இம்முறை நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது ஒரு வினோதமான வழக்கறிஞரைப் பார்த்தேன். பொதுவாக நம் வழ‘க்கறிஞர்கள்’ இப்படீன்னா இப்படீங்க, அப்படீன்னா அப்படீங்க என்று பேசுவார்களே தவிர நியாயம், நீதி என்றெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் இம்முறை ஒரு விசித்திரமான மனிதர் கறுப்பு அங்கி அணிந்து வந்திருந்ததைப் பார்த்தேன். அவரது கட்சிக்காரர் ஒரு ஆண். ஒரு தகப்பன். மனைவியிடம் இருந்து மணவிலக்கு பெற்று வாழ்கிறார். அப்போது குழந்தையைப் பார்ப்பதற்காக கொடுக்கப்பட்ட மனுவிற்கு நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கி இருந்தது. ஆனால் வழக்கம் போல இந்த தாய்க்குலமும் நீதிமன்றம் வழங்கிய தேதியில் குழந்தையைக் காட்ட மறுத்து விட்டது. இது அடிக்கடி நிகழ்கிற ஒன்று. ஏனென்றால் நீதிமன்ற தீர்ப்பை பொதுவாக பெண்கள் மீறினால் தண்டனை இல்லை, கண்டனம் மட்டும் தான். அதனால் குழந்தையை தகப்பன் பார்க்க அனுமதிக்கும் தீர்ப்புகளை சுலபமாக மீறி விட்டு நீதிபதி முன் வந்து பல சல்ஜாப்புகளை சொல்வார்கள். நீதிபதியும் ‘இது ஒரு குடும்பப் பிரச்சினை தானே’ எனும் கணக்கில் சற்று மென்மையாக டீல் செய்வாரா இதை பயன்படுத்தி தொடர்ந்து தீர்ப்பை மதிக்காமல் தகப்பனை அலைகழிப்பார்கள். அவரும் திரும்பத் திரும்ப நீதிமன்றம் வந்து மனு போட்டுக் காத்திருப்பார். ஒரு கட்டத்தில் அவர் வெறுத்துப் போய் ஓடிவிடுவார் என்பது மனைவி தரப்பினரின் நம்பிக்கை.
இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் நீதிமன்றம் இப்படியான தீர்ப்பு அவமதிப்புகளை சுலபத்தில் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி தண்டிப்பதில்லை என்பது. இதுவே ஒரு கணவன் தான் மாதாமாதம் அளிக்க வேண்டிய ஜீவனாம்சத் தொகையை ஏதோ ஒரு காரணம் காட்டி தட்டிக்கழித்தால் நீதிமன்றம் அவரது வங்கிக் கணக்கை உறைய வைக்கும். அதற்கும் மசியவில்லை என்றால் மிரட்டிப் பார்க்கும். அப்போதும் கூலாக வந்து நின்றால் அவரை ஒரு மாதம் சிறையில் வைக்கும். இப்படி தீர்ப்பை எந்தவிதத்திலும் ஒரு ஆண் மீற முடியாதபடி நீதிமன்ற நடைமுறைகள் உள்ள போது பெண்களுக்கு இத்தகைய சிக்கல்கள் ஏதுமில்லை - ‘குடும்பநல’ நீதிமன்றம் அவர்களுக்கு தாய் வீடு தான்.
நமது சட்டம் என்ன சொல்லுகிறதென்றால் ஒரு தகப்பனுக்கு தன் பிள்ளையைப் பார்ப்பதற்கான எல்லா உரிமைகளும் உள்ளன. அவன் ஒரு மோசமான முன்னுதாரணமாகவோ வன்முறையாளனாகவோ குற்றவாளியாகவோ அல்லாதபட்சத்தில் அவனுடைய உரிமையை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த சட்டம் கடுமையாகப் பின்பற்றப் படுவதில்லை. ஏனென்றால் குடும்பநல சட்டமே பெண்களுக்காக இயற்றப்பட்டது அல்லவா?
