நான் திரைத்துறையை சாராமல் வெளியே இருந்து திரைக்கதைக்கு தமிழில் உள்ள இடமென்ன என்று பார்க்கையில் பெரும்பாலான படங்கள் தோல்வியடையவோ பார்வையாளர்களின் மனதைத் தொடாமல் போக காரணம் திரைக்கதையில் உள்ள அடிப்படையான பிழையே என்று தோன்றுகிறது. இதையே வேறு சில நண்பர்களும் கூறி இருக்கிறார்கள். ஆனால் நானும் வெகு சிலருமே இப்படி நம்புகிறோம் என நினைக்கிறேன். ஏனென்றால் வெகுஜன ஊடகங்களில் பலரும் அப்படி நினைப்பதில்லை. அண்மையில் ராஜூ முருகனின் “லாலாகுண்டா பொம்மைகள்” பார்த்தேன். அது தழுவி உருவாக்கப்பட்ட கதைதான் என்றாலும், தேய்வழக்கான கதையே என்றாலும் அதில் ஒரு நேர்த்தி இருந்தது - கதைக்குள் ஒரு வளர்ச்சி இருந்தது, பாத்திரங்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட இயல்பு, உடல்மொழி, ஒரு துவக்கம் முடிவு இருந்தது, கதை முடியும் போது நாயகி கற்றுக்கொள்ளும் பாடம் என ஒன்றும் இருந்தது, அது அப்படியே பார்வையாளர்களுக்கும் ஓரளவுக்கு கடத்தப்படுவதாலே அப்படம் கவனிக்கப்பட்டது. ஒரு கட்டிடத்தை கட்டுமுன் திட்டமொன்றை வரைவதைப் போன்ற எளிய விசயம் தான், ஆனால் அதில் பலரும் மெனெக்கெடுவதில்லை என்பது கண்கூடு.
அண்மையில் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்து, பின்னர் நகைச்சுவை நடிகராக மாறின செம்புலியின் பேட்டியைப் பார்த்தேன். சில படங்களுக்கு திரைக்கதையை முடிக்க ஒரு வருடத்தைக் கூட பாக்யராஜ் எடுத்துக் கொண்டதாகவும், அப்படி எழுதிய கதையிலும் படம் முழுக்க தேவையானபடி திருத்தம் கொண்டே இருப்பதாகவும் சொல்கிறார் செம்புலி. இன்று ஒரு இயக்குநர் அந்த காலத்தில் இரண்டு, மூன்று படங்களை முடித்து விடுவார். பாக்யராஜே இன்று படமெடுக்க வந்தாலும் அந்தளவுக்கு திரைக்கதையில் நேரம் செலவிடுவாரா என்பது சந்தேகமே.
நாற்பதுகள் முதல் எழுபதுகள் வரையிலான தமிழ் சினிமாவின் வரலாற்றைக் காணும் போது அன்றைய ஸ்டுடியோ முதலாளிகள், தயாரிப்பாளர்கள் திரைக்கதையை வெகுவாக நம்பியதைக் காண்கிறோம். யார் வேண்டுமானாலும் இயக்கலாம், ஆனால் பிரசித்தமான பாடகர் / நடிகர் முன்னிலை பாத்திரத்தில் வேண்டும், சிறந்த திரைக்கதையும் அவசியம் என நம்பினார்கள். சில படங்களுக்கு திரைக்கதையை எழுதி, நடிகர்களை ஒப்பந்தம் பண்ணிய பிறகு தான் இயக்குநரைப் பிடிப்பார்கள். பாகவதர், எம்.ஜி.ஆரில் இருந்து ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார்கள் உருவான காலம் வரையிலும் கூட இந்த நிலை இருந்தது. ஒரு கட்டத்தில் சொந்தமாக கதையும் திரைக்கதையும் எழுதி இயக்கும் சாதனையாளர்கள் சிலர் வந்தார்கள். அவர்களால் திரைக்கதையாளர்களிடம் இடம் சற்றே குறையத்தொடங்கியது. அதன் பிறகு நல்ல இயக்குநரும் சூப்பர் ஸ்டார் நடிகர்களும் ஜோடி போட்டு