கேரள தங்கக் கடத்தல் குற்றவிசாரணையின் போக்கை பின் தொடர்பவர்கள் அதற்கும் “பாதாள் லோக்” வெப்சீரிஸில் ஊடகவியலாளர் மீதான கொலை முயற்சியை புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து முடிவைத் தெரிவிக்கும் காட்சிக்குமான தொடர்பை கவனிக்கலாம் - “பாதாள் லோக்கில்” அரசியலுக்காக நிகழ்த்தப்படும் கொலை முயற்சியை நேபாள தீவிரவாதியின் (ஆனால் அப்பெண்ணோ நேபாளத்தில் பிறந்து இங்கு வளர்ந்த அப்பாவியாக இருப்பாள்.) துணையுடன் பாகிஸ்தான் செய்யும் தீவிரவாதத் தாக்குதல் என விசாரணை அதிகாரிகள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து சொல்வார்கள். இப்போது வெளிவந்துள்ளது நீண்ட காலமாய் கேரளாவுக்கு அரபு நாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் தங்கத்தின் ஒரு பகுதி மட்டுமே. ஒரே வித்தியாசம் தேசிய புலனாய்வு அமைப்பு நடுவே புகுந்து இந்த கடத்தல் குற்றத்துக்கு தீவிரவாத சாயல் அளிக்கிறார்கள் என்பது. இதில் பங்கேற்றவர்கள் இந்துக்கள் என்பது ஒரு பொருட்டில்லை, உடனடியாய் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதும் பொருட்டில்லை. மலப்புறத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அரபு நாட்டுப் பணத்தைக் கொண்டு தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார்கள், தேசப்பாதுகாப்புக்கு உலை வைக்கிறார்கள், கேரள இந்துக்களை கொல்லத் திட்டமிடுகிறார்கள் எனும் அதே பாஜக கதையாடலையே இப்போது தேசிய புலனாய்வு அமைப்பும் கிளிப்பிள்ளையைப் போல திரும்பச் சொல்கிறது.
இந்தக் குற்றத்தில் சம்மந்தப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கேரள அரசின் ஐ.டி பிரிவின் நிர்வாகச் செயலாளர். இந்த துறையின் செயலரான சிவசங்கரனைக் கையில் போட்டு, சில பல பாலியல் உடன்படிக்கைகளின் வழி இந்த ஸ்வப்னா இப்பொறுப்பைப் பெற்றுள்ளார். மற்றபடி அந்த அம்மாவுக்கு ஐ.டி பற்றியோ, நிர்வாக மேலாண்மை பற்றியோ ஒன்றும் தெரியாது - அவர் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காதவர். ஏற்கனவே சில இடங்களில் இவர் போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி, மேலதிகாரிகளுடன் ‘சமரசங்கள்’ செய்து முக்கிய பொறுப்புகளைப் பெற்று பின்னர் அங்கிருந்து எல்லாம் வெளியேற்றப்பட்டவர். உடனடிப் பணத்துக்காக, அதிகாரத்துக்காக உடலைப் பயன்படுத்தும், அவ்வாறு பெரிய குற்ற வலைகளில் முக்கிய கண்ணியாக மாறும் சில பெண்களில் ஒருவர் தான் இந்த ஸ்வப்னா. கடந்த வருடம் இவை ஐ.டி துறை பொறுப்பில் இருந்தும் வெளியேற்றப்பட்ட பின் முழுமையாக கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார், அதற்கு தன் தொடர்புகளை பயன்படுத்தி இருக்கிறார். மற்றபடி ஸ்வப்னாவுக்கும் பின் லேடனுக்கும் எல்லாம் தொடர்பு இருக்காது.
கடத்தப்பட்டு பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு மொத்தமாய் பதினைந்தே கோடி என்கிறார்கள் - இதை வைத்து சென்னையில் ஒரு பங்களா வாங்க முடியுமா? பீலா ராஜேஷ் கட்டி வரும் பங்காளவின் மதிப்பே முன்னூறு கோடி என்கிறார்கள். அதை விட மிகப்பெரிய பல லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரக் குற்றங்களும் நாளும் நடந்து வரும் போது ஏன் இந்த பதினைந்து கோடி தங்கக் கைப்பற்றலை ஊடகங்கள் இவ்வளவு ஊதிப் பெருக்குகின்றன?
இரண்டு நோக்கங்கள்:
1) வரும் சட்டமன்றத் தேர்தலில் பினராயி விஜயன் தீவிரவாதத்தை வளர விடும் பலவீனமானத் தலைவர், அவருக்கு நிதியுதவி செய்பவர்கள் அரபு நாடுகளில் உள்ள தீவிரவாத ஆதரவாளர்கள் எனும் பொய்ச்சித்திரத்தைக் கட்டியெழுப்புவது (இந்த சிவசங்கரன் முதல்வரின் தனிச்செயலாளராக இருந்தவரும் கூட).
