“அசுரன்” நல்ல படமா இல்லையா எனும் கேள்விக்குள் நான் போகப் போவதில்லை. அந்த படத்தை பார்க்கத் தூண்டிய முதல் காரணம் அது “வெக்கை” நாவலில் இருந்து தோன்றியது என்பது. நாவலில் இருந்து எதை எடுத்து, எதை விடுத்து திரைகதையை எழுதியிருக்கிறார்கள் என அறிய ஆவல். அடுத்து ஆர்வம் இதை வெற்றிமாறன் எப்படி படமாக்கி இருக்கிறார் என்பதைக் காண. ஆக நான் எழுதப் போவது முதலில் நாவலைப் பற்றி, அடுத்து ஒரு திரைக்கதையாக வெற்றிமாறன் எப்படியெல்லாம் அசுரனில் விளையாடி இருக்கிறார் என்பதைப் பற்றி.
பூமணியின் படைப்புகளில் இளம் வாசகர்கள் முதலில் படிக்க வேண்டியது “வெக்கை” தான் என நான் பரிந்துரைப்பேன். ஏனென்றால் நானும் அதை என் பதின் வயதிலே படித்தேன். அப்படியே அசந்து போய் உட்கார்ந்த ஒரே இருப்பில் படித்தேன். நான் படித்த வேறெந்த தமிழ் நாவலையும் போல அது இருக்கவில்லை. அதன் தொனி, வாசனை, அது கிளர்த்தும் மனநிலை, அதன் கட்டுக்கோப்பான எழுத்துமுறை எல்லாம் ரொம்ப தனித்து தெரிந்தது; சுருக்கமாக கட்டுக்கோப்பாக எழுதுவதில் அசோகமித்திரன் ஒரு ஜித்தன் என்றாலும் இந்நாவல் நான் வாசித்துள்ள நவீனத்துவ பாணியிலும் இல்லை. ஆம் ஹெமிங்வேயின் மினிமலிச சாயல் பூமணி பயன்படுத்தும் சின்ன சின்ன வாக்கியங்களில், கூர்மையான வசனங்கள் வழி
அவர் கதையை நகர்த்தும் அதிர்ச்சிகரமான பாணியில் உண்டு. ஆனால் இந்நாவல் கிளர்த்தும் வாசனை முழுக்க வேறானது.
இது குறிப்புணர்த்தும் “வெக்கை” என்பது பருவநிலையின் வெக்கை அல்ல. வெளிப்புற சூழலை துல்லியமாக தொடர்ந்து சித்தரித்து அதை ஒரு உருவகமாக மாற்றுவது நவீன நாவல்களில் நாம் தொடர்ந்து காண்பது - அசோகமித்திரனின் “தண்ணீர்” ஒரு உதாரணம். ஜெயமோகன் தனது “ரப்பர்”, “காடு” ஆகிய படைப்புகளிலும் அதையே செய்வார். ஆனால் பூமணி நாவலினூடாக எங்குமே (நான் படித்தவரை) பருவநிலையின் சூட்டை பேசுவதில்லை. ஆம், வடக்கூரான் எனும் பண்ணையாரைக் கொன்று விட்டு சிதம்பரமும் சிவசாமியும் காடுமேடு மலையென்று தப்பித்து ஓடுகையில், பதுங்கி ஒரு வாரம் வாழ்கையில் சிதம்பரம் குற்ப்பாக தண்ணீருக்காக அலைகிறான். ஓடை தென்பட்டால் அதில் குளித்து குதியாட்டம் போட ஏங்குகிறான். நாவலின் முடிவில் ஆழ்கிணறுகளை சம்சாரிகள் தோண்டி பாசனத்துக்கு பயன்படுத்துவது, பெண்கள் நீருக்காக அலைவது பற்றி குறிப்பு வருகிறது. அப்போதும் சிவசாமி சொல்வது விவசாயத்தை நம்பியிருப்போர் இதை செய்தே ஆக வேண்டும் என்பது. அவ்வளவு தான் - அதற்கு மேல் வெக்கை வருவதில்லை. ஏனென்று யோசித்தால் பூமணியின் தொழில்நுட்ப மேதைமை புரியும்.
