(2) இலக்கிய வாசிப்பாளர்களுக்கு மனத்தின் புதிர்கள் குறித்த நேரடியான தீர்வுகளை விட ஆழமான விசாரணைகளே முக்கியம். அவ்வகையில் இரண்டாம் வகையினரின் எழுத்துக்கள் இலக்கிய வாசகர்களை ஈர்க்கும். இந்த psychiatryஇன் பிதாமகர் என அறியப்படும் சிக்மண்ட் பிராயிடைப் (Sigmund Freud) [1856-1939] பற்றி அநேகமாய் எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆஸ்திரியாக்காரர். அவர் ஒரு தனித்துவமான சிந்தனையாளர். மனத்தின் சிக்கல்களை, நோய்மைகளை மொழியில் அடையாளம் கண்டு, ஒரு மனிதன் தன்னை சரியாக வெளிப்படுத்தக் கற்றுக் கொண்டால் அவனது சிக்கல்கள் சரியாகி விடும் என நம்பினார்.
பிராயிட் இலக்கிய விமர்சனத்திலும் கால் பதித்தார், அதன் பிறகு விமர்சனத்தில் உளவியல் ஒரு தவிர்க்க முடியாத அம்சமானது. பிராயிட் சர்ச்சைக்குரிய ஒரு சிந்தனையாளர் என்பதால் அவரை எல்லாரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு மனிதனின் நடத்தையை, மனப்போக்கை பற்றி யார் பேசினாலும் அங்கே பிராயிட் எட்டிப் பார்த்து விடுவார். அவரது உளப்பகுப்பாய்வு இவ்வளவு பிரபலமானதற்கு ஒரு காரணம் அவர் அளித்த சித்திரம் 1) நவீன எந்திரமய சூழலுக்குப் பொருத்தமாக இருந்தது - ஒரு பந்தை நீருக்குள் அழுத்தினால் அது வெளியே வரும் என நமக்குத் தெரியும். இயல்பியலில் ஒரு ஆற்றலுக்கு அழிவே இல்லை என்றார்கள். ஒரு எந்திரத்துக்குள் விசை எப்படி சென்று பல்வேறு விதங்களில் மாற்றமடைகிறது என நாம் பார்க்கிறோம். பிராயிட் இந்த விதமான ஒரு உவமையை மனத்திற்கும் அளித்தார். அங்கு நீங்கள் ஒரு உணர்ச்சியை ஊட்டினால் அது ஒன்று பத்தாகி பத்து நூறாக வளரும். எப்படி? அதன் மீது நாம் கண்காணிப்பு, அதனாலான கட்டுப்பாடு, சமூக விலக்க அச்சம், தடைகள் போன்ற விசயங்களை ஊட்டும் போது, திணிக்கும் போது அதற்கு விசை கிடைக்க அது ஆழ்மட்டத்துக்கு சென்று, நீரை அளையும் போது மீன் குஞ்சு கீழே போய் ஒளிவதைப் போல, மறையும், ஆனால் அது இயல்பியல் விதிப்படியே வேறு வடிவில், ஏற்கத்தக்க, ஏற்க முடியாத தோற்றங்களில், வெளியே வரும் என்றார். ரொம்ப அருவமான ஒரு அகச்செயல்பாட்டை அவர் இப்படி எளிமைப்படுத்தி புரிய வைத்தார். எல்லாரும் அருவருக்கத்தக்கது என ஒதுக்கிய பாலியலுக்கு அவர் முன்னுரிமை அளித்தார், மதம், கடவுள், தாய்மை, கலைச்செயல்பாடுகள் போன்ற புனிதங்களை உடைத்தார்.
ஆனால் பிராயிடுக்கு அறிவுத்துறைகளில் இருந்தே பலத்த எதிர்ப்பு வந்தது, அவர் மானுடச் செயல்பாடுகளை, மிகைப்படுத்துகிறார், கொச்சைபடுத்துகிறார் என. பெண்ணியவாதிகள் மற்றொரு பக்கம் அவரது “ஆண்-மைய” சிந்தனையை கண்டித்தனர். ஒழுக்கவாதிகள் அவரை ஒருநாளும் ஏற்றுக்கொள்ளவில்லை - தாய்-மகன் உறவு பாலியல் ரீதியானது என்றால் யாருக்குத் தான் ஏற்க மனம் வரும். இப்படி சர்ச்சை, எதிர்ப்பு என துவங்கி அப்படியே முடிந்தது பிராயிடின் காலம்.
