சாதியை ஒழிக்காமலே “சாதியை ஒழிப்பது” பற்றி சாவர்க்கர் பேசியிருப்பதை பார்த்தால் அப்படியே காந்தி பேசியதைப் போன்றே இருக்கிறது.
தீண்டாமை ஒழிப்பு, சாதிய ஒடுக்குமுறையை ஒழித்து சமத்துவத்தை கொண்டு வருவது, அதே நேரம் சாதிய சனாதன அமைப்பை தக்க வைப்பது, சாதி ஒழிப்பில் மத்திய, மேல்மத்திய சாதியினரே அதிகம் பங்கெடுக்க வேண்டும், சாதிய சீரழிவுக்கான பொறுப்பை மேல்சாதியினர் (பிராமணர்கள்) மீது மட்டும் சுமத்தக் கூடாது ஆகிய பல கருத்துக்களில் இருவருக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இருவருமே சாதியத்தை தோற்றுவித்தது பார்ப்பனியமும் வைதீகமும் என்பதை ஏற்கவில்லை. எந்த காரணம் கொண்டும் பிராமணர்களை கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்றே வலியுறுத்தினர்.
அது மட்டுமல்ல, சாவர்க்கர் சாதீய ஏற்றத்தாழ்வை, தீண்டாமையை அவை தவறென்பதால் அல்ல அழிக்க வேண்டும் என நினைத்தது, மாறாக தீண்டப்படாதோர் மாற்று மதங்களுக்கு மாறி சென்றால் அது இந்து சமூகத்தை பெருமளவு பலவீனப்படுத்தி விடும் என தான் அஞ்சுவதாக, அதனாலே சீர்திருத்தம் உடனடியாக தேவை என அவர் கூறினார். காந்தி இதையே தான் மறைமுகமாக, “இருக்கு ஆனா இல்ல” என்பது போல சொன்னார். இருவருமே தம்மை இந்துமத சீர்திருத்தவாதிகளாக கருதினர், இருவருமே இந்தியா என்றால் இந்துக்களின் நாடு என்றே நம்பினர். இரண்டே வித்தியாசங்கள்:
1) சாவர்க்கர் நம்முடைய சீமான் தன் பேச்சில் நெய்தல் படை, பச்சை வாழைமட்டை என்றெல்லாம் அவிழ்த்து விடுவதைப் போல பிரித்தானிய அரசுக்கு எதிராக வன்முறையை கையில் எடுப்பேன் என உக்கிரமான தொனியில் அவ்வப்போது பேசுவார். மற்றபடி அவர் யாரையும் கொன்றதில்லை. அவருடைய வன்முறை முயற்சிகளும் பெரும்பாலும் தோல்வியிலே முடிந்தன. அவருக்கு அதற்கான ஆற்றலோ உடல்வலுவோ இருந்ததில்லை. காந்தியோ ஆரம்பத்தில் (தென்னாப்ப்ரிக்க நாட்களில்) இருந்தே வலிமையானவர் தரப்பில் இருந்து சமரசம் பேசி வலுவற்றவருக்கு குறைந்த நன்மைகளும் வலிமையானவர்களுக்கு அதிக நன்மைகளும் பெற்றுத்தரும் பேச்சுவார்த்தை நிபுணராக இருந்ததார். இந்தியா வந்த பிறகு அவர் இதே சமரச பேச்சு வார்த்தையின் போது தன் செல்வாக்கை அதிகமாக்க போராட்டங்களின் பெயரில் மக்கள் திரளை உணர்ச்சிகரமாக திரட்டி பகடைகாயாக பயன்படுத்தும் உத்தியை வளர்த்தெடுத்தார். அதற்கு அகிம்சை போராட்டம் எனப் பெயரிட்டார். சாவர்க்கருக்கு இந்த நுட்பம், சாமர்த்தியம், போராட்டத்தில் உடலை பயன்படுத்தும் புத்திசாலித்தனம் இல்லை. அதனால் வரலாற்றில் ஹிம்சைக்கும் அஹிம்சைக்கும் நடுவில் உழலும் ஒரு ஜோக்கராக அவர் இருந்து முடிந்து போனார்.
2) சாவர்க்கர் இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே எனறு வெளிப்படையாக கோரினார். இந்த வெள்ளாந்தி இயல்பு காந்தியிடம் இல்லை. அவர் இந்தியாவில் வாழும் கிறித்துவர்களும் இஸ்லாமியரும் மனதளவில் இந்துக்களே, அவர்கள் விரும்பினாலும் இல்லாவிடிலும் பண்பாட்டளவில் இந்து ஆன்மா அவர்களுக்குள் குடிகொண்டிருக்கும் என ஒரு விசித்திரமான விளக்கத்தை அளித்தார். இது ஜெ.மோ இன்று தொல்படிமம் என்ற பெயரில் வைக்கும் பண்பாட்டு இந்துத்துவாவின் அன்றைய வடிவம். அது மட்டுமல்ல 1934இல் பேசும் போது “எனக்கு சட்டமியற்றும் அதிகாரம் இருந்தால் நான் முதலில் தடை செய்வது மதமாற்றத்தையே” என்று சிறுபான்மையினரை மிரட்டும் விதத்தில் ஒரு ரத்தினத்தை உதிர்த்தவரே காந்தி. ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டால் நான் வலுக்கட்டாய மதமாற்றத்தையே சொன்னேன் என்று கூறினார் அவர். அதன் தொனி பெரும்பாலான கிறித்துவ, இஸ்லாமிய மதமாற்றங்கள் வலுக்கட்டாயமாக நடந்தேறுகின்றன என்பதே. சரி இதற்கு ஆதாரம் உண்டா என்று கேட்டால் இல்லை. ஒன்று தாழ்த்தப்பட்டவர்களின் பலவீனங்களை பயன்படுத்தி அவர்களை இந்துமதத்தில் இருந்து சிறுபான்மை போதகர்கள் மதமாற்றுகிறார்கள் என்று காந்தி நம்பினார். அடுத்து, இவ்வாறு சிறுபான்மையினருக்கு எதிராக அரசியல் பண்ணும் இந்துத்துவர்களை குளிர வைக்கவும் இவ்வாறு அவர் பேசினார். அதே நேரம் மேற்கத்திய முற்போக்கு ஊடகங்களை குளிர வைக்க வேறு விதமாகவும் பேசுவார் காந்தி. இது என் அவதானிப்பு அல்ல, அம்பேத்கருடையது.
ஆக, சாதி, மத விசயத்தில் பட்டென்று கையில் வந்து விழும் மீன் சாவர்க்கர், பட்டும்படாமல் நழுவிச்செல்லும் மீன் காந்தி.
குறிப்பு: Savarkar: A Contested Legacy, Vikram Sampath, பக் - 12-14
நான் இங்கே தந்துள்ளவை சம்பத்தின் கருத்துக்கள் அல்ல. அவர் அளிக்கிற சில தரவுகளை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறேன்.
சம்பத் அவ்வப்போது சாவர்க்கரை புகழுகிற வேடிக்கையை, பத்தாம்பசலித்தனத்தை தவிர்த்துப் பார்த்தால் ஓரு சுவாரஸ்மான புத்தகம் இது. எனக்கு சாவர்க்கரின் சித்திரம் செர்வண்டஸின் “டான் குவிக்சாட்டின்” ஆளுமையை நினைவுபடுத்துகிறது.

கருத்துகள்