ஜெயமோகனைப் போல நேர மேலாண்மை செய்ய வேண்டும், எழுத்து, அது குறித்த அக்கறைகளுக்காக நேரத்தை அளந்து பயன்படுத்த வேண்டும், முழு இதயத்துடன் எழுத்துக்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும், ஒப்புக்கொடுத்த பின் நம் எழுத்தின் தரத்தை, முக்கியத்துவத்தை முழுமையாக நம்ப வேண்டும், இளம்பிரயாயத்தில் ஒரு அழகியை நேசித்து பித்தாவதைப் போல எழுத்தின் பின்னே சுற்ற வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன். நாம் நினைப்பது நடக்கவில்லையா? அதை நாமே நிகழ்த்திப் பார்க்க வேண்டும். அதற்காக எதையும் பயன்படுத்த, செய்ய தயங்கக் கூடாது என்பது ஒரு எழுத்தாளனாக அவர் வாழ்வின் முக்கியமான சேதி.
ஒரு எழுத்தாளனாக என்னுடைய அர்ப்பணிப்பு, கடப்பாடு, பித்து முழுக்க நான் அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டதே. கீதையில் கிருஷ்ணர் சொல்வார், போர் என்று வந்துவிட்டால், நீயும் போரும் வேறுவேறல்ல, நீ அதுவாக ஆகிட வேண்டும், நீ ஆயுதத்தை பயன்படுத்தவில்லை, நீதே அந்த ஆயுதம், அதன் பிறகு செயலே உன் பொறுப்பு, செயலுக்கு நீ பொறுப்பல்ல (என் மொழியில் கருத்தைக் கொடுத்திருக்கிறேன்.) ஜெயமோகனைப் பார்க்கையில் எனக்கு இந்த பார்வையே நினைவு வரும். தன் சுவடுகளைத் திரும்பிப் பார்த்து அவர் விசனிப்பதில்லை. புனைவு வெளியில் அவர் செய்வது ஒரு யுத்தம். பிணங்கள் அல்ல, அடுத்தடுத்து நம்மை நோக்கி வரும் தலைகளைக் கொய்வதே முக்கியம். அதுவே நம் கடமை. ரத்தவெள்ளத்தில் குளித்தெழுந்து வருவதே ஒரு எழுத்தாளனின் தர்மம். அதன் காரணகாரியங்களை, நியாய தர்மங்களை அலசுவது அல்ல. இத்தனைக் காலமும் அவர் அப்படித்தான் எழுதி இருக்கிறார். ஒரு குருச்சேத்திரத்தையே நிகழ்த்தி இருக்கிறார்.
ஜெயமோகனிடம் இருந்து கற்றுக்கொள்ள எத்தனையோ நல்ல விசயங்கள் உள்ள போது நாம் அவரது கருத்துக்கள் எனும் லீசா விலாசங்களின் பின்னால் போய் நேரத்தை தொலைக்கிறோம் என்பது இச்சூழல் குறித்த என் வருத்தங்களில் ஒன்று. ஒருவர் அவருடன் இருக்கும் போதும் அவர் சொல்வதைக் கேட்காமல் அவர் செய்வதை மட்டும் பார்க்க வேண்டும், அவர் முழுமையாக எப்படி தன்னைக் கொடுக்கிறார், திரும்பிப் பார்க்காமல் எப்படி நடந்துகொண்டே இருக்கிறார் எனப் பார்க்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அவர் சிந்தனையாளரோ தத்துவவாதியோ அல்ல, செயலில் தன்னைக் காணும் ஒரு எழுத்தாளன். அதை மட்டும் அடியொற்றி செய்தாலே நாம் நம் வாழ்வில் பெரும் வெற்றிகளை எட்டலாம்.
ஜெயமோகனை நான் என் இளமையில் சந்திக்காவிடில் நான் முழுக்க வேறொரு மனிதனாக இருந்திருப்பேன் என ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். அதையே அவரது பிறந்த நாளுக்கும் சொல்கிறேன்.
ஜெயமோகன் நீடூழி வாழ வேண்டும். அவரது உடலில் இருந்தும், உடலின் இருத்தலில் இருந்து தன்னை விலக்காது ஒன்றிப் போய் விட்ட அவரது காண்டீபத்துக்கும் இலக்கில் இருந்து கண்ணெடுக்காத அம்புகளுக்கும் என் முத்தங்கள்.
கருத்துகள்