முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்


நட்பை நேசிக்க நீங்கள் உங்கள் நண்பரை இழந்த பின் இரங்கலின் போது அவரை நினைவில் கொள்ள கற்றுக் கொண்டால் மட்டும் போதாது; எதிர்காலத்தை நேசிக்கவும் செய்ய வேண்டும். ” - தெரிதா

இரங்குதல் என்பது மரணத்தை வெல்வது, அது ஒருபோதும் மரணத்துக்காக காத்திருப்பது அல்ல என தனதுநட்பின் அரசியல்நூலில் தெரிதா எழுதுகிறார். அதாவது மரணம் நிகழ்ந்த பின்னர் தான் இரங்கத் தொடங்குகிறோம்; அழுகிறோம், நினைவுகளை மீட்டுகிறோம், மறைந்தவரைப் பற்றி பேசிப் பேசி மாய்கிறோம். ஆனால் அப்படி இரங்குவது கூட ஒருமரணம்தான் என்கிறார் தெரிதா. நட்பின் சாரமாக அவர் இந்தமரணத்தைக்காண்கிறார். இங்கு மரணம் என்பது உடல் மரிப்பது அல்ல; மொழியின் பலிபீடத்தில் ஒரு மனிதன்தன்னைஅழித்துக் கொண்டே இருப்பது. நட்புறவாடல் என்பது மொழியில் மற்றமையை அறிவது, தன்னை மற்றமையாக ஒரு மாற்றிக் கொள்வது; அப்படி மாற்றிக் கொள்கையில்தான்மரிப்பது. இந்தமரணம்ஒருவரது மரணத்துக்குப் பிறகு ஒரு விதத்தில் சுலபம் ஆகிறது. தன்னுடைய இரங்கல் கூட்டத்துக்கு யாரும் வர வேண்டாம் என நகுலன் ஒரு சிறிய கவிதையில் கூறுவது இதனாலே - இரங்கல் கூட்டத்தில் நகுலன் எனும் மற்றமை காணாமல் போய் விடுகிறார்; அவர் நமதுநகுலன்ஆகிறார்; நகுலன் நகுலனாக இருந்த போது அவர் மரணிக்காத மற்றமையாக நம்முடன் இருந்தார்; அவருடைய கதை, கவிதைகளில் மட்டுமே அவர்மரணித்தார்” - அவரை நாமாக்கிக் கொள்ள, நாம் அவராகிட அனுமதித்தார். ஆனால் அவரது தூல உடல் நீங்கிய பின்னர் அவர் உருவாக்கிய வெற்றிடத்தில் அவர்இல்லைஎன்பது ஒரு நேர்மறையான, கவித்துவமான அழகான விசயமாகிறது. “என் அஞ்சலிக் கூட்டத்துக்கு யாரும் வர வேண்டாம்எனும் பகடியை ஒரு நட்பழைப்பாக நாம் காண முடியும்.


 நட்பில் இரங்கல் குறித்த ஒரு பதற்றமான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே, நண்பன் மரிக்கும் முன்னரே வந்து விடுகிறது என்கிறார் தெரிதா. “அது நண்பனை விடாமல் பின் தொடர்கிறது, அது அவனை இரங்கலுக்கு முன்பே இரங்கலுக்குள் தள்ளுகிறது. இந்த பீதி ஒப்பாரி நிகழும் முன்னரே வெம்பி அழுகிறது, அது மரணத்துக்காக மரணத்துக்கு முன்னரே அழுகிறது; இது தான் நட்பின் சுவாசம்...” என அவர் கவித்துவமாக எழுதுகையில் ஒரு முக்கியமான அவதானிப்பு வருகிறது - நட்பு என்பது எப்போதுமே நண்பனை தின்று செரிப்பதாகவே இருக்கிறது; நண்பனுடன் நாம் இருக்கும் போது நாம் உரையாடும் மொழியில் அவன் இல்லாமல் ஆவதும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது; ஆனால் அதை நம்மால் துல்லியமாக அப்போது உணர முடிவதில்லை. அவன் உச்சரிக்கும் ஒரு சிறு சொல்லுக்குள் நாம் போய் புகுந்து கொள்கிறோம்; அவன் சொல்லி முடிக்குமுன்னரே நாம் அதனை வசப்படுத்துகிறோம்; அதை வசப்படுத்தி முடிக்கும் முன்னரே நாம் அடுத்த ஒன்றுக்குள் நழுவிச் செல்கிறோம். இது நிகழும் போதே நண்பனும் நம்முடைய மொழி வழியாக நாமாக மாறிக் கொண்டிருக்கிறான். இருவருக்கும் சம்பாஷணை நிகழும் போதே அதனூடாக நாம் தன்னிலை அழிவது குறித்து ஒரு பதற்றம், பயம் இருந்து கொண்டு இருக்கிறது. இது தான் அழிவது மட்டும் அல்ல, காலத்தில் நாம் நிகழ்காலத்திலோ எதிர்காலத்திலோ கால் பாவி நிற்க முடியாத ஒரு கால அழிவும் தான். அந்த பயமானது ஒரு துப்பாக்கி முனை போல நம்மை நோக்கி சதா சுட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த பயமே நட்பின் மிகப்பெரிய கிளர்ச்சியாக இருக்கிறது. இதையே தெரிதா இரங்கலின் கிளர்ச்சி என்கிறார்.

