இன்றைய கிளப் ஹவுஸ் (சொல்லக) உரையாடலில் மைக்கேல் இன்வுட் எழுதிய Heidegger: A Very Short Introduction நூலில் இருந்து முதல் இரு அத்தியாயங்களைப் படித்து விவாதித்தோம். சிமியும், வின்சுவும் ஹைடெக்கரின் நாஜிக் கட்சி ஆதரவைப் பற்றி கேட்டனர். ஹைடெக்கர் ஏன் ஹிட்லரின் இனவாதத்தை ஆதரித்தார் என்பது இன்றும் பூடகமாக உள்ள ஒரு சங்கதி - ஹைடெக்கர் இதைப் பற்றி இறுதி வரை வாய் திறக்கவில்லை என நினைக்கிறேன். ஆனால் ஹைடெக்கருக்கு நாஜி கொள்கை, ஆட்சி மீது ஏமாற்றம் இருந்ததாக, ஹிட்லர் ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் அவர் அதில் இருந்து விலகி இருக்க விரும்பியதாகத் தெரிகிறது. ஆனால் என்ன குறிப்பாக நினைத்தார், தன் அரசியல் தொடர்பு குறித்து குற்றவுணர்வு கொண்டாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. நானும் ஆயுஷும் ஒரு குறிப்பிட்ட பார்வையை வைத்தோம் -
நவீன வாழ்க்கையின் மிதமிஞ்சிய நுகர்வுப்பண்பாடு, மரபில், இயற்கையில் இருந்து துண்டிக்கப்பட்ட தனிமனிதவாதம், எந்திரத்தனமான வாழ்வு ஆகியவை மீது ஹைடெக்கருக்கு ஏமாற்றமும் அவநம்பிக்கையும் இருந்தது. தொழில்நுட்பம் என்பதை ஹைடெக்கர் ஒருவித நவீன இடையூறாகக் கண்டார் - வாழ்க்கையின் சடங்குகள், நடைமுறைகள், சமூக பரிவர்த்தனைகள் நாம் இந்த உலகுடன் இயல்பாக உறவாடுவதற்காக தடையாக உள்ளன என்று கருதிய அவர் அவற்றையும் “தொழில்நுட்பம்” என்றே அழைத்தார் (இது லக்கானில் வரும் symbolic orderஐ போன்றது). ஒருவேளை இது பழமைவாதத்தை கொண்டாடிய நாஜி சித்தாந்தத்தின் முன்நவீனப் போக்கை நோக்கி அவர் ஈர்க்கப்பட காரணமாகியதா? அறியோம்? இது ஒரு ஊகம் மட்டுமே, ஆனால் ஹைடெக்கரை வாசிக்கையில் இத்தகைய ஊகங்கள் மட்டுமே அவருடைய அரசியல் கருத்தியலை அறிய நமக்கு உதவக் கூடும் என நான் கூறினேன்.
ஹைடெக்கரின் தத்துவத்தில் ஏதாவது அடிப்படையான பிழை இருந்ததா? அல்லாவிடில் அவர் ஏன் நாஜி சித்தாந்தத்தை ஏற்றிருக்க வேண்டும் என வின்சு கேட்டார். இதற்கு ஆம் என சுலபத்தில் சொல்லி விடவும் முடியாது - ஒரு பிரச்சனை ஹைடெக்கரின் தத்துவ நோக்கானது ஹிட்லரின் நாஜி கருத்தியலை விட பல மடங்கு ஆழமானது என்பது. ஹிட்லரின் பரப்பியல் கருத்துக்களை அப்படியே ஹைடெக்கர் ஏற்றுக் கொண்டார் என சொல்ல முடியாது தானே? ஆயுஷ் இதைப் பற்றி பேசும் போது ஹைடெக்கரின் தத்துவத்தில் அக்கறை (care) என்பது ஒரு முக்கியமான கருதுகோள் என்றார் - இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும், உயிரும் மனிதனுக்கு முக்கியமானவையே. அப்படி உணர்வதனால் மட்டுமே அவனால் இருத்தலை அறிய முடிகிறது என்கிறார் ஹைடெக்கர். ஒருவர் சாலையில் நடந்து செல்லும் போது அங்கு பாவப்பட்டிருக்கும் ஒவ்வொரு சரளைக் கல்லும் அவனுக்கு தன் உடல் அளவுக்கு முக்கியமானது. அரசியலும் சுயநலமும் பயமும் கவலையும் இல்லாத நிலையிலே ஒரு மனிதன் தன்னை ஒரு இருப்பை உணரும் பிரகிருதியாக உலகில் முன்வைக்கிறான்; அப்போது அவனுலகில் படிநிலைகள் இல்லை. அதிகாரம் இல்லை. அதனாலே ஒரு மரமும் ஒரு மனிதனும் ஒன்றே என ஹைடெக்கர் நினைக்கிறார். மனிதனும் மரமும் பயன் மதிப்பளவில் வேறு வேறு என நம்மை நம்ப வைப்பது முதலாளித்துவம். மரத்திற்கு மனிதனைப் போல அறிவோ பிரக்ஞையோ வலி உணரும் திறனோ இல்லை என மதிப்பிடுவதே அறிவியல். இரண்டையும் ஹைடெக்கர் தொழில்நுட்பம் என சாடுகிறார். உயிருள்ள, உயிரற்ற பொருட்களை சமமாக பாவிக்கும் ஹைடெக்கரைப் போன்ற ஒரு தத்துவ ஞானியால் எப்படி யூதர்களை அஃறிணை என கருதியிருக்க முடியும், அவர்களுடைய இனப்படுகொலையை ஆதரித்திருக்க என ஆயுஷ் எழுப்பிய கேள்வி முக்கியமானது.
அவரைப் படிக்கும் தோறெல்லாம் அவர் அப்படி செய்திருக்க மாட்டார் என்றே நம்பத் தோன்றுகிறது.
நாளை Being, Dasein எனும் அத்தியாயங்கள் 3 மற்றும் 4ஐ வாசிக்கப் போகிறோம்.

கருத்துகள்