இன்றைய இந்தியா-தென்னாப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் முன்னாள் களத்தடுப்பு பயிற்சியாளரும் தற்போது தமிழ் வர்ணனையாளராக இருப்பவருமான ஶ்ரீதர் "தென்னாப்பிரிக்கா 20 ரன்களையாவது களத்தடுப்பில் சேமிப்பார்கள், ஆகையால் 280 எனும் இலக்கானது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆடும் போது 300ஆகிறது" என்று சொன்னார். இது ஒரு காலாவதியாக கருத்து என்று எனக்கு அப்போதே தோன்றியது. ஶ்ரீதர் சொன்னதைப் போல தென்னாப்பிரிக்க தடுப்பாளர்கள் பாய்ந்து விழுந்து உருண்டு புரண்டு களத்தடுப்பு பண்ணினார்கள். நான்கு, மூன்று ஓட்டங்கள் எனத் தடுத்தார்கள். ஆனால் மட்டையாடி விரட்டி சென்ற இந்தியா வெகு சுலபமாக போட்டியில் வென்றது. ஏன் எப்படி?
ஶ்ரீதர் சொல்லும் விதி 2010 வரையிலான கிரிக்கெட்டில் மட்டுமே செல்லுபடியானது. இன்று மட்டையாளர்களால் எப்போது வேண்டுமெனிலும் சிக்ஸர் அடிக்க முடியும். அதனால் ஸ்டிரைக் ரேட் பற்றி அவர்கள் துவக்கத்தில் கவலைப்படுவதில்லை. தேவையான ரன் ரேட் 7-8 போனாலும் அது அவர்களை அலட்டுவதில்லை. பந்தை எப்போது வேண்டுமெனிலும் மைதானத்துக்கு வெளியே அடிக்கலாம் எனும் போது களத்தடுப்பாளர்கள் அசகாய சூரர்களாக இருந்தாலும் பயனில்லை. எல்லைக் கோட்டுக்கு வெளியே 5-6 களத்தடுப்பாளர்களை நிறுத்தினால் தான் உண்டு.
கட்டுப்பாடான, வேகமான களத்தடுப்பு எல்லைக் கோட்டிலோ உள்வட்டத்தில் குறிப்பாகவோ 90களில் ரன் ரேட்டை வெகுவாகக் குறைத்து பல விக்கெட்டுகள் விழக் காரண்மாகியது. அதுவே இலங்கை, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை இரும்புக் கோட்டைகள் ஆக்கின. அந்த காலம் முடிந்து விட்டது. இப்போது பந்து வீச்சாளர் இந்த களத்தடுப்பின் அழுத்தத்தை பயன்படுத்தி நன்றாக வீசி விக்கெட்டும் எடுக்க வேண்டும். உயரக் கேட்சுகள் வரும் போது அவற்றைப் பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் மூன்று ஓவர்களில் 10 ஓட்டங்களில் எடுத்து விட்டு அடுத்த இரண்டு ஓவர்களில் மூன்று சிக்ஸர்கள் அடித்து ரன் ரேட்டை இயல்பாக்கி விடுவார்கள்.
இன்று சிக்ஸர் அடிக்கும் மட்டையாட்ட பாணியானது கிரிக்கெட்டை தலைகீழாக மாற்றி உள்ளது. 5வது நாள் டெஸ்ட் போட்டியில் 350 ஓட்டங்களை இலக்காக வைத்தால் கூட அடித்து விடுகிறார்கள். இருபது ஓவர்களில் 12 சிக்ஸர்கள் அடிக்க முடிந்தால் போதும் ஆட்டத்தின் போக்கே மாறி விடும். Bazball! டி20யில் எல்லாம் சொல்லவே வேண்டாம் - எல்லைக்கோட்டுக்கு வெளியே போகும் பந்தை ஒருவர் பாய்ந்து தட்டி விட இன்னொருவர் பிடிக்கிற கேட்சுகள் கூட அவை விக்கெட்டுகள் என்பதாலே முக்கியமாகின்றன. இன்று ஓட்டங்களைத் தடுக்கும் களத்தடுப்பல்ல, உயரக் கேட்சுகளை எடுக்கும் தடுப்பாளர்களே அவசியமாகிறார்கள். அவர்களே வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள். ஏனென்றால் விக்கெட் எடுக்காமல் இன்று ரன்களின் பொழிவைத் தடுக்க முடியாது. இன்றைய போட்டியில் கூட இஷான் கிஷன் மகராஜின் பந்து வீச்சில் சிக்ஸர்கள் அடித்ததும் போட்டி திசை மாறி விட்டது. களத்தடுப்பாளர்கள் உயிரைக் கொடுத்து பவுண்டரிகளைத் தடுத்தது வீணாகி விட்டது.

கருத்துகள்