
முராகாமியின் குழந்தைகள் நாவலான The Strange Library யில்
(விநோத நூலகம்) ஒரு நூலகத்தில் எதேச்சையாய் வந்து ஒரு மந்திரவாதியிடம் மாட்டிக் கொள்ளும்
ஒரு சிறுவன் ஆட்டு வடிவில் இருக்கும் ஒரு மனிதனிடம்
ஒப்படைக்கப்படுகிறான். அங்கு அவனை நூலகத்தின் கீழ்த்தளத்தில் ஒரு சிறை அறையில் அடைக்கிறார்கள்.
அச்சிறுவனின் கால்கள்
ஒரு இரும்புக் குண்டுடன் ஒரு சங்கிலியால் பிணைக்கப்படுகின்றன. அவன் நாளும் பொழுதும்
படிக்க வேண்டும். மூன்று வேளையும் சுவையான உணவு தருவார்கள். அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள
மூன்று நூல்களையும் (ஒட்டோமோன் சாம்ராஜ்யத்தில் வரிவசூல் எனும் தலைப்பிலானவை) அவன்
படித்து முடித்ததும் அவனை விடுவிப்போம் என மந்திரவாதி சொல்கிறார். ஆனால் ஆட்டுமனிதனோ
அது பொய் என்கிறான். யாரும் அங்கிருந்து விடுவிக்கப்படுவதோ தப்பிச் செல்வதோ இல்லை.
இறுதியில் அங்கு மாட்டும் பிள்ளைகளின் மூளையை வறுத்து தின்பதே மந்திரவாதியின் வாடிக்கை.
நிறைய புத்தகங்களை வாசித்து அறிவூட்டம் பெற்ற மூளை சாப்பிட சுவையாக இருக்குமாம்.

“இது என்ன கொடுமை?”
என வினவுகிறான் அச்சிறுவன். சும்மா போகிறவர்களை பிடித்து மூளையை வறுத்து தின்பதென்றால்
இது என்ன வெள்ளரிக்காய் பட்டணமா? அப்போது தான் ஆட்டுமனிதன் அவனிடம் சொல்கிறான். “இது
எல்லா ஊர்களிலும் நடப்பது தான். எல்லா ஊர் நூலகங்களிலும் இது போல ஒரு பாதாள இருட்டறை
உண்டு. தெரியாமல் அவ்வப்போது பல நூறு பேர் மாட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களின்
மூளை வறுத்து தின்னப்பட்டு தான் வருகிறது.”
“இதென்ன நியாயம்?” என சிறுவன் கோருகிறான். ஆட்டுமனிதன் சொல்கிறார்,
“நூலகத்தில் மக்களுக்கு இலவசமாய் அறிவை விநியோகிக்கிறார்கள். ஆனால் இவ்வுலகில் எதுவுமே
இலவசம் இல்லையே. மக்கள் தாம் பெறும் அறிவுக்கு விலை கொடுத்தே ஆக வேண்டும். நூலகங்களை
வேறு எதற்கு இலவசமாய் திறந்து வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறாய்?”

இறுதியில் அச்சிறுவன் ஆட்டுமனிதன் மற்றும் அவனுக்கு உணவு
தர வரும் அழகிய சிறுமியுடன் எப்படி அங்கிருந்து தப்பிக்கிறான், வெளியே போன பின் அவனுக்கு
என்ன ஆகிறது என்பதே மீதி கதை.
சல்மான் ரஷ்டியின் குழந்தைகள் நாவலான Haroun and the Sea
of Storiesயை (1990) இந்நாவல் ஒத்திருக்கிறது. இரண்டுமே வெகு சுவாரஸ்யமான படைப்புகள்.
இரண்டுமே மாய எதார்த்த கதைகள். இரண்டுமே சற்றே முதிர்ந்த குழந்தைகள் வாசிக்கத் தக்கவை.
இலக்கிய வாசகர்களுக்கும் தீனி போடுபவை.
முராகாமி இந்நாவலை 1982இல் “தொஷோகான் கிட்டான்” எனும் தலைப்பில்
சிறுகதையாய் எழுதியிருக்கிறார். 2004இல் இதையே விரிவுபடுத்தி சித்திரங்களும் நுணுக்கமான
வடிவுடன் ஒரு எளிய நாவலாக வெளியிட்டார். இதை ஒரே சமயம் நீங்கள் அதிகற்பனை திகில் கதையாகவும்,
தனிமையில் விடப்பட்ட ஒரு அனாதைப் பையன் நிராதரவான நிலையில் நூலக சூழலில் தன்னை மறந்து
கற்பனையில் மிதக்கத் துவங்குகிறான்; அவன் பின்னர் எப்படி தனது கடந்த காலத்தை நூலகத்தில்
தன் கையில் மாட்டும் பிரதிகளைக் கொண்டு போகிற மீள்கட்டமைக்கிறான் என பேசும் கதையாகவும்
காணலாம். இந்த இரண்டாம் வகை வாசிப்புக்கு உகந்த வகையில் நாவலுக்குள் பழைய புத்தக ஓவியங்களின்
நகல் போன்ற சித்திரங்கள் வழங்கப்படுகின்றன. உ.தா., அவன் தன் ஷூவைப் பற்றிப் பேசும்
போது பக்கவாட்டில் ஒரு ஷூவின் படம் வழங்கப்படுகிறது – அதை அவன் ஒரு நூலில் கண்ட பின்
தன் கற்பனையை வளர்க்கிறான் என நாம் ஊகிக்கலாம். ஒட்டோமோன் சாம்ராஜ்யத்தின் வரி வசூலிப்பாளரான
ஒரு மனிதர் எழுதிய நாட்குறிப்பு நூலைப் படிக்கும் அவன் அங்கு வரும் வரி வசூலிப்பாளரின்
இளம் மனைவி பற்றின தகவல்களைக் கொண்டு தனக்கு உணவு வழங்கத் தோன்றும் ஊமைச்சிறுமியின்
சித்திரத்தை உருவாக்குகிறான்.
சிறுவன் நூலகத்தில் இருந்து தப்பித்து வந்த பின் அவன் வளர்த்த
ஸ்டார்லிங் பறவை இறந்து போகிறது. சில நாட்களில் அவன் தாயும் ஏதோ விசித்திர நோய் தாக்கி
மரணமடைகிறாள். தாயின் மரணத்துக்குப் பின் அவன் பாதாள அறையில் மாட்டிக் கொள்கிறானா அல்லது
அவன் தப்பி வந்த பின் அவள் மரிக்கிறாளா? இது புதிராகவே இருக்கிறது. அச்சிறுவனின் தாய்க்கு
உண்மையில் என்னவாகிறது, எதார்த்தத்தில் அவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதையெல்லாம்
முராகாமி குறிப்பிடுவதில்லை; இதை நாமே கற்பனை செய்து கொள்ள வேண்டும் என்பது நாவல் வாசிப்பின்
இன்பத்தை அதிகமாக்குகிறது.
தமிழில் இந்த வடிவத்தை யாராவது முயன்று பார்க்க வேண்டும்!
கருத்துகள்
நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
https://newsigaram.blogspot.com/