மனுநீதியில் வரும் அபாசமான, பெண்களுக்கு எதிரான பகுதிகள் இடைச்செருகல்கள் என இந்துத்துவர் வாதிடுவதில் ஒரு முரண் உள்ளது - ஒருவர் ஒரிஜினல் எழுத்தாளராக இருக்கும்பட்சத்தில் பின்னால் எழுதிச் சேர்க்கப்படுவதை இடைச்செருகல் எனலாம். ஆனால் அதையே கற்பனையான ஒரு எழுத்தாளருக்கு சொல்ல இயலாது. மனு வாழ்ந்தார் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. அது ஒரு புனைப்பெயராக இருக்க வேண்டும், அவருக்குப் பின்னர் பலரும் அப்பெயரில் சமூக ‘நெறிகள்’, விதிமுறைகளை பொறித்து வைத்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் பார்வை. இது சரி எனில் இடைச்செருகல் எனும் தப்பிக்கும் உத்தி எடுபடாது.
ஒன்று மனு ஒரு வரலாற்றுப் பாத்திரம் என நிரூபிக்க வேண்டும், அவரது சிந்தனைகள் இவையிவை என தெளிவுபடுத்தி ஒரு திருத்தப்பட்ட பதிப்பை அவர்களே கொண்டு வர வேண்டும்; தமிழில் இலக்கிய பிரதிகளுக்கு இதை நாம் செய்திருக்கிறோம். ஏன் இந்துத்துவர்களால் அதை மனுநீதிக்கு செய்ய முடிவதில்லை?
நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் இதற்கு ஒரு மறைமுக பதிலை குஷ்பு அளித்தார்: “மனுநீதியில் அனைத்தையும் நாங்கள் ஏற்கவில்லை”. எதையெதை என அவர் சொல்ல மறுத்து விட்டார். ஏனென்றால் கணிசமான மனுநீதியை இப்போது இவர்களால் பொதுவெளியில் ஆதரிக்க முடியாது. அதே நேரம் அதன் சனாதன தர்மம், சாதி குறித்த, பிராமணியம் குறித்த வலியுறுத்தல்கள், நம்பிக்கைகள் அவர்களுக்கு இந்து சமூகத்தை ஒரு பிரமிடைப் போல பிராமணர்கள், அதற்கு அடுத்து வைசியர்கள், அதற்கு அடுத்து சூத்திர சத்திரியர்கள் என கட்டமைப்பது அவர்களுக்கு அவசியமாக உள்ளது. இப்போதும் ஆர்.எஸ்.எஸ் (பிராமணியம்) + பாஜக (வைசியர்கள் + சத்திரிய சூத்திரர்கள்) + உதிரி இந்துத்துவ அமைப்புகள் (சூத்திரர்கள்) என ஒரு படிநிலையை அவர்கள் வெற்றிகரமாய் பயன்படுத்தி அதிகாரக் குவிப்பை செய்து வருகிறார்கள். இது அவர்களுக்கு மிக வசதியாக இருக்கிறது. ஒரு சிறந்த உதாரணம், எல்.முருகன். அவர் அம்பேத்கரை படித்தவர் என்றாலும் அம்பேத்கரிய கருத்துக்களை பொதுவெளியில் பேச மாட்டார், அப்படி ஊமையாவதன் வழி அவர் தன்னை இப்படிநிலையில் பொருத்தி கொள்வார். சனாதன தர்மத்தை பின்பற்றுவதன் வழி தலித்துகளும் சூத்திரர்களாக நடத்தப்படுவார்கள் என ஒரு பொய்த்தோற்றத்தை உருவாக்கிட முடியும். இப்படி மனுநீதி ஒரு அரசியல் கொள்கை விளக்கமாக அவர்களுக்கு அவசியம். அதே நேரம் அதை யாரும் பொதுவெளியில் அப்பட்டமாக விவாதிக்காதபடியும் பார்த்துக் கொள்வார்கள்.
பாஜகவின் கனவு முழுமையாக நிறைவேறும் நாள் நமது பிள்ளைகள் பள்ளியிலேயே மனுதர்மத்தை உருப்போட்டுக் கொண்டிருப்பார்கள். அதுவரை இந்துத்துவர்கள் நம் முன்பு செத்து செத்து விளையாடுவார்கள்.

கருத்துகள்