வெக்கையை மறைமுகமாக (பருவநிலையாக சித்தரித்து) ஒரு உருவகமாக்கினால் அது மனித மனத்தின் போக்கு, குணநலன், அறம், அகப்போராட்டம், அகவறட்சி ஆகியவற்றுடன் பாத்திரங்கள் மோதுகிற, ஒட்டுமொத்தமான மனித குலத்தின் அகப்போராட்ட கதையாக அது மாறி விடும். ஆனால் பூமணி அகவெக்கையை “நேரடியாக”, சரி தவறு என மதிப்பிடாமல், பேச விரும்புகிறார். அதை ஒரு கதாபாத்திரமாக்குகிறார் (எஸ்.ரா தன் கதைகளில் பண்ணுவதைப் போல). இப்போது வெக்கை என்பது மனித வாழ்க்கைக்கு வெளியே இருக்கும் வன்முறை எனும் ஒரு அம்சம் அல்ல (அ.மி தண்ணீரை மனித விழுமியங்களின் வறட்சியாக மாற்றுவதைப் போல). வன்மம் ஒரு பேயாக இந்த இரு பாத்திரங்களின் உடம்பிலும் புகுந்து ஆட்டுகிறது. அதனோடு உரையாட, முரண்பட, மோதி முறியடிக்க எல்லாம் சாத்தியம் இல்லை. பேயுடன் யாராவது பேரம் பேச முடியுமா?
இப்படி பூமணி இன்றைய பின்நவீன படைப்பாளின் சாயலுடன் வன்முறையை இந்த நாவலில் எதிர்கொள்கிறார் - எந்த அற, ஒழுக்க விழுமிய விவாதத்துக்குள்ளும் அதை இழுத்து கொண்டு வராமல். கிட்டத்தட்ட ரெண்டாயிரம் வரை தமிழ் இலக்கியம் வாழ்க்கையை அகத்துக்கும் சமூகத்துமான போராட்டமாக காட்டி வர, பூமணி அதற்கு நேர் எதிரான திரையில் இந்த நாவல் எழுதியிருப்பார். இதை நான் சட்டென கண்டு கொண்டது இரண்டாம் முறையாக படிக்கும் போதே - அட இது ஒரு ஸ்பேகெட்டி வெஸ்டெர்ன் போல இருக்கிறதே என நினைத்தேன். ஆம், அதுவே தான் என உணர்ந்தேன். ஸ்பேகெட்டி வெஸ்டர்ன் படங்களில் நாம் கிட்டத்தட்ட பாலை போன்ற செம்மண் புழுதி நிலங்களில், சமூகவிதிகளுக்கு புறம்பாக உள்ள புலங்களில் தன் வீரம், வன்முறை விருப்பம், துணிச்சல் ஆகியவற்றை நம்பி களமிறங்கும் ஆண்களின் கதையை காண்கிறோம். ஆண் பாத்திரங்களில் நண்பர்களிடையே ஒருபாலின ஈர்ப்பு மெல்லியதாய் தோன்றும், ஆனால் பெண் பாத்திரங்கள் ஒரு கவனக்கலைப்பாக அடிக்கடி தோன்றி வண்ணமேற்றி கதையை வேறு சரடுக்கு நகர்த்துவார்கள். கொடூரமான வில்லனுக்கும் நாயகனுக்கும் கூட பரஸ்பரம் மரியாதையும் அதனாலான ஒரு பந்தமும் இருக்கும். ஆயுதம் கிட்டத்தட்ட ஆண்குறி போல. அதைச்சுற்றியே அந்த ஆண்களின் உலகம் அமைந்திருக்கும். சதா ஆண்கள் ஆண்களைக் குறித்தே சிலாகித்தும் வெறுத்தும் ஆண்மை மிடுக்கால், ஆண்மையின் தடுமாற்றங்களால், ஆண்மையை மீட்க வேண்டிய ஆவேசத்தால் ஆட்பட்டு இருப்பதே இப்படங்களின் உளவியல். “வெக்கையிலும்” நாம் இதைக் காண்கிறோம் - சிதம்பரம் ஒவ்வொரு நிமிடமும் தனது அருவாள் மற்றும் இரண்டு கையெறி குண்டுகளைப் பற்றி சிந்திக்கிறான். அது அவனுக்கு ஆறுதலும் துணிச்சலும் ஒருவித கிளர்ச்சியும் கொடுக்கிறது. அவனது அப்பாவுடனான உரையாடல்களிலும் அடிக்கடி ஆயுதங்களே வந்து போகின்றன.
