சீதையின் மைந்தன் பெரியார் குறித்த பேசிய அந்த படு அபாசமான பேச்சை கேட்டேன். எனக்கு உடனடியாக நினைவு வந்தது ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் சில நண்பர்களைத் தான். அவர்களுக்கு அப்துல் கலாமை விட்டால் வேறு சிந்தனையாளரைத் தெரிந்திருக்காது. மொக்கையான ஹாலிவுட் படங்களைப் பார்த்து விட்டு தன்னை உலக சினிமா ரசிகன் என கற்பனை பண்ணி வைத்திருப்பார்கள். கான்வெண்ட் ஆங்கிலம் மட்டும் சரளமாக வரும். அதை வைத்து நவீன சாக்ரடீஸ் என ஒரு சீனைப் போடுவார். எல்லா விசயத்தை பற்றியும் சரளமாக ஸ்டைலாக ஆங்கிலத்தில் பேசுவார்கள், ஆனால் சொல்லுகிற கருத்துக்கள் சுத்த அபத்தமாக, தர்க்கத்துக்கு புறம்பாக, குழந்தைத்தனமாக இருக்கும். முட்டாள்களை சமாளிப்பது சுலபம். ஆனால் பெரிய அறிவாளியாக தன் மொழியை கொண்டு பாவனை செய்யும் போலி அறிவாளிகள் இருக்கிறார்களே அவர்களை வைத்து என்ன செய்வதென்றே உங்களுக்குப் புரியாது. சீதையின் மைந்தன் அப்படியானவர்; சரளமாக சீராக தமிழில் பேசுகிறார்; உள்ளே தான் ஒன்றுமில்லை.
அவர் தன் பேச்சு முழுக்க முப்பது நாற்பது தடவைகள் பெரியாரை ஒரு பாலியல் தரகர் என்று குறிப்பிடுகிறார். அதற்கு தன்னிடம் ஆதாரம் உண்டு என்று “தமிழர் தலைவர்” புத்தகத்தை காட்டுகிறார். அந்நூலில் உள்ள மேற்கோள்களில் இவர் சொல்வதை உண்மையெனக் காட்டும் ஒன்றுமில்லை. ஆம், பெரியார் தன் இளமையில் ஒரு கட்டற்ற பாலியல் வாழ்க்கையை வாழ்ந்தவர் தான். அவர் ஐரோப்பாவில் சென்று நிர்வாண கடற்கரைகளை போய் பார்த்திருக்கிறார். அங்குள்ள திறந்தநிலை அனார்க்கிஸ வாழ்க்கையை அறிந்திருக்கிறார். இதையெல்லாம் யாரும் மறுக்கவில்லை. அவரே இதை ஒளித்து வைக்க முயன்றதில்லை. ஆனால் சீதையின் மைந்தன் இந்த தகவல்களை குறிப்பிட்டு “இதனாலே பெரியார் ஒரு புரோக்கர்” என்று திரும்பத் திரும்ப கூறுகிறார்.
பெரியாரின் பெற்றோர் ஏழைகளாக இருந்து உழைத்தும் வியாபாரத்தில் ஈடுபட்டும் வசதி பெற்றார்கள் என்று கூறும் அவர் அடுத்து பெரியார் பொறுப்பேற்ற பின் அவருடைய அப்பாவின் விபாபாரம் தழைத்தது பெரியார் விபச்சார புரோக்கராக இருந்ததனால் மட்டுமே என்று எந்த சான்றும் இல்லாமல் கற்பனையாக ஒரு விளக்கம் அளிக்கிறார். ஏதோ ஒரு உன்னதமான ஆய்வாளரை, புறவயமாக சிந்திக்கும் சிந்தனையாளரைப் போல தன்னை காட்டிக்கொள்ள வேறு செய்கிறார். அடுத்து, இளைஞரான பெரியார் தன்னுடைய நண்பர்களும் தாசிகளுமாக நதிக்கரைக்கு சென்று கூத்தடித்தார் என்று கூறும் அவர் அதுவும் விபச்சாரத்துக்கு பெண்களை தன் நண்பர்களுக்கு கூட்டிக் கொடுக்கத்தான் என்கிறார். அதற்கு அவர் தரும் தர்க்க விளக்கம் பெரியாரின் மனைவி மணியம்மை இரவு தன் கணவரும் நண்பர்களும் சாப்பிடுவதற்கான உணவை தயாரித்து கொடுத்து விட்டார், தன் கணவர் தாசிகளுடன் நேரம் செலவிடுவதற்கு என்றால் அப்படி செய்வாரா என்பதே. இதை விட குரூரமான அருவருக்கத்தக்க விளக்கத்தைப் பார்க்க முடியுமா? அந்த காலத்தில் எத்தனையோ பெண்கள் தமது கணவர் இரண்டாவது தாரம் வைத்திருந்ததை, பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை எதிர்க்க முடியாமல் அதை இயல்பெனக் கருதி பொறுத்திருந்தனர். அதற்காக அவர்கள் தம் கணவரின் பாலியல் தரகுத் தொழிலுக்கு துணை போகிறவர்கள் ஆவார்களா?
அவருடைய பேச்சு முழுக்க இப்படியான ‘தர்க்க விளக்கங்கள்’, ‘ஆதாரங்கள்’ தாம் கிடைக்கின்றன.
இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். இந்த நபர் ஏதோ ஒரு விதத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும். அவருக்கு பெரியார் மீது ஏதோ ஒரு காரணத்துக்காக கடும் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. அதனால் யாரைப் பிடிக்காவிட்டால் “நீ பெரியாரின் புதிய வார்ப்பு” என்றே சாபம் விடுகிறார். சீமானைக் கூட சமகால பெரியார் என்று சொல்லுகிறார். இதைக் கேட்க உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா? ஆமாம், இந்த சீதையின் மைந்தனுக்கு ஏதோ பிரச்சனை உள்ளது.
இவரையெல்லாம் ஶ்ரீதர் சுப்பிரமணியம் போன்றோர் ஆதரிக்கிறார்கள்? எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு தலைவரை மூச்சுக்கு முப்பது தடவை பாலியல் தரகன் என அழைப்பதன் பெயர் தான் கருத்து சுதந்திரமா? என்ன உங்களுக்கு பெரியாரை ஒருவர் pimp என அழைப்பதைக் கேட்டு கிளுகிளுப்பாக இருக்கிறதா? நம்மால் செய்ய முடியாததை ஒருவர் செய்கிறாரே எனும் மனக்கிளர்ச்சியா? அதனால் அவரை விட்டு வையுங்கள், பாவம் வசை தானே பாடுகிறார், பாடி விட்டு போகட்டும் என்று நினைக்கிறீர்களா? சீதையின் மைந்தனை விட நீங்களே அதிக வக்கிரமானவர். உங்களையும் அவருடைய சேனலில் அவருடைய வசைகளை ரசித்து பின்னூட்டம் இடும் தமிழ்தேசிய தம்பிகளையும் பார்க்கையில் “அஞ்சலி” படத்தில் பொழுதுபோகாத குழந்தைகள் கனகராஜின் கால்களில் டின் கட்டி விட்டு அவர் கத்திக் கொண்டு அவரை ஓடுவதை ரசித்து ஆர்ப்பரிப்பதே நினைவு வருகிறது.

கருத்துகள்