முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அசோகமித்திரன் யாருக்கு ஆதர்சமாக இருக்க முடியும்?




அசோகமித்திரன் யாருக்கு ஆதர்சமாக இருக்க முடியும்?

பெப்பர்ஸ் டிவி யுடியூப் சேனலில் ஜெயமோகன்படித்ததில் பிடித்ததுஎனும் நேர்காணலில் பேசுவதைக் கேட்டேன். அதில் ஓரிடத்தில் தன் ஆசான் என அசோகமித்திரனையே குறிப்பிடுகிறார். அவரது படத்தை காந்தியின் படத்துடன் தன் வாசிப்பறையில் மாட்டி வைத்திருப்பதாயும் ஒவ்வொரு நாள் காலையும் அவரைப் பார்க்கும் போது தனக்கு பெரும் உத்வேகம் கிடைப்பதாயும் சொல்கிறார். அதற்கு அவர் சில காரணங்களைக் குறிப்பிடுகிறார்:
கடும் வறுமையிலும் அவமானங்கள் நடுவிலும் அசோகமித்திரன் தன்னை எழுத்துக்காக ஒப்புக்கொடுத்து போராடியது - அந்த துணிச்சல், அர்ப்பணிப்பு. ஒரு எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி வாழ்ந்தவர்.
அடுத்து, தமிழர்கள் பொதுவாகவே எல்லாவற்றையும் மிகையாக உக்கிரமாகப் பேசியே பழக்கம் என்றிருக்க அசோகமித்திரன் சன்னமான குரலில் அடக்கமான தொனியில் சுருக்கமாய் எழுதியவர்.


ஆனால் உண்மையில் அசோகமித்திரன் தமிழ் பொதுப்போக்குக்கு மாறாக எழுதியவர் அல்ல, அவர் ஜெயமோகனுக்கு நேர் எதிரான பாதையில் பயணித்தவர்
ஜெயமோகன் எதையும் மிகையாக ஆவேசமாக பிரம்மாண்டமாக சித்தரிப்பவர்; அசோகமித்திரன் கைக்குழந்தையின் தலைமயிரைத் தடவி விடுவதைப் போல மொழியை கையாண்டவர்; மிகவும் உணர்ச்சிகரமான இடங்களைக் கூட அழுத்தி சொல்லாமல் கடந்து போகிறார்.
 ஜெயமோகன் நியோகிளாசிக்கல் ரொமாண்டிக் பாணி எழுத்தை கையாண்டார், அசோகமித்திரன் மினிமலிஸ்ட் (“வெண்முரசைஅசோகமித்திரன் எழுத முயன்றால் 350 பக்கத்துக்குள்ளாவது முடிக்க முயன்று கைவிட்டு விடுவார்). ஜெயமோகனின் ஐரோப்பிய முன்மாதிரிகளும் அசோகமித்திரனின் முன்மாதிரிகளும் வேறுவேறு. அசோகமித்திரனிடம் காமு, ரேமண்ட் காரர், ஹெமிங்வே போன்றோரின் தாக்கம் தூக்கலாகத் தெரியும். இந்திய வாழ்வின் எதிர்பாராமைகள், போதாமைகள் ஆகியவற்றின் நடுவே மத்திய வர்க்கம் / கீழ் மத்திய வர்க்கம் மிகுந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்து கடப்பதை அசோகமித்திரன் இருத்தலியல் பாணியில் எழுதினார் எனலாம். அவ்வாறு அவர் இருத்தலியத்தை இந்தியப்படுத்தினார் என சொல்லலாம்
ஆனால் ஜெயமோகன் இருத்தலியத்தை ஏற்காதவர்; இருத்தலிய எழுத்துக்கள் மீது அவருக்கு ஒரு பகடியான புறமொதுக்கல் உண்டு. அதற்குக் காரணம் அவர் இருத்தலியத்தை ஒற்றைத்தன்மையான பார்வை என கணிக்கிறார் என்பது. அதற்கு மாற்றாக அவர் பன்முக வாழ்க்கை நோக்குகள் சுழித்தோடும் ஒரு புனைவு வெளியை கட்டமைக்க நினைக்கிறார்; அவருக்கு வரலாற்றெழுத்தில் உள்ள பேரார்வமும் இதற்கு துணை போகிறது. ஆக வரலாற்றில் பல்வேறு போக்குகளுடன் மோதி தன்னை அழித்து இறுதியில் நிலைப்பட்டு ஆன்ம அமைதியை கண்டடைகிறவனே ஜெயமோகனின் நாயகன் ஆகிறான். அசோகமித்திரன் வரலாறு என்று அன்றாட வாழ்வில் குடும்ப உறுப்பினர்கள் எடுக்க நேரும் சிக்கலான தேர்வுகள்; ஜெயமோகனின் வரலாறு பல ஊடுபாய்ச்சல்கள் கொண்ட அசலான காலம்; அந்த கால நீரோட்டத்தில் நீந்தும் மனிதர்கள் தனித்தனியாக தமக்கான தீவுகளைக் கண்டடைவதும் இந்த போராட்டமே வியர்த்தம், காலம் தான் நிஜமான நாயகன், காலம் தமக்கு மேலாக அனைத்தையும் கடந்து போகிறது என புரிதலைப் பெறுகிறார்கள். (ஜெயமோகனின் எல்லா நாவல்களையும் கிட்டத்தட்ட இந்த டெம்பிளேட்டில் பொருத்திட முடியும்). இப்படி வாழ்க்கையை பார்ப்பதற்கு அவரது மார்க்ஸிய பின்புலம் காரணம் எனலாம்
சுருக்கமாக சொல்வதானால் materialistic dialectics  (பொருள் முதல் ஏரணம்) ஜெயமோகனுக்கு முக்கியம். அசோகமித்திரன் தன் பாத்திரங்கள் இந்த பொருண்மையான முரணெதிர்வை (வறுமையை அவர் வரலாற்று, பொருளாதார காரணிகளால் ஏற்படுகிற ஒன்றாகப் பார்க்காமல் ஒரு அக-வறுமையாக மாற்றுகிறார்) எதிர்கொள்வதை விட கடந்து செல்வதில், அதை உணராமல் நிம்மதியாக வாழ்வதையே முக்கியமாகக் காட்டுகிறார்
காலத்தை எதிர்த்து நிற்பது ஜெயமோகனின் பாணி என்றால் காலத்தோடு அடித்து செல்லப்படுவதை புன்னகையுடன் உணர்த்துவது அசோகமித்திரனின் பாணி.


இப்படி நேரெதிரான போக்கைக் கொண்டவர் ஜெயமோகனுக்கு எப்படி ஆதர்சமாக இருக்கிறார் என்பது விசித்திரமே, அதேவேளை எனக்கும் இது நடந்துள்ளதை சொல்ல வேண்டும் - நான் நாவல் எழுதும் போது எனக்கு நேரெதிரான மொழியைக் கொண்டவர்களையே வாசிக்க விரும்புகிறேன். அப்போது கிடைக்கும் அகத்தூண்டுதல் ஈடற்றது. அதாவது நம் ஆதர்ச நாயகர்கள் நம்மைப் போன்றவர்களாக இருக்க அவசியம் இல்லை. இது எல்லா எழுத்தாளர்களுக்கும் (படைப்பூக்கம் கொண்டவர்களுக்கும்) பொருந்துமா எனத் தெரியவில்லை.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...