2) கேரளாவில் தீவிரவாதம் எனும் பீதியைப் பரப்பி பிரிவினைவாதத்தை வளர்த்துவது.
அமித் ஷாவும் இன்ன பிற கேரள பாஜக தலைவர்களும் கேரள இஸ்லாமியர் குறித்து எப்படியான சித்திரத்தை உருவாக்க விரும்புகிறார்களோ, அங்குள்ள இடதுசாரி அரசை எப்படி களங்கப்படுத்த நினைக்கிறார்களோ அதற்கே புலனாய்வு அதிகாரிகளும் சிறந்த திரைக்கதை, இயக்கம் தந்து மக்களிடம் திரையிடுகிறார்கள். இதுவரை இத்தகைய தங்கக் கடத்தல் செயல்கள் மூலம் கேரளாவில் தீவிரவாதம் வளர்ந்ததற்கு இந்த அதிகாரிகளிடம் ஏதாவது சான்று உண்டா? வடக்கிந்தியாவில் வெடிக்கிற குண்டுகள் ஏன் தென்னகத்தில் வெடிப்பதில்லை என்றால் இங்கே இந்துத்துவா இல்லை என்பதே அதன் முதல் பதில். இல்லாத ஒன்றை இருப்பதாக சித்தரித்து எப்படியாவது அங்கே நிலைப்பெற்று விட வேண்டும் என்பதே பாஜகவின் கனவு.
எஸ்.வி சேகர், எச்.ராஜா மற்றும் சாத்தான்குளம் படுகொலையில் சம்மந்தப்பட்ட காவிக்கும்பலை தப்ப விட்ட போலீசார் இம்முறை பெரியாரியவாதிகளுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்கும். ஐயமே இல்லை.
ஆனால் தமிழக பாஜகவின் அடிமனத்தில் இருப்பதும் கேரள கடத்தல் போல ஒன்று இங்கு நிகழ்ந்து விடாதா, சில பல குண்டுகளை அங்கங்கே வெடிக்க வைத்து, மதக்கலவரங்களை நடத்தி எப்படியாவது அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 20 இடங்களைப் பெற்று விட முடியாதா எனும் ஏக்கமே. ஏனென்றால் உளவுத்துறை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கை படி வரும் அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலில் தமிழகத்திலும் கேரளாவிலும் பாஜக மீண்டும் படுதோல்வியைத் தழுவல் போகிறது. இதை சரி கட்டத்தான் நிர்வாகிகளை மாற்றி, சில அதிரடி நடவடிக்கைளை எடுத்து வருகிறது பாஜக - தமிழகத்தில் பாஜக ஒரு பிராமணக் கட்சி எனும் பிம்பத்தை மாற்ற முருகனைத் தலைவராக்கி, முருகக்கடவுளை ராமரிடத்தில் வைத்து ஜல்லியடிக்கிறது. தமிழக பாஜக தலைமை அண்மையில் ஒரு முற்போக்கு பெரியாரிய யுடியூப் சேனலைக் குறிவைத்து கண்டிக்கிறார்கள், அதில் முருகக்கடவுள் ஆபாசமாய் சித்தரிக்கப்படுவதாய் காவல்துறையில் வழக்குத் தொடுக்கிறார்கள். இவை எதுவும் பெரிதாய் எடுபடவில்லை.
தீவிரவாதக் கதையாடலை கிளப்பி விடலாம், குண்டு வைக்கலாம், கலவரங்களை நிகழ்த்தலாம் என்றால் துரதிஷ்டவசமாய் கொரோனா ஊரடங்கு நீடிக்கிறது. பொதுவிடத்தில் மக்கள் கூடுவதில்லை. பாவம், அவர்களின் நிலை உண்மையிலேயே பரிதாபம் தான். ஊடகங்கள் முன்பு “தீவிரவாதம், தீவிரவாதம்” என பஜனை பண்ணுவதை விட இப்போதைக்கு வேறு வழியில்லை.
பாஜக தமிழகத்தில் நிலைப்பெற வேண்டும் என்றால் வடக்கே உள்ள மாக்கான்களிடம் செல்லுபடியாகும் மதவாதத்தைக் கொண்டு வந்தால் முடியாது. தேசப்பற்று, ஜெய் ஹிந்த், ராமர் போன்ற கோஷங்களும் செல்லுபடியாகாது. முதலில் அவர்கள் மக்களுக்காக, மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்காக, சமத்துவத்துக்காகப் பேச வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை மத்திய அரசின் சார்பில் கூடுதலாக தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். அப்படிக் கொண்டு வரும் ஒவ்வொன்றிலும் மதச்சாயம் பூசாமல் இருக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் சங்கிகளுக்குப் புரியாது. மாக்கான்களிடம் பேசிப் பழகியவர்களுக்கு மனிதர்களிடம் பேசத் தெரியாது.

கருத்துகள்