அதனால் நீதிமன்றம் என்னதான் குழந்தையைப் பார்க்கும் உரிமையை வழங்கினாலும் முன்னாள் மனைவியுடன் இந்த நபர் நல்லுறவில் இருந்தால் ஒழிய அவரால் தன் குழந்தையை குறித்த தேதிகளில் பார்க்க முடியாது. (இதுவே மாறி நடந்தால் - அம்மாவிடம் இருந்து குழந்தையைக் கொண்டு வந்து அவருக்கு காட்ட மறுத்தால் அதைச் செய்த கணவர் மீது கடத்தல் வழக்கு போட்டு சிறையில் தள்ளிவிடுவார்கள்.) ஆண்களுக்கு இருக்கும் ஒரே வழி முன்னாள் மனைவியை விவாகரத்துக்குப் பின்னரும் நன்றாக சோப்பு போட்டு நைஸ் பண்ணி வைத்திருப்பது. அப்பெண் மனமுவந்தால் ஒழிய எந்த தீர்ப்பும் நிறைய்வேற்றப்பட மாட்டாது. அதாவது நீதிமன்றத்தைப் பொறுத்தமட்டில் பெண்கள் படிக்கும் ஸ்கூலில் அவர்களே பிரின்ஸிப்பால்.
நீதிமன்றமே ஒரு தீர்ப்பு கொடுத்திருக்கிறது, தகப்பன் தன் பிள்ளையை குறிப்பிட்ட நாட்களில் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது, ஆனால் அதை மீறிவிட்டு முன்னாள் மனைவியின் தரப்பினர் அதே நீதிமன்றத்துக்கு வந்து குழந்தைக்கு தன் அப்பாவைப் பார்க்க விருப்பமில்லை என்றும், குழந்தையே அதை ஒரு கடிதமாக எழுதித் தந்திருக்கிறது என்றும் வாதிடுகிறார்கள். டெக்னிக்கலாகப் பார்த்தால் இதை அனுமதிக்கக் கூடாது. இந்த வாதங்களை அந்த மனுவை விசாரிக்கும் போது வைத்திருக்க வேண்டும். அல்லது அந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுவைப் போட்டு அப்போது சொல்லியிருக்க வேண்டும். தீர்ப்பை எதிர்த்து செயல்பட்டுக் கொண்டு சொல்லக் கூடாது. ஆனால் நீதிபதி அந்த முன்னாள் மனைவியின் வக்கீலிடம் “நீங்க சொல்றதை எல்லாம் ஒப்புக்க முடியாதுங்க, சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மென்றே இருக்கு” என்று விளக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் இதற்கு ஒரு கண்டிப்பான தீர்ப்பையோ எச்சரிக்கையையோ அவர் கொடுக்கவில்லை. இன்னும் சில முறைகள் முன்னாள் மனைவி தரப்பினர் இழுத்தடிக்க வாய்ப்புண்டு அல்லவா என்று என் பக்கத்தில் வந்து உட்கார்ந்த அந்த வழக்கின் வக்கீலிடம் கேட்டேன். அவர் தான் நான் வாழ்க்கையில் பார்த்ததிலேயே மிக நேர்மையான உண்மையான வக்கீல். அவர் என்னிடம் சொன்னார் “பேமிலி கோர்ட்டில சட்டங்கள் முழுக்க பொம்பளைங்களுக்கு சாதகமா எழுதி வச்சிருக்காங்க. இது புரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தையும் பெத்துக்கிறாங்க. என்ன பண்ணுறது சார்? பைத்தியங்கள்.”
நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். இப்படியெல்லாம் யோசிப்பதென்றால் அவர் எப்படி இத்தொழிலில் பிழைக்க முடியும்? இப்படி ஒரு சட்டம் இருந்து, அதனால் ஆண்கள் வஞ்சிக்கப்பட வாய்ப்புள்ளதனால் அல்லவா பல ஆயிரம் வழக்கறிஞர்கள் சம்பாதித்து வாழ முடிகிறது? இல்லாவிட்டால் பெண்கள் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் விவாகரத்து கோரி வருவார்களா? அவர்கள் வராவிட்டால் இந்த வழக்குகளின் எண்ணிக்கை பாதிக்கும் கீழ் குறைந்து போகுமே ஐயா? வருங்காலத்தில் இந்த வக்கீல் இப்படி நீதி, நியாயம், சமத்துவம் என்றெல்லாம் யோசிக்காமல் இந்த பாரபட்சமான நிலையை நன்றாக பயன்படுத்தி சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.
சோறு தான்யா முக்கியம்!
கருத்துகள்