தமிழ் நவீன இலக்கியத்தில் கலகப் பண்பாட்டைப் பற்றி பேசுகையில் குடிக் கலாச்சாரம் உடனே நினைவுக்கு வரும். மது போதை முதல் கஞ்சா வரை நம் புனைவு மற்றும் கவிதைகளில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. பாரதியார் துவங்கி ஜி.நாகராஜன், விக்கிரமாதித்யனில் நீண்டு இன்றைய பின்நவீன படைப்பாளிகள் பலர் வரை குடியின்றி இலக்கிய விவாதம் இல்லையென்பதே நிலை. நவீன இலக்கியம் அரசியல் சமூக விவாதங்களில் நம்பிக்கை இழந்து குடியின் எதிர்க்கலாச்சார சாத்தியத்தில் தன்னை ஒப்புக் கொடுத்தது எனலாம். ஆனால் ஆச்சரியமாக, தமிழ்ப் பரப்பில் மது போதையின் குறியீட்டு முக்கியத்துவம் புகைக்கு இருந்ததில்லை. சிகரெட் இங்கு குடியின் ஒரு பொருட்படுத்த தேவையிராத பகுதியாக உள்ளது. இலக்கிய கூட்டங்கள் துவங்கியதும் “ஸ்மோக் போட” ஒரு கூட்டம் எழுத்தாளர்கள் கிளம்பிச் செல்வார்கள். ஆனால் குடி அளவுக்கு சிகரெட் இலக்கிய அரட்டைக்கான மையமாக இருப்பதில்லை.
சிகரெட் ஊதும் பிம்பம் சிலாக்கியமாய் பொருந்திக் கொண்டது (சமீபமாய் காலமான) பிரபஞ்சனுக்குத் தான். எழுத்தில் கற்பனாவாதியாகவும் நடப்பில் கலகவாதியுமான பிரபஞ்சன் தன் சிகரெட் விருப்பத்தை மறைக்காதவர்; சமீபத்தில் அவரது அஞ்சலிக் கட்டுரைகளில் அவ்வாறு அவர் சிகரெட்டை உதட்டில் பொருத்திக் கொண்ட சிந்தனாவயப்பட்ட பக்கவாட்டு புகைப்படம் அதிகமாய் பயன்படுத்தப்பட்டது.
எழுத்தாளர் இமையம் பிரபஞ்சனுக்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பில் (“நிஜமான எழுத்தாளர்கள் சாவதில்லை”) சிகரெட்டுக்கு முற்றிலும் புதிய அர்த்தம் ஒன்று தரப்படுகிறது. “1991ல் பிரபஞ்சனை பாண்டிச்சேரியிலுள்ள
அவருடைய வீட்டில் சென்று பார்த்தேன். அப்போது அவர் எனக்கொரு சிகரெட் கொடுத்தார்.
அவருடைய வீட்டிலேயே அவருடன் இணைந்து அவர் கொடுத்த சிகரெட்டை குடித்தேன். அன்று
பிரபஞ்சன்மீது அளவற்ற மதிப்பு ஏற்பட்டது.” ஏன் ஒரு சிகரெட் இமையத்துக்கு பிரபஞ்சன் மீது “அளவற்ற மதிப்பை” ஏற்படுத்துகிறது? சிகரெட் புகைத்தல் சமமான சமூக அந்தஸ்தில் உள்ள ஆண்கள் மத்தியில் நிகழ்வது. ஒரு முதலாளி தன் தொழிலாளியுடன் புகைப்பதில்லை. சிகரெட் புகையில் உள்ள சமத்துவம் இந்த வரிகளில் சாதிய சமத்துவமாய் புது வடிவெடுக்கிறது.
சிகரெட்டின் உளவியல் பற்றி ஆழமாய் விவாதிக்கும் உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என எஸ்.ராவின் “அப்பா புகைக்கிறார்” கதையை சொல்லலாம்.
இக்கதை புதுமைப்பித்தனின் “பால்வண்ணம் பிள்ளை” கதையின் தாக்கம் பெற்றது. பு.பியின் கதையில் பால்வண்ணம் பிள்ளை எனும் குமாஸ்தா வெளியே பரம சாது; உள்ளே ஆதிக்கவாதி. மனைவி, பிள்ளைகளை ஆதிக்கம் செய்யும் பொருட்டு பசு மாசு வாங்கும் ஆலோசனையை நிராகரிக்கிறார். மனைவி தானாக பசு மாடு வாங்கிட அவர் தன் கோபத்தையும் அதிகாரத்தையும் காட்டும் பொருட்டு அந்த மாட்டை சல்லிசான விலைக்கு விற்று விடுகிறார். எஸ்.ராவின் கதையில் பால்வண்ணம் பிள்ளையை போன்று ஒரு மனிதரே அப்பா. அலுவலகத்திலும் வெளியிலும் அவர் வெளியே ரொம்ப அப்பாவி.
ஆனால் வீட்டுக்குள் தன் ஆதிக்கத்தை காட்டும் பொருட்டு மனைவியை அடிப்பவர்; மகளை சிகரெட் வாங்க கடைக்கு அனுப்புபவர். அடி உதை வழி கூட தன்னை வலியுறுத்த முடியாமல் போவதாய் உணரும் போது அவர் சிகரெட்டை புகைத்து அவர்களின் முகத்தில் ஊதுகிறார். சிகரெட் அன்றி அவரால் தனது தன்னிரக்கத்தை, பதற்றத்தை மீறி வர முடிவதில்லை; இந்த தத்தளிப்பிற்கு பலிடாவே அவரது குடும்பம். அவரது மகளின் பெயர் ருக்மணி. அவள் சிகரெட்டை தன் தந்தை மீதான அன்பின், கோபத்தின், தன் போதாமையின், குற்றவுணர்வின் குறியீடாக – சுயமுரணான குறியீடாக – பார்க்கிறாள். அப்பா ஒவ்வொரு மாலையும் சிறுமி ருக்மணியை சிகரெட் வாங்கி வர அனுப்புகிறார். அது அப்பா தன் மீது செலுத்தும் மென்மையான வன்முறை என அவள் உணர்கிறாள்.
