சாத்தான்குளம் சிறைப்படுகொலை பற்றி நினைக்கையில் மனம் உடைந்து போகிறது. மனிதனை மனிதன் இப்படியெல்லாமா வதைப்பான், சிறுக சிறுக துடிக்க வைத்துக் கொல்வான், அதுவும் சுற்றிலும் உள்ள மக்கள் அந்த இருவரும் அலறுவதை இரவு முழுக்க கேட்டு வெறுமனே இருக்க இந்த கொடூரம், அதனாலான படுகொலை நடந்திருக்கிறது என்பதை நினைக்க நினைக்க நம்பிக்கை வரவில்லை, மனம் ஆறவில்லை.
ஏழெட்டு லுங்கிகள் நாள் முழுக்க தொடர்ந்து மாற்றினாலும் நிற்காதபடி பென்னிக்ஸுக்கு பின்புறமிருந்து ரத்தம் தொடர்ந்து வந்திருக்கிறது. காரணம் போலீசார் தாக்குதலின் போது ஆசன வாயில் ஏதேதோ பொருட்களை நுழைத்து வன்கொடுமை பண்ணியிருப்பது. இது அதிகார வெறியில் நடந்ததா அல்லது இதன்பின்னர் சாடிஸ, சேடோமஸோக்கிச மனநிலை - ஒருவர் தன்னெதிரே வலியில் கதறுவதைக் கண்டு பாலின்பம் அடைவது - செயல்பட்டுள்ளதா? என்னுடைய ஒரு சந்தேகம் பென்னிக்ஸ் தன் தந்தையை அடிக்கும் போலீஸாரை காவல் நிலையத்தில் வைத்துக் கண்டித்த போது அங்கிருந்த ஆய்வாளர் ஶ்ரீதர் மற்றும் துணை ஆய்வாளர் பால்துரை இருவரில் ஒருவருக்கு அவரிடத்து ஒருபாலின ஈர்ப்பு தோன்றியிருக்க வேண்டும், இது தான் விரும்பும் ஆண் தன்னை அவமரியாதையாய் பேசுகிறாரே எனும் இச்சை கலந்த கோபமாக மாறியிருக்க வேண்டும். இதுவே அவரை ஆசன வாயைக் கிழித்து வதைக்குமளவுக்கு இவர்களைத் தூண்டியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். (அல்லாவிடில் அவருக்கு மட்டும் ஏன் அந்த கொடுமை நடக்க வேண்டும்?) ஆகையால் இதை வெறுமனே கொலை அல்லது போலீஸ் வன்முறை என அல்ல, பாலியல் வன்கொடுமை எனப் பார்ப்பதே சரியாக இருக்கும்.
இதில் சம்மந்தப்பட்டவர்களை வெறுமனே இடம்மாற்றுவது, தற்காலிக வேலை நிறுத்தம் செய்வது எப்படித் தீர்வாகும்? இவர்களுக்கும் ரேப்பிஸ்டுகள், சைக்கோபாத்துகளுக்கும் வித்தியாசம் இல்லை எனும் போது இவர்களின் உளவியல் சிக்கலை ஆய்வு செய்து தகுந்த சிகிச்சை அளித்த எதிர்காலத்தில் மனித சமூகத்திடம் இருந்து இவர்களை விலக்கி வைக்க வேண்டாமா?
இறுதியாக, இதை வெறுமனே தனிமனித உளவியல் பிரச்சனையாக, வன்முறை விழைவாக, அதிகார துஷ்பிரயோகமாகக் கண்டு கடப்பது ஆபத்தானது - மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி அதிகாரத்தை நிலைநிறுத்துவதே காவல்துறை வேலை எனும் எண்ணம் இன்று வலுவாக வேரூன்றி விட்டது. அதை வேரறுக்க வேண்டும், மக்களின் பணியாளர்களே காவலர்கள் எனும் நிலையை உருவாக்க வேண்டும். எப்படி?
ஒரு சிறிய நடைமுறை மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்:
பணியில் இருக்கும் காவலருக்கு ஒவ்வொரு ஆறுமாதமும் performance review நடத்தப்பட வேண்டும். உச்சபட்ச மேலதிகாரி முதல் கான்ஸ்டபிள் வரை இது நடக்க வேண்டும். ஒரே வித்தியாசம் இதை செய்பவர் காவல்துறைக்குள் இருக்கும் அதிகாரியாக இருக்கக் கூடாது. காவல் நிலையம் இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களாக இருக்க வேண்டும். கருத்துக்கணிப்பு மூலம் இதை சுலபத்தில் செய்யலாம். ஒரு காவலர் மீது மக்கள் அதிருப்தியாக இருந்தால் அவர் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவராக இருந்தாலும் அவரது பதவி தற்காலிகமாய் பறிக்கப்பட வேண்டும். ஒரு மாதத்திற்குள் அவரால் மக்களின் நல்லெண்ணத்தைப் பெற முடியாவிடில் நிரந்தரமாய் பதவி பறிக்கப்பட வேண்டும்.
அது மட்டுமல்ல, ஒவ்வொரு காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியிலும் என்னென்ன விசயங்களில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும் என்பதை மக்களிடம் கருத்துக்கணிப்பு எடுத்து முடிவு செய்ய வேண்டும். இவற்றை இலக்காக அறிவித்து காவல்துறை செயல்பட வேண்டும்.
குறைந்தது ஒரு வருடமேனும் ஒரு காவலர் இடமாற்றம் செய்யப்படக் கூடாது.
மேலும், காவல்நிலைய எல்லைக்கு உடபட்ட மக்களுக்கு அடுத்தபடியாய் காவலர்கள் மீது அதிகாரம் நீதிமன்றத்துக்கே இருக்க வேண்டுமே அன்றி அரசியல்வாதிகளுக்கோ மேலதிகாரிகளுக்கோ அல்ல.
கடந்த சில ஆண்டுகளாகவே காவல்துறையினர் கூலிப்படையை விட மோசமாக மக்கள் விரோதிகளாக செயல்பட்டு வருகிறார்கள். போராடுகிற மக்களை ஏதோ மிருகங்களைப் போல சாவகாசமாகக் குறிபார்த்து சுடுகிறார்கள். மக்களை மொத்தமாய் குற்றவாளிகளாக, மற்றமையாகக் காணும் போக்கு ஒரு உளவியலாக, அமைப்பு ரீதியாக காவல்துறைக்குள் செயல்படுகிறது. காவலர்களுக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி அதிகமாக ஆக அவர்கள் காலனிய காலத்து பிரிட்டிஷ் காவலர்களாக மாறி வருகிறார்கள். இதை மாற்றி மக்களைத் தம் முதலாளிகளாக, தம் ‘சேவைக்கான’ ‘நுகர்வோராக’க் காணும் புதிய நோக்கு வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
மாறாக இந்த மக்கள் விரோத மனநிலையை வளரவிட்டால் மிக மோசமான சமூக வியாதியாக இது பரவும். 1922இல் சுதந்திர போராட்ட காலத்தில் சவுரி சவுராவில் நடந்ததைப் போல நடந்ததைப் போல மக்களே ஒன்று கூடி காவல்நிலையங்களைக் கொளுத்தும் சம்பவங்கள் நடைபெறும் காலம் தொலைவில் இல்லை.
கருத்துகள்