அராத்து ஒரு நல்ல பாலியல் உளவியல் கதை எழுதியிருக்கிறார் - “வன யோனா”. தி.ஜா, ராஜேந்திர சோழன் பாணி கதையை தன்னுடைய கலவையான மொழியில் சொல்லி இருக்கிறார். கதையின் முடிவு, resolution, திருப்பம் பொருத்தமாக அமையவில்லை. ஆனாலும் முக்கியமான கதை தான். இந்த சமூக ஒழுக்க விழுமியங்கள் நம்முடைய மொழியை இருட்டாக மொழுமொழுவென மாற்றி விடுகின்றன. இத்தகைய கதைகள் ஒரு வெளிச்சத்தை சட்டென கொண்டு வந்து தரையில் துலக்கி விட்டது போல பண்ணுகின்றன.
இதை அப்படியே திருப்பி பெண்களின் தரப்பில் இருந்து ஒரு vagina monologue என யாராவது எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும். பெண்ணிய எழுத்து அரை நூற்றாண்டுக்கு மேலாகவே இருந்து வருகிறது. ஆனால் அதில் உடலெழுத்து மிகவும் குறைவு. பெரும்பாலும் பெண்ணிய அரசியலை சும்மா சமூக உறவாடல், குடும்ப சிக்கல்கள், அதிகாரம் என்றே எழுதி வருகிறோம். அதற்குள் உடல் ஒரு முக்கியமான சங்கதி என்பதை மறந்து விடுகிறோம்.
லீனா மணிமேகலை, குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றோரின் வருகையுடன் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஆனால் கடந்த இரு பத்தாண்டுகளில் மீண்டும் பெண்ணுடல் என்பது நேரடியாக எழுதப்படாமல் பெண்ணெழுத்தில் உடலற்றதாகவோ ஆணெழுத்தில் புனிதப் பசுவாகவோ அல்லது கிளர்ச்சியூட்டும் கற்பனாவாத சரக்காகவோ மாறி விட்டது. அம்பையின், ல.சா.ராவின் நிழல்களே இன்றும் இங்கு அதிகம் புலப்படுகின்றன. அதை மாற்ற வேண்டும். இது போன்ற கதைகள் அதை செய்யக் கூடும்
கருத்துகள்