காவல்துறை மக்கள் போராட்டங்கள் ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் நீடிப்பதை விரும்புவதில்லை. போலிசாரின் பேச்சைக் கேட்டு போராட்டத்தை கைவிட வில்லை என்றால் போலீஸார் தம் பிளான் பியை வெளியே எடுப்பார்கள். அல்லது ஆளுங்கட்சிக்கு தன் அதிகாரத்தை வலுப்படுத்த, உட்கட்சி தலைமைகள் சிலவற்றை பலவீனப்படுத்த ஒரு மக்கள் போராட்டம் அவசியப்படும். ஆனால் இப்போராட்டங்களுக்கு ஒரு காலக்கெடுவை போலிசார் வைத்திருப்பார்கள். அது முடிந்ததும் அப்போராட்டத்தை முடித்து வைக்க ஒரு பிளான் பியை தயாராக வைத்திருக்கும் நம் போலீஸ் துறை.
அதென்ன பிளான் பி?
அண்மையில் ஜல்லிக்கட்டு போராட்டங்களில், தில்லியில் விவசாயிகள் போராட்டத்திலும், ஜெ.என்.யுவில் மாணவர் போராட்டங்களில், கூடங்குளத்தில் அணு உலை எதிர்ப்பு போராட்டங்களில் என்ன நடந்தது? போலிசார் தமது கூலிப் படை கலவரக்காரர்க்ளை அனுப்பி கல்லெறியவும் அடித்து நொறுக்கவும் செய்து விட்டு அதை கலவரமாக சித்தரித்து போராடும் மக்களை கைது பண்ணினர். அல்லது சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர். இந்த கலவரங்களின் பொதுப்பண்பு என்னவெனில் கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்படும் போதும் வாகனங்கள் கொளுத்தப்படும் போதும் காவல்துறையினர் வேடிக்கைப் பார்ப்பார்கள். ஊடகங்களில் உள்ள காவல்துறை ஏஜெண்டுகள் (சவுக்கு சங்கரைப் போன்றோர்) காவல்துறை மிகுந்த பொறுமையுடன் போராட்டக்காரர்களை எதிர்கொண்டது, ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி தடியடி பண்ணி கைது பண்ணினார்கள் என்பார்கள். இது ஒரு மீள மீள நிகழும் கதையாடல். இந்தியாவில் மட்டுமல்ல அண்மையில் இலங்கையில் ஜனாதிபதி மாளிகையை போராளிகள் ஆக்கிமித்து அங்கு படுத்துறங்கி சாப்பிட்டு உடற்பயிற்சி செய்து கொண்டாடிய போது இலங்கைப் போலீசும் ராணுவமும் வேடிக்கைப் பார்த்தது. ஆனால் இந்த அரசு அனுமதி பெற்ற “மக்கள் போராட்ட சிற்றுலா” ஜனாதிபதி தன் ராஜினாமாவை அளித்ததும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. எம்ர்ஜென்ஸி கொண்டு வரப்ப்பட்டு ராணுவம் கடுமையாக போராட்டங்களை ஒடுக்கியது. ஏன் அதுவரை காத்திருந்தார்கள்? ஏனென்றால் ஜனாதிபதியை முழுகையாக அதிகார புலத்தில் இருந்து நீக்க பிரதமருக்கு அந்த போராட்டங்களின் அழுத்தம் தேவைப்பட்டது. ஆனால் இலங்கையிலோ இந்தியாவிலோ இந்த அரசு சதித்திட்டத்தை ஊடகங்கள் அம்பலப்படுத்துவதே இல்லை. அவர்கள் இப்போராட்டங்கள் தன்னிச்சையாக நடந்தேறி, தன்னிச்சையாகவே வன்முறை வெடித்தது எனப் பேசிப் பேசி ஓய்வர். அது தான் ஊடகங்களுக்கு அரசும் போலீஸ் துறையும் அளிக்கும் திரைக்கதை. தென்னமெரிக்க நாடுகளில் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்க உளவுத்துறை இவ்வாறே மக்கள் போராட்டங்களை ஊடகங்களின் துணை கொண்டு ஒருங்கிணைத்து தமக்கு உடன்படும் பொம்மைத் தலைமைகளை அரியணை ஏற்றுவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆக நாடு முழுக்க உள்ள ஒரு பிளான் பி தான் இது.
போலீஸ்காரகளே நேரடியாக களத்தில் இறங்கி “கலவரங்கள்” பண்ணுவதும் உண்டு - 98ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் 46 பேர் இறந்தனர். ஆனால் இந்த குண்டுவெடிப்புக்கான ஏற்பாடுகளை அல் உம்மாவினர் பண்ணுவது உளவுத்துறைக்கு ஏற்கனவே தெரியும். அவர்கள் இதை ஊக்குவிக்கவும் செய்தனர். குண்டுவெடிப்புகள் நடந்ததும் அப்போது ஏற்பட்ட பதற்றத்தை, பீதியை பயன்படுத்தி இஸ்லாமியரின் வணிகவளாகங்களை போலிசாரே சூறையாடியதற்கு, தீக்கிரையாக்கியதற்கு நேரடி சாட்சியங்கள் உள்ளன. அடுத்து இந்த கலவரங்களை பயன்படுத்தி இஸ்லாமியரை பார்த்த இடத்தில் எல்லாம் தாக்கியும் சுட்டுக் கொன்றும் ஒழித்தனர். நிறைய இஸ்லாமியரை கைது பண்ணியதுடன் எளிய இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளை தொடர்கண்காணிப்பிலும் வைத்தனர். இதன் மூலம் இஸ்லாமிய வணிகர்களின் இருப்பு இல்லாமல் ஆக்கப்பட்டு அந்த இடத்தில் பனியா வணிக சமூகத்தினர் நுழைந்து ஆக்கிரமித்தனர். அந்த ஒட்டுமொத்த கலவர புரோஜெக்டை திட்டமிட்டது இந்த பனியாக்களும் இந்துத்துவர்களும் போலிசாரும் இணைந்தே. இந்த சதித்திட்டத்தில் சிக்கி பலியான இஸ்லாமிய இளைஞர்கள் உண்மையை உணர்ந்த போது மிகவும் தாமதமாகி விட்டது.
