வரும் ஞாயிறுக்கு அடுத்த ஞாயிறு பாலம் அமைப்பு நடத்தும் இணைய வழி உரையாடலில் பங்கேற்று பேசுகிறேன். அவர்கள் என்னிடம் உங்களுடைய அண்மையில் வெளியான நூல் பற்றிக் கூட பேசலாம் என்றார்கள். அது ரொம்ப அலுப்பாக இருக்கும் என்பதால் (எனக்கு புத்தகத்தை கூவி விற்கும் திறமை எல்லாம் இல்லை) மற்றொருவருடைய நூலைப் பற்றி பேசலாம் என முடிவெடுத்தேன். உடனடியாக மனத்தில் வந்து நின்றது சம்பத்தின் “இடைவெளி”.
“இடைவெளி” தமிழில் வெகுவாக கொண்டாடப்பட்ட நாவல். இணையத்திலேயே நிறைய விமர்சனக் குறிப்புகளை காணக் கிடைக்கிறது. நிறைய பேர் சம்பத்துக்கு மரணம் என்பது ஒரு உளவியல் ஆட்கொள்ளலாக மாறியது, அதனால் அவர் நெருக்கடிக்கு ஆட்பட்டது பற்றி இக்குறிப்புகளில் பரவலாக பேசுகிறார்கள். ஆனால் எனக்கு முற்றிலும் மாறுபட்ட பார்வை ஒன்று - அது சம்பத்துக்கு மரணம் குறித்த சிந்தனை கடும் தவிப்பை தந்தாலும் அது அவனுக்கு மிகுந்த களிப்பை தந்தது என்பதே. மரணத்தை ஒரு கவித்துவமான கண்டுபிடிப்பாக இந்நாவல் முன்வைக்கிறது என்பதே.
நாவலில் சம்பத் தான் ஒரு கண்டுபிடிப்பை செய்ததாக சொல்லுகிறார். அது மரணம் என்பது ஒரு “இடைவெளி” என்பது. ஏன் மரணத்தை அப்படி உருவகிக்கிறார்? நான் இதைப் பற்றியே பேசலாம் என இருக்கிறேன். குறிப்பாக தத்துவார்த்த தளத்தில் வைத்து.
“இடைவெளியின்” மற்றொரு சிறப்பு தமிழில் - என்னுடைய வாசிப்பில் - இத்தகைய நாவலொன்று வேறில்லை என்பது. ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்” கூட வரலாற்று தொன்ம நாவலே அன்றி தத்துவ நாவல் அல்ல. ஆல்பர்ட் காமு, சார்த்தர போன்றவர்கள் தத்துவ நாவல் எழுதும் போது தமது தத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் எழுதினார்கள். ஆனால் சம்பத் இந்த தத்துவப் பயிற்சி பின்புலம் இல்லாமல், கவித்துவமான மன எழுச்சியால் மரணம் என்கிற உருவகத்தை எட்டித் தொட்டிருக்கிறார். அல்லது அப்படி ‘வெள்ளந்தியாக’ மரணத்தைப் பற்றி பேச முயன்று தான் தத்தளிப்பதாக சித்தரித்திருக்கிறார்.
ஆனால் நான் என் வாசிப்பில் தெளிவான ஒரு தத்துவ கட்டமைப்புக்குள் வைத்தே விவாதிக்கிறேன். அதற்கு எழுதும் குறிப்புகளையும் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் கொண்டு வாருங்கள். விவாதிப்போம்.
ஒருமுறை வாசித்துப் பார்க்க விரும்பும் நண்பர்களுக்காக: நாவலின் அச்சுப்பிரதி இப்போது வாங்கக் கிடைக்கிறது. மென்பிரதியும் ரொம்ப நாளாக சுற்றில் இருக்கிறது.

கருத்துகள்