முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

#metoo எனும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தும் போராட்டம்


Image result for கழுதை மேல் ஏற்றி ஊர்வலம்
Metoo இயக்கம் தன் ஆயுதமாய் கையில் எடுத்திருப்பது சமூக அவமதிப்பு அச்சம். ஆளைக் காட்டி அசிங்கப்படுத்து (name & shame) என்பதே இதிலுள்ள போராளிகளின் கோஷம். நியாயமான விசாரணை, மன்னிப்பு / தண்டனை கோரல், நீதி வேண்டல் இவர்களுக்கு முக்கியமல்ல.

இன்று இத்தகைய வழக்குகளில் பெண்களுக்கு மிகவும் சாதகமாய் சட்டம் மாறியுள்ளது, ஒரு பாலியல் தொந்தரவை குற்றமாக நிறுவ நேரடி சாட்சிகள் கூட இன்று அவசியம் இல்லை – ஒரு பாதிக்கப்பட்ட பெண் தான் வேலையில் இருந்து நீக்கப்பட்டதை காட்டியே தன் மீது பாலியல் நெருக்கடி தரப்பட்டதை நிறுவி விடலாம்; சட்டமும் ஏற்றுக் கொண்டு உடனே சம்மந்தப்பட்ட ஆணை தண்டிக்கும். ஆனால் இதையும் கடந்து பெண்களுக்கு சமூகத்தில் பாலியல் அத்துமீறல் வழக்கை நடத்துவதில் உள்ள சங்கடங்கள், சிக்கல்களை, நடைமுறை பிரச்சனைகளை அறிவேன். இருந்தும், ஒரு பெண் முனைப்பு கொண்டால் இன்று இவ்வழக்குகளில் ஜெயிப்பது சுலபம். பெரும்பாலான வழக்குகளில் பாதிக்கப்பட்டதாய் சொல்லும் பெண்களே பின்வாங்குகிறார்கள் அல்லது ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள்; இதனாலே இவ்வழக்குகளில் தண்டனை அதிகமாய் வழங்கப்படுவதில்லை என்கிறார்கள் கர்நாடக காவல்துறையினர்.
இவ்வாறு பெண்கள் சட்ட வழியை நாடுவதில் நம்பிக்கையற்றவர்களாகவோ அக்கறையற்றவர்களாகவோ இருக்கிறார்கள்.
இந்த metoo இயக்கம் அவர்களுக்கு வேறொரு சுலபமான எளிமையான அதே சமயம் மூர்க்கமான ஆயுதத்தை கையில் கொடுக்கிறது. அதுவே ஒரு ஆணின் பெயரைக் குறிப்பிட்டு, ஆனால் தேதி, இடம் போன்ற விபரங்கள் தெளிவாய் குறிப்பிடாமல், ஒரு பாலியல் குற்றச்சாட்டை அவனுக்கு எதிராய் முன்வைப்பது. ஒரு பக்கம் பொது சமூகத்துக்கு இது ஒரு கிளுகிளுப்பான பிரதியாகிறது; இன்னொரு பக்கம், சமூகத்தில் இதுவரை தாம் ஆண்களால் முடக்கப்படுவதாய்கொந்தளித்து வந்த பெண்களுக்கு இது ஒரு பழிவாங்கும் வாய்ப்பாகிறது.
 இந்த இயக்கத்துக்கு நீதி முக்கியமல்ல – அடிக்க வேண்டும், அவமானப்படுத்த வேண்டும், அச்சுறுத்த வேண்டும். தொடர்ந்து ஒடுக்கும் நமது சமூக அமைப்புகளின் மீதான கோபம் முழுக்க இன்று ஆண்கள் மீது பாய்ந்துள்ளது. இதை பெண்களின் தனிப்பட்ட கோபம் என நான் காணவில்லை. இத்தகைய கோபம் இல்லாத ஆளில்லை இன்று.
பிராமணர்கள் கூட தாம் (சட்டம் மற்றும் அரசியல் ரீதியாய்) ஒடுக்கப்படுவதாய் கோருகிறார்கள்.; தம்மை யூதர்களுடன் ஒப்பிடுகிறார்கள். சமீபத்தில் என்னுடைய மாணவர் ஒருவர் பார்ஸி சமூகத்தில் இந்தியாவில் மிகவும் ஒடுக்கப்படுகிற சிறுபான்மையினர் என தான் ஆய்வு செய்வதாய் குறிப்பிட்டார். மனேகா காந்தி, சோனியா காந்தி கூட சமூகம் தமக்கு பல்வேறு தடைகள் போடுவதாயே நம்புவார்கள். எல்லார் தரப்பிலும் அவரவருக்கான நியாயம் உள்ளது. பெண்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை நேரடியாய் ஆண்கள் ஏற்படுத்தும் ஒன்று மட்டுமல்ல. உ.தா., ஒரு பெண் பிற ஆண்களைப் போல இரவு பன்னிரெண்டுக்கு சாலைகளில் சுற்றுவதை விரும்பலாம். பெங்களூரில் இது சாதாரணமாய் நடக்கிறது. ஆனால் சென்னையில் இது சாத்தியமல்ல. உடனே ஆண் வந்து கையை பிடிப்பான் என்பதால் அல்ல. ஏனென்றால் பெங்களூரில் நான் பெண்கள் எந்த தொந்தரவுமின்றி இரவில் போதையில் உலவுவதைப் பார்க்கிறேன் (ஆண்கள் குடித்து விட்டு சுற்றும் போது பெண்கள் ஏன் செய்யக் கூடாது!). இரவு பதினொரு மணிக்கு நான் தேநீர் அருந்த செல்லும் போது இளம்பெண்களும் அங்கு வருகிறார்கள். இதற்குக் காரணம் காவல்துறை