இன்றைய கிளப்ஹவுஸ் உரையாடல் நிறைவாக அமைந்தது - அதை உரையாடல் என்று சொல்லக் கூடாது. ஒரு கூட்டு வாசிப்பு. ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் ஒரு நூலை எடுத்துக் கொண்டு ஆளுக்கு ஒரு சில பக்கங்கள் படித்து, அதில் சிக்கலான பகுதிகளை மட்டும் விவாதித்தோம். ஒன்றரை மணிநேரம் எடுத்துக் கொண்டோம்.
சிந்திக்கும் தன்னிலையில் இருந்து விடுதலை என்பதே ஜெ.ஜெயின் இலக்கு. இன்று Questioning Krishnamurti நூலில் நாங்கள் தேர்ந்து கொண்ட அத்தியாத்தில் மேற்குக்கும் கிழக்குக்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம் எனும் கேள்வியில் ஆரம்பித்து தொழில்நுட்பமும் அதை ஒட்டிய பொருளாதார வளர்ச்சியும் இந்த உலகங்களுக்குமான வித்தியாசத்தை ஒழித்து விட்டது என ஜெ.கெ சொல்கிறார். அடுத்து, தன்னிலையானது (subjecthood) எப்படி உருவாகிறது என விவாதிக்கிறார். தன்னிலையானது காலம் குறித்த நமது கருதுகோளில் இருந்து தோன்றுகிறது என்கிறார் ஜெ.கெ - இதை அவர் தனது பல உரைகளில் திரும்பத் திரும்ப பேசுகிறார். சிந்திக்கும் ஒரு நபருக்குள் சிந்திக்கிறவரும், சிந்திக்கிறவரைப் பற்றி சிந்திக்கிற இன்னொருவரும் இருக்கிறார் (observer and the observed) என ஜெ.கெ சொல்கிறார். (இதை மிஷ்கின் தனது “யுத்தம் செய்” படத்தில் காட்பூர்வமாக பரிசீலிக்கிறார்.) உ.தா., ஒருவருடைய மகன் இறந்து போகிறார். இல்லாமல் போன மகனை ஒரு தகப்பன் திரும்பத் திரும்ப நினைத்து இரங்குகிறார். இந்த இரங்கும் தகப்பன் யோசிக்கும் ஒரு நபருக்குள் தனி இருப்பாக இருக்கிறார். ஒருவர் இரங்கும் போது இரட்டையாக மாறுகிறார் - இரங்கும் நபர் (தகப்பன்), அதை உணர்கிற ஆள் (தகப்பனல்லாத ஆள்). இந்த இரட்டை இருப்பும், அது குறித்த பிரக்ஞையே துக்கத்தை உருவாக்குவதாக ஜெ.கெ சொல்கிறார். இந்த இரட்டை தன்னிலையை எப்படி உடைப்பது என்பதே ஜெ.கெ எழுப்பும் பிரதானமான கேள்வி. இன்றைய வாசிப்பில் என்னை மிகவும் பாதித்த கேள்வி இதுவே. எனக்கு இது நகுலனின் கவிதைகளை நினைவுபடுத்தியது.
தத்துவத்தில் ஜெ.கெ ரொம்ப ரொம்ப எளிமையான சிந்தனையாளர். அதனாலே அவருடன் ஆரம்பித்தோம். ஆனால் ஜெ.கெவுடன் தொடர்வதில் அர்த்தமில்லை. கொஞ்சம் சிரமமான ஒரிஜினலான (continental) தத்துவஞானிகளுக்கு அடுத்து நகரலாம் என நினைக்கிறோம். நாளை ஹைடெக்கரின் ஒரு அறிமுக நூலை எடுத்துக் கொள்கிறோம். அதை சில நாட்கள் தொடர்ந்து வாசித்து தெளிவடைந்து விட்டு அவருடைய Being and Timeக்கு செல்லலாம் எனத் திட்டம்.
