இந்தியா இலங்கை முதல் ஒருநாள் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன். இலங்கை அணி குறித்து ஆயிரம் குறைகள் சொன்னாலும் மட்டையாளர்களுக்கு நிறைய திறமை இருக்கிறது. கொஞ்சம் மே.இ தீவுகளை நினைவுபடுத்துகிறார்கள். செம ஸ்டைல். குறிப்பாக, ராஜபக்ஸா, பனுகா, தனஞ்சயா போன்றோருக்கு இயல்பாகவே பந்தை வேகமாய் கணித்து பெரிய ஷாட்டுகளை சோம்பலான அழகுடன் அடிக்க வருகிறது. ஒரே சிக்கல் percentage cricket ஆட வரவில்லை என்பது. அதாவது சராசரியான வேகத்தில், பெரிய அவசரம் இல்லாமல் ஓவருக்கு 4.5-5.5 என ரன்ரேட்டில் ஆடி விட்டு சரியான நேரத்தில் அடித்தாடுவது. ஒரு 50 ஓவர் ஆட்டத்தின் நான்கு பகுதிகளை 200 ரன்களுக்கும், மிச்சத்தை 100 ரன்களுக்கும் ஆட முனைந்தால் ஒவ்வொரு ஆட்டத்திலும் 300 அடிக்கலாம் (இந்திய பாணி). ரொம்ப தட்டையான ஆடுதளம், மத்திய வரிசை மட்டையாட்டம் சிறப்பாக உள்ள பட்சத்தில் முதல் நான்கு பகுதிகளில் 300 ரன்கள் அடிக்க முயலலாம் (இங்கிலாந்து பாணி). முதலாவதில் ஒவ்வொரு பத்து ஓவர் பகுதியில் இரண்டு மூன்று ஓவர்கள் சற்று நிதானித்து ஓவருக்கு 4-4.5 ரன்கள் அடிக்கலாம். இரண்டாவதில் அதே மூன்று ஓவர்களுக்கு 15-18 ரன்களும், மிச்ச ஏழு ஓவர்களில் ஓவருக்கு 9-10 ரன்கள் அடிக்க முயலலாம். இலங்கை இந்த ரெண்டு பாணிகளுக்கும் நடுவே சிக்கி தத்தளிக்கிறது.
உ.தா., இன்றைய ஆட்டத்தில் பந்து சிறிது திரும்பினாலும் இலங்கை மட்டையாளர்கள் சுழலுக்கு அல்ல, அவசர ஆட்டத்திற்கே அவுட் ஆனார்கள். ஏதோ வயிற்றுப்போக்கு வந்து உடனடியாக பாத் ரூமுக்கு வரிசை கட்டுவது போல ஒரு ஆட்டம். இரண்டு ஓவர்கள் ரன்கள் வராவிட்டால் உடனே ஒரு சிக்ஸர், பவுண்டரி அடிக்க வேண்டும் எனும் பதற்றம். (இது அவர்கள் உள்ளூரில் அதிகமாக ஆடும் டி-20யால் இருக்கலாம்.) மாறாக, அணித்தலைவர் ஷனாகா, திறமை குறைந்தவர் என்றாலும், நிதானமாக நேரம் எடுத்து ஆடினார். அவரிடம் இருந்து இந்த வயிற்றுப்போக்கு வரிசையாளர்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.
ஒரு நல்ல விசயம் இலங்கையிடம் கருணரத்னே, சமாரா போன்று திறமையான ஆல்ரவுண்டர்கள் / கீழ்வரிசை மட்டையாளர்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் கிளிக் ஆனாலும் ஒரு சிறந்த வெள்ளைப் பந்து அணியாக இலங்கையால் உருவாக முடியும்.
இந்த ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக ஆடி 262க்கு கொண்டு வந்ததைப் பார்த்த போது மத்திய வரிசையாளர்கள் வயிற்றைப் பற்றி கவலைப்படாமல் ஆடி இருந்தால் 292-300 கூட அடித்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

கருத்துகள்