தெரிதா எழுதிய அஞ்சலிக் கட்டுரைகள் பிரசித்தம் - 1981 முதல் 1999 வரை அவர் ரொலாண்ட் பார்த், பூக்கோ, அல்தூசர், டெலூஸ், லையடார்ட் போன்ற தனது பல முக்கிய சமகால சிந்தனையாளர்களுக்கு அஞ்சலிக்கட்டுரைகள் எழுதினார். இவை தொகுக்கப்பட்டு The Work of Mourning என ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியானது. இந்த அஞ்சலிகளில் தெரிதா காலமான தன் நண்பர்களை மதிப்பிட்டு சிலுவையில் ஏற்றாமல் அவர்களின் தரப்பில் இருந்து அவர்களின் பார்வையில் இருந்து உலகைக் காண முயல்கிறார். நெகிழ்ச்சி, மிகையான புகழ்ச்சி, உணர்ச்சித் தளும்பல், நினைவு மீட்டல் என பல தொனிகளை இக்கட்டுரைகள் கொண்டிருந்தாலும் முடிந்தளவுக்கு அவர் முயல்வது அந்த அஞ்சலிகளில் மறைந்தவரை மீட்டுக் கொணர்வதும், அவருடன் அவர் இருந்த போது சாத்தியமான உரையாடல்களை இப்போது நிகழ்த்துவதுமே. தெரிதா இப்படி இரங்கலைக் காணும் விதமே நூதனமாக, ஆழமாக இருக்கிறது. நமது தமிழ்ச் சூழலில் நாம் நண்பர்களுக்காக இரங்குவதை ஒரு ஈகோ கம்புசுற்றலாக, போலி சடங்காக அன்றி ஒரு உயிரோட்டமான சம்பாஷணையாக, இறந்தவரை மீட்டுக்கொண்டு வந்து மீண்டும்மரணிக்கசெய்யும் ஒரு நட்பு பாராட்டலாக பார்க்க நம்மை அவர் தூண்டுகிறார்.