நாங்கள் இந்த கூட்டு வாசிப்பை கடந்த ஓராண்டாக கூகிள் மீட்டில் நடத்தி வருகிறோம். அதே முறைமையுடன் அப்படியே ‘தட்டுமுட்டு சாமானுடன்’ கிளப்ஹவுசுக்கு பெயர்ந்து விட்டோம். வழக்கமாக அதில் கலந்து கொள்கிற ஐந்து பேருடன் இன்று கூடுதலாக ரியாசும், பல்லவியும் இணைந்து கொண்டார்கள். கிளப்ஹவுசில் நூலை display செய்கிற சாத்தியம் இல்லாததால் கலந்து கொள்கிறவர்களுக்கு மின்னூலை முன்கூட்டியே அனுப்பி விடுகிறோம். அவர்கள் தமது போனிலோ லேப்டாப்பிலோ கூட்டு வாசிப்பின் போது படித்துக் கொள்ளலாம்.
சும்மா ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து அதில் ஆளாளுக்கு கருத்து சொல்வதில் எனக்கு ஆர்வமில்லை. கிளப்ஹவுஸில் பொதுவாக அப்படித்தான் அரட்டைகள் நடந்து கொண்டிருக்கின்றன. என்ன தான் அனுபவப் பகிர்வுகள் என்றாலும் ஒரு அளவுக்கு மேல் எதுவும் புதிதாக சொல்லப்படாததால் எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த அரட்டைகள் ரொம்ப அலுப்பாக உள்ளன. இன்னொரு விசயம் சுயசிந்தனைகளை பகிர்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை - சுயசிந்தனை என ஒன்று உள்ளதா எனும் கேள்வியும் உள்ளது. ஏற்கனவே கேள்விப்பட்டதை, படித்ததை தான் பேசுகிறோம். அதை ஒழுங்காக தயாரித்து உரையாற்றலாம். அல்லது அனுபவம் என்கிற வகையில் எண்ணங்களை பேசலாம். நான் முன்பு நாகார்ஜுனரை அறிமுகப்படுத்தி பேஸ்புக் லைவில் பேசிக்கொண்டிருந்தது அப்படியானதே. ஆனால் இரண்டிலும் dynamic ஆன ஒரு கற்றல் சாத்தியமில்லாமல் போகிறது. அதனாலே கூட்டுவாசிப்பே மேலானது என நினைக்கிறேன். இன்று ஏழெட்டு பேர் எங்கள் வாசிப்பதை கேட்டனர். அதுவே சரியான எண்ணிக்கை எனத் தோன்றுகிறது. கூடுதலாக சிலர் வரும் நாட்களில் பங்கேற்பாளர்கள் இணைந்தாலும் நல்லது தான். ஆனால் பேசுவது, சமூகமாக்கலை செய்வதை விட சவாலான விசயங்களை சிந்திப்பது முக்கியம், ஒவ்வொரு நாளும் கூடுதலாக சிந்தனையாளனாக நாம் கூர்மை பெறுவது, விவாதத் திறனை, சிந்தனைத் திறனை மேம்படுத்துவது முக்கியம் என நினைக்கிறேன். ஒரு வலுவான சிறுகுழுவை உருவாக்குவதே என் நோக்கம். இது எப்படிப் போகிறது எனப் போகப் போக பார்க்கலாம்.
நாளை ஜெர்மானிய தத்துவஞானி மார்ட்டின் ஹைடெக்கர். A Short Introduction to Heidegger நூலை எடுத்து விவாதிக்கப் போகிறோம். அறையை ஆரம்பித்ததும் லிங்கை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். வருகிறவர்கள் ஈமெயில் ஐடியை பகிர்ந்து கொள்ளுங்கள். மின்னூலை அவர்களுக்கு அனுப்புகிறேன். விருப்பமுள்ளோர் கலந்து கொள்ளுங்கள். நன்றி!

கருத்துகள்