முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீங்க சொன்னா தலைகீழாத் தான் இருக்கும் (1)


Naran
எங்கள் ஊரைச்சுற்றி மலைத்தொடர். மலையில் இருந்து இறங்கி வரும் குரங்குகள் மரத்தில் ஏறி மாங்கனிகளை பறித்து வீசும். சில நேரம் அணில் கொய்யாப் பழங்களை கடித்து கீழே போடும். இப்படி அவை நிராகரிக்கும் கனிகள் வெகுசுவையாக இருக்கும். தமிழ் விமர்சகர்கள் யாரையாவது வரிந்து கட்டிக் கொண்டு வம்புக்கிழுத்தால் என் மனதுக்குள் இந்த கனிகள் தாம் தோன்றும்.
நம் விமர்சகர்கள் யாரையாவது சாடினால் நான் தள்ளி நின்று சில நொடிகள் யோசிப்பேன். எந்த படைப்பையாவது கிழித்து தொங்கப் போட்டால், “அப்போ இது நல்ல படைப்பாத் தான் இருக்கும் போல” என நினைத்துக் கொள்வேன்.
இப்படியாக, சமீபத்தில் கடித்து மண்ணில் வீசப்பட்ட கனியான வார்ணாசி சிறுகதையை வெகு நம்பிக்கையுடன் படித்தேன். கதை என்னை ஏமாற்றவில்லை.
 நரன் ஒரு புதிய களத்தை, தனக்கு பரிச்சயமில்லாத சமுதாயத்தில் இருந்து ஒரு கதையை எடுத்திருக்கிறார். சரளமான கதையோட்டம். நிறைய அழகான காட்சி துண்டுகள். பிணத்தை ஏற்றிப் போகும் வாகனத்தில் பின்னங்கதவுகள் நெஞ்சைப் பிளந்து வா என அழைப்பது போல் திறந்திருப்பதாய் ஓரிடத்தில் சொல்கிறார். இது போல் காட்சிபூர்வமான நிறைய இடங்கள் துலங்குகின்றன. இது எனக்கு பிடித்திருந்தது.
இக்கதை மீதான விமர்சனம் இது அழுகாச்சியாக இருக்கிறது என்பது. ஒரு பெண்ணின் கணவன் விபத்தில் சிதைந்து மரணத்துக்கு காத்திருக்கும் நாட்களில் அவளை வெகுவாக துன்புறுத்தி மனரீதியாய் வதைத்து இறுதியாய் சாகிறான். அவளிடம் ஒரு வாக்குறுதி பெறுகிறான் – அவனது பிணத்தை வாரணாசியில் தகனம் செய்வதாய். அதற்கான அவளது பயணமே மொத்த கதையும்.
இப்படியான ஒரு கதையை இரண்டு விதமாய் எழுதலாம்: ஒன்று கண்ணீர் பிசுபிசுக்க. இன்னொன்று, ரொம்ப முடுக்காக, முறுக்கேற்றிய மொழியில் உணர்ச்சியே காட்டாமல்.
 ஒன்று நாடகீயம் (லா.ச.ரா பாணி); மற்றது, கசப்பும் துயரமும் ஓசையெழுப்பாது பின்னால் வந்து உக்கிரமாய் வாசகனின் தலையில் அறையும் வண்ணமான எழுத்து. (அசோகமித்திரன் பாணி). ஒன்று நெகிழ வைக்கும்; இன்னொன்று மௌனமாய் மனம் கசியவும் வாழ்வை குறித்த வியந்து திக்கித்து நிற்கச் செய்யும்.
இரண்டுமே சரி தான். என்னைப் பொறுத்த மட்டில் ரெண்டுமே ஏற்புடையதே. நரன் முதல் பாணியை தேர்ந்தெடுத்திருப்பது ஒன்றும் குற்றமல்ல.
பெண்ணின் கணவன் மரண படுக்கையில் இருக்கையில் அதிகமாய் அழுகிறான், அரற்றுகிறான். ஆனால் அப்பெண்ணோ மௌனமாய் எதிர்கொள்கிறாள். கதையோட்டத்தை பொறுத்தமட்டில், அவனது ஆர்ப்பாட்டத்தை அவளது நிச்சலம் மட்டுப்படுத்துகிறது.
கதையின் இரண்டாம் பகுதி இப்பெண்ணின் அக விடுதலை பற்றியது. குடும்பப் பிணைப்புகளில் இருந்து விடுபட்டு மெல்ல மெல்ல உலகின் வெவ்வேறு வண்ணங்களை, சிறகடிக்கும் பட்டாம்பூச்சி தருணங்களை, அவள் தன் கையில் ஏந்தி ரசிக்கும், தன்னை அறியும் மாற்றம் பற்றியது. இந்த இடம் கேட் சோப்பின் எனும் பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளரின் சிறுகதையான “ஒரு மணிநேரத்தின் கதை”யை (The Story of an Hour) நினைவுபடுத்தியது.
“வார்ணாசியின்” சில குறைகளுக்கு அடுத்து வருகிறேன்.
1)   நரனுக்கு கதையை துவங்கின சரளத்துடன் முடிக்க இயலவில்லை. ஒரு பக்கத்துக்கு முன்பே கதை முடிகிறது. ஆனால் அவர் நீட்டிக்கிறார். ஒரு கூர்மையான வசனத்துடனோ பளிச்சென்ற காட்சியுடனே ஒரு கவித்துவ வரியுடனே அவர் இன்னும் சுருக்கமாய் முடித்திருக்கலாம்.
2)   வாகன ஓட்டுநர் நட்ராஜின் பாத்திர வார்ப்பு இருளில் மெல்ல மெல்ல ஒளிபெற்று துலங்கி வரும் ஒரு சிற்பத்தைப் போன்றது. அவரது பாத்திரம் பெரிய ஆகிருதி கொண்டது என்பதால் ஒரு தனி சிறுகதைக்கானது. இக்கதையில் உண்மையில் ரெண்டு பேருக்கு இடமில்லை. ஆனால் ஒரு சிற்ய இருக்கையில் ரெண்டு பேர் இடித்துக் கொண்டு அமர்ந்திருப்பது போல் அப்பெண்ணும் ஓட்டுநரும் கதைக்குள் இடம்பிடித்து நெருக்குகிறார்கள்.
3)   நட்ராஜ் சட்டென இன்னொருவனாய் தென்படுகிறான்; அவனது கனிவான முதிர்ச்சியான பரிமாணம் எதிர்பாராமல் இருக்கிறது. அவனது இந்த உருமாற்றத்துக்கான முன்னோட்டத்தை நரன் சரியாய் வழங்கவில்லை எனப்படுகிறது. இது ஒரு தொழில்நுட்ப பிழை மட்டுமே.
4)   பிராமணக் குடும்பத்து மாந்தர்களின் சம்பாஷணை, அவர்களின் பண்பாட்டு சுபாவம், உடல்மொழி இது போன்ற நுணுக்கங்கள் கதைக்குள் சரியாய் வரவில்லை.
குறையில்லாத கதை ஏது? நான் சொல்லியிருப்பது மிக எளிய குறைகளே. எனக்கு இக்கதை பிடித்திருக்கிறது நரன். தொடர்ந்து எழுதுங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...