தமிழ்நாட்டு ஆட்சி மாற்றம் வந்த பிறகாவது நமது நாளிதழ்கள், டிவி சேனல்களில் சிலவற்றின் வலதுசாரித்தனம் குறையும் என எதிர்பார்த்து முட்டாளாகி விட்டேன். இன்னும் மோசமாக மக்கள் விரோத அரசியலையே இவர்கள் பேசுகிறார்கள். பாஜகவின் வாட்ஸாப் செய்திகளில் இருந்தே அன்றன்றைக்கான விவாதக் கள தலைப்பை இச்சேனல்கள் தீர்மானிக்கிறார்கள். சங்கிகளைப் போன்றே அப்பட்டமாகப் பேசுகிறார்கள். அதுவும் நியூஸ் 18 சேனல் விவாதங்கள் மிக ஆபாசமாக இருக்கின்றன. ஒருவித கேலியுடன் தொடர்ந்து ஆளும் அரசை அணுகுவது, பாஜக ஆதரவாளர்கள் மீது பறக்கும் முத்தங்கள் விடுவது என்றே நெறியாளர்கள் செயல்படுகிறார்கள். நீட் குறித்த விவாதத்தை எடுத்துக் கொள்வோம். நீட்டை ரத்து செய்வோம் என தவறான வாக்குறுதி கொடுத்து திமுக மக்களை ஏமாற்றி விட்டதா என்பதே கேள்வி. இல்லை சட்டப்போராட்டத்தை முன்னெடுப்போம் என்றே தேர்தல் அறிக்கையில் சொன்னோம் என்கிறார் மனுஷ். உடனே நெறியாளர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக நீட்டை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளிக்கவில்லையா என்கிறார். ஆமாம், சட்டப்போராட்டம் மூலம் செய்வோம் என்பதை சுருக்கமாக சொன்னார், அதில் என்ன பிரச்சனை என்கிறார் மனுஷ். “நீங்கள் 8 மாதங்கள் என சொல்லவில்லையா?” என்கிறார் அதே நக்கல் புன்னகையுடன். இது என்ன கேள்வி? நியாயமாக ஏன் நீட்டை வலியுறுத்துகிறீர்கள் என ஒன்றிய அரசை நோக்கி கேள்வியை எழுப்ப வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் ஒன்றிய அரசை கேள்வியே கேட்டு விடக் கூடாது, அவர்கள் பலசாலிகள், அவர்களுடன் திமுக பலப்பரீட்சை நடத்தலாமா, பாஜகவின் முடிவை பின்வாங்க செய்வோம் எனக் கூறலாமா என்றே நெறியாளர் திரும்பத் திரும்பக் கேட்கிறார். அவருடைய பிரச்சனை தமிழ்நாட்டு அரசு எப்படி பாஜகவை எதிர்க்கலாம் என்பதாக இருக்கிறதே அன்றி நீட் தேர்வு நியாயமா என்பதல்ல. இதை விட மோசமாக ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் மாட்டு மூத்திரம் குடிக்க முடியுமா?
ஆனால் இது போன்ற நெறியாளர்களை பழிப்பதிலும் அர்த்தமில்லை. அவர்களை இப்படிப் பேச வைக்கும் எடிட்டர், சேனல் உரிமையாளர்களே சூத்திரதாரிகள். தினமலர் விசயத்திலும் நாம் கட்டுரையாளரை கண்டிப்பதில் அர்த்தமில்லை. மாறாக இந்த ஊடக நிறுவனங்களுக்கும் பாஜக தலைமைக்குமான உரையாடல்கள் என்ன, எந்தளவுக்கு பணம் இவர்களுக்கு பாஜகவால் வழங்கப்படுகிறது, என்ன மாதிரி உதவிகளை உத்தரவாதம் செய்கிறார்கள் என்பதை உளவுத்துறை மூலம் அம்பலப்படுத்த வேண்டும்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒன்றியத்தில் தலைமை பாஜகவில் இருந்து நாளை ஒருவேளை காங்கிரஸாக மாறி விட்டால் இந்த நெறியாளர்கள் அப்படியே ஒரே இரவில் தாம் வலதுசாரிகள் என்பதை மறந்து விடுவார்கள். எனில் இவர்கள் வலதுசாரிகள் அல்ல, இவர்கள் சந்தர்ப்பவாதிகள். பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இங்கே கோலோச்சிக் கொண்டிருந்த போது வெள்ளையர்களுக்கு சொம்படித்து விட்டு, சுதந்திரம் பெற்றதும் அப்படியே யுடர்ன் எடுத்து சுதேசிகளான கும்பல் தான் இவர்கள். அதிகாரம் எங்கேயோ அங்கே போய் ஜால்ரா அடிப்பதும், அவர்களுடைய ஊதுகுழலாக விளங்குவதுமே இவர்களின் ஒரே அரசியல்.
கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழக மக்கள் வலதுசாரி அரசியலை, இந்துத்துவத்தை சிறிதும் மதிக்கவில்லை, ஏற்கவில்லை என செருப்பை எடுத்து இரண்டு முறை காட்டி விட்டார்கள். எனில் இங்கே எப்படி நாளிதழ்களிலும், சேனல்களிலும் வலதுசாரி குரல்கள் வலுத்து ஒலிக்க முடியும்? ஊடகத்தின் கடமை பெரும்பான்மையான மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதும், பிரச்சனைகளைப் பேணுவதும் தானே? அதெப்படி சில ஊடக நிறுவனங்கள் தொடர்ந்து மக்களுக்கு எதிராக பேசுகின்றன? பணம், அதிகாரம் என்பதைத் தவிர வேறென்ன இதற்கு காரணம் இருக்க முடியும்? அதனால் தான் இவர்களை ‘சந்தர்ப்பவாத மாட்டுமூத்திர பிரியர்கள்’ என்றேன். இவர்களை அம்பலப்படுத்துவதுடன் தமிழ்ச்சமூகத்தில் தனிமைப்படுத்துவதும் அவசியம். மக்களுடன் நிற்காதவன், மக்களுக்கு எதிராகப் பேசுபவன் மக்கள் விரோதி. அவன் ஊடகத்தில் இருக்கவே கூடாது.
நான் மீண்டும் கூறுகிறேன் - ஊடகங்கள் திமுகவை மென்மையாக அணுக வேண்டும் என்பது என் கோரிக்கை அல்ல. மக்களிடம் இல்லாத அரசியலை பிரதிநுத்துவக் கூடாது. அது மக்களின் செண்டிமெண்டை ஒட்டி அரசியல் பேச வேண்டும். அது அந்நியர்களின் (குஜராத்திகள், உத்தரபிரதேசிகளின்) குரலைப் பேசக் கூடாது.

கருத்துகள்