பார்க்க சகிக்க முடியாத படம். கண்ணுக்குப் புலப்படாத பேயைத் தவிர எல்லாருமே கேவலமாக நடித்திருக்கிறார்கள். அதிலும் கவினின் நடிப்பு மிக மிக மட்டமாக மிகையாக உள்ளது. ஒரு சின்ன உணர்ச்சி அதை உங்கள் கண்ணசைவில், நெற்றிச் சுருக்கத்தில் காட்டிவிட முடியும், ஆனால் கவின் அதற்கு பண்ணுகிற அஷ்டகோணல் சேட்டைகளைப் பார்ப்பவர்களுக்கு இவர் பேயைப் பார்த்து பயப்படுகிறாரா அல்லது அவசரமாக கக்கூஸுக்கு போக வேண்டுமா எனக் குழப்பம் ஏற்படும்.
ஒருவேளை டெலிசீரியல் நடிகர்களின் பொதுவான பிரச்சனையா என்றால் சில டிவி நடிகர், நடிகையர் திரைப்படங்களில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார்கள். சிலருக்கு சுத்தமாக நடிக்க வராது, ஆனால் ஓவர் ஆக்டிங் பண்ணி கொல்ல மாட்டார்கள். கவினின் நடிப்பைப் பார்த்தால் சிவாஜியே சமாதியில் இருந்து எழுந்து வந்து செவிளில் ஒன்று போட்டு "படவா என் பேரைக் கெடுத்துடாதேடா" என சொல்லுவார் போல!
கவின் மட்டுமல்ல அடுத்த கட்ட நடிகர்களும் மகாமட்டமாகவே செய்திருக்கிறார்கள். ஆக இது இயக்குநரின் பிரச்சனையும் தான். அவர் எஸ்.வி சேகரின் மேடை நாடகங்கள் பார்த்து வளர்ந்தவர் போல.
கதை என்று எடுத்துக் கொண்டால் தேசலான தேய்வழக்கான ஒற்றை வரி. அதில் எங்குமே பயமோ பயம் போல ஏதோ ஒரு அரிப்போ கூட வரவில்லை. ரொம்ப வறட்சியாக இருந்தால் ஒழிய இப்படத்தைப் பார்த்து பயப்பட முடியாது.
“லிப்ட்” படத்தின் இறுதியில் வரும் ஐ.டி ஊழியர்களின் தற்கொலை விவகாரம் முக்கியமானதில்லையா என நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். நான் சொன்னேன், “அது தான் படத்திலேயே ரொம்ப அமெச்சூரான பகுதி. எந்த நிறுவனத்திலும் ஒரு ஐ.டி மேலாளரும் இரு காவலாளரிகளுமாக சேர்ந்து ஒரு தற்கொலையை கொலையாக சித்தரிக்க முடியாது. அடுத்து அவர் அப்படி ஒரு கொடூரமான வில்லனாக இருப்பதற்கான காரணமும் சொல்லப்படவில்லை. மூன்றாவதாக, ஐ.டி ஊழியர்களின் மன அழுத்தத்துக்கு அவர்கள் பெறும் கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் தவிப்பது, வேலை உத்தரவாதமின்மை, வேலைத்திறன் போதாமை என பல காரணங்கள் உள்ளன. ஆனால் இதில் ஏதோ ஒரு மேலாளரின் சைக்கோத்தனத்தால் இருவர் உயிர்விட நேர்வதற்காக அபத்தமாக காட்டி இருக்கிறார்கள். கடைசியில் ஒரு பாட்டில் மிச்ச பிரச்சனைகளைக் பேசி இருக்கிறார்கள். ஆனால் படத்தில் விரிவாக பேசியிருக்க வேண்டியவை அல்லவா அவை.”
அவ்வளவு பெரிய நிறுவனம் என்றால் அதன் பின்னால் பெரிய புள்ளிகள் எத்தனை பேர் இருப்பார்கள்? போலீசையும் ஊடகங்களையும் கட்டுப்படுத்த எத்தனை கோடிகளை இறக்குவார்கள்? இதிலோ ஒரு மாமாவையும் ஒரு குண்டு மாமாவையும் அனுப்பி மிரட்ட செய்கிறார்கள். அவ்வளவு தான். கவின் ஒரு ஜெராக்ஸ் பிரதியை போலிசிடம் கொடுத்து வாக்குமூலம் அளிக்கிறார். ஒரு விசாரணைக்கு அது போதுமா? பேய் அந்த மேலாளரைக் கொல்லுகிறது. ஆனால் அவர் மட்டும் தான் காரணமா?
ஒட்டுமொத்தமாக 12 வயது பிள்ளைகள் பார்க்க வேண்டிய படம் போல இருக்கிறது. குழந்தைகளுக்கான படத்துக்கு ஏன் UA சான்றிதழ் கொடுக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
இதையெல்லாம் மன்னித்து விடுகிறேன் - ஒரு படத்தில் பல விசயங்கள் சொதப்பி விடும், அது இயல்பே. ஆனால் இப்படத்தை பேஸ்புக்கில் விழுந்து விழுந்து பாராட்டுகிறவர்களைப் பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது - ஒருவேளை பேய் அவர்களுக்குள் புகுந்து விட்டதா? இந்த படத்தை நம்மை அப்படி பார்க்க வைத்து வெறுப்பில் கதற வைப்பதே பேயின் திட்டமா?

கருத்துகள்