முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லஷ்மி

Image result for lakshmi short film

என் மாணவி ஒருவர் நேற்று “லஷ்மி” குறும்படத்தைப் பற்றி என்னிடம் கேட்டார். நான் பார்க்கவில்லை என்றேன். “நிச்சயம் பாருங்கள். எனக்கு அப்படத்துடன் உடன்பாடில்லை. ஆனால் பார்க்க வேண்டிய முக்கியமான படம்” என்றார். இன்று அவகாசம் கிடைத்ததும் பார்த்தேன். கூடவே அதைப் பற்றி மனுஷ்யபுத்திரன் விமர்சித்த காணொளியும். என் கருத்துக்களுடன் அவருடன் மிகவும் ஒத்திருந்தது கண்டு மகிழ்ந்தேன்.

என் முதல் எதிர்வினை இப்படத்தில் புதிதாய், புரட்சிகரமாய் ஒன்றும் இல்லையே என்பது. நாசூக்காய் நளினமாய் எடுத்திருக்கிறார்கள். அப்பெண்ணும் அவள் கணவனும் நேர்த்தியாய் நடித்திருக்கிறார்கள். படம் முழுக்க தேர்ச்சி தெரிகிறது. ஆனால் இப்படம் ஏன் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதற்கு மனுஷ் சொல்லும் பதில் கச்சிதமானது. நமது அன்றாட வாழ்வின் பின்னுள்ள பாசாங்கை இது சுரண்டி வெளிப்படுத்துகிறது. நம் கண்ணாடி மாளிகையில் கல்லெறிகிறது. நம் வீட்டிலும் இப்படி நடந்து விடுமோ எனும் அச்சத்தை கிளப்புகிறது. ஆனால் நம் அச்சத்தை துடைத்து “பயப்படாதே” போ என அனுப்பி வைக்கும் அம்சமும் இப்படத்தில் உள்ளது. ஒரு பக்கம் மத்திய வர்க்க போலித்தனத்தை, வறட்சியை விமர்சித்தபடியே அதை இப்படம் மறைமுகமாய் ஆதரிக்கவும் செய்கிறது.
இப்படம் மீறலை பேசுகிறது என்பதே ஒரு பாவனை தான். மீறலை பேசியபடியே நமது இயல்பான அன்றாட வாழ்வை அது போற்றுகிறது. அதற்கு பிரச்சனையே வராது, நமது மனைவியர் மீற மாட்டார்கள் என நம் முதுகை வருடித் தருகிறது.
முதலில், இப்படத்தில் வரும் குடும்பம் மத்திய வர்க்கம் அல்ல. கீழ்மத்திய வர்க்கம். அடுத்து, இதில் வரும் கணவன் இன்றைய மத்திய, மேல் வர்க்கத்து ஆட்களைப் போல் படித்து, நளினமான ஒருவன் அல்ல. அப்பெண்ணும் அவ்வாறே. அவன் பட்டறை தொழிலாளி. அவள் அச்சகத்து வேலையாள். இப்படத்தைக் காணும் 99% இவ்வாழ்க்கையை சேர்ந்தவராக இருக்க மாட்டார்கள். அப்பெண் காட்டன் சேலை கட்டி பேருந்தில் அலுவலகம் போகிற காட்சியில் மட்டுமே தோற்றமளவில் பெரும்பாலான மத்திய வர்க்க குடும்பப் பெண்களை போலிருக்கிறாள். மற்றபடி அவள் வேறொருத்தி. அவர்களின் வாழ்வில் அழகோ நளினமோ இசையோ கவிதையோ மகிழ்ச்சியோ களிப்போ கேளிக்கையோ இல்லை என்பது படத்தில் பிரதானப்படுத்தப் படுகிறது. அடுத்து, அவன் “அழகான, காதலே உருவான” கணவன் அல்ல. விளைவாக, அவர்களின் படுக்கை அனுபவமும் லயிப்பாய் இல்லை. ஆக அவள் “அதிருப்தி” கொள்கிறாள். இந்த குணங்கள் கொண்ட வாழ்க்கையை வாழும் ஒரு ஓவியனுடன் சோரம் போகிறாள். இது உணர்த்துவது இரண்டு விசயங்கள்.
(1)  இதற்கு எதிரான குண இயல்புகள் கொண்ட சிறப்பான வாழ்க்கை ஒன்று இருக்கிறது. இதை விட பெரிய வீடுகளில், வசதியான குடும்பங்களில், அழகான, படித்து, கலைநயமும் பணமும் படைத்த கணவன் கொண்ட வீடுகளில் மனைவிகளின் தாம்பத்யம் இன்பமாக, திருப்தியாக இருக்கிறது எனும் எதிர்சித்திரத்தை இப்படம் உள்ளடக்கி இருக்கிறது. மறைமுகமாய் அதை குறிக்கிறது. நம் வாழ்க்கை அப்படியானது அல்ல என ஆறுதல்படுத்துகிறது. இந்த கரிய ஒடிசலான பெண், கரிய பட்டறை தொழிலாளியை நமது மற்றமையாய் கட்டமைக்கிறது. இது இப்படத்தின் ஆகப்பெரிய சிக்கல்.
ஒழுக்கமீறலை பேசிவிட்டு இப்படம் அடுத்த நொடியே “ரசனையும் அழகும் கலாச்சாரமும் மிக்க உங்கள் வாழ்க்கையில் இப்படி ஒன்றும் ஆகாதுங்க” என்கிறது. மத்திய வர்க்க வாழ்க்கையை கேள்வி கேட்பதாய் தோற்றம் காட்டி விட்டு அதே வாழ்க்கையை நியாயப்படுத்துகிறது.