படம் எடுத்தால் ஓடும் எனும் நிலை வந்தது. அப்போதும் திரைக்கதைக்காக மெனெக்கெட்டார்கள். ஆனால் இந்த ஜோடி கூட பிரிந்து சிறந்த இயக்குநர்கள் / நடிகர்கள் எனும் குதிரைகள் மீது மீது தனித்தனியாக பணம் கட்டினால் படம் ஓடும் எனும் எண்ணம் ரெண்டாயிரத்துக்குப் பிறகு பரவலாகியது. நட்சத்திர இயக்குநர்கள் நான்கைந்து பேர் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் வர ஆரம்பிக்க திரைக்கதையாளர்கள் வசனகர்த்தாவானார்கள், பின்னர் விவாதத்துக்கு வருகிறவர்கள் மட்டுமானார்கள். அவர்களிடம் கேட்டால் எழுத்தாளர்களுக்கு திரைக்கதை எழுத வரவில்லை என்கிறார்கள். அதிலும் உண்மை இருக்கலாம் - எங்கோ ஒரு தொடர்பு அறுந்து போய்விட்டது. அதுதான் திரைக்கதை துறையின் வீழ்ச்சிக்கு பிரதான காரணம் என நினைக்கிறேன். ரெண்டாயிரத்தில் சிடியில் வெளிநாட்டுப் படங்களை பார்த்து கதையை உருவக் நினைத்தார்கள் என்றால் இணையம் வந்த பின்னர் பல இடங்களில் இருந்து சுலபத்தில் உருவி கதையைப் போல ஒன்றை உருவாக்கினால் போதும், நட்சத்திரம் பட்டாளம் கூட்டணி சேர்ந்தால் படம் ஓடும் எனும் நிலை உருவாகி விட்டது. சினிமா ஒரு வணிகம், அங்கு வியாபாரம் ஆவது, அவ்வாறு நம்பப்படுவது தான் மதிக்கப்படும்.
ஆனால் இந்த விதி வேலை செய்யாத காலம் இன்று தான் - கதை மனதைத் தொடவில்லை என்றாலோ காட்சி அனுபவம் பரபரப்பாக இல்லையென்றாலோ அப்படம் நட்சத்திர நடிகருடையது என்றாலும் நிராகரித்து விடுகிறார்கள். ஆம், தீவிரமாக மார்க்கெட்டிங் செய்து விற்றுவிட முடியும். ஆனால் அதுவும் ஓரளவுக்குத்தான் முடியும். இவ்வளவு நடிகர்களும் ரஹ்மானும் மணிரத்னமும் இருந்தும் “பொன்னியின் செல்வன்” எனும் உள்ளடக்கம் தேவைப்படவில்லையா? அதை வைத்து தானே (சோழர்களின் காலம், அருண்மொழி வர்மன்) கூவி விற்றார்கள். ஓடிடிகளின் வருகையுடன் இன்று மீண்டும் நல்ல கதைகளுக்கு, திரைக்கதைகளுக்கு ஒரு தேவை உருவாகி வருகிறது.
குறிப்பாக சிறிய படங்களை எடுப்பவர்கள் மேலும் திரைக்கதையில் மெனெக்கெட வேண்டும். பெரிய படங்களை போல செய்யாமல் சிறிய பட்ஜெட்டுக்கு ஏற்ற கதையென்ன என யோசிக்க வேண்டும். என்னதான் கிரிஞ்சாக இருந்தாலும் “அயோத்தி”யும், “டாடாவும்” இதற்கு சிறந்த உதாரணங்கள். அதே போல திரைக்கதையாளர்களுக்கு நியாயமான சன்மானத்தை, முன் தொகையை அளிக்க வேண்டும். நடிகர் மணிகண்டன் சொல்வதைப் போல ஊடகங்களில் பலரும் திரும்பத் திரும்ப பேச வேண்டும். நல்ல திரைக்கதையுடன் ஒரு படம் வந்தால் நடிகர்களை மட்டும் முன்னிலைப்படுத்தாமல் அதில் கதையின் முக்கியத்துவம், அதன் வடிவம் பற்றி ஊடகங்கள் பேச வேண்டும். திரைக்கதையாளனுக்கு ஒரு பிம்பத்தை ஏற்படுத்தினாலே சந்தை மதிப்பு தோன்றும், சந்தை மதிப்பு வந்தால் ஊதியமும் உயரும் என நம்புகிறேன்.
கருத்துகள்