ரெண்டாயிரத்தில் சச்சின் தான் ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திலும்
ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்திக் கொண்டிருப்பார். அவர் ஒரு சிங்கிள் அல்லது பவுண்டரி அடித்ததும் பிரம்மாண்ட
திரையில் “சச்சின் டெஸ்ட் போட்டிகளில் மிக அதிக ரன்களை அடித்து
விட்டார், சச்சின் 30,000 ரன்களைத் தொட்டு விட்டார்” என வந்து கொண்டே இருக்கும். சச்சின் இதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போல் தன் பேட்டிங்
பார்ட்னரிடம் வெட்கப் புன்னகையுடன், குழந்தை உடல்மொழியுடன்
வேடிக்கையாக பேசி விட்டு கடந்து விடுவார். சச்சினுக்குப் பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் தோனி.
சச்சினை நினைக்கும் போதெல்லாம் எனக்கு “ரேம்போ” சில்வெஸ்டர் ஸ்டாலோன்
நினைவுக்கு வருவார். அந்த தசைகள் புடைத்த
உடல், அந்த வெறி கொண்ட பார்வை, எல்லைக்காவல் செய்யும் சாமியைப் போல அந்த துப்பாக்கி.சச்சின் ஒரு தொடர்ந்து சுட்டபடியே இருக்கும் எந்திரத் துப்பாக்கி, தோனியோ சாதனைகளை ஸ்நைப்பர் துப்பாக்கி வீரனைப் போல அடைபவர். ஒரே அடி, அதற்கு மேல் இல்லை. சச்சின் மீதிருந்த விமர்சனமே அவருக்கு சாதனைகளை படைப்பதில்
இருந்த தீரா மோகம் தன் அணியை வெற்றியை நோக்கி இட்டுச் செல்வதில் இல்லை இல்லை என்பது. எதிரி மீது படுகிறதா என்பதை விட குண்டுகள் தன் துப்பாக்கியில்
இருந்து தொடர்ந்து சீறுவதிலேயே அவருக்கு மிகுந்த கிளர்ச்சி இருந்தது.
சச்சினுக்குப் பிறகு வந்த அடுத்த ரேம்போ கோலி தான். ஆனால் சச்சினை விட ஒரு மேம்பட்ட எந்திரத் துப்பாக்கியே கோலி. அவர் மட்டையில் இருந்து வெடிக்கும் ஒவ்வொரு ரவையும் எதிரணியின்
மார்பைப் பிளக்கிறது. அவர் சதம் அடித்து
இந்தியா வெல்லாதது மிக மிக அரிதே. இந்தியாவின் வெற்றிகளில்
கோலி சதம் / அரைசதம் அடிக்காதிருப்பதும் அரிதே.
சச்சினைப் போன்றே கோலியும் ஒவ்வொரு ஆட்டத்திலும் பிரம்மாண்டத்
திரையை விழித்து அலறச் செய்யும் சாதனை நாயகனே. சமீபத்தில் உலகிலேயே மிகக் குறைந்த ஆட்டங்களில் 10,000 ரன்கள் எடுத்து ஒருநாள் கிரிக்கெட்டின் இமயத்தில்
ஏறி கொடி நாட்டி இருக்கிறார்கள். சச்சின் 259 ஆட்டங்களில் 10,000 ரன்களை எடுத்து 17 வருடங்கள் கழித்து
கோலி அதே சாதனையை 205 ஆட்டங்களில் படைத்து
விட்டார். இப்போது அவருக்கு வயது 28. இன்னும் பத்தாண்டுகள் ஆடும் உடல் தகுதி கோலிக்கு உண்டு. ச்ச்சின் தன் ஆட்டவாழ்வில் அடித்த மொத்த ஒருநாள்
ரன்கள் 18426. கோலி இந்த சாதனையையும் தன் 35வது வயதுக்குள் எளிதில் எட்டிப் பிடித்து விடுவார் என்பதில்
ஐயமில்லை. கோலியின் சாதனையை அடுத்த வருகிற பேட்மேன்களால்
முறியடிக்க முடியுமா? அது மிக மிக சிரமம். ஏனென சொல்கிறேன்.
