"We're here to win - whether it's two days or five days, it doesn't really matter. We don't want to prepare a pitch where the results are not coming. We are here to win." - Rohit Sharma
ரோஹித்தின் இந்த கருத்து மிக மட்டமானது - இப்படியான ஆடுதளங்களில் உருட்டி உருட்டி இந்திய மட்டையாளர்கள் தம் ஆட்டத்திறனை இழக்கப் போகிறார்கள். ஒரு ஆடுதளம் எல்லா வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். வெறுமனே சுழலர்கள் மட்டும் செயல்பட எதற்கு ஒரு டெஸ்ட் போட்டி? கடந்த மூன்று போட்டிகளிலும் அதற்கு முன் வங்கதேசத்தில் நடந்த போட்டிகளிலும் ஒருவர் கூட சதமடிக்கவில்லை.
வேகப்பந்து வீச்சாளர்களும் மொத்தமாக இருபது ஓவர்கள் கூட் வீசுவதில்லை. ஒரே ஒரு வேகவீச்சாளருடன் ஆஸ்திரேலியா இரண்டாவது போட்டியில் ஆடியது. என்னவொரு அவலம். 1930களில் தான் இந்தியா இப்படி ஆடியது. நாம் 90 ஆண்டுகள் பின்னால் போய் விட்டோம். ஆஸ்திரேலியாவைத் தவிர அனேகமாக எல்லா கிரிக்கெட் ஆடும் நாடுகளும் இப்படி பந்துவீச்சுக்கு மிக அதிகமாக ஆதரவளிக்கும் ஆடுதளங்களை உருவாக்கி ஆட்டம் 3 நாளுக்குள் முடிந்தால் ஓக்கே எனும் சமாதானத்துக்கு வந்துவிட்டார்கள். இதற்கு ஒரு முக்கிய காரணம் டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற புள்ளிகளைப் பெறும் ஆவேசம். டெஸ்ட் போட்டி வடிவத்துக்கு தெம்பளிக்க உருவாக்கப்பட்ட உலக டெஸ்ட் போட்டித்தொடர் எனும் திட்டம் டெஸ்ட் வடிவத்தையே சிதைத்து விட்டது.
இதை சரி செய்ய இரண்டு விசயங்களை ஐ.சி சி செய்ய வேண்டும்:
அயல் நாடுகளில் ஆடும் போட்டிகளில் பெறும் வெற்றிக்கு இரண்டு மடங்கு அதிக புள்ளிகளை அளிக்க வேண்டும். அத்துடன் ஆறாத அப்பத்தை வாயிலிட்டு திணிப்பதைப் போல கிரிக்கெட் ஆடுவது முடிவுக்கு வரும். சமநிலை வரும்.
அடுத்து, இங்கிலாந்து டெஸ்ட் அணி செய்வதை பிற அணிகளும் செய்ய வேண்டும் - Bazball. அதற்கு ஒரு அணி வெற்றி பெறும் போட்டிகளில் 5க்கு மேல் சராசரி ரன்ரேட்டுடன் மட்டையாடினால் மட்டுமே இரட்டிப்பு புள்ளிகள் என bazball விதியை உருவாக்க வேண்டும். அப்போது மெதுவான, பவுன்ஸ் இல்லாத, முதல் ஓவரிலே பம்பரம் போல் திரும்புகிற ஆடுதளங்கள் ஒழிந்துவிடும். ஆட்டம் இயல்பாகவே 5வது நாள் வரை போகும்.
கருத்துகள்