ஒரு நல்ல லட்சிய வகுப்பறை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்லி இந்த விவாதத்தை முடிக்கிறேன்:
1) முதலில் அது வியாபாராமாக மட்டுமே இருக்க கூடாது.
2) நிர்வாகத்துக்கு இன்றைய குழந்தைகளின் அறிவு வளர்ச்சி குறித்து புரிதல் வேண்டும். இன்றைய தலைமுறைகளின் குறைகளை அறிந்து அதை எதிர்கொள்ளும் விதத்தில் கல்வி முறைகள் இருக்க வேண்டும். கவனச்சித்றலும் மேலோட்டமான கேளிக்கையுமே இன்றைய அறிதல் மார்க்கங்கள் என்றால் அதற்கு நேரெதிராக கல்விமுறையை அமைக்க வேண்டும். தொழில்நுட்பமே நம் பிள்ளைகளின் நோய்களுக்கு காரணமென்றால் தொழில்நுட்பத்தின் எதிர்திசையில் பிள்ளைகளை கொண்டு செல்ல வேண்டும். உலகமே இவர்களை வெறும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களாக நடத்துகிறது என்றால் பள்ளியிலும் கல்லூரியிலும் நாம் இவர்களை வெறும் “எளிய” மனிதர்களாக நடத்த வேண்டும். இப்பிள்ளைகளின் பழுதான ஆளுமைகளை மேலும் பழுதாகி அதை சுரண்டி வியாபாரம் பண்ணுவது அநியாயமான மனித வள ஊழல். இதை செய்து கொண்டே கல்வி ஒரு சேவை என்று பீற்றிக் கொள்ளக் கூடாது.
3) குழந்தைகள் சுயமாய், தம் போக்கில் சிந்திக்கவும் கேள்விகளை எல்லாவற்றைப் பற்றியும் எழுப்புவதற்கு பயிற்றுவிக்க வேண்டும். மாறாக அடிப்படையான தகவல்களை வைத்துக் கொண்டு சேல்ஸ்மேன் போல பேச பயிற்றுவிக்க கூடாது.
4) சமத்துவம், சமூக மாற்றம், நல்லிணக்கம், சமூக நீதி, தனிமனித அறம் குறித்து பிள்ளைகளை சிந்திக்கவும் சிந்திப்பதை செயல்படுத்தவும் அப்படி செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அறியவும் பழக்க வேண்டும். உ.தா., ஒவ்வொரு தனியார் பள்ளியும், அது லட்சியபூர்வமாக செயல்பட்டும், கல்வியை சேவையாக காணும் அமைப்பு எனில், பத்து சதவீதம் தாழ்த்தப்பட்ட, எளிய பின்னணியில் இருந்து வரும் குழந்தைகளை மிகக்குறைந்த கட்டணத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் ஒரு பத்து சதவீதத்தை ஊனமுற்ற குழந்தைகளுக்கு வழங்கும். அதே போல பள்ளியின் ஆசிரியர்கள், நிர்வாகிகளில் சிறுபான்மையினர், மாற்றுபாலினத்தவர் இருக்கும் படி பார்த்துக் கொள்ளும்.
மேலும் ஒரு பள்ளி நிர்வாகம் தனது அரசியல் என்ன என்பது குறித்த தெளிவுடன் இருக்க வேண்டும். அதை ஆபாசமாக மறைமுகமாய் திணிக்காமல் வெளிப்படையாக பரிசீலிக்க வேண்டும். உங்களுக்கு பெரியாரியத்தில் ஈடுபாடு என்றால் அதை வெளிப்படையாக அறிமுகப்படுத்துங்கள். அதை நிராகரிக்கவும் கேள்வி கேட்கவும் மாணவர்களுக்கு ஊக்கப்படுத்துங்கள். அம்பேத்கர் என்றால் அம்பேத்கர், காந்தி என்றால் காந்தி. இந்த சிந்தனையாளர்களின் பாதையில் பாடதிட்டத்திலும் சில மாற்றங்களை கொண்டு வாருங்கள். வெறுமனே இந்த ஆளுமைகளை சிலைகளை அமைத்து அலங்காரம் பண்ணி, அன்றாடம் மாணவர்களை இந்த சிலைகளுக்கு மாலை சாத்தி, தொட்டு வணங்கி, திருநாட்களின் போது பாட்டுப் பாடி மிட்டாய் கொடுத்து வெறும் சடங்காக மாற்றி கடந்து விடாதீர்கள்.
