முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காங்கிரஸை எப்படி புத்துருவாக்குவது?


காங்கிரஸ் கட்சியின் தலைமையை காந்தி குடும்பம் விட்டு விலக வேண்டும் எனும் கோரிக்கையை வைக்கிறார்களில் ஒரு கவனிக்கத்தக்க குரல் ராமசந்திர குஹா.



காந்தியின் வரலாற்றை எழுதியவர், காந்தி காலத்து காங்கிரஸின் லட்சிய போதத்தை கொண்டாடியவர் எனும் வகையில் அவரது கோரிக்கைக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. ஆனால் நடைமுறையில் இது எந்தளவுக்கு காங்கிரஸுக்கு உதவும்? சோனியா குடும்பம் விலகும்பட்சத்தில் மாற்றுத் தலைமை எதுவாக, எப்படியாக இருக்க வேண்டும்?


1) காங்கிரஸ் ஒரு குடும்பக் கட்சி எனும் பிம்பத்தை உடைக்க இது உதவும் என்கிறார் குஹா - இது ஓரளவுக்கு உண்மையே. ஆனால் இது மட்டுமே அல்ல உண்மை. பாஜகவின் பணபலம் அதை நேரடியாகவும் தேர்தல் பாண்டுகள் வழி மறைமுகமாகவும் ஆதரிக்கும் கார்ப்பரேட்டுகளிடமும் உள்ளது. அதன் கருத்தியல், அதிகாரத் தலைமை ஆர்.எஸ்.எஸ்ஸிடம் உள்ளது. அதன் நடைமுறை செயலூக்கத் தலைமை மோடி, ஷா, நட்டா போன்றோர் வசம் உள்ளது. பாஜக பயன்படுத்துவது நிழலுலகில் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் கொரில்லா செயல்திட்டம் - முதலீடு செய்கிறவர் ஒருவர், திட்டமிடுகிறவர் இன்னொருவர், அதை செயல்படுத்துவபர்கள் இன்னொரு பக்கம், இச்செயல்பாடுகளின் முகமாக முன்வைக்கப்படும் தலைமை வேறு. நிலைமை சாதகமாக இல்லை என்றால், ஆட்சிக்கு வர முடியவில்லை என்றால் இந்த துண்டுத்துண்டான முதலீட்டாளர்கள், செயல்பாட்டாளர்கள்தலைவர்கள் ஆளுக்கொரு திசைக்கு போய் அடுத்து எப்போது மழைபெய்யும் எனக் காத்திருப்பார்கள். காங்கிரஸ் போன்ற மரபான கட்சிகளின் கட்டமைப்பு வேறு - அவர்கள் தமது பணபலத்தை சொத்தாக மாற்றி ஒரு குடும்பத்துடன் குவிப்பார்கள்; தேர்தலுக்காகவும் கட்சி செலவுகளுக்காகவும் பணத்தை தேவையான போது செலவு செய்வார்கள். இயல்பாகவே எங்கு சொத்து குவிகிறதோ அதிகாரமும் அங்கேயே குவியும். இது வாரிசு ஆட்சிக்கு வழிவகுக்கும். பாஜகவும் தவறான வழிகளில் பணமீட்டும், ஊழல் பண்ணும், சொத்தைக் குவிக்கும், ஆனால் அது சில தனிமனிதர்களிடம் மட்டும் சேர்ந்து, அந்த தனிமனிதர்களே அதிகார மையமாகவும் இருந்து சுலபத்தில் அடையாளம் காணப்படும் வகையில் இருக்காது. மோடி-அதானி பினாமி கூட்டணி, ஷாவும் அவரது மகனும் போன்ற விதிவிலக்குகளை தவிர்த்தால் பாஜகவின் தவறுகள், முடிவுகளுக்கு நீங்கள் எந்த அதிகார மையத்தையும் சுலபத்தில் குற்றம் சாட்ட முடியாது. ஒரு அமீபாவைப் போல உருமாறிக் கொண்டே இருக்கும் அதிகார, நிதி மையங்களைக் கொண்டது அக்கட்சி. மோடி ஓய்வு பெற்ற பிறகு அவர்களது கார்ப்பரேட் முகவராக மற்றொரு அதானி தோன்றுவார். இது ரொம்ப இயல்பாக நடந்தேறும் என்பதே அக்கட்சியின் தனியியல்பு

ஆக சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் தலைமையை துறப்பது பெருமளவில் காங்கிரஸின் பிம்பத்தை மாற்றாது. அடுத்த கட்ட தலைமை என்பது மீண்டும் காங்கிரஸ் குடும்ப வாரிசுகளாலே அமைந்திருக்கும். வேட்பாளர்களும் அவர்கள் இடையில் இருந்து தான் தேர்வாவார்கள்.


