இன்றைய நகரமயமாக்கப்பட்ட சூழலில் பெண்கள் மட்டுமல்ல இளம்பெண்கள், சிறுமிகள் குடிப்பது, புகைப்பது, போதை மருந்தை பயன்படுத்துவது பரவலாகி வருகிறது. அங்கங்கே குடித்துவிட்டு சாலையை மறித்து தகராறு பண்ணும், சாலை விபத்தை ஏற்படுத்தும், போதை மருந்தை பயன்படுத்தி அதற்கு அடிமையாகி தற்கொலை முயற்சி பண்ணும் பெண்களைப் பற்றின செய்திகளைப் பார்க்கிறோம். அனேகமாக எல்லா கார்ப்பரேட் ஆசிரமங்களுக்குள்ளும் போதை மருந்து பழக்கத்தில் சிக்கிய ஏகப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். இச்செய்தியும் நமக்குத் தெரியும். சாலை முனையில் நின்று கப்பு கப்பென்று சிகரெட்டை ஊதித்தள்ளும் சிறுமிகளை நான் பெங்களூரில் பரவலாகப் பார்க்கிறேன். பெங்களூரில் உள்ள மதுக்கடைகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். நான் சந்திக்கும் இளம்பெண்களுக்கு பாதி பேர் பக்கத்தில் வந்தாலே சிகரெட் நெடி அடிக்கிறது. சென்னையிலும் பப்களில் இளம்பெண்கள் குடித்துவிட்டு ஆடுவதில்லையா? வீட்டில் வைத்து குடிக்கும் பெண்கள் இல்லையா? போதை மீட்பு மையம் ஒன்றிற்கு ஒரு நண்பரைப் பார்ப்பதற்காக சென்றிருந்த போது பாதிக்குப் பாதி இளம்பெண்களைக் கண்டேன். (போதை மருந்து பழக்கமானது குடியுடன் அல்லது குடிக்கு அடுத்தபடியாகவே ஆரம்பிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.) ஆனால் இதைப் பற்றின விவாதங்களை நீங்கள் டிவி, அச்சு ஊடகங்கள் எங்குமே காண முடியாது. இதைப் பேசினாலே நாம் பிற்போக்காளர் என முத்திரை குத்தப்பட வாய்ப்பதிகம். ஒதுங்கி நின்று இப்பெண்களைப் பார்த்து “பொம்பளைப் பிள்ளையா இருந்தும் எப்படி பப் அடிக்குது?” என பொருமி விட்டு அதில் தலையிடாமல் போவதே நம்மூர் வழக்கம். இந்த பொதுமக்களின் ஒரு பகுதியாகவே நமது எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களும் வருகிறார்கள். ஆக ஊடகங்களில் இருந்து பொதுமக்கள் வரை பெண் போதையாளர்களை கண்டுகொள்ளாமல் விட வேண்டும், ஆண் குடித்துவிட்டு சலம்பிக் கொண்டு போனால் அவனை குடிகாரன் என கேவலமாகப் பேச வேண்டும் என்பதே நடைமுறையாக உள்ளது. ஏன் இந்த தயக்கம்?
யோசித்துப் பாருங்கள் - குடிப்பது, போதை மருந்தை பயன்படுத்துவதற்கும் முற்போக்கு சிந்தனைக்கும் என்ன சம்மந்தம்? இதைப் பேசினால் நவீன பெண்கள் சமூக அவமதிப்பை சந்திப்பார்கள் என்றால் குடிக்காமல் இருப்பது, போதை மருந்துகளைத் தவிர்ப்பது அப்பெண்களுக்குத் நலம் பயக்கும் தானே? ஆணுக்கு பாதகமாக இருக்கும் ஒரு பழக்கம் பெண்ணுக்கு மட்டும் ஏன் சுதந்திரமாக, சமத்துவமாக, முன்னேற்றமாக, முற்போக்காக பார்க்கப்படுகிறது? நாம் இந்த பாசாங்கைப் பற்றி விவாதிக்க வேண்டும்.
ஊடகங்களுக்கு முதலில் வருகிறேன். அண்மையில் ஒரு பத்திரிகையாளர் என்னை குடும்பநல நீதிமன்ற விவகாரங்களைப் பற்றி பேட்டி எடுத்தார். அவர் அப்போது தான் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் அருள் துமிலனிடம் பேட்டி எடுத்து அதை ஒரு வெகுஜன பத்திரிகையில் பிரசுரிக்க கொண்டு சென்ற போது அதைப் போட முடியாது என மறுத்துவிட்டார்கள் என்பதை சொன்னார். “ஏதாவது பெண்கள் பிரச்சினைன்னா எழுதி எடுத்து வாங்க, போடலாம். ஆம்பளைங்க கவலைகளை எல்லாம் போட முடியாதுங்க.” என்று எடிட்டர் சொல்லியிருக்கிறார். நான் அவரிடம் சொன்னேன், “நீங்கள் அதை இலக்கிய, இடைநிலை இதழ்களில் கூட போட முடியாதுங்க. வணிக இதழ்களுக்காவது வணிக நோக்கம் இருக்கும், ஆனால் இலக்கிய பத்திரிகை ஆசிரியர்களை நடத்துவதும் நவமுதலாளித்துவ சிந்தனை தானே? அதனாலே அவர்களும் இது பெண்களுக்கு எதிரான சிந்தனை என்று கூறி புறக்கணித்துவிடுவார்கள். ஆண்களைப் பற்றி பேசினாலே அது பெண்களுக்கு எதிரானதாக எப்படி ஆகும் என யோசிக்க மாட்டார்கள்.” அண்மையில் ஒரு டிவி விவாத நிகழ்ச்சி இயக்குநரிடமும் இதைப் பற்றி விசாரித்த போது தமது நிறுவனத்தின் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டே நிகழ்ச்சியை எடுக்க வேண்டி இருக்கிறது, அதில் ஒரு முக்கிய விதி பெண்களை விமர்சிக்கும் நோக்கில் எதையும் நிகழ்ச்சியில் பேசக் கூடாது என்பது என்றார். பேஸ்புக்கில் கூட நான் இதை பிரசுரித்தால் நான்கு பெண்கள் போய் ரிப்போர்ட் அடித்தால் அதைத் தூக்கிவிட்டு என்னையும் தடை செய்துவிடுவார்கள். அட ஏன் இப்படி? நவமுதலாளிகள் ஏன் இவ்வளவு தீவிர ‘பெண்ணியவாதிகளாக’ இருக்கிறார்கள்? சந்தை பொருளாதாரம் தான் காரணம்.