ஒருநாள் அப்பா அம்மாவை சிகரெட்டால் சூடு வைக்கிறார். அவர் அண்டை வீட்டில் சரண் அடைகிறார். அம்மாவை தேடிப் போகும் ருக்மணியும் அங்கேயே அம்மாவுடன் உறங்குகிறார். அப்போது அங்கு வரும் அப்பா கடுமையாய் வசை பொழிந்து இருவரையும் வீட்டுக்கு வற்புறுத்தி அழைத்து செல்கிறார். அங்கு சென்றதும் அவர் மீண்டும் மகளை சிகரெட் வாங்க அனுப்புகிறார். அப்போது ருக்மணி ரோட்டில் ஒரு ஆள் வீசிச் சென்ற பாதி புகைந்த சிகரெட்டை எடுத்து முதன்முறையாய் புகைக்கிறாள். இருமியபடி அதை வீசி எறிந்து விட்டு, அப்பாவுக்கு சிகரெட் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு விரைகிறாள். அங்கு அப்பா சாய்வு நாற்காலியில் வெளியே ஓய்வாய் இருக்கிறார். உள்ளே அம்மா தரையில் படுத்துக் கிடக்கிறாள். மகள் அருகே வந்ததும் அவள் வாசனையில் சிகரெட்டை அம்மா உணர்கிறாள்; அவள் தன் மகளை வைகிறாள். அப்பாவின் பக்கம் மகள் இருக்க விரும்புகிறாள் என்பது அவளுக்கு தாங்க முடியாததாக இருக்கிறது. இங்கு இரண்டு விசயங்கள் மிக அமைதியாக நுணுக்கமாக உணர்த்தப்படுகின்றன – 1) ருக்மணி தன் அப்பாவை அவரது வன்மத்துக்காக வெறுத்தாலும் அவரது வன்மத்தின் மீது ஈர்க்கவும் படுகிறாள். அதுவே அவளை சிகரெட்டை சுவைக்க தூண்டுகிறது. ஒரு பெண் தன் மீது ஆண் செலுத்தும் அதிகாரத்தையும் வன்முறையையும் வெறுக்கும் போதே அதே விசயங்களை இச்சிக்கவும் செய்கிறாள். ஏனென்றால் அப்பாவே அவள் அடைய விரும்பும் இலக்கு.
2) ருக்மணியை அப்பா சிகரெட் வாங்க அனுப்பி விட்ட மனைவியுடன் தனிமையில் உறவு கொண்டாரா? இதைப் பற்றி எஸ்.ரா வெளிப்படையாய் பேசாதது இக்கதையின் அழகுகளில் ஒன்று.
சிகரெட் புகைப்பதில் ஒரு விடலைத்தனம் உள்ளது. வெளியே நல்ல பிள்ளையாக இருக்க நேரும் அப்பா தன் மகளின் பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியரை காண வரும் போது பிடிவாதமாய் புகைக்கிறார். அதற்காகவே வெளியே அனுப்பப்படுகிறார். அந்த இடத்தில் அவர் ஒரு வளராத, முதிராத கலகக்காரனாக இருக்கிறார். சிகரெட் புகைத்தல் என்பது நம் சமூகத்தில் இப்படி வளர்ந்த குழந்தைகளின் கலகமே எனும் குறிப்புணர்த்தல் இங்கு வருகிறது.
கதையின் முடிவில் அப்பாவின் வன்முறையை பொறுக்க முடியாமல் அம்மா தற்கொலைக்கு முயல்கிறார். அப்பாவின் சுபாவத்தை ஊரே தூற்றிட அவர் அவமானத்தில் குறுகி வீட்டை விட்டு ஓடிப் போகிறார். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் அப்பாவை ரொம்பவே மிஸ் பண்ணும் போது ருக்மணி ஒரு சிகரெட் வாங்கி சேமிக்கிறாள். இப்படி நாற்பது ஐம்பதுக்கு மேல் சிகரெட்டுகள் அவளது
மேஜை இழுப்பறையில் சேர்ந்து விட்டன. இரவில் சிகரெட் புகை தன் அறையில் பெருகுவதாய் தோன்றிட அவள் தான் தன் அப்பாவைப் போன்றும் அம்மாவைப் போன்றும் ஒரே சமயம் இருப்பதை உணர்கிறாள்.
இக்கதையில் எஸ்.ரா இப்படி சிகரெட் எனும் குறியீட்டின் பல பரிமாணங்களை சுட்டுகிறார் – அது ஒரு நசுக்கப்பட்ட ஆணின் குரலாக இருக்கிறது; அது அவரால் நசுக்கப்பட்ட பெண்களின் எதிர்ப்புணர்வாக இருக்கிறது; ஆணதிகாரத்தை அடைவதற்கான அவர்களின் முனைப்பாக அது இருக்கிறது; தன்னை நசுக்கும் ஆண் அதிகாரத்தின் மீது மனச்சாய்வு அவர்களுக்கு இருப்பதை அது காட்டுகிறது.
சிகரெட்டை உதட்டில் பொருத்திய பெண் இருப்பின் உள்முரண்களை சித்தரித்த விதத்திலேயே இக்கதை மதிப்பு மிக்கதாகிறது.
Comments