2) காங்கிரஸ் தன் அடுத்த கட்ட தலைமையில் இருந்து ஒரு புதிய கட்சித்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என் குஹா கோருகிறார். இது கட்சியை புத்துணர்வூட்டி, வாக்காளர்களுக்கு நம்பிக்கையேற்படுத்தும் என்கிறார். ஆனால் இதில் ஒரு ஆபத்து உள்ளது - 1930களில் இருந்தே சங்கிகள் காங்கிரஸில் ஊடுருவி இருக்கிறார்கள். ஹிந்து சபாவுக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ், அதற்குப் பின்னர் பாஜக என பாதி ஹிந்துத்துவா மீதி காங்கிரஸ் கொள்கை என இருக்கிற தலைவர்கள் காங்கிரஸில் அதிகம். வல்லபாய் பட்டேலில் இருந்து பிரணாப் முகர்ஜி வரை இவ்விசயத்தில் ஒரு நீண்ட மரபு உள்ளது. பாபர் மசூதி இடிப்பை அரங்கேற்றி பாஜகவின் ஆட்சி அதிகாரப் பாதையை அமைத்துக் கொடுத்தவரே பாஜக பினாமியான நரசிம்ம ராவ் தானே. எப்போதெல்லாம் வலுவான தலைமையும் தேர்தல் வெற்றியும் அமையுமோ அப்போதெல்லாம் இந்த ஸ்லீப்பர் செல்கள் அமைதியாவார்கள். ஆனால் காங்கிரஸ் பலவீனமாகும் இவர்கள் கட்சியை ஆக்கிரமிக்க முயல்வார்கள். அண்மையில் நாம் பார்த்த காங்கிரஸ் தலைமைக்கு எதிரான கலக நடவடிக்கைகள் வெளியில் இருந்து பாஜக அரங்கேற்றியதே. இதை சோனியா அறிந்திருப்பதால் தான் அவர் இவர்களிடம் கோபம் கொண்டார். இவர்களது கோரிக்கைகளை பொருட்படுத்தி விவாதிக்காமல் இருந்தார். இப்போது காந்தி குடும்பத்தினர் வழிவிடுவது சங்கிகள் காங்கிரஸ் தலைமையை சுலபத்தில் கைப்பற்ற, அமித் பாயின் சாட்டைக்கு ஒடுங்குகிற பீ டீமாக காங்கிரஸ் மாற வழிவகுக்கும்.


3) வேறென்ன வழி? காங்கிரஸ் தனக்கு வெளியே உள்ள மாநிலக் கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி அங்கிருந்து ஒரு தலைவரையும் துணைத்தலைவரையும் தேர்ந்தெடுக்கலாம்; அதாவது காங்கிரஸை ஒரு கட்சி எல்லை கடந்த ஒரு கூட்டமைப்பாக மாற்றி, சரத் பவார், தேஜஸ்வி யாதவ், ஸ்டாலின், பிணறாயி, சந்திரசேகர் ராவ், உத்தவ் தாக்கரே, கேஜ்ரிவால், மம்தா போன்றவர்களை ஆலோசகர்களாக பிரதான பொறுப்பில் நியமிக்கலாம். அவர்களை வெளியில் இருந்து இயக்கும் கொள்கைத் தலைவர்களாகக் கொண்டு, அவர்களின் பரிந்துரைப்படி புதிய காங்கிரஸ் அல்லாத தலைவர்களை செயல்பாட்டுத் தலைமையாக. கொண்டு வரலாம். இந்த இரு நிலைத் தலைமைக்குப் பின்னால் ஒரு மறைமுக / மாய அதிகார மையமாக சோனியாவின் குடும்பம் இருக்கலாம். புதிய தலைமைக்கு தம் கட்சியின் தொண்டர்கள், சிறிய தலைவர்கள் பணிந்து செல்லும்படி சோனியா செய்யலாம். காங்கிரஸுக்கும் பிராந்திய, முற்போக்கு தேசியக் கட்சிகளுக்கும் இடையில் அதிகாரப் பகிர்வு சுலபமாக அமைவதை அவர் உறுதி செய்யலாம்.

