நடந்து கொண்டிருக்கும் இந்தியா-ஆஸி தொடரைப் போல் வேறெந்த தொடரிலும் இத்தனை வீரர்கள், அதுவும் ஒரு அணியில் இருந்து மிக அதிகமாக, காயம் காரணமாக விலகுவதை நான் பார்த்ததில்லை. அண்மையில் தென்னாப்பிரிக்க-இலங்கை டெஸ்ட் தொடரை ஓரளவு ஒப்பிடலாம் தான். ஆனால் இவ்வளவு பணமும் அதிகாரமும் படைத்த இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உடல்தகுதி கொண்ட ஒரு ஸ்குவாடை அனுப்ப முடியவில்லை என்பது வெட்கக்கேடானது. ஏன் இந்த அவல நிலை?
1) ஆஸி அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கூறியிருப்பதைப் போல ஐ.பி.எல் தொடர் முடிந்த பின் இத்தொடர் ஆரம்பித்தது ஒரு காரணம். ஐ.பி.எல்லின் போது கூட ரோஹித் எப்படி ஒரு பலூன் போல இருந்தார் என நாம் பார்த்தோம் தானே. ரிஷப் பண்ட் இப்போதும் வீங்கித் தான் தெரிகிறார். சென்னை அணியின் வீரர்கள் ஏதோ அர்ஜுன ரணதுங்கே குளோன்களைப் போலத் தெரிந்தார்கள். களத்தடுப்பு அநேகமாய் எல்லா அணிகள் விசயத்திலும் மோசமாக இருந்தது. இதை ஒரு சமிக்ஞையாக எடுத்துக் கொண்டு இந்த ஆஸ்திரேலிய பயணத்தொடரை நாம் தள்ளிப் போட்டிருக்க வேண்டும். அல்லது நமது ரஞ்சிக் கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளை முதலில் நடத்தி, அதன் பிறகு வீரர்களின் உடற்தகுதியை சோதித்து விட்டு, அவர்கள் மேம்பட ஆறு மாதங்கள் அளித்து விட்டு ஐ.பி.எல் தொடரை இந்தியாவிலேயே நடத்தியிருக்கலாம். ஆனால் நமது வாரியத்தின் பண வெறியோ எந்த தொலைநோக்கு இல்லாமல் மோசமாய் திட்டமிட்டு சொதப்பிட காரணமாகியது.
2) நமக்கு முன்பே இங்கிலாந்து கிரிக்கெட் ஆட ஆரம்பித்திருந்தது. ஆனால் அவர்களுடைய வீரர்கள் நம்மவர்களைப் போல வாத்துக்கூட்டமாக இல்லை. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த ஊரடங்கின் போதும் தம் உடற்தகுதியை தக்க வைக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களது பயிற்சியாளர்களும் தொடர்ந்து அவர்களை மேற்பார்வையில் வைத்திருந்தார்கள். இந்திய பயிற்சியாளர்கள் ஏதோ இணையம் வழியாக அறிவுறுத்துவதாக சொன்னார்கள். ஆனால் விராத் கோலி தன் மனைவியின் பந்து வீச்சைக் கொண்டு பயிற்சி எடுத்த அளவுக்குக் கூட மற்ற இந்திய வீரர்கள் எடுத்ததாகத் தெரியவில்லை (நிறைய வீரர்களுடைய மனைவிகள் கர்ப்பிணிகள் ஆனதைப் பார்க்கும் போது....) உடற்தகுதி என்பது முழுக்க வீரர்களின் சொந்த முயற்சியும் பொறுப்புமே என நமது கிரிக்கெட் வாரியம் கைவிட்ட நிலையில் விராத் கோலி மட்டுமே ஒழுக்கமும் பொறுப்பும் கொண்டு பயிற்சி எடுத்ததில் முதன்மையானவர். அடுத்து அஷ்வின் - அவர் எடையைக் குறைத்து உடலை வலுப்படுத்தினதாலேயே இந்த ஆஸி தொடரில் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே வழக்கம் போல காயப்படாமல் தொடர்ந்து ஆட முடிந்தது. அவரது பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. அடுத்து ரவீந்திர ஜடேஜா எப்போதும் போல நல்ல தகுதியுடன் இருந்தார். அடுத்து ராகுலையும், நடராஜனையும் குறிப்பிடலாம். ஆக, இது பிரதானமாக நமது பயிற்சியாளர்கள் மற்றும் வாரிய நிர்வாகிகளின் தவறு தான். தொடர்ந்து எல்லா ஒருநாள், டெஸ்ட் போட்டிகளிலும் வீசி வருகிற ஆஸி வேக வீச்சாளர்கள் எப்படி உடற்தகுதியை இழக்காமல் ஆடுகிறார்கள் பாருங்கள்! உமேஷ் யாதவ், ஷாமி (அவருக்கு கைக்காயம் ஏற்படும் முன்பே முட்டியில் பிரச்சனை இருந்தது), செய்னி ஆகியோரை இவர்களுடன் ஒப்பிடுங்கள்.