இதை கட்டுப்படுத்துவதில்லை என்பது. காவல்துறையின் அனுமதி சமூகமும் அரசியல் நிறுவனங்களும் வழங்கும் அனுமதி. இது கிடைத்ததும் பெண்கள் கூட்டமாய் வெளியே இரவில் வந்ததும் ஆண்கள் அவர்களைத் தடுப்பதோ பலாத்காரம் செய்வதோ அவமதிப்பதோ இல்லை. இது நான் கண்கூடாய் காணும் எதார்த்தம். சில குற்றங்கள் அங்கங்கே நிகழலாம். ஆனால் பெரும்பாலான ஆண்கள் இவ்விசயத்தில் முற்போக்காகவே செயல்படுகிறார்கள். சென்னையில் அரசு இதை அனுமதிப்பதில்லை என்பதாலே இரவு உலவுவதில் பெண்களுக்கு தடை உள்ளது. இது நேரடியாய் ஆண்கள் விதிக்கும் தடை அல்ல. நம் அரசியல் சமூக அமைப்புகளில் உள்ளோடும் அதிகாரம் விதிக்கும் தடை இது. இந்த அதிகாரத்தை பெண்களால் பார்க்க முடிவதில்லை. ஆக அவர்கள் ஆண்களே தம்மை நேரடியாய் தடுப்பதாய் ஒடுக்குவதாய் நினைக்கிறார்கள்.
இப்படி சமூகத்தில் நிகழும் ஒவ்வொரு ஒடுக்குமுறைக்கும் நேரடியாய் ஆண்களையே குற்றம் சாட்டுகிறார்கள். பெண்கள். எல்லா நிறுவனங்களிலும் அதிகாரம் செய்யும் இடங்களில் நேரடியாய் ஆண்களே இருப்பது ஆண்களே அனைத்துக்கும் காரணம் எனும் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
இப்படி பெண்களுக்கு தம் வாழ்வின் மீது, சமூகத்தின் மீது, அன்றாட நிலவரங்களின் மீதுள்ள ஆத்திரம் முழுக்க திரண்டு இந்த metoo இயக்கத்தில் வெடித்துள்ளது. ஆத்திர வெளிப்பாடே பிரதானம் என்பதால் இது மூர்க்கமான, ஒருதலை பட்சமான ஒரு இயக்கமாய் மாறி உள்ளது. ஒரு ஆண் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு சரியோ தப்போ என்பது முக்கியமல்ல, உக்கிரமாய் தாக்க வேண்டும், அப்போதே எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நடைபெறாமல் இருக்கும், தமக்கு ஆறுதல் கிடைக்கும் என கணிசமான பெண்கள் நம்புகிறார்கள்.
இந்த நிலைப்பாடு இரண்டு விசயங்களை எனக்கு நினைவுபடுத்துகிறது:
1)   தீவிரவாதி எனும் பெயரில் அரசு யாரை தூக்கிலிட்டாலும் மக்கள் பெருவாரியாய் அதற்கு ஆதரவளிப்பார்கள். தூக்கிலிடப்பட்டவன் நிரபராதி என்றாலும் பரவாயில்லை, தீவிரவாதிகளுக்கு அச்சம் ஏற்படுத்த, அவர்களை பின்வாங்கச் செய்ய இது அவசியம் என பெருவாரியான மக்கள் நம்புகிறார்கள். இன்று metoo போராளிகள் இதே பாணியில் தான் யோசிக்கிறார்கள். இது வருந்தத்தக்க நிலை.
2)   பழங்காலத்தில் ஒழுக்கமீறலில் ஈடுபட்டவர்களை, சமுதாய விதிகளை உடைத்தவர்களை மொட்டையடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றி ஊர்வலமாய் அழைத்துச் செல்லும் மரபு இருந்தது. அது நீண்ட காலம் நம் கிராமங்களில் நிலைத்த வழக்கம். கள்ள உறவில் ஈடுபட்டவர்களை பொதுவிடத்தில் கட்டி வைப்பது, கொன்று பொதுவிடத்தில் வீசுவது, பலர் காண பலாத்காரம் செய்வது, கூட்டமாய் அடித்து துவைப்பது, கல்லெறிவது ஆகிய தண்டனைகள் இன்று தமிழகத்தில் மட்டுமல்ல அரேபிய தேசங்களிலும் உண்டு. இது நீதி வழங்கும் முறையல்ல, சமூக அவமதிப்பைக் காட்டி அச்சுறுத்தும் முறை; மக்களே சேர்ந்து அடித்து கொல்லும் முறை. Metooவில் இன்று போராளிகள் இந்த name & shame ஆயுதத்தை கையிலெடுத்திருப்பது எவ்வளவு பிற்போக்கானது, அதில் ஒரு ஒழுக்க மனப்பான்மை ஒளிந்திருப்பதை நாம் காணலாம்.

ஒடுக்கப்பட்டவர்களாய் தம்மை உணரும் பெண்களே ஒடுக்கும் சக்திகளின் ஆயுதத்தை ஆண்களுக்கு எதிராய் கையிலெடுத்திருப்பது, ஆண்களை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலம் அழைத்து செல்வது ஒரு நகைமுரண்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த பிரச்சனை வெளிநாடுகளில் இருந்து வந்த நுகர்வு கலாச்சாரத்தை மையமாக கொண்டுள்ளதா என்கிற கேள்வி எழுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...