸ்கோப் செய்யும் உங்கள் ரசனையை நானும் ரசித்தேன். நன்றி.

அன்புடன்,
பிரபு 

அன்புள்ள பிரபு
தரையில் கிறுக்கும் ஓவியங்களில் இருந்து தனக்கான வடிவத்தை கண்டு கொள்ளும் குழந்தையின் சுபாவத்தை என்னுடன் ஒப்பிட்டத்தை மிகவும் ரசித்தேன். என்னுடைய ஆளுமை குறித்த மிகத் துல்லியமான சித்திரம் இது தான். என் நண்பர்களில் என்னை நீங்கள் தான் மிக கச்சிதமாய் கணித்திருக்கிறீர்கள். நன்றி.
”ராசி” படத்தின் இயக்குநர் இப்படியெல்லாம் யோசித்திருப்பாரா? ம்ஹும். ஆனால் இதையே நீங்கள் கிட்டத்தட்ட எல்லா வணிக இயக்குநர்களுக்கும் சொல்லலாம். கலைப்பட இயக்குநர்களுக்கும் வணிக இயக்குநர்களுக்குமான முக்கிய வித்தியாசங்களில் ஒன்று முன்னவர்களுக்கு கோட்பாட்டு பரிச்சயம் உண்டு என்பது. உதாரணமாய், ஒரு கலைப்பட இயக்குநர் பெண்னியம் கற்றிருப்பார். பெண்ணியவாதி ஒருவர் அப்படத்தை அர்த்தப்படுத்தும் வகையில் வசதியாய் அப்படத்தை அவர் எடுப்பார். பிராயிடுக்குப் பிறகு எடுக்கப்பட்ட எத்தனையோ படங்களில் நாம் பிராயிடிய கோட்பாட்டுத் தாக்கத்தைக் காண்கிறோம். ஹேங்கரில் சட்டையை தொங்க விடுவது போல் ஒரு கோட்பாட்டில் நீங்கள் இப்படங்களை தொங்க விட முடியும்.
ஆனால் வணிகப் படங்களில் நடப்பது வேறு. நமது சமூக மனம் இப்படங்களின் மொழியில் வெளித்தெரிகிறது. கலைப்படங்களை ஆய்வது நமது கோட்பாட்டு அறிவை உரசிப் பார்க்கவும், வணிகப்படங்களை அலசுவது நமது சமூக உளவியலின் போக்குகளை புரிந்து கொள்ளவும் உதவுகின்றன. எனக்கு அதனாலேயே வணிக கலை வடிவங்களை கவனிப்பதில் ஆர்வம் அதிகம்.
உங்கள் அன்புக்கு நன்றி பிரபு.
அன்புடன்

ஆர். அபிலாஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...