டிரெண்டிங் நியூஸ் எனும் அவசரப் பாய்ச்சல்
பேஸ்புக்கில் மனுஷ்யபுத்திரன் தற்போதைய ஊடகங்களின் அவல நிலை என இரு சேதியை பகிர்ந்திருந்தார் - டி.வி, பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள் எப்படி டிரெண்டிங் செய்திகளின் பின்னால் அலைகின்றன, யுடியூப்நிகழ்ச்சிகளில் தமது அலைவரிசைக்கு அதிக பார்வைகள் கிடைப்பதையே இலக்காக வைத்திருக்கின்றன எனக்கூறும் அவர் ஊடகக்காரர்கள் இன்று சொந்த சிந்தனை, வாசிப்பு, நோக்கு, கோட்பாடு அற்றவர்களாக எப்படிடிரெண்டிங் நியூஸ் பின்னால் அலைபவர்களாக மாறிகிறார்கள் எனக் குறிப்பிடுகிறார். என்னை ஒரு ஊடகக்காரர்இன்று தொடர்புகொண்டு ஒரு டிரெண்டிங் நியூஸ் குறித்து கூடுதல் தகவல்களைக் கேட்டார் - திருவள்ளுவருக்குஅர்ஜுன் சம்பத் காவி உடை அணிவித்து சர்ச்சை ஏற்படுத்தி கைதான சேதி அது. ‘திருவள்ளுவர் இந்து என ஒருதரப்பும், கிறித்துவர் என சிலரும் சொல்கிறார்களே இது உண்மையா, இது குறித்து மேலும் எப்படி தெரிந்துகொள்வது’ என விசாரித்தார். அவர் அடுத்த ஒரு மணிநேரத்தில், கிடைத்த தகவல்களை ‘கூட்டிப்பெருக்கி’ தன்பத்திரிகைக்கான கட்டுரையை தயாரித்து விடுவார். திருவள்ளுவர் கிறித்துவர் என சில நினைக்கிறார்கள் எனும்சேதியே பல இந்துக்களை கொதிப்படைய செய்யலாம். கிறித்துவர்கள் சம்மந்தப்படாத ஒரு பிரச்சனையைஎப்படி ஒரு கிறுத்துவ சிறுபான்மை vs இந்து பெரும்பான்மை என திரித்து விடுகிறார்கள் என யோசித்தேன். அதாவது திருவள்ளுவர் திராவிடரா எனக் கேட்பதை விட அவர் கிறித்துவரா என்பதே இவர்களிடம் முதலில்எழும் கேள்வியாக உள்ளது என்பது கவலையளிக்கிறது. இதை இன்றைய ஊடகங்களின் சீரழிவு எனப் பார்ப்பதாஇல்லை இதற்கு வேறு கோணம் உள்ளதா?
டிரெண்டிங் செய்திகளை அரசோ அல்லது சில அதிகார மையங்களோ உருவாக்கும் போது இது மலிவானபோக்காகிறது; சாரமற்ற, ஆபத்தான அவசர சிந்தனையாகிறது. மோடி ஒரு தனியார் ரிசார்ட்டின் கடற்கரையில்குப்பைகளை பொறுக்கிய அந்த சில நிமிட காணொளி திட்டமிட்டு டிரெண்டிங் ஆனது; ஒரு வயோதிகர் சிரமம்பாராமல், தன் அதிகாரத்தை அந்தஸ்தை பொருட்படுத்தாமல் குனிந்து குப்பை அள்ளுவது மக்களை ஈர்த்தது - அதனால் ஓரளவுக்கு மக்களுக்கு விழிப்புணர்வு கிடைத்திருக்கலாம் என்றாலும் பிரச்சாரமே முக்கியமானநோக்கமாக மாறிப் போனது. கடந்த ஓராண்டை மட்டும் எடுத்துக் கொண்டால் தமிழகத்தில் பரபரப்பாக டிவிசேனல்களில் விவாதிக்கப்படும் விசயங்களை பாஜகவே அதிகம் தீர்மானித்துள்ளது என்பது வெளிப்படை. மிகமிக அற்பமான விசயங்களை எடுத்துக் கொண்டு சர்ச்சையாக்கி தம்மை பாஜகவினர் இங்கு தொடர்ந்து மக்கள்பிரக்ஞையில் தக்க வைக்கிறார்கள். அரசின் பெரும் பொருளாதார வீழ்ச்சிகளில் இருந்து மக்கள் கவனத்தைதிசை திருப்புகிறார்கள். தம்மை இந்துக்களின் காவலர்களாகக் காட்டி, கூடவே தமிழ் தேசியஅலையொன்றையும் காவி நிறம் கலந்து தோற்றுவித்து அதில் நீந்தி வாக்காள தரப்பொன்றை திரட்டிவளர்ப்பதற்கு முயல்கிறார்கள். இதற்கு டிவி சேனல் முதலாளிகள் துணை போகின்றனர்.
