முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்றைய ஆண்களும் இன்றைய ஆண்களும்


நான் இதை முழுக்க முழுக்க தென்னகத்தை சேர்ந்த, நகரங்களில் வாழும் மத்திய, மேல் மத்திய வர்க்க வேலை செய்யும் ஆண்களை - குறிப்பாக 70-80களுக்கு முன்பு பிறந்தவர்கள், 80-90களுக்குப் பிறகு பிறந்தவர்களை - வைத்தே சொல்கிறேன். நான் கல்லூரிகளில் வேலை செய்துள்ளதால் அங்கு அரசு ஊதியம் பெறுகிற  கடந்த இரு பத்தாண்டில் வேலைக்கு வருகிறவர்களை ஐம்பது வயதுக்கு மேலானவர்கள் மற்றும் நாற்பதுகளுக்கு கீழிருக்கும் தனியார் சம்பளம் பெறுகிறவர்களுடைய உடல் மொழியை ஒரே சமயம் பார்த்து ஒப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. அதை வைத்தே இதை சொல்கிறேன். 60-70களின் தலைமுறையை சேர்ந்த ஆண்களிடம் ஒரு ஸ்டைல் உள்ளதாக எனக்கு எப்போதுமே தோன்றியதுண்டு. நான் இதை ஒரு மாணவனாக நாகர்கோயிலிலும் சென்னையிலும் படித்த காலத்திலும் கண்டிருக்கிறேன். பின்னர் நான் இவர்களை அரசு ஊதியம் பெறாத கிராமத்து மனிதர்களுடன் (விவசாயிகள், வியாபாரிகள், வேலையே இல்லாமல் சுற்றி வருபவர்கள்) ஒப்பிடுகையில் அவர்களிடமும் தன்னம்பிக்கை பெருகும் உடல்மொழி, அலட்சியமான தோற்றம், கண்களை நேருக்கு நேராகப் பார்க்கும் பாங்கு உள்ளதை கவனித்தேன். அதன் பின்னரே இது ஸ்டைல் அல்ல, தன்னம்பிக்கையான உடல்மொழி என்று புரிந்தது. ஆனால் இந்த தன்னம்பிக்கையான உடல்மொழியை ஒரு சடங்கைப் போல நிகழ்த்த இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, அதை நான் 80-90களுக்குப் பிறகு பிறந்தவர்களிடம் காண்பதில்லை, அவர்கள் அரசு ஊதியம் பெற்றாலும் கூட ஒருவித சோம்பலான, ‘நான் ஏன் கவலைப்படணும், ஆனாலும் என்னைப் பார்க்காதே, நான் ஒதுங்கிப் போகிறேன்’, எனும் உடல்மொழியையே வெளிப்படுத்துகிறார்களே ஒழியநான் முக்கியமானவன், என்னை கவனிஎனும் உடல்மொழியை அல்ல.


இங்கு ஏன் ஆண் என்று குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு மிகையான பணிவை, தயக்கத்தை, அச்சத்தை இன்றைய ஆண்கள் அதிகமாக வெளிப்படுத்துகிறார்கள். மத்திய, மேல்மத்திய வர்க்கத்தை சேர்ந்த, கார்ப்பரேட் உள்ளிட்ட தனியாரில் வேலை பார்க்கும் பெண்களிடம் ஒரு ஸ்டைல், கெத்து உள்ளது. ஆனால் அது ஆண்களிடம் இல்லை.


என்னுடைய நண்பரான சமூகவியல் பேராசிரியரிடம் இதைப் பற்றி பேசும் போது அவர் இது தனியாரில் பலவித பாதுகாப்பின்மைகளையும், கண்காணிப்புகளையும் தம் உடல்மீது உணரும் மனிதர்களின் மொழி அது என்றார். ஒரு புதிய சமூகக் கட்டமைப்புக்குள் வரும் மனிதர்கள் அங்குள்ள எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தம் உடல்மொழியை தன்னிச்சையாக மாற்றிக் கொள்கிறார்கள், அல்லது தமது சகபணியாளர்களைக் கண்டு அவர்களுடைய உடல்மொழியை போல செய்கிறார்கள் என்றார்


இதில் இன்னொரு விசித்திரமான விசயம் - முன்பு பெண்களிடம் தலையை குனித்துக் கொண்டு நட, தலைமுடியை பறக்க விட்டுக்கொண்டு திரியாதே, அடக்கமாக இரு என அம்மாக்கள் வலியுறுத்துவார்கள். இயல்பிலேயே சுதந்திர விழைவாளர்களான, தன்னம்பிக்கை மிக்கவர்களான பெண்களை ஒரு கட்டுப்பாடான உடல்மொழிக்குள் கொண்டு வர ஆணாதிக்க சமூகம் இப்படி தொடர்ந்து முயல வேண்டி இருந்தது. ஆனால் இன்று அந்த பண்பாடு மெல்ல மெல்ல மாறி வருகிறது - கூண்டைத் திறந்துவிட்ட கிளிகளைப் போல பெண்கள் துணிச்சலையும் தன்னம்பிக்கையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் ஆண்களை யாரும் தலையை குனி, தோளை இறக்கு என்று சொல்லவில்லை என்றாலும் அவர்கள் அதையெல்லாம் செய்வதே இந்த காலத்து ஆணுக்கு அழகு என நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். பெரிதாக மீசை வளர்ப்பது ஒரு சமூகவிலக்கத்தை கோரும் செயலாக மாறிவிட்டது. முகத்தில் சற்றே பெண்மை தொனிக்க அடக்கமாகப் பேசுவதே இன்றைய நகரமய மத்திய மேல்மத்திய தனியார் பணியாளனான ஆணுக்கான உடல்மொழியாகி விட்டது


அது மட்டுமல்ல, இன்றைய நகரத்து இளைஞர்களிடம் ஒரு நீடித்த குழந்தைமையையும், இளம்பெண்களிடம் மிகச்சின்ன வயதிலேயே அபாரமான முதிர்ச்சியையும் காண்கிறேன். அதனாலே இந்த ஆண்களை பெண்கள் ஒருவித குழந்தையாகவே நடத்துகிறார்களோ என தோன்றுகிறது

ஆண்களின் நீடித்த குழந்தைமையை அவர்களுடைய பொறுப்பின்மையாக, தாழ்வுணர்வாக, திறமை குறைவாக, அதிகாரமின்மையாக இச்சமூகம் பார்க்கிறது, அவர்கள் மீதான மரியாதையை அது குறைத்துக் கொண்டே வர அவர்கள் ஒரு பக்