இன்று பெண்கள் நவதாராளவாத சந்தையின் பிரதான வாடிக்கையாளர்களாக மாறி வருகிறார்கள். ஆண்கள் நீண்ட காலமாகவே இருக்கிறார்கள், ஆனால் பெண்கள் புது வரவு. அதனால் அவர்களை விமர்சித்து நுகர்வில் இருந்தோ, சந்தையில் பங்கேற்பாளர்களாகவோ செயல்படும் அவர்களை ஊக்கமழிக்க கூடாது என நவமுதலாளிகள் நினைக்கிறார்கள். அவர்களுடைய இந்த வணிக நோக்கமே இன்று பால் சமத்துவமின்மையாக, ஆண்கள் மீதான தொடர் அவமதிப்பாக மாறியிருக்கிறது.
போதைப் பழக்கத்தை எடுத்துக் கொண்டால் பெண்கள் எந்தளவுக்கு அதிக அளவில் குடிகாரர்கள் ஆகிறார்களோ அந்தளவுக்கு மது உற்பத்தியாளர்கள், கடைகாரர்கள், பப்கள், இந்த அமைப்புகளை சார்ந்திருக்கும் உணவகங்கள், பொழுதுபோக்கு கேளிக்கை இடங்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், கார் நிறுவனங்கள் என பலரும் இரட்டிப்பு லாபமடைவார்கள் (பெண்கள் வெளியே வந்து சமூகமாக்கல் செய்தாலே இந்த பண்டங்கள் அதிகமாக விற்பனையாகும், சமூகமாக்கலுக்கு மது போதை ஒரு முக்கிய ஊக்கி.). ஆக நவமுதலாளிகளின் இன்றைய அடிப்படையான தேவை பெண்கள் குடிப்பதை, புகைப்பதை இயல்பாக்குவதே. நவமுதலீட்டிய லாப நோக்கு சிந்தனையே நமது தமிழ் சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்களின் நுண்ணுணர்வாகவும் உருமாறுவதால் அவர்களும் இந்த இயல்பாக்கம் அவசியம் என நினைக்கிறார்கள். ஊடகவியலாளர்கள், ஊடக முதலாளிகள் என பலரும் இந்த இயல்பாக்கத்துக்காக வேலை செய்தாக வேண்டும் என மறைமுக அழுத்தம் உண்டு. ஆனால் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும் முடியாது. அதனால் அதற்கு பெண்ணுரிமை, பெண் சமத்துவம், பெண்கள் எல்லாரும் பாவம், குடிக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு, அவர்களை வைத்து இதை பொருட்டாக்கிப் பேசலாகாது, இது ஒரு பிரச்சினையே இல்லை எனப் பேசுவார்கள். ஆனால் இவர்களுடைய சொந்த மகளோ தங்கையோ போதை அடிமையானால் என்ன செய்வதென தத்தளித்துவிட்டு அதை அப்படியே மறைத்துவிடுவார்கள். போதைப் பழக்கம் ஆணைப் போன்றே பெண்ணையும் சிறுகசிறுக அழித்து செயல்படத் தகுதியற்றவர்களாக ஆக்கும். ஆண்களை விட சற்று கூடுதலாகவே இது பெண்களை பாதிக்கும் என்கிறது அறிவியல். ஆனால் இது நவமுதலீட்டிய சந்தையின் அத்தியாவசிய தேவையாக இருப்பதால் நாம் இதைப் பேசுவதே பாவம் என நினைக்கத் தலைப்படுகிறோம்.
என்னுடைய கோரிக்கை எல்லாமே பெண் குடிக்கிறாள், பெண் புகைக்கிறாள் என்பதாலே அதை இயல்பாக்காமல் இருக்க வேண்டும். அதைப் போலவே அதை மிகைப்படுத்தி வானுக்கும் பூமிக்குமாக குதிக்காமலும் இருக்க வேண்டும். இதை ஒரு சமூகப்பிரச்சினையாக, உடல்நல சீர்கேடாக மட்டுமே பேச வேண்டும். முக்கியமாக பால் சமத்துவத்துடன் இப்பிரச்சினையை அணுக வேண்டும்.
கருத்துகள்