ஆனால் டிரண்டிங்கின் ஊடே பொதுமக்களுக்கும் தம் செல்வாக்கை காண்பிக்க வாய்ப்புகள் அமைகின்றன. உதாரணமாக GobackModi எனும் ஒரு டிரெண்டிங் சேதி. இதை ஒன்று அதை ஊடகங்கள் புறக்கணிக்கலாம். ஆனால் வேறு செய்திகள் இல்லாத நிலையில் ஒரு சில சேனல்கள் அதை எடுத்துக் கொண்டால் வேறுசேனல்களும் அழுத்தத்துக்கு உள்ளாகும். GobackModi டிரெண்டிங் ஆகும் போதே
சமூகவலைதளங்களில் பரவலாக எழுப்படும் கேள்விகள் இன்று பத்திரிகை செய்தியாவதை நான் காண்கிறேன். இதற்கு முன்பிருந்த நிலை என்பது முழுக்க முழுக்க டிவி ஊடகம் தரும் டிரெண்டிங் செய்தியை சமூகவலைதளப்போராளிகளும் அப்படியே எடுத்துச் செல்வது, அந்த அலையில் முடிகிற வரை நீச்சலடிப்பது. ஆனால் இன்றோபுதுப்புது சிறிய அலைகளை பெரும் அலைகளுக்கு மத்தியில் தோற்றுவிக்க பொதுமக்களால் முடிகிறது. சொல்லப் போனால் சமூகவலைதளங்கள் தோன்றிய காலத்திலேயே அது ஒரு ஜனநாயக ஊடகம் எனபேசப்பட்டது. மக்களே இனி செய்திகளை தோற்றுவிப்பார்கள், பரப்புவார்கள், செய்தி என்பது அதிகாரம்என்பதால் மக்கள் அதிகாரம் பெறுவார்கள் என நம்பப்பட்டது. அந்த நிலை முழுக்க உருப்பெறவில்லைஎன்றாலும், வெகுதாமதமாக தோன்றி வருகிறது.
ஒரே பிரச்சனை பொதுமக்கள் இந்த டிரெண்டிங் செய்தி எனும் ஆயுதத்தை சரிவர பயன்படுத்துவது இல்லைஎன்பது. வடிவேலுவின் நேசமணி டிரெண்டிங் ஒரு நல்ல உதாரணம். அபத்தங்களை செய்தி ஆக்குவது, மீம்களை பரப்புவது ஒருவித அதிகார எதிர்ப்பு, விளையாட்டுத்தனமான கலகம் என்று பார்க்கலாம். தொடர்ந்துஇன்று தம் மீது தகவல்கள் குவிக்கப்படும் போது, விவாதங்களில் முன்னுக்கு பின்னான தரப்புகள் முன்வைக்கும்போது மக்கள் களைத்துப் போகிறார்கள். அவர்கள் இந்த செய்திகளை ஏற்றாலும் மறுத்தாலும் அவர்களுக்குஅதில் இருந்து விடுதலை இல்லை, யாரோ ஒரு அதிகார மையத்தின் ஊதுகுழலாக தாம் மாறுவதை அவர்கள்தடுக்க முடியாது. ஆக அவர்கள் இப்போது அனர்த்தத்தை டிரெண்டிங் ஆக்கி ஊடகங்களின் முகத்தில் கரியைபூசுகிறார்கள்.
