முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காங்கிரஸை எப்படி புத்துருவாக்குவது?


காங்கிரஸ் கட்சியின் தலைமையை காந்தி குடும்பம் விட்டு விலக வேண்டும் எனும் கோரிக்கையை வைக்கிறார்களில் ஒரு கவனிக்கத்தக்க குரல் ராமசந்திர குஹா.



காந்தியின் வரலாற்றை எழுதியவர், காந்தி காலத்து காங்கிரஸின் லட்சிய போதத்தை கொண்டாடியவர் எனும் வகையில் அவரது கோரிக்கைக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. ஆனால் நடைமுறையில் இது எந்தளவுக்கு காங்கிரஸுக்கு உதவும்? சோனியா குடும்பம் விலகும்பட்சத்தில் மாற்றுத் தலைமை எதுவாக, எப்படியாக இருக்க வேண்டும்?


1) காங்கிரஸ் ஒரு குடும்பக் கட்சி எனும் பிம்பத்தை உடைக்க இது உதவும் என்கிறார் குஹா - இது ஓரளவுக்கு உண்மையே. ஆனால் இது மட்டுமே அல்ல உண்மை. பாஜகவின் பணபலம் அதை நேரடியாகவும் தேர்தல் பாண்டுகள் வழி மறைமுகமாகவும் ஆதரிக்கும் கார்ப்பரேட்டுகளிடமும் உள்ளது. அதன் கருத்தியல், அதிகாரத் தலைமை ஆர்.எஸ்.எஸ்ஸிடம் உள்ளது. அதன் நடைமுறை செயலூக்கத் தலைமை மோடி, ஷா, நட்டா போன்றோர் வசம் உள்ளது. பாஜக பயன்படுத்துவது நிழலுலகில் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் கொரில்லா செயல்திட்டம் - முதலீடு செய்கிறவர் ஒருவர், திட்டமிடுகிறவர் இன்னொருவர், அதை செயல்படுத்துவபர்கள் இன்னொரு பக்கம், இச்செயல்பாடுகளின் முகமாக முன்வைக்கப்படும் தலைமை வேறு. நிலைமை சாதகமாக இல்லை என்றால், ஆட்சிக்கு வர முடியவில்லை என்றால் இந்த துண்டுத்துண்டான முதலீட்டாளர்கள், செயல்பாட்டாளர்கள்தலைவர்கள் ஆளுக்கொரு திசைக்கு போய் அடுத்து எப்போது மழைபெய்யும் எனக் காத்திருப்பார்கள். காங்கிரஸ் போன்ற மரபான கட்சிகளின் கட்டமைப்பு வேறு - அவர்கள் தமது பணபலத்தை சொத்தாக மாற்றி ஒரு குடும்பத்துடன் குவிப்பார்கள்; தேர்தலுக்காகவும் கட்சி செலவுகளுக்காகவும் பணத்தை தேவையான போது செலவு செய்வார்கள். இயல்பாகவே எங்கு சொத்து குவிகிறதோ அதிகாரமும் அங்கேயே குவியும். இது வாரிசு ஆட்சிக்கு வழிவகுக்கும். பாஜகவும் தவறான வழிகளில் பணமீட்டும், ஊழல் பண்ணும், சொத்தைக் குவிக்கும், ஆனால் அது சில தனிமனிதர்களிடம் மட்டும் சேர்ந்து, அந்த தனிமனிதர்களே அதிகார மையமாகவும் இருந்து சுலபத்தில் அடையாளம் காணப்படும் வகையில் இருக்காது. மோடி-அதானி பினாமி கூட்டணி, ஷாவும் அவரது மகனும் போன்ற விதிவிலக்குகளை தவிர்த்தால் பாஜகவின் தவறுகள், முடிவுகளுக்கு நீங்கள் எந்த அதிகார மையத்தையும் சுலபத்தில் குற்றம் சாட்ட முடியாது. ஒரு அமீபாவைப் போல உருமாறிக் கொண்டே இருக்கும் அதிகார, நிதி மையங்களைக் கொண்டது அக்கட்சி. மோடி ஓய்வு பெற்ற பிறகு அவர்களது கார்ப்பரேட் முகவராக மற்றொரு அதானி தோன்றுவார். இது ரொம்ப இயல்பாக நடந்தேறும் என்பதே அக்கட்சியின் தனியியல்பு

ஆக சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் தலைமையை துறப்பது பெருமளவில் காங்கிரஸின் பிம்பத்தை மாற்றாது. அடுத்த கட்ட தலைமை என்பது மீண்டும் காங்கிரஸ் குடும்ப வாரிசுகளாலே அமைந்திருக்கும். வேட்பாளர்களும் அவர்கள் இடையில் இருந்து தான் தேர்வாவார்கள்.


