முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவலைத் திருத்துகிற மேஜிக், அதன் இன்பம்!

ஒரு நாவலை நான்கைந்து முறையாவது திருத்துவது மிக மிக அவசியமான ஒன்று. அதனால் நாவல் வெளியிடுவது தாமதமாகலாம். சில நேரங்களில் கதையமைப்பிலோ முக்கியமான காட்சிகளிலோ பாத்திரங்களின் இயல்பிலோ உள்ள ஒரு அடிப்படையான தவறு நம் கவனத்துக்கு வராமல் தப்பி விடும். அது கண்ணில் படவே ஓராண்டுக்கு மேல் ஆகும். ஏனென்றால் எழுத எழுத அந்நாவல் குறித்தொரு புகைமூட்டம் நம் மனதில் உண்டாகும். நாம் அந்த மூட்டத்தின் வழியே கலங்கலாகத் தான் நாவலை நோக்குவோம். 


திரும்பத் திரும்ப திருத்துவதன் ஒரு முக்கிய அனுகூலம் நாவலுக்கு புதிய புதிய அர்த்த அடுக்குகளை உருவாக்க முடியும் என்பது. முதல் பிரதியில் பெரும்பாலும் ஒற்றைப் பொருளே வரும். அல்லது அதிகமாக சில விசயங்களை அழுத்தி சொல்லியிருப்போம். சில விவரணைகளை, நீளமான வசனங்களை முடிதிருத்துநர் கொத்தாக மயிரை எடுத்து நைசாக வெட்டுவதைப் போல நாம் நீக்கிவிட்டால் அந்த இடத்தில் ஒரு வெளிச்சம் வருவதைப் பார்க்க அழகாக இருக்கும். நாவல் நன்றாக மூச்சு விடுவதைப் பார்க்க நமக்கும் நிம்மதி கிடைக்கும். சில அத்தியாயங்களை நீக்கினால் கதை இன்னும் சரளமாக ஒழுகுவதைப் பார்க்க முடியும். இதையெல்லாம் எழுதுகையில் துல்லியமாக திட்டமிட்டு செய்வது கடினம்.

ஒரு நாவலுக்குள் தோன்றும் ஜீவனை, உயிர்த்துடிப்பை, ஆத்மார்த்தமான கேவலை நீங்கள் எடிட்டிங்கின் போது உருவாக்க முடியாது. ஆனால் அது மட்டுமே நாவல் அல்ல. எப்படி ஒரு குழந்தைக்கு நாம் உணவுண்ண, குளிக்க, கக்கா போக, கழுவ, ஆடையணிய, நடக்க, பேச, பழக சொல்லித் தர வேண்டுமோ அப்படியே நாவலுக்கும் செய்ய வேண்டி இருக்கிறது. குழந்தையின் உயிரோட்டம் தான் நம்மைக் கவர்கிறது, குழந்தையின் பாசாங்கின்மையை நாம் வருவிக்க முடியாது தான், ஆனால் டர்ஜான் போன்றொரு குழந்தையை யாராலும் டீல் பண்ணவோ குரங்கு போல பரணிலும் மேஜையிலும் தாவி பற்களைக் காட்டி சீறும் ஒரு குழந்தையைக் கொஞ்சி ரசிக்கவோ முடியாது. திருத்துதல் நாவலைப் பண்படுத்தும் பணி. திருத்தத் திருத்த ஒரு நாவல் செயற்கையாகி விடுமோ, பிளாஸ்டிக்காகி விடுமோ எனும் அச்சம் தமிழில் பலருக்கும் உண்டு. அதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் ஒரு நாவலின் மொழியை நாம் முழுக்க மாற்றி, கட் ஆண்ட் பேஸ்ட் பணிகளை அதிகமாகப் பண்ணாத பட்சத்தில் பிளாஸ்டிக் ஆகும் ஆபத்து இல்லை. அப்படி பிளாஸ்டிக்கான படைப்புகள் எழுதப்படும் போதே அப்படித்தான் இருக்கும். எடிட்டிங்கின் போதும் அது இறந்து பிறந்த குழந்தை போலிருக்கும் என நினைக்கிறேன்.

நான் விரைவில் வெளியிடப் போகும் நாவலை ஒரு தொடராக எழுதினேன். இப்போது அதைத் திருத்துகையில் 40% மேல் மாற்றுகிறேன். முக்கியமாக ஒரு எதிர்பாரா திருப்பம் வேண்டும், அது என்னவாக இருக்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தேன். நேற்று நள்ளிரவு ஒரு அத்தியாயத்தை திருத்துகையில் ஒரு புது ஐடியா கிடைத்தது. அதை நீட்டித்தால் சுவாரஸ்யமான திருப்பம் கிடைத்தது. அது மட்டுமல்ல, நாவலின் வடிவத்தை மிகவும் புதுமையாக மாற்றுவதற்கான ஒரு ஐடியாவும் கிடைத்தது. அது நாவலின் தலைப்புக்கு பொருந்தியும் வந்தது. ஒருவேளை நான் நேற்று நள்ளிரவு உட்காராவிட்டால் இது நடந்திருக்காது. இது தான் எடிட்டிங்கின் மேஜிக்.