(2)  இப்படம் அடுத்து ஏற்படுத்தும் சித்திரம் திருப்தியான குடும்ப வாழ்வில் மீறல்கள் இருக்காது என்பது. இதையே மனுஷ் விமர்சிக்கிறார். இவ்விசயத்தில் என்னால் தீர்மானகரமாய் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
யார் வாழ்வும் முழுத் திருப்தியில் இல்லை. சின்ன சின்னதாய் அதிருப்தி முளைவிட்ட, மழித்து ஒருவாரமான மொட்டைத்தலையே நம் வாழ்க்கை. ஆக, நாம் ஒழுக்கமீறல்கள் வழி நம் மனதை ஆற்றியபடியே இருக்கிறோம். இப்படம் வாழ்க்கையில் முழுக்க திருப்தியான ஒரு லட்சிய தாம்பதயம் சாத்தியம் எனும் நிலையை மறைமுகமாய் சுட்டுகிறது. இதை மனுஷ் கேள்வி கேட்கிறார். மகிழ்ச்சியான வாழ்வில் இருக்கும் ஒருவர் இன்னொரு ஆண் / பெண் மீது இச்சை கொள்வாரா? நான் இவ்விசயத்தில் இப்போதைக்கு மனுஷுடன் உடன்படவில்லை. நம் மனம் எப்போதும் தளும்பிக் கொண்டிருக்கும் ஒன்றல்ல என கருதுகிறேன். நாம் நிலைகொண்டு மகிழ்ச்சியாய் இருக்கும் காலங்கள் உண்டு. அப்போது பேரழகிகளே வந்து வழிந்தாலும் ஒரு ஆண் பொருட்படுத்த மாட்டான். இதுவே பெண்களுக்கும் பொருந்தும்.

எப்படியோ, தினமும் காலையில் பொங்கலும் கெட்டிச்சட்டினியும் சாப்பிட்டு விட்டு தமிழக பா.ஜ.க தலைவர்கள் கிளப்பும் சர்ச்சைகளை விவாதிப்பதை விட “லஷ்மி”யைப் பற்றி பேசுவது பலமடங்கு மேல்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...