முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விராத் கோலி – எங்கிட்ட மோதாதே



2011 உலகக் கோப்பைக்கு பிறகு புற்றுநோயால் தளர்ந்து பிறகு மீண்டு வரும் வேளையில் யுவ்ராஜ் சிங் ஒரு பேட்டி அளித்தார். அதில்காலத்தில் திரும்ப சென்று நான் வேறு விதமாய் ஆட விரும்பினால் அது விராத் கோலியை போலத் தான் இருக்கும். அவரது கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு, கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகிய பண்புகள் எனக்கும் இருந்திருக்க கூடாதா என ஆசைப்படுகிறேன்என்றார். ஒருநாள் கிரிக்கெட்டின் அசுரர்களில் ஒருவரான யுவ்ராஜ் ஒரு இளம் வீரரை பற்றி இதை சொல்கிறார் என நினைவில் கொள்ள வேண்டும். திறமையும் கடும் உழைப்பும் ஒன்றாய் சேர்ந்தால் நம்பர் 1 ஆகலாம் என்பதற்கு கோலி ஒரு உதாரணம்.

171 ஒருநாள் ஆட்டங்களில் 11,000க்கு மேல் ரன்கள் மேல் ரன்கள். 43 சதங்கள். பொதுவாக மட்டையாளர்களுக்கு சதத்தை விட அரைசதங்கள் மும்மடங்கு இருக்கும். ஆனால் கோலி 58 அரைசதங்களே அடித்துள்ளார். 80% மேல் தன் அரைசதங்களை அவர் சதமாய் மாற்றுகிறார். இது ஒரு அபாரமான திறன். கோலிக்கு 31 வயதாகிறது. இன்னும் 7 வருடங்கள் ஆடினால் கூடுதலாக 40 சதங்கள் அடித்து விடுவார் என்பதில் ஐயமில்லை. ஓய்வு பெறும் போது ரன்களை பொறுத்த மட்டிலுமே அவர் சச்சினுக்கு வெகு அருகில் சென்று விடுவார்.  

ஆவேசத்தின் கனல்

விறகடுப்பு அணைந்த பின்னும் சாம்பலுக்குள் கனல் தகதகத்துக் கொண்டே இருக்கும். கோலிக்குள்ளும் அந்த நெருப்பு ஒரு போதும் அணைவதில்லை. மட்டையாடும் போது மட்டுமல்ல களத்தடுப்பில், வெற்றியை கொண்டாடுவதில், களத்தில் ஒரு புலியை போல் உலாத்துகையில் அவரது கண்களில், நடையில், உடல்மொழியில் ஆக்ரோசம் மிளிர்ந்து கொண்டிருக்கும். ஆனால் பேட்டிங்கின் போது இந்த வெறியுணர்ச்சியை அமைதியான ரன்களாக உருமாற்ற தெரிந்தவர் கோலி. இத்திறன் அவரை போன்று ஆவேசம் மிக்க காம்பிளி, கங்குலி, யுவ்ராஜிடம் கூட இருக்கவில்லை. அதனால் தான் கோலி இவ்வயதிலேயே இவர்களையும் கடந்து சென்று விட்டார்.