(3) ஆனால் பிராயிடை அவரது அடுத்த தலைமுறையினரால் சுலபத்தில் மறுக்க, மறக்க முடியவில்லை. பிராயிட் மானுட இருப்பை முழுக்க முழுக்க உடல் சார்ந்த சிக்கல்களுடன் முடிச்சுப் போட்டது நியாயமானதா? நமது பிரக்ஞையை வெறுமனே இச்சையினால் நடத்தப்படும் பௌதீக ஆற்றலாக அவர் பார்த்தது சரியானதா? ஆண்மை மட்டுமே சமூகத்தின் மையவிசையா? இதற்கு பதில் அளிப்பதற்கு ஒருவர் தோன்றினார்: ஷாக் லக்கான் (Jacques Lacan) [1901-1981]. பிரான்ஸில் தோன்றிய மகத்தான சிந்தனையாளர்களில் ஒருவர். லக்கானின் முக்கியமான பங்களிப்பு அவர் பிராயிடை தத்துவார்த்தமாக அணுக சொல்லித் தந்தார் என்பது. அவர் பிராயிடின் பல கருத்தாக்கங்கள் - பாலியல் ஆற்றல், தாய்மை, தந்தைமை, உபமனம் - ஆழ்மனம் - பிரக்ஞை மனம் - சமூக உறவு, ஈடிபல் காம்பிளக்ஸ் போன்றவற்றை நேரடியான பொருளில் பார்க்கக் கூடாது, அவை உருவகங்கள் என சொல்லித் தந்தார். உதாரணமாக அவர் மனம் என்பதை மொழி அமைப்பாகக் கண்டார். மனம் உடலுக்குள் இருக்கிறதல்லவா, லக்கான் இந்த உடலே ஒரு உருவகம் என்றார். அவர் உளவியலை உள ஆய்வில் இருந்து சுயம் கட்டமைக்கப்படுவது குறித்த ஆய்வாக மாற்றினார். சுயம் என்பது மொழிக்குள் பல்வேறு வகையான பிரதிபலிப்புகளால் தோன்றுவது. தான் யாராக இருக்கிறான் என ஒருவன் புரிந்து கொள்வதற்கு இச்சையே பிரதான தூண்டுதல், திசை காட்டும் கருவி என்றார். அதாவது இச்சையை பெண்ணைக் கூடுவதற்கான பௌதீக இச்சை என்றல்லாமல் அடைய முடியாத ஒன்றை அடையும் முனைப்பில் நம்மை ஈடுபடுத்தும் உணர்வு என விளக்கினார். இச்சையின் திருப்தி என்பது இச்சிக்கும் பொருளை அடைய முடியாத படி அது நம்மை விட்டு விலகி சென்று கொண்டே இருப்பது என்றார்.
சரி இதில் ஆண்-பெண் உறவு எங்கு வருகிறது?