2) காங்கிரஸ் தன் அடுத்த கட்ட தலைமையில் இருந்து ஒரு புதிய கட்சித்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என் குஹா கோருகிறார். இது கட்சியை புத்துணர்வூட்டி, வாக்காளர்களுக்கு நம்பிக்கையேற்படுத்தும் என்கிறார். ஆனால் இதில் ஒரு ஆபத்து உள்ளது - 1930களில் இருந்தே சங்கிகள் காங்கிரஸில் ஊடுருவி இருக்கிறார்கள். ஹிந்து சபாவுக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ், அதற்குப் பின்னர் பாஜக என பாதி ஹிந்துத்துவா மீதி காங்கிரஸ் கொள்கை என இருக்கிற தலைவர்கள் காங்கிரஸில் அதிகம். வல்லபாய் பட்டேலில் இருந்து பிரணாப் முகர்ஜி வரை இவ்விசயத்தில் ஒரு நீண்ட மரபு உள்ளது. பாபர் மசூதி இடிப்பை அரங்கேற்றி பாஜகவின் ஆட்சி அதிகாரப் பாதையை அமைத்துக் கொடுத்தவரே பாஜக பினாமியான நரசிம்ம ராவ் தானே. எப்போதெல்லாம் வலுவான தலைமையும் தேர்தல் வெற்றியும் அமையுமோ அப்போதெல்லாம் இந்த ஸ்லீப்பர் செல்கள் அமைதியாவார்கள். ஆனால் காங்கிரஸ் பலவீனமாகும் இவர்கள் கட்சியை ஆக்கிரமிக்க முயல்வார்கள். அண்மையில் நாம் பார்த்த காங்கிரஸ் தலைமைக்கு எதிரான கலக நடவடிக்கைகள் வெளியில் இருந்து பாஜக அரங்கேற்றியதே. இதை சோனியா அறிந்திருப்பதால் தான் அவர் இவர்களிடம் கோபம் கொண்டார். இவர்களது கோரிக்கைகளை பொருட்படுத்தி விவாதிக்காமல் இருந்தார். இப்போது காந்தி குடும்பத்தினர் வழிவிடுவது சங்கிகள் காங்கிரஸ் தலைமையை சுலபத்தில் கைப்பற்ற, அமித் பாயின் சாட்டைக்கு ஒடுங்குகிற பீ டீமாக காங்கிரஸ் மாற வழிவகுக்கும்.


3) வேறென்ன வழி? காங்கிரஸ் தனக்கு வெளியே உள்ள மாநிலக் கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி அங்கிருந்து ஒரு தலைவரையும் துணைத்தலைவரையும் தேர்ந்தெடுக்கலாம்; அதாவது காங்கிரஸை ஒரு கட்சி எல்லை கடந்த ஒரு கூட்டமைப்பாக மாற்றி, சரத் பவார், தேஜஸ்வி யாதவ், ஸ்டாலின், பிணறாயி, சந்திரசேகர் ராவ், உத்தவ் தாக்கரே, கேஜ்ரிவால், மம்தா போன்றவர்களை ஆலோசகர்களாக பிரதான பொறுப்பில் நியமிக்கலாம். அவர்களை வெளியில் இருந்து இயக்கும் கொள்கைத் தலைவர்களாகக் கொண்டு, அவர்களின் பரிந்துரைப்படி புதிய காங்கிரஸ் அல்லாத தலைவர்களை செயல்பாட்டுத் தலைமையாக. கொண்டு வரலாம். இந்த இரு நிலைத் தலைமைக்குப் பின்னால் ஒரு மறைமுக / மாய அதிகார மையமாக சோனியாவின் குடும்பம் இருக்கலாம். புதிய தலைமைக்கு தம் கட்சியின் தொண்டர்கள், சிறிய தலைவர்கள் பணிந்து செல்லும்படி சோனியா செய்யலாம். காங்கிரஸுக்கும் பிராந்திய, முற்போக்கு தேசியக் கட்சிகளுக்கும் இடையில் அதிகாரப் பகிர்வு சுலபமாக அமைவதை அவர் உறுதி செய்யலாம்.