அப்பாவின் கனவு

விராத் கோலி தில்லியில் ஒரு பஞ்சாபிய குடும்பத்தில் 1988இல் பிறந்தார். அவருடைய அப்பா பிரேம் கோலி ஒரு வழக்கறிஞர். கோலி தான் குடும்பத்தில் கடைக்குட்டி. அவருக்கு ஒரு அண்ணனும் அக்காவும் உண்டு. மூன்று வயதிருக்கும் போதே அவர் ஒரு சின்ன கிரிக்கெட் மட்டையை எடுத்து விளாசி விளையாடத் துவங்கி விட்டார் என்கிறார் அவரது அம்மா. தெருவில் அவர் விளையாடும் அழகை பார்த்து விட்டோ அல்லது தங்கள் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை இனியும் இப்பையன் உடைக்க வேண்டாம் என கருதியோ அவரது பக்கத்து வீட்டார் பிரேம் கோலியிடம் விராத்தை ஏதாவது ஒரு கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்த்து விட பரிந்துரைத்தார்கள். அப்பா விராத்தை ராஜ்குமார் ஷர்மா எனும் பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார். அங்கிருந்து விராத்தின் கிரிக்கெட் பயணம் நேர்த்தியாக முன்னகர்ந்தது.
தன் அப்பா தினமும் தன்னை தவறாது பயிற்சிக்கு அழைத்து போய் விடுவதை சர்வதேச நட்சத்திரம் ஆன பின்னர் நினைவு கூரும் கோலி தன் அப்பாவின் அருகாமையை மிகவும் மிஸ் பண்ணுவதாய் குறிப்பிடுகிறார். ஏனென்றால் 2006இல் கோலி தன் 18வது வயதில் தன் இரண்டாவது ரஞ்சி கோப்பை ஆட்டத்தை தில்லிக்காக ஆடும் போது அவரது அப்பா மாரடைப்பில் காலமானார். மனமுடைந்து போன கோலி அப்பாவின் சிதைக்கு நெருப்பூட்டிய உடனே ஆட்டத்தை தொடர்வதாய் திரும்ப சென்றார். இது மொத்த தில்லி அணியையும் திகைப்பில் ஆழ்த்தியது. இழப்பின் தவிப்பை மறைத்து விட்டு மன உறுதியுடன் அவர் அன்று கர்நாடகாவுக்கு எதிராய் அடித்த 90 ரன்கள் தில்லி அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியது. அப்பா காலமுற்ற அன்றிரவில் இருந்து கோலி மிகவும் மன உறுதி கொண்டவராக மாறினதாய் அவர் அம்மா ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். தேசிய அணியில் மகன் ஆட வேண்டும் எனும் தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதே ஒரே இலக்காய் கொண்டு கோலி அதன் பிறகு உழைத்தார். அது மட்டுமல்ல அப்பாவின் மறைவுடன் குடும்பம் பொருளாதார ரீதியாய் சரிந்தது. வாடகை வீட்டுக்கு இடம்பெயர்ந்தது. குடும்ப வியாபாரம் தளர்ந்தது. தன் குடும்பத்தை சரிவில் இருந்து மீட்கும் பொறுப்பு தன்னுடையது என கோலி ஏற்றுக் கொண்டார். அன்றிருந்து அவர் முதிர்ச்சியான உருக்கு இதயம் படைத்த இளைஞராய் உருமாறினார். இந்த பொறுப்புணர்வையும் உறுதியையும் பின்னர் அவர் பலமுறை இந்திய அணிக்காய் பேட்டிங் செய்த போது வெளிப்படுத்தினார்

முதல் உலகக்கோப்பை

பள்ளி மற்றும் சிறுவர்களுக்கான பிற ஆட்டங்களில் தொடர்ந்து ரன்களை குவித்த கோலி 2008இல் மலேசியாவில் நடந்த 19 வயதுக்கு கீழாருக்கான உலகக்கோப்பை அணிக்கு தலைவராய் நியமிக்கப்பட்டார். அவரது கிரிக்கெட் வாழ்வில் அது ஒரு திருப்பு முனை. உலகக்கோப்பையை கோலி வென்றளித்தார். குறிப்பாய் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா சொற்ப ரன்களில் வெளியேற கோலி அதிரடியாய் தலைமை தாங்கி வெற்றிக்கு வித்திட்டார். அத்துடன் கோலியின் பெயர் இந்தியா முழுக்க பிரபலமாகியது. விரைவில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி துவக்க ஆட்டக்காரராய் களமிறங்கி சிறப்பாய் ஆடினார். கால் பக்கம் மட்டுமே பிரதானமாய் ஆடினாலும் அவரது துணிச்சலும் கவனமும் அற்புதமாய் தனித்து தெரிந்தன. ஆனாலும் அணியில் நிறைய சீனியர் நட்சத்திர வீரர்கள் இருந்ததாலும் கோலி திமிர் பிடித்தவர் எனும் அவப்பெயர் நிலவியதாலும் ஒரு வருடம் அணியில் இருந்து விலக்கப்பட்டார்.

2009இல் மீண்டும் ஆட வந்த கோலி முற்றிலும் மாறுபட்ட முதிர்ச்சியான வீரராக இருந்தார். அப்போதைய அணியில் சச்சின், சேவாக், யுவ்ராஜ், தோனி, ரெய்னா போன்று நிறைய அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தனர். அவர்கள் இடையே கோலி ரிஸ்கே எடுக்காமல் ஒற்றை இரட்டை ஓட்டங்களில் கவனம் செலுத்தும் நிதானமான பேட்ஸ்மேன் ஆனார். Off sideஇல் அவரது ஆட்டமும் மெருகேறியது. 2011 உலகக்கோப்பை வந்த போது கோலி உலகின் கவனிக்கத்தக்க மத்திய வரிசை பேட்ஸ்மேனாக இருந்தார். உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் சச்சின் மற்றும் சேவாக் ஆட்டமிழந்த நிலையில் கோலி பதறாமல் ஒற்றை இரட்டை ரன்கள் எடுத்து காம்பிருடன் அணியை நிலைப்படுத்தினார். அவரது 35 ரன்கள் அணிக்கு நிதானத்தையும் வேகத்தையும் அளித்து இந்தியா உலகக்கோப்பையை வெல்ல பிரதான காரணமாகியது.