இந்த கேள்விக்கு பதில் காண நாம் கோலியையும் ரோஹித் ஷர்மாவையும்
ஒப்பிட வேண்டும். ஒரு அளவுகோலின்
படி ரோஹித் ஷர்மா கோலியை விட பல மடங்கி திறமையானவர். அது பந்தை சுலபத்தில் கணித்து அதை விட சுலபத்தில் டைம் செய்யும்
திறன். டைமிங்கோடு சேர்த்து அபாரமான வலுவுடன் பந்தை சாத்தும்
திறன். ரோஹித் ஒரு பந்துக்கு மூன்று வித ஷாட்கள் அடிக்கும்
திறன் கொண்டவர். இறுதி அரை நொடியில் தன் ஆழ்மனத்தின் ஆணைக்கேற்ப
ஷாட்டை மாற்றும் இயல்பு கொண்டவர். இந்த தன்னிச்சையான
ஆட்ட பாணியினாலே ரோஹித்தால் தொடர்ந்து ரன்களை மலை மலையாய் குவிக்க முடிந்ததில்லை. மாறாக, கோலி இந்த “அடிக்கும்” திறன் குறைவானவர். இந்த குறையே கோலிக்கு
நிறையாக மாறியது. “அடிக்கும்” திறனுக்குப் பதிலாய் புத்திசாலித்தனமும் மனவலிமையும் உடல்
தகுதியை கோலிக்கு அதிகம். கிரிக்கெட் ஒரு
உளப்பூர்வமான ஆட்டம். சதம் அடிப்பது
ஒரு நாவலை தினமும் எழுதுவதற்கு இணையான அனுபவம். ஒருநாள் நன்றாய் எழுத வராமல் போகலாம், ஒருநாள் மிக நல்ல சரளத்தன்மையுடன் எழுத முடியும். ஒரு நல்ல எழுத்தாளன் இந்த மோசமான நாட்களையும் தன் போக்கில்
எடுத்துக் கொண்டு கடந்து போகும் அநாயசம் கொண்டவன். கோலி ஒரு நாவலாசிரியனைப் போன்றவர். அவரது அபாரமான கற்பனையும் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாடும்
அவரை யாருமே எட்ட முடியாத இந்த உயரத்துக்கு கொண்டு சேர்த்திருக்கிறது. ஆனால் இனி இந்தியாவில் இருந்து மற்றொரு கோலி வர முடியாது
என்றே நினைக்கிறேன். ஏனெனில் ரோஹித்
ஷர்மாவே இன்றைய தலைமுறையின் முகம். தன் திறமை மற்றும்
துணிச்சலைக் கொண்டு போகிற போக்கில் சாதிப்பதே இன்றைய தலைமுறையின் அடிப்படை ஆளுமைப்
பண்பு. அடித்தாம் எம்.ஜி.ஆர், அடிபாங்கினா நம்பியார்! இன்றைய தலைமுறையினர் அவ்வப்போது எம்.ஜி.ஆர் ஆவதற்காக
தொடர்ந்து நம்பியார் ஆகத் தயங்காதவர்கள். ஆனால் கோலி தன் முந்தின தலைமுறையின் நீட்சி எனலாம். சச்சின் மற்றும் திராவிடின் அற்புதமான இணைவு கோலி. இனி வரப் போவது ரோகித் ஷர்மாக்களே. டி-20, டி-10 என கிரிக்கெட் உலகம் ஒரு அதிவேக யுகமே நம் முன் நீண்டு கிடக்கிறது. அந்த யுகத்தில் இனி கோலி போன்ற ஒரு மரபார்ந்த வீரர், ஆக்ரோசமும் திறனும் நிதானமும் ஒருங்கிணைந்த ஒரு அட்டகாசமான
வீரர் தோன்றும் வாய்ப்புகள் மிக மிக குறைவே. ஆகையால் தான் கோலி படைக்கப் போகும் சாதனைகளை இனி வரும் தலைமுறையின்
வீரர்கள் தாண்டிப் போவது சிரமமே.
இந்த கட்டுரையை முடிக்கும் முன் மற்றொரு கேள்வியையும் நாம்
கேட்க வேண்டும்.
சச்சினா கோலியா, யார் மேல்?
திறமையை எடுத்துக் கொண்டால் இல்லை. சச்சின் ஆயிரம் மடங்கு அதிக திறமையானவர். ஒரு பேட்ஸ்மேனாக சச்சினால் முடியாதது என்று எதுவுமே இல்லை. அவருக்கு தொழில்நுட்ப ரீதியாய் குறையே இல்லை. அவருக்கு ஆட சிரமமான பந்தோ, அவரை திணறடிக்கக் கூடிய வீச்சாளரோ இல்லை. உலகின் எல்லா பந்து வீச்சுத் தடையையும் எளிதில் தாண்டி குதித்து
இலக்கைத் தொட்டவர் சச்சின். ஒரு ரோட் ரோலர்
சரணைக் கல்லை நொறுக்குவது போல அவர் ஒவ்வொரு வீச்சாளரையும் நொறுக்கி விட்டு முன்னேறினார். ஆனால் இந்த முழுமை கோலியிடம் இல்லை.
அதே நேரம் சச்சினை விட மனவலிமை கோலிக்கு அதிகம். கடும் நெருக்கடியில் சச்சின் தளர்வார். ஆனால் கோலியோ எழுச்சி அடைவார்.
சச்சினும் கோலியும் இருவேறு துருவங்கள். ஒப்பிடவே முடியாத சாதனை சிகரங்கள்.
கோலிக்கு வாழ்த்துக்கள்!
நன்றி: உயிர்மை, நவம்பர், 2018
கருத்துகள்