 

 இதன் மூலம் காங்கிரஸ் என்றால் ஒரு கட்சி அல்ல, பல பிராந்திய, முற்போக்கு கட்சிகளின் கூட்டமைப்பு எனும் பிம்பத்தை உருவாக்கலாம். தலைமையை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் கொண்டு வந்து அனைத்து மாநிலங்களின் பிரதான கட்சிகளும் அதிகாரத்தைப் பகிரும் நிலையில் மாற்றலாம். இதனால் கிடைக்கும் பயன்கள் என்ன?

1) பலவிதமான கட்சித் தலைவர்களை சுழற்சி முறையில் உள்ளே கொண்டு வரும் போது ஊழல், குடும்ப அரசியல் என காங்கிரஸை ஒரு புள்ளியில் ஆணியடித்து நிறுத்தி விமர்சிக்க முடியாமல் போகும்.

2) கட்சி நிதியும் சொத்தாக, முதலீடாக பல கைகளில் மாறி மாறி வருவது - பாஜகவின் முதலீட்டாளர்களைப் போன்றே - கட்சியமைப்பை லகுவாக, சுலபத்தில் குற்றம் சாட்ட முடியாத ஒன்றாக மாற்றும்.

3) மேலும், கட்சி இந்தியா முழுக்க பரந்து விரிந்திருப்பதான தோற்றம் கிடைக்கும்.

4) எமெர்ஜென்ஸி, போபர்ஸ், சீக்கிய படுகொலைகள் போன்ற முந்தைய வரலாற்று சாபங்களை கடந்து செல்ல முடியும்.

5) மாநிலத்தில் மட்டும் வலுவாக இருக்கும் கட்சிகளுக்கு கட்டமைப்பு இன்றியே தேசம் முழுக்க அதிகாரத்தைப் பரப்ப இது உதவும்.

6) பாஜகவுக்கு எதிரான சிறிய கட்சிகளை, தலைவர்களுக்கு தம் கட்சியை காங்கிரஸுடன் இணைக்காமலே, தங்களுடைய பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி காங்கிரஸ் அதிகார மட்டத்தில் பதவிகளைப் பகிர்ந்திட நல்வாய்ப்பாக இது அமையும். .தா., வங்காளம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களையும், தில்லியையும் தாமே ஆள்வதாய் காங்கிரஸ் கருத முடியும்; மாநிலத் தேர்தல்களின் போது இடங்களுக்காக கெஞ்ச வேண்டியிராது. திமுகவோ கம்யூனிஸ்டுகளோ சிவசேனாவோ வென்றால் அது காங்கிரஸின் வெற்றியாகவே இருக்கும். மத்தியில் நாளை காங்கிரஸ் ஆட்சியமைத்தால் அது இம்மாநில சக்திகளின் ஆட்சியாக இருக்கும். கூட்டணிக்கும் இதற்கும் ஒரு நுட்பமான வித்தியாசம் உள்ளது - புரிந்துணர்வின், சமரசத்தின் அடிப்படையில் அமைவது கூட்டணி. ஆனால் இது ஒரு பல்-கட்சி பிரதிநுத்துவ கட்சியமைப்பாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில்லாத மாநில வாக்காளர்களை ஈர்க்க இது உதவும்


சுருக்கமாக சொல்வதானால், காங்கிரஸுக்குத் தேவை காந்திகளை வெளியேற்றுவது அல்ல, கட்சி தன் கொள்கையை மாற்றாமலே அடையாளத்தை, செயல்முறையை, உள்கட்டமைப்பை முழுக்க மாற்றியமைப்பது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...