கல்வி என்பது சார்பற்றது, அது பொதுவயமானது என்பது ஒரு மிகப்பெரிய பொய். நீங்கள் வாங்கும் ஸ்பிரைட்டோ கோக்கோ அனைவருக்கும் ஒன்றைப் போல இருக்கலாம். அந்த standardization வியாபாரத்தை ஊக்குவிக்க உதவும். ஆனால் கல்வியில் உண்மையில் அத்தகைய தரப்படுத்தலில் இடமில்லை. உங்கள் பள்ளியின் நோக்கம் / லட்சியம் சமூகப்பொறுப்பும் சமத்துவமும் கொண்ட எதிர்கால சமுதாயத்தை ஏற்படுத்துவது என்றால் அம்பேத்கரே அதற்கான மார்க்கம் என்றால் முழுக்க அவரது நோக்கின்படியே (இந்துமத எதிர்ப்பு, சாதி துறப்பு, பௌத்தம் தழுவுதல்) என கல்விமுறையை அமையுங்கள். அதாவது சித்தாந்தத்தை திணிப்பதை அல்ல நான் பேசுவது, அதை ஒரு வாழ்க்கை முறையாக முன்வைப்பது. அதாவது ஒரு அம்பேத்கரிய / காந்திய பெற்றோரின் கீழ் வளரும் பிள்ளைகள் அந்த தாக்கத்துடனே வளர்வார்கள். அதை ஏற்றோ எதிர்த்தோ அவர்கள் உருவாவார்கள். ஆனால் இந்த ஒரு தாக்கத்தை இன்றைய கல்வி அமைப்பு யாரிடமும் ஏற்படுத்துவதில்லை; மாறாக இன்றைய கல்வி பத்து ரூபாய்க்கு நீங்கள் வாங்கும் பிஸ்லெரி தண்ணீரைப் போல இருக்கிறது. அதற்கு தனித்துவம் இல்லை; அதை நீங்கள் உரிமை கோர முடியாது (எங்கள் ஊர்த் தண்ணீர் தேனாக இனிக்கும்!). இப்படி நாம் பயிற்றுவிக்கும் மாணவர்கள் எந்த உடைமை உணர்வும் அற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனாதை இல்லங்களில் வளரும் மாணவர்கள்; இவர்கள் சொந்தமாய் நம்பிக்கைகளோ வேர்களோ அற்றவர்கள். இவர்கள் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்ட கோக் பாட்டில்களைப் போன்றவர்கள்; ஒரே நிறம்; ஒரே வாசனை; ஒரே சுவை; ஒரே “விலையும்” கூட.
இங்கு ஒரு கேள்வி வருகிறது: ஒரு வெறுப்பரசியலை / வர்ணாசிரமத்தை ஒரு பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு லட்சியமாக அளித்தால் என்னவாகும்? சாவார்க்கரையும் ஹிட்லரையும் கற்க வைத்தால் என்னவாகும்? இந்த ஆளுமைகளின் சிந்தனைகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளட்டுமே என நான் சொல்வேன் - அது நேரடியாக ஒளிவுமறைவின்றி செய்யப்பட்டால் அதனால் தீங்கு குறைவாகவே இருக்கும். அதாவது நீங்கள் ஒரு கொள்கையை சொல்லித் தந்து, அதன் அடிப்படையில் கல்விமுறையை அறிமுகப்படுத்தி விட்டு மாணவர்களை தொடர்ந்து அதை எதிர்த்து பேசவும் விவாதிக்கவும் முழுக்க அதன் எதிர்திசையில் பயணித்து தம் கல்வியை தம் விருப்பப்படி வடிக்கவும் சுதந்திரம் அளிக்க வேண்டும் (நான் ஏற்கனவே சொன்னது போல பெற்றோரின் கொள்கைக்கு எதிராக வளர்ந்து வரும் பிள்ள்ளைகளாக). இதே நோக்கத்தின் படி தான் அம்பேத்கர் இந்தியர் அனைவரும் சம்ஸ்கிருதம் கற்க வேண்டும் என்றார் - அப்போது தான் சனாதனவாதிகளின் இந்துமதம் குறித்த பொய்கள் அம்பலமாகும் எனவும், மயக்கம் தெளியும் என்றும் அவர் கூறினார். வலதுசாரிகளின் பள்ளி ஒன்று வெளிப்படையாகவே அப்படி அமைந்தால் அது அவர்களின் கொள்கைக்கு எதிராகவே திரும்பும். அது நல்ல விளைவுகளையே ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
(ஆனால் ஒரு லட்சிய சமூகத்தில் வலதுசாரி சிந்தனைகள் முழுக்க தடை செய்யப்பட வேண்டும் என நான் நம்பினாலும் இப்போதைக்கு அனைத்து தரப்புகளுக்கும், அவற்றை எதிர்த்து விவாதித்து செயல்படும் உரிமைகளுடன், இடமளிக்கலாம்.)
லட்சியம்-சார் கல்வி மாணவர்களுக்குள் பல கேள்விகளை எழுப்பும். இக்கேள்விகளை விவாதிக்கவும் அவற்றுக்கு விடை காணவும் மாணவர்களை வகுப்புகளை ஊக்குவிக்க வேண்டும். வெறுமனே மேலோட்டமாய் மதக்கருத்துக்களை பேசுவதல்ல, அனுபவ ரீதியாக சில விசயங்களை பரிசீலிப்பதே மனிதர்களுக்கு சமூக நீதியையும் தனிமனித அறத்தையும் லட்சியங்களையும் கற்பிக்கும்.
கருத்துகள்