ஊடகங்களும் சமூகவலைதளங்களும் எடுத்தார் கைப்பிள்ளைகளாக பரஸ்பரம் மாறி உள்ளதே (இன்று நீசொல்வதை நான் டிரெண்டிங் ஆக்கினால் நாளை நான் சொல்வதை நீ டிரெண்டிங் ஆக்குவாய்) இன்றையநிலை. இதற்கு மத்தியில், இரு தரப்பிலும் நமக்குத் தேவை ஒரு திசை, ஒரு தெளிவான புரிதல், கொஞ்சம்லட்சியம், சமூக அக்கறை, தீவிரம்.
திருவள்ளுவர் யார், அவரது மதம் நிஜத்தில் எது என ஆங்கில ஊடகத்தில் உள்ள ஒருவருக்குத் தெரியாதநிலையில் அதைப் பற்றி அவர் படித்து தெரிந்து கொள்ள, எழுத வேண்டிய கட்டாயத்துக்கு இன்றுஆளாக்கப்படுகிறார். இது நல்லதா கெட்டதா? ரெண்டுமே தான். திருவள்ளுவர் இந்து அல்ல என ஒரு தரப்புவலுவாக எழுந்தால் அது பதிவானால் அது நல்லது. அதை மக்கள் தரப்பாக மாற்ற முடியாது போனால் அதைஇந்துத்துவர்கள் பயன்படுத்தி முற்போக்காளர்கள், திராவிட சார்பாளர்கள், இடதுசாதி சிந்தனையாளர்கள், சுதந்திரப் பார்வையாளர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் எனும் பிரச்சாரத்தில் வெற்றி பெறுவார்கள். இதுகெட்டது.
என் பேராசிரிய நண்பர் ஒருவர் தனது பள்ளிக்குச் செல்லும் குழந்தை ஒருநாள் வீட்டுக்கு வந்து தான் ராணுவவீரனாக வேண்டும் எனக் கூறியதாம். ஏன் என்றதற்கு பிரிவினையின் போது இந்துக்களைக் கொன்றஇஸ்லாமியரைப் பழிவாங்க வேண்டும் என சொன்னதாம். நண்பர் தன் குழந்தையிடம் பிரிவினை வரலாற்றைபுரியும் படி விளக்கி இஸ்லாமியர் நம் விரோதிகள் அல்ல எனப் புரிய வைத்தாராம் (பெற்றோரால் இப்படிஅக்கறையெடுத்து விளக்க முடியாவிட்டால் என்னவாகும்?). ஆனால் இந்த டிரெண்டிங் சர்ச்சைகள் எப்படிகுழந்தைகளின் மனத்தில் விஷம் போல இறங்குகிறது பாருங்கள்.
இந்த நண்பரின் இடத்தில் பத்திரிகையாளர்கள், விவாத நெறியாளர்கள் இருக்க வேண்டும் என்பதே என்விருப்பம். ஓரளவுக்காவது மக்களுக்கு வழிகாட்டும் திறனும் உறுதியும் படைத்த, மையப்போக்காக செயல்படும்ஊடக செயல்பாட்டாளர்கள் நமக்குத் தேவை. அவர்கள் (மனுஷ் சொல்வதைப் போல) வெறுமனே பேஸ்புக்கும்வாட்ஸாப்பும் மட்டும் படிக்காமல் நல்ல புத்தகங்களும் தீவிர பத்திரிகைகளும் படிக்க வேண்டும்.
கருத்துகள்