3) விஹாரி, செயினி ஆகியோருக்கு ஏற்பட்ட ஹேம்ஸ்டிரிங் காயம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீவிரமாக கிரிக்கெட் ஆடுவதனால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். இதற்குப் பொறுப்பு நம் வாரியமே அன்றி வீரர்கள் அல்ல.
4) இத்தொடரில் நம் வீரர்கள் நிறைய கேட்சுகளை கோட்டை விட்டதைப் பார்த்தோம். இதற்கு முன்பு ஐ.பி.எல்லிலும் இதுவே நடந்தது. மோசமான உடற்தகுதி இருந்தால் உங்களால் களத்தில் துடிப்பாக இயங்கவோ தொடர்ந்து கவனம் செலுத்தவோ இயலாது.
5) ஹர்த்திக் பாண்டியா பந்து வீசாத பட்சத்திலும் கூட டெஸ்ட் தொடரில் மட்டையாளராக மட்டும் ஆடுவதற்காக மிச்ச ஸ்குவாடுடன் தங்கியிருந்திருக்க வேண்டும். கோலி இந்தியாவுக்குத் திரும்பின பின்னர் அவர் நிச்சயமாக ஐந்தாவது / ஆறாவது எண்ணில் மட்டையாடியிருக்கலாம். ஏன் இதை முன்யோசனையுடன் நமது வாரியம் செய்யவில்லை? ஏன் இப்போது துவக்க வீரரான மயங்க் அகர்வாலை மத்திய வரிசையில் ஆட வைக்க வேண்டும்? ஹர்த்திக் நல்ல ஆட்டநிலையில் இருந்தார் எனும் போது இது ஒரு மோசமான முடிவாகவே தோன்றுகிறது. இது யாருடைய நிர்வாகத் தவறு? ஹர்த்திக்கே தன் குடும்பத்தை பார்ப்பதற்காக கேட்டு கொண்டாரா அல்லது பந்து வீசாத பட்சத்தில் அவரால் டெஸ்ட் அணியில் பலனில்லை என இவர்களே நினைத்தார்களா? தொடர்ந்து காயம் காரணமாய் வீரர்கள் வெளியேறும் தொடரில் ஒரு வீரரரை இப்படி திரும்ப அனுப்பியது ஒரு மோசமான முடிவே.
6) அடுத்த மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு தொடர் ஆட வருகிறது. அப்போது நம் அணியில் பும்ரா, ஜடேஜா, அஷ்வின், ஷாமி ஆடுவார்களா என்பது சந்தேகமே. இந்தியாவின் வெற்றி வாய்ப்பை இது நிச்சயமாக பாதிக்கும். இதனால் தான் பும்ராவை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட வைத்ததற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் நமது பயிற்சியாளர்கள் மீது செம கடுப்பில் இருப்பதாக ஒரு செய்தியைப் படித்தேன். எனக்கென்னவோ கோலி தன்னுடைய தனிப்பட்ட ஏமாற்றத்தை, கோபத்தை வாரிய நிர்வாகிகள் வழியாக வெளிப்படுத்தி இருக்கிறார் என் தோன்றுகிறது. அடுத்து கோலி இந்தியாவில் தலைமை வகிக்கும் போது இங்கிலாந்தை சுலபத்தில் தோற்கடித்து தன்னை ரஹானேவை விட சிறந்த தலைவர் என நிரூபிக்கும் ஆவேசத்துடன் இருப்பார். ஆனால் இலவு காத்த ‘குருமூர்த்தி’ போன்ற நிலையே அவருக்கு அப்போது ஏற்படும்!

கருத்துகள்