கணேசகுமாரனின் ஒரு சிறப்பு என்னவென்றால் அவரது சிறுகதைகளுக்கு ஒரு களமும் மொழியும் உண்டெனில் அதில் இருந்து விலகி இன்னொரு மொழியில் களத்தில் குறுநாவல்கள் எழுதுவார். அவற்றுக்கும் சம்மந்தமில்லாமல் முற்றிலும் புதிதாக அடுத்ததொரு குறுநாவலைப் படைப்பார். இதையெல்லாம் கணேசகுமாரன் திட்டமிடாமல் தன்போக்கில் செய்கிறார்; இப்படி தான் செய்வதையே அவர் உணர்வதில்லை என நினைக்கிறேன். “மெனிஞ்சியோமா” அப்படியான ஒரு குறுநாவல் தான். இப்போது வந்துள்ள “சிலிங்” இன்னும் ஒரு படி மேலே போய் தமிழில் இதுவரை யாருமே முயன்று பார்க்காத ஒரு கதைக்கருவை, ஒற்றை வரியை எடுத்தாள்கிறது.
ஒரு மனநோயாளி, அவனுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் ஒரு மனநல ஆலோசகர். ஆலோசகர் மிகுந்த புரிந்துணர்வும் கருணையும் கொண்டவராக காட்டப்படுகிறார். மனநோயாளி தடுமாற்றமும் குழப்பமும் தன்னிரக்கமும் கொண்டவனாக வருகிறான். ஒரு கட்டத்தில் இந்த ஆலோசகரின் சிக்கல்கள் பேசப்படுகின்றன. இன்னதென்று வரையறுக்க முடியாத அகச்சிக்கல்களில் அவர் மாட்டிக் கொள்கிறார். அவருடைய வாழ்க்கையில் நடக்கிற சில அபத்தமான சம்பவங்களும் அவரை கடும் நெருக்கடிக்குள் தள்ளுகின்றன. நாவல் முடியும் போது ஆரம்பத்தில் வந்த மனநோயாளி நாம் எதிர்பார்த்த ஆளல்ல, அவன் ஒரு தந்திரசாலி என சொல்லப்படுகிறது. இது தமிழ் இலக்கியத்துக்கு முற்றிலும் புதிதான ஒரு கரு - ஒருவருடைய தான் எனும் நிலை, அவருடைய தான்-மை (subjectivity), மற்றொருவருடைய தொடர்பால் உருமாறி, இரு தான்-மைகளும் இரண்டறக் கலப்பது, ஒருவர் மற்றொருவராக ஆவது என்பது நகுலன், ஓரளவுக்கு மௌனி ஆகியோரால் (பின்னர் சாருவாலும்) புனைவில் பேசப்பட்டிருக்கிறது என்றாலும் இது இப்போதும் தமிழுக்கு முற்றிலும் புதிதான ஒரு விசயம் தான். பொதுவாக நாம் இங்கு குடும்பக் கதை, சாகசக் கதை, பழிவாங்கும் கதை, காதல் கதை, இழப்பின் கதை, சமூக அவலக் கதை, வரலாற்று மாந்தர்களின் வீர சோக காவியங்கள் ஆகியவற்றை தாம் திரும்பத் திரும்ப எழுதி வந்திருக்கிறோம். “சிலிங்” இந்த டெம்பிளேட்டை உடைக்கிறது.
இதை நான் நமது புனைவு மரபை விமர்சிப்பதற்காக அல்ல, புரிந்து கொள்ளவே சொல்கிறேன். வழிவழியாக எழுதப்பட்டதை புதிய மொழியில், நிறத்தில் திரும்ப எழுதுவதே எளிது. ஆனால் ஒருவர் இந்த டெம்பிளேட்டை உடைக்க முயல்கையில், ஒரு உளவியல்-தத்துவ நெருக்கடியை புனைவாக்கும் போது அவருக்கு எங்கு போய் நிற்பது, எப்படி பயணிப்பது எனும் நெருக்கடி ஏற்படுகிறது. இதுவே கணேசகுமாரன் இந்த நாவலில் எதிர்கொள்வது எனத் தோன்றுகிறது. தான்-மை ஒழுகி ஓடும் ஒன்றாக, சாராம்சமற்றதாக இருக்கையில் ஒருவருடைய இருப்பு அங்கு என்னவாகும் என்பது ஒரு அபாரமான தத்துவப் பிரச்சனை. அது தஸ்தாவஸ்கி போன்ற ஒரு மேதை எழுத வேண்டியது. தமிழில் அப்படி ஒரு விசயத்தை ஒருவர் எடுத்துப் பேசுவதே பாராட்டத்தக்கது தான். இந்த பின்னணியில் தான் எனக்கு இந்த நாவல் மிகுந்த மகிழ்ச்சியளித்தது; யாருமே பறிக்க முயலாத மலர் மீது கணேசகுமாரன் தன் விரல்களை வைத்திருக்கிறார். அவர் அதைப் பறிப்பதில் சில தடுமாற்றங்கள் இருக்கலாம், ஆனால் அவர் இதை செய்திருப்பதே ஒரு முக்கிய சாதனை என நினைக்கிறேன்.
இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கலாம் எனும் புகார்களைத் தாண்டி “சிலிங்” நாம் அனைவரும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டிய நாவல் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இந்நாவலை வெறுமனே ஒரு எதார்த்தக் கதையாகப் படிப்பதும் நியாயமல்ல!
பி.கு: தலைப்பு தான் கடைசி வரை எனக்குப் புரியவில்லை.

கருத்துகள்
நாவல் மொனி நகுலன் என்று
குறிப்பால் உணர்த்தி காத்தமைக்கு
நன்றி