கோலி 2.0

2012இல் இருந்து கோலி புது உயரங்களை எட்ட துவங்கினார். சச்சின், சேவாக், காம்பிர், யுவ்ராஜ் ஆகிய நட்சத்திரங்கள் மங்கத் துவங்க கோலி சூப்பர் ஹீரோவாக உயர்ந்தார். இந்தியா இரண்டாவதாய் பேட்டிங் செய்யும் போது அவரது ஆட்டம் அசாத்தியமாய் இருந்தது. ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் இந்தியா இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற இந்தியா 40 ஓவர்களில் 321 அடிக்க வேண்டியிருந்தது. கோலி 133 அடித்து 37 ஓவர்களிலேயே இலக்கை எட்ட வைத்தார். ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு 148 பந்துகளில் அவர் அடித்த 183 1998இல் ஷார்ஜாவில் சச்சின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராய் அடித்த சதத்துக்கு இணையானது.
ஆஸ்திரேலிய தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் கோலி அடித்த கன்னி சதம் அவர் டெஸ்ட் அரங்கில் நிலைபெற உதவியது. 2014இல் இந்தியா மீண்டும் ஆஸ்திரேலியா சென்ற போது கோலி டெஸ்ட் தொடரில் 692 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்கள் எனும் சாதனையை படைத்தார்.

குறைபட்ட டெக்னீக்

கோலியின் முக்கிய பலவீனம் அவர் எப்போதும் பேட்டை கால்பக்கம் அடிக்கும் வண்ணம் சற்றே திருப்பி பிடித்திருக்கிறார் என்பது. இதனால் off sideஇல் வைடாக போகும் பந்தை அவரால் சுலபத்தில் விரட்ட முடிவதில்லை. ஸ்கொயர் பகுதியில் பந்தை வெட்ட முடிவதில்லை. ஆனாலும் தற்போது இந்த குறைகளை கடந்து அவர் ஒரு முழுமையான பேட்ஸ்மேனாக வளர்ந்து வருகிறார்.

கேப்டன் கோலி

இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக கோலியின் தலைமை பாஸிட்டிவாக ஆக்ரோசமாய் உள்ளது. தோல்வி நிச்சயம் எனத் தெரிந்தாலும் அவர் பின்வாங்க மாட்டார். அவரால் பவுலர்களை உத்வேகப்படுத்தி பிரமாதமாய் வீச வைக்க முடிகிறது என்பதும் முக்கிய பலம். பலவீனம் என்பது அணித்தேர்வில் நிதானமாக தீர்மானமாக இல்லாதது; அணியில் கோலியைத் தவிர வேறு யாருமே நிலையாக இல்லை என்பதே எதார்த்தம். இந்த நிலையின்மை அணியை பதற்றம் மிக்கதாக்குகிறது; இந்தியா இன்று ஒரு தென்னாப்பிரிக்காவாக மாறி வருகிறது - லீக் ஆட்டங்களில் சிறப்பாக ஆடி அரை இறுதியில் விக்கித்து விதிர்விதிர்த்து தோற்று விடும். இதற்குக் காரணம் கோலி தன் வீரர்களுக்கு அளிக்கும் மிதமிஞ்சிய நெருக்கடியும் தம் இடம் குறித்த பயத்தை அனைவரிடத்தும் அவர் விதைப்பதும். ஒரு தலைவராக சச்சினிடம் இருந்தே அதே பிரச்சனை இப்போது கோலியிடமும் தெரிகிறது. அதை அவர் கடந்தால் மட்டுமே உலகக்கோப்பையை இந்திய அணி மூன்றாவதாக ஜெயிக்க முடியும்.

கூடுதலாக:

ஆட்டம் ஆரம்பிக்கும் முன் விராத் கோலி நல்ல மூடில் இருந்தால் நிச்சயம் சதம் அடிப்பார். எதிரணி, ஆடுதளம், ஆட்ட சூழல் எல்லாம் ஒரு பொருட்டல்ல” – இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன்
விராத் கோலி எனக்கு என்னையே நினைவுபடுத்துகிறார்”, மே. தீவுகளின் கிரிக்கெட் மேதை விவியன் ரிச்சர்ட்ஸ்.

2013ஆம் ஆண்டு கோலி அர்ஜுனா விருது பெற்றார்.

2015இல் கோலி T20யில் மிக வேகமாய் 1000 ரன்களை அடித்த முதல் பேட்ஸ்மென் ஆனார்.

ஒருநாள் போட்டிகளில் மிக வேகமாய் 5000 ரன்களை அடித்து சாதனை படைத்தார்.

ஒருநாள் போட்டிகளில் மிக வேகமாய் 10 சதங்களை அடித்த சாதனை கோலியுடையது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...