இம்முறை கள்ளக்குறிச்சியில் ஶ்ரீமதியின் மரணம் நிகழ்ந்த பின்னர் போலிசார் அப்பள்ளி நிர்வாகத்தினரை கைது பண்ண தயங்குகிறது. இதுவும் வழக்கம் தான். பத்மசேஷாத்ரியிலும் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி விவகாரங்களிலும் இத்தகைய தயக்கத்தை துவக்கத்தில் பார்த்தோம். ஆனால் குற்றம் சுமத்திய மாணவிகள் உயிருடன் இருந்ததால் போலிசால் நிர்வாகத்தை முழுக்க காப்பாற்ற முடியவில்லை. ஒரு மனைவி தற்கொலை பண்ணினால் அவருடைய பெற்றோர் புகார் அளித்தால் உடனடியாக கணவர் கைதாவார். ஆனால் ஏன் தனியார் பள்ளி நிர்வாக விசயத்தில் மட்டும் அத்தகைய துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றால் அதுவே தனியார் பள்ளி முதலாளிகளின் பணத்தின் அரசியல் செல்வாக்கின் ஆற்றல். அதுவே கள்ளக்குறிச்சியில் கணியாமூரில் இயங்கி வரும் அப்பள்ளி நிர்வாகம் குற்றம் செய்யவில்லை என்ற நிலைப்பாட்டை போலிஸார் விசாரணை முடியும் முன்பே எடுத்ததே ஶ்ரீமதியின் அம்மா மற்றும் உறவினர் தொடர்ந்து போராட பிரதான காரணம். போராட்டம் ஊடக கவனம் பெறவே போலீஸ் பிளான் பியை வெளியே எடுக்கிறது. பள்ளியைச் சுற்றி கற்கள் குவிக்கப்படுகின்றன, ஆயுதங்கள், உருட்டுக்கட்டைகளும் பதுக்கப்படுகின்றன. கலவரம் பண்ணுவதற்காக வெளியில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பைக்கிலும் வேறு வாகனங்களிலும் வருகிறார்கள். இதெல்லாம் போலீசுக்குத் தெரிந்தே நடக்கிறது. ஒட்டுமொத்தமாக பள்ளிக் கட்டிடங்களும் வாகனங்களும் நாசமாக்கப்பட்ட பின்னர் பள்ளியின் செயலாளர் “இதற்கெல்லாம் மொத்த பொறுப்பு ஶ்ரீமதியின் தாயார் தான்” எனச் சொன்னதை கவனியுங்கள். கலவரங்கள் பண்ணியது தம் உறவினரோ ஊர்க்காரர்களோ அல்ல வெளியாட்கள் என ஶ்ரீமதியின் அம்மா சொன்னார். ஆக பழியை அமைதி வழியில் போராடியவர்கள் மீது போதுவதே பள்ளி நிர்வாகம் மற்றும் போலிசாரின் திட்டம், திரைக்கதை. அதன் வழியே சாந்தியும் இப்போது பேசுகிறார். இப்போது மகளுக்காக ஒரு தாய் நடத்திய போராட்டம் வன்முறையாக சித்தரிக்கப்பட்டு திசைதிருப்பப்பட்டதை கவனியுங்கள். இதுவே பள்ளி நிர்வாகத்தும் போலிசுக்கும் தேவை. பெரும்பாலான ஊடகங்களில் அப்பள்ளியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதையும் கவனியுங்கள்.
சாட்சியங்களை அழிப்பதற்காககோ கலவரம் நடத்துவதற்காகவோ நிர்வாகமோ பாஜகவோ இக்கலரவங்களை நடத்தியதாக சிலர் கூறுவதில் உண்மையில்லை என்பது தெளிவு. சாட்சியங்களை அப்பெண்ணின் உடலை ஒப்படைக்கும் முன்னரே அழித்திருப்பார்கள். மதக்கலவரம் பண்ணுவதற்கான சாத்தியங்கள் இக்கலவரத்தில் இல்லை என்பதால் பாஜக இதைச் செய்ய வேண்டிய அவசியம். இது முழுக்க முழுக்க போலிசின் பிளான் பி மட்டுமே.
மூன்றாம் உலக நாடுகளோ, இலங்கையோ, இந்தியாவில் தில்லியோ தமிழ்நாடோ ஆள்வது பாஜகவோ அதிமுகவோ திமுகவோ போலிசின் பிளான் பி மட்டும் மாறுவதில்லை.


கருத்துகள்