என்னுடைய மாணவர் ஒருவர் நேற்று #metoo குறித்த சில அடிப்படையான வினாக்களை எழுப்பினார்:
1) காலங்காலமாய் பெண்கள் ஆண்-வழி அதிகாரத்தால் (patriarchy) ஒடுக்கப்படுகிறார்கள். ஆணை நம் சமூகம் இத்தகைய அதிகாரம் படைத்தவனாகவே வளர்க்கிறது, அவன் இத்தகைய அதிகாரத்தை வெளிப்படுத்த, பிரயோகிக்க தூண்டுகிறது, அவன் அவ்வாறு செய்யும் போது அவனை போற்றுகிறது. ஆகையால் அவன் தனக்கு ஒரு வாய்ப்பு அமையும் போது பெண் மீது பாலியல் அத்துமீறல் செய்து அவளை அடக்கவும் ஒடுக்கவும் நினைப்பதுதானே சாத்தியம். ஆகையால் நாம் metooவின் போது ஒரு பெண்ணை ஆதரிப்பது தானே நியாயம். இல்லையா?
2) Metoo இயக்கம் ஒரு மிலிடெண்ட் பெண்ணியம், அது பிழையானது, அநீதியானது என ஏன் சொல்கிறீர்கள்?
இனி metooவின் தத்துவார்த்த பிரச்சனை:
1) ஆண்-வழி அதிகாரம் என்பது ஒரு சமூக அரசியல் கட்டமைப்பு. அதிகாரம் எப்போதும் ஓரிடத்தில் உறைவதல்ல. ஒருவரது பால்நிலையும் இன்று அப்படியே பார்க்கப்படுகிறது. இது குறித்து சமகால கருத்தியல் – பின்நவீன பெண்ணியமும் சேர்த்து – என்ன சொல்கிறது? ஒருவர் ஆணாய் பிறப்பதனால் மட்டுமே அவரிடம் ஆண்-வழி அதிகாரம் வெளிப்படவோ உறையவோ அவசியமில்லை. ஒரு பெண்ணிடமும் ஆண்-வழி அதிகாரம் செயல்படலாம். இன்றைய ஓரின பால்நிலை இயக்கங்கள் இந்த அடிப்படையில் ஆனவை. ஆண்-வழி அதிகாரம் ஆணுக்கானது எனும் போது, ஆண் உடலால் ஆனவன் என அர்த்தம் வருகிறது. ஆண் தன் உடலால் தீர்மானிக்கப்பட்டவன் என்றால் அவன் பெண்ணை நோக்கி மட்டுமே ஈர்க்கப்பட முடியும். பெண்ணும் இவ்வாறு ஆணை நோக்கி மட்டுமே ஈர்க்கப்பட முடியும். ஆணோடு ஆணும் பெண்ணோடு பெண்ணோடும் இணைந்து வாழ முடிகிற காலம் எதிர்காலம் அல்ல, சட்டம் அதை இன்று அதிகாரபூர்வமாக்கி விட்டது. ஆனால் metoo இயக்கம் மீண்டும் ஆண் என்பவன் உடலால் மட்டுமே ஆண், அவன் ஆணாக பிறந்தாலே பெண்ணை ஒடுக்கும் அதிகாரமும் விழைவும் கொண்டன் எனக் கோருகிறது. சமூகத்தில் ஆணாதிக்கம் நிலவுகிறது. இவன் ஒரு ஆண். ஆகையால் ஆணாதிக்கத்தை இயல்பாகவே மேலெடுக்கிறான் என metoo ஆதரவாளர்கள் சிந்திக்கிறார்கள். இச்சிந்தனை உறுதிப்படப் பட, ஓரின உறவு அரசியலை பேசுகிறவர்களுக்கு ஊறு விளைவிக்கும்.
சுருக்கமாய் சொல்வதானால், ஒரு ஆண் மீது குற்றச்சாட்டு எழுந்ததும், “நீ ஒரு ஆண், ஆகையால் நிச்சயம் குற்றம் புரிந்திருப்பாய்” என தீர்ப்பெழுதுகிறோம். இதை நாம் ஏற்கும் பட்சத்தில், ஒரு ஓரினச் சேர்க்கையாளனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஒரு லெஸ்பியனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஆணாய் பிறந்து ஓரின விழைவுகளால் ஆண்-வழி அதிகாரத்துக்கு பலியாகும் ஒரு ஆணின் அடையாளமும் இத்தகைய ஆண்-பெண் இருமையால் சிதைகிறது.