தொடராக எழுதும் போது நமக்கு இந்தளவுக்கு அவகாசம் நிச்சயம் இருக்காது. அதனாலே தொடராக எழுதப்பட்டு அப்படியே பதிப்பிக்கப்படும் நாவல்களில் நிறைய குறைகள் நிச்சயம் இருக்கும். அந்த குறைகளையும் மீறியே அவை ரசிக்கப்படும். நானே சில தொடர்களைப் படிக்கையில் சம்மந்தப்பட்ட எழுத்தாளர்களை அழைத்து 18வது அத்தியாயத்தை முதல் அத்தியாயமாக கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என்பது போல சொல்லியிருக்கிறேன். ஆனால் என்ன பயன்?

அசோகமித்திரன் தனது நாவல்களை மிக மிக சுருக்கமாக எழுதுபவர். ஆனால் அவற்றைக் கூட கையெழுத்துப் பிரதியாகவே நான்கைந்து முறை திரும்பத் திரும்ப எழுதுவார் என என்னிடம் கூறியிருக்கிறார். 5-10 வருடங்கள் கூட அவர் எடுத்துக் கொள்வதுண்டு. சு.ரா தன் நாவல்களை மிகக்கராறாகத் திட்டமிட்டு எழுதுவார். இமையமும் அபாரமாக தன் நாவல்களைத் திருத்தும் திறன் பெற்றவர். பா.வெங்கடேசன் தன் நாவல்களை அவற்றின் கதையமைப்பில் மாற்றம் கொண்டு வருவதற்காக ஒட்டுமொத்தமாக திரும்ப எழுதக் கூடியவர். ஆனால் அசோகமித்திரனை, சு.ராவை, இமையத்தை, பா.வெயைப் போன்றவர்கள் தமிழில் அரிதானவர்கள். அப்படியே எழுதி பதிப்பது தான் இங்கு பிரசித்தமான முறை. இதனால் அந்நாவல்கள் மோசமானவை அல்ல. ஒரு நல்ல நாவலை திருத்துகையில் அது ஒரு படி தரத்தில் உயரும். ஒரு மோசமான நாவலை எவ்வளவு திருத்தினாலும் காப்பாற்ற முடியாது. சார்லஸ் டிக்கன்ஸின் நாவல்களில் வரும் அனாதை இல்லக் குழந்தைகளைப் போன்றவை நமது நாவல்கள். சில பிச்சைக்காரனாகும், சில தெருவில் திருடும், சில படித்து உழைத்து பெரிய ஆளாகி சமூகம் நன்மதிப்பு பெறும்,  தக்கன பிழைக்கும்.

ஒரு நண்பர் என்னிடம் இதைப் பற்றி கேட்கையில் திருத்திக் கொண்டே இருந்தால் அதிலேயே பல வருடங்கள் போய் விடாதா என்று கவலை தெரிவித்தார். ஒரு எல்லை உண்டு. ஒரு நாவலின் முடிவு சரியாக அமைகையில் அந்த எல்லை நமக்குப் புலப்பட்டு விடும். அங்கு நிறுத்தி விட வேண்டும் என நினைக்கிறேன். ஆம், சொல்லமைவுகளை, வாக்கியங்களை மேலும் மேலும் திருத்தலாம், மாற்றி மாற்றி அமைக்கலாம், தொனியை மாற்றலாம், ஆனால் அத்தகையை திருத்தங்கள் ஒரு நாவலுக்கு இரண்டாம் பட்சமானவை. ஒரு அளவுக்கு மேல் அவ்வகை பிழைகளை அனுமதித்து விடலாம்.

தகவல் பிழைகள்? அவற்றை ஒரு நண்பரோ வெளி எடிட்டரோ தான் சரியாகக் கண்டுபிடித்து சொல்ல முடியும். 

இன்னொரு விசயம், நீங்கள் என்னதான் சொன்னாலும் நான்கைந்து முறையாவது ஆற அமர ஒரு நாவலைத் திருத்தி அதில் விளையாடி, அதனால் விளைந்த நல்ல மாற்றங்களை அனுபவித்த ஒருவருக்குத் தான் நான் இங்கு சொல்லியுள்ள விசயங்களை மனதார ஏற்றுக் கொள்ள முடியும். எப்படி புரியாத வரை ஒரு மொழியின் மீது ஆர்வம் வராதோ அப்படித்தான் இவ்விசயமும். நாவலைத் திருத்தும் பணியில் ஒரு மேஜிக் நிகழும். அப்போது அது ஒரு கலையாகும். அதை ரசித்துணர்ந்த ஒருவருக்கு அது ஒரு படைப்பனுபவத்துக்கு ஓரளவுக்கு அருகில் வரும் மகிழ்ச்சியைத் தரும். அவர்கள் இந்த நேரத்தைக் கொண்டு இன்னொரு நாவலை எழுதியிருக்கலாம் என புலம்ப மாட்டார்கள். எண்ணிக்கையில் என்ன இருக்கிறது?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...