“ராசநாகம் நவரத்னமுத்த கக்கிவச்சிட்டு அந்த வெளிச்சத்துலயே எரபெறக்குமாம். ஆள்வாடையடிச்சதும் ஓடிப்போய் முத்த விழுங்கிருமாம். அவ்வளவு எச்சரிக்க. முத்த தவறவுட்டுட்டா செத்துப் போகுமா. அதப்போல நம்ம ஆயுதங்கள கவனிச்சுக்கிறனும்” (பக்கம் 190; சிதம்பரத்திடம் சிவசாமி)
ஆயுதம் இருந்தால் தன்னை பாதுகாக்கலாம் என்பதை விட ஆயுதமிருந்தால் தயங்காமல் வன்முறையில் இறங்கலாம், அதுவே நிஜமான மனித இருப்பு எனும் உணர்வு அப்பாவுக்கும் மகனுக்கும் உண்டு.
ஆனால் ஆண்களுக்கு இடையிலான உக்கிரமான உறவில் ஒருவித வெறுப்பு உள்ளாடிக் கொண்டே இருக்கும். “வெக்கையில்” ஒரு நாட்டார் கோயில் தெய்வம் குறித்த கதையில் இது உணர்த்தப்படுகிறது - கேரளாவின் பெருந்தச்சனின் கதையை நினைவுபடுத்தும் இக்கதையில் ஒரு அபாரமான சிற்பியும் அவரது மகனும் வருகிறார்கள். அவரது உளி சத்தத்தை மட்டுமே வைத்து அவரது மகன் மற்றொரு சிலையை தொலைவில் இருந்து செய்கிறான். சிலை நிறைவுற்ற நிலையில் அதைக்காணும் அப்பா பொறாமையில் தன் மகனின் வயிற்றை உளியால் கிழித்துக் கொல்கிறார். அதன் பிறகு அவர் தனது இந்த செயலை ஒரு சிற்பமாக வடித்து வைத்துப் போகிறார் என சிதம்பரம் தன் அத்தை மகளிடம் ஒருநாள் சொல்கிறான். இங்கு கவனிக்க வேண்டியது அங்குள்ள ஒரு மூன்றாவது சிற்பம் - அது இப்படி குடல்சரிந்த மகனையும் அவனைக் கொல்லும் தந்தையையும் கண்டு வெறிச்சிரிப்பு சிரிக்கும் ஒரு பெண் தெய்வம். இந்த சித்திரம் இந்நாவலின் மையம் என்பேன். இதிலிருந்து மொத்த நாவலையும் விரித்துக் கொள்ளலாம். இந்த பெண் தெய்வம் யார், இந்நாவலின் பெண் பாத்திரங்களை இது குறிக்கிறதா? இக்கேள்விகளையும் பூமணி நேரடியாக எதிர்கொள்வதில்லை. சொல்லாமலே (குறிப்பாக) விட்டு விடுகிறார்.
நாவலில் எங்கும் செக்ஸ் முக்கியமாக வருவதில்லை - சொல்லப் போனால் பெண்ணுடம்பு மீதான மோகத்தை, சிலாகிப்பை அவர் கவனமாக தவிர்த்து விடுகிறார்.


கருத்துகள்