நான் ஏதோ சம்மந்தமின்றி தலையையும் வாலையும் முடிச்சிடுகிறேனோ என உடனடி ஐயம் தோன்றலாம். ஆனால் நுணுகி யோசித்தால் இதிலுள்ள உண்மை உங்களுக்கு விளங்கும்.
வலதுசாரி சிந்தனை (இந்துத்துவா, வஹாபியம் உள்ளிட்டவை) ஆண்-பெண் இருமையை அடிப்படையாய் கொண்டது. இந்துத்துவர்களின் நோக்கமே மேற்கத்திய சிந்தனைகளால் பலவீனப்பட்ட இந்திய ஆணை தேசியவாதியாக்கி வலுவாக்குவது தான். ஆண்-வழி அதிகாரத்தை ஆணாக கற்பித்து இந்த ஆணை இந்து சமூகமாய் இவர்கள் சித்தரிக்கிறார்கள். ஆணென்றால் ஆணதிகாரம் என metoo இயக்கத்தினர் இப்போது கூவுவது வலதுசாரி சிந்தனையுடன் கைகோர்க்கும் ஒன்றாகும் (மறைமுகமாக).
இன்றைய, மையநீரோட்ட அரசியல் எப்படி வலதுசாரித்தனத்தை ஊக்குவிக்கிறது என்பதற்கு metoo இயக்கம் ஒரு சான்று.
இனி நடைமுறை பிரச்சனை:
2) உங்கள் முன் ஒரு கோடி ரூபாய் பணம் இருக்கிறது. அதன் உரிமையாளர் அதை எடுத்து எண்ணும் போது பணம் குறைகிறது. நீங்கள் அதன் முன் இருந்த்தால் மட்டுமே, உங்களுக்குப் பணத் தேவை உண்டென்பதாலே நீங்கள் திருடனாகி விடுவீர்களா? விசாரணையே இன்றி ஊரே உங்களை திருடனென்றால் அது நீதியா? metooவில் சாட்டப்படும் குற்றங்கள் உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கலாம். ஆனால் நம் சமூகத்தில் பெண் ஒடுக்குமுறையும் பாலியல் குற்றங்களும் (திருட்டைப் போல) நிகழ்கிறது என்பதற்காய் குற்றம் சாட்டப்படுவரை கேள்வியே இன்றி குற்றவாளி ஆக்கலாமா? நான் பாதிக்கப்பட்டவரிடம் சான்றை கேட்கவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரை கூட்டமாய் மொத்துவதில் நாம் காட்டும் இந்த ஆவேசமே என்னை கவலைப்பட வைக்கிறது. சமீபத்தில் குஜராத்தின் ஹிம்மத்நகரில் ஒரு பலாத்காரம் நடந்த போது அதற்குக் காரணம் ஒரு குஜராத்தி, வேற்று மாநிலத்தவர், ஆகையால் வேற்று மாநிலத்தவர்வர்களே இக்குற்றங்களுக்குக் காரணம் என ஒரு பீதியும் வெறியும் குஜராத்திகளிடையே கிளம்ப, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அப்பாவிகள் அனைவரும் ரேப்பிஸ்டுகள் எனும் பிம்பம் உடனே கட்டமைக்கப்பட்டு தாக்கப்பட்டார்கள். அத்தகைய வன்முறையில் பெண்ணியவாதிகள் ஈடுபடுவதில்லை என்றாலும், இதே மூர்க்கம், முன்முடிவாலான ஆவேசம் அவர்களிடம் இன்று காணப்படுகிறது. “ஆணென்றாலே அப்படித்தானே” எனும் தொனி இல்லாத ஒரு metoo ஆதரவு பதிவைக் கூட நான் படிக்கவில்லை. metooவில் பல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்புண்டு, அதில் அவர்களுக்கு ஆதரவும் குரலும் உண்டு. நான் மறுக்கவில்லை. ஆனால் ஆதாரமாய் இந்த இயக்கத்தின் பாதை தவறானது, கும்பல் வன்முறைக்கு இணையானது.
கருத்துகள்