வேறு ஒருவரின் பொங்கல் வாழ்த்துகள் பதிவில் நண்பர் பால்ராஜ் துளசிரா இப்படி எழுதியிருக்கிறார். இதைப் போல வேறு பலர் என்னிடம் போன் செய்து சொல்லுகிறார்கள். புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த போதும், என்னுடைய நூல் வெளியீட்டின் போதும் சொன்னார்கள். புத்தகக் கண்காட்சி வெளியில் ஒரு இலக்கிய அமைப்பை சேர்ந்த நண்பர் என் கையைப் பற்றிக் கொண்டு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார் - "உங்கள் எழுத்தில் உண்மை இருக்கிறது. படிக்கும் போது அது வெளிப்படையாகவே தெரிகிறது."
மனித உறவுகள், நடத்தை, குடும்ப உறவுகள் பற்றி பாசாங்கின்றி எழுதுகிறேன் என்றார். "அப்படி எழுதுவதால் சிலர் என்னை வெறுக்கக் கூடும் என்றறிவேன். ஆனால் அது என் மீதானது, ஒரு கருத்தின் மீதானது என்றும் அறிவேன். அதனால் பிரச்சினையில்லை." என்றேன்.
வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடியாதோர் நேரடியாக என்னைக் காணும் போது வந்து பாராட்டும் போது வெளிப்படையாகப் பேசுவோருக்கு இங்கு எந்தளவுக்கு பஞ்சம் நிலவுகிறது, சமூகவலைதள யுகத்தில் status quoஐ ஒட்டி எழுதுவோராக நாம் எந்தளவுக்கு மாறிவிட்டோம் என வியப்பேற்படுகிறது. போனிலோ நேரிலோ பேசும் கருத்துக்களை வெளிப்படையாக எழுத அஞ்சுகிறார்கள் - தம்மை பிற்போக்கு என சொல்லிவிடுவார்களோ எனும் அச்சம். இந்த உலகில் எத்தனையோ பித்தலாட்டங்கள் உள்ளன. அவற்றை நாம் வெளிப்படையாகப் பேசுவதே அவற்றை எதிர்க்கும் வழி. பார்ப்பனிய, சனாதன, இந்துத்துவ எதிர்ப்பு மட்டுமே எதிர்ப்பு அல்ல. உங்கள் பக்கத்தில் உள்ள அவலங்களைப் பற்றி பேசுவதும் தான்.
இனிமேலும் இப்படித்தான் இருப்பேன்.
ஆனால் யாருடைய கண்ணையும் நான் திறப்பதாக நம்பவில்லை. ஆனால் மக்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றை, அவர்களுக்கு இதுதானே நிஜம் எனத் தோன்றும் ஒன்றை, ஆம் அது தான் வேறொன்றுமில்லை என நான் சொல்கிறேன். எனக்குத் தெரிந்த அளவில் இப்போதைக்கு இதுதான் சரி என்கிறேன். அதைத் தாண்டி எல்லாராலும் ஏற்கத்தக்க, எல்லாருடைய நெஞ்சையும் நக்குகிற கருத்துக்களில் எனக்கு ஆர்வமில்லை, அவை நமக்குத் தேவையுமில்லை என்கிறேன். அரசியல் சரித்தன்மை தேவையில்லை என்கிறேன்.
அவ்வளவு தான்!
கருத்துகள்