 

 இதன் மூலம் காங்கிரஸ் என்றால் ஒரு கட்சி அல்ல, பல பிராந்திய, முற்போக்கு கட்சிகளின் கூட்டமைப்பு எனும் பிம்பத்தை உருவாக்கலாம். தலைமையை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் கொண்டு வந்து அனைத்து மாநிலங்களின் பிரதான கட்சிகளும் அதிகாரத்தைப் பகிரும் நிலையில் மாற்றலாம். இதனால் கிடைக்கும் பயன்கள் என்ன?

1) பலவிதமான கட்சித் தலைவர்களை சுழற்சி முறையில் உள்ளே கொண்டு வரும் போது ஊழல், குடும்ப அரசியல் என காங்கிரஸை ஒரு புள்ளியில் ஆணியடித்து நிறுத்தி விமர்சிக்க முடியாமல் போகும்.

2) கட்சி நிதியும் சொத்தாக, முதலீடாக பல கைகளில் மாறி மாறி வருவது - பாஜகவின் முதலீட்டாளர்களைப் போன்றே - கட்சியமைப்பை லகுவாக, சுலபத்தில் குற்றம் சாட்ட முடியாத ஒன்றாக மாற்றும்.

3) மேலும், கட்சி இந்தியா முழுக்க பரந்து விரிந்திருப்பதான தோற்றம் கிடைக்கும்.

4) எமெர்ஜென்ஸி, போபர்ஸ், சீக்கிய படுகொலைகள் போன்ற முந்தைய வரலாற்று சாபங்களை கடந்து செல்ல முடியும்.

5) மாநிலத்தில் மட்டும் வலுவாக இருக்கும் கட்சிகளுக்கு கட்டமைப்பு இன்றியே தேசம் முழுக்க அதிகாரத்தைப் பரப்ப இது உதவும்.

6) பாஜகவுக்கு எதிரான சிறிய கட்சிகளை, தலைவர்களுக்கு தம் கட்சியை காங்கிரஸுடன் இணைக்காமலே, தங்களுடைய பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி காங்கிரஸ் அதிகார மட்டத்தில் பதவிகளைப் பகிர்ந்திட நல்வாய்ப்பாக இது அமையும். .தா., வங்காளம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களையும், தில்லியையும் தாமே ஆள்வதாய் காங்கிரஸ் கருத முடியும்; மாநிலத் தேர்தல்களின் போது இடங்களுக்காக கெஞ்ச வேண்டியிராது. திமுகவோ கம்யூனிஸ்டுகளோ சிவசேனாவோ வென்றால் அது காங்கிரஸின் வெற்றியாகவே இருக்கும். மத்தியில் நாளை காங்கிரஸ் ஆட்சியமைத்தால் அது இம்மாநில சக்திகளின் ஆட்சியாக இருக்கும். கூட்டணிக்கும் இதற்கும் ஒரு நுட்பமான வித்தியாசம் உள்ளது - புரிந்துணர்வின், சமரசத்தின் அடிப்படையில் அமைவது கூட்டணி. ஆனால் இது ஒரு பல்-கட்சி பிரதிநுத்துவ கட்சியமைப்பாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில்லாத மாநில வாக்காளர்களை ஈர்க்க இது உதவும்


சுருக்கமாக சொல்வதானால், காங்கிரஸுக்குத் தேவை காந்திகளை வெளியேற்றுவது அல்ல, கட்சி தன் கொள்கையை மாற்றாமலே அடையாளத்தை, செயல்முறையை, உள்கட்டமைப்பை முழுக்க மாற்றியமைப்பது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...