ஆணை சமூகத்தின் சட்டதிட்டங்கள், அதிகார அமைப்புகள், பண்பாட்டு விழுமியங்கள், மதிப்பீடுகள் போன்றவற்றின் உருவகமாக அவர் கண்டார். கூடுதலாக இந்த ஆணை அவர் தந்தை என பெரிய Fஉடன் Father என்றார். இந்த தந்தை என்பவைக் கண்டு நாம் அஞ்சுகிறோம், அவரை முறியடித்து அவரிடத்தை அடைய ஏங்குகிறோம் என பிராயிட் சொன்னார். லக்கான் இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று இந்த தந்தையை நாம் இச்சிக்கிறோம் என்றார். தாய்க்காக அல்ல, அதிகாரத்துக்காக. உ.தா., ஒரு போராட்டக் களத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு போராளிகளின் நோக்கம் போராட்டம் மூலம் நீதியை நிலை நாட்டுவது. லக்கானிய உளவியலில் நீதி இச்சிக்கப்படும் ஒரு பொருள். அது கற்பனையான ஒரு உருவம் - இதை லக்கான Imaginary என்றார். இந்த போராட்டம் என்பது அதிகாரத்துடனான ஒரு உறவாடமும் தானே. காவல்துறை, அரசியல் தலைமை, அதிகார அமைப்புகள் போன்றவற்றுடன் போராடி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான உறவாடல் இது. இந்த அதிகார அமைப்புகள் நமக்கு நமது “தந்தையை” நினைவுபடுத்தும் உருவகங்கள். இந்த அமைப்புகளின் முறைமைகளை அவர் Symbolic என்றார். இந்த Symbolic வழியாக நாம் தந்தையை (Father) இச்சிப்பதாகவும் லக்கானிய உளவியலில் நாம் பகுப்பாய முடியும். அதாவது நாம் இங்கு உளவியலைப் பற்றி பேசுவதே Symbolicஇன், தந்தை உருவகத்துடன் உறவாடி நம்மை அந்த அதிகாரத்தின் மொழியில் கட்டமைக்கிற முயற்சியே.
இந்த சுயத்தைக் கட்டமைக்கிற சங்கதியை விளக்க லக்கான் ஒரு குழந்தை நிலைக்கண்ணாடியின் முன் நின்று தன்னையே பார்த்து “யார் இது?” என வியக்கிற காட்சியை உதாரணம் காட்டுகிறார். அது என் பிரதிபிம்பம் என்றல்லாமல் அதுவே நான் என அது நினைக்கிறது. ஆனால் ஒரு பிரச்சனை. கண்ணாடியை விட்டு விலகினால், அசைந்தால் அந்த “சுயமும்” அழிந்து விடுகிறது. நான் எங்கே என அது தேடினால் காணவில்லை. ஏன் அதன் உடல் அதன் சுயம் இல்லையா? இல்லை - 1) உடலை நம்மால் முழுசாகப் பார்க்க முடியாது, அதை பிரதிபலித்தே பார்க்க முடியும்; 2) உடல் மட்டுமே அல்ல அதனுடன் ஒரு பகுதியாக யோசிக்கிற, இச்சிக்கிற, புலன்களால் உணர்கிற ஒரு மனமும் இருக்கிறதல்லவா? அதை எப்படிப் பார்ப்பது? நமது இருப்பு என்பது உடலால் ஆனதா அல்லது மனத்தால் ஆனதா? இந்த கேள்விகளுக்கு விடை நம்மை இந்த உலகில் உள்ள பொருட்கள், அமைப்புகள், உயிர்கள், மனிதர்கள் மீது பிரதிபலித்து உணர்ந்து கொள்வது. ஆம், வளர வளர குழந்தையால் வெறுமனே கண்ணாடியில் தன்னைப் பார்த்து திருப்தி அடைய முடியாது. ஏன்?
அந்த பிரதிபிம்பம் நிலையாக இல்லையே? எனில் சுயமும் நிலையற்றது எனும் நிச்சயமின்மை ஏற்படுகிறது. ஆகையால் தான், மனிதன் தன்னை முடிவற்று பிரதிபலித்து அந்த பிரதிபலிப்புகளுடன் சரசமாடியபடியே இருக்கிறான்.
இதில் “தாய்” (Mother) என்பவரை ஒரு கட்டற்ற இயற்கையின் இருப்பாக, காலமற்ற, இருமையற்ற ஒரு வெளியாக லக்கான் பார்க்கிறார். தாயிடம் திரும்புவது அனுபூதி போல, இறைவனிடம் திரும்புவதைப் போல.
லக்கான் இப்படி பிராயிட் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தவிடு பொடியாக்கினார். தத்துவார்த்தமாக அவரை செதுக்கி நம் முன் வைத்தார். லக்கான் வழியாக படிக்கப்படும் பிராயிடே எனக்கு பிடித்தமானவர். காமம்-பால் ஒடுக்குமுறை-சமூக அச்சம் எனும் குறுகின கூண்டில் இருந்து பிராயிடை விடுவித்து அகன்ற வானில் பறக்க விட்டார் லக்கான்.

கருத்துகள்