தமிழ் இலக்கிய சூழலில் ஒருவர் உயிரிழந்ததும் நூற்றுக்கணக்கான அஞ்சலிக்குறிப்புகள் எழுதப்படுவதை, உணர்ச்சிமேலிடும் சொற்கள் நூறு நூறு பூக்களாய் பூத்து அவரது நினைவில் தூவப்படுவதை, அவரைக் குறித்த நினைவுகள் மீள மீள மீட்டப்படுவதைக் காண்கிறோம். சில நேரம் இதை பகடி செய்கிறோம். விமர்சித்துக் கடந்து போகிறோம். ‘அவர் உயிருடன் இருக்கையில் இந்த அன்பு ஏன் காட்டப்படுவதில்லை?’ எனக் கேட்கிறோம். நாம் ஒன்றை அப்போது புரிந்து கொள்வதில்லை - ஒரு மனிதனுடன் அன்பு பாராட்டுவதற்கு பிரதான தடை அவன்உயிருடன்இருப்பதேஒரு நண்பன்உயிருடன்இருக்கையில் அவனிடத்து நட்பைப் பேணுவது மிக மிகக் கடினம். நட்புறவாடலில் ஒருவன்இறந்துபோக மறுக்கும் போதே அந்த உறவு கசந்து அது விரோதமாகிறது. “சாகாதநண்பனிடத்து நாம் பேச வேண்டிய சொற்கள் நூற்றுக்கணக்கான சொற்களாக நமக்குள் குவிந்து மூச்சைத் திண செய்கின்றன.
 எதிரி நண்பனாகி மீண்டும் எதிரியாகி மடிந்ததும் நண்பனாக உயிர்த்தெழுகிறான். அப்போது நாம் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறோம். இப்போது அந்தகாலமற்ற காலம்நட்பில் தோன்றுகிறது
இறந்த நண்பன் நிகழ் காலத்தில் இல்லை. அவனது நினைவுகளை நாம் கடந்த காலத்தில் இருந்து தட்டி எழுப்பி நல்ல சட்டை, பேண்ட் அணிவித்து தலைசீவி ஒப்பனை செய்து நிகழ் காலத்துக்குக் கொண்டு வருகிறோம். ஆனால் அவனுக்கு உயிரளிக்க அவனை நாம்எதிர்காலத்துக்குக்கொண்டு சென்றாக வேண்டும். ஒரு பிரச்சனை இப்போது ஏற்படுகிறது - செத்துப் போய் விட்ட அவன் எதிர்காலத்தில் இல்லையே. அதனாலே வேறுவழியின்றி அவனை நாம் மொழிக்குள் ஒரு காலமற்ற காலத்தை சிருஷ்டித்து உயிர்ப்பிக்கிறோம் - அது தான் இரங்கல்; அது தான் அஞ்சலிக் கட்டுரை.

இதனால் தான் தான் நீண்ட காலமாய் தன்னுடன் பேசாது இருந்த சு.ரா 2005 அக்டோபர் 15 அன்று இறந்து போன பிறகு ஜெயமோகன் சில நாட்களில் இரவு பகலாய் ஒரு நீண்ட அஞ்சலிக்கட்டுரை எழுதி அதை ஒரு நூலாக விரிவாக்கி பிரசுரித்தார் - அதாவது ஒரு பக்கம் சு.ராவுக்கு அஞ்சலிக்கூட்டம் நடந்த போது இன்னொரு பக்கம் அவரைப் பற்றின ஜெயமோகனின் அஞ்சலி நூலும் உயிர்மை மூலம் வெளியானது. இந்த நூலுக்கு ஜெயமோகன் அளித்த தலைப்பு வெகு பொருத்தமானது - “சு.ரா: நினைவின் நதியில்”. நதி எந்த காலத்தில் இருக்கிறது? அது கடந்த காலத்தில் இருந்து எதிர்காலத்துக்குப் பாய்கிறது, ஆனால் அதை நீங்கள் துழாவிக் கையில் அள்ளிக் கொள்ளும் போது அது நிகழ்காலத்தில் கூட இல்லை. நீங்கள் அள்ளி எடுத்த நீரானது கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்தின் வழி எதிர்காலத்துக்கு சென்று கொண்டிருந்தது; அது ஒரு மீ-காலத்தில் இருந்தது. “நினைவின் நதியில்இருந்து ஜெயமோகன் அள்ளி எடுத்து கைக்குவளையில் வைத்துப் பார்த்த சு.ராவும், கடந்த காலத்தில் இருந்து எழுந்து வந்தாலும், நிஜத்தில்  எதிர்காலத்தில் தன் காலை நீட்டிப் (அனந்தபத்மநாபனைப் போல) சயனித்துக் கொண்டிருப்பவரே; நாம் பார்த்துக் கொண்டிருக்கையிலே அந்த கால்கள் எதிர்காலத்தையும் தாண்டி ஒரு காலமற்ற காலத்தில் அசைந்து கொண்டிருக்கிறது. அந்த சு.ராவின் அசையும் கால்களுக்கு காலமே இல்லை என்பதால் அவர் மீதான் நட்புக்கும் இனிமேல் முடிவே இல்லை

நன்றி: அங்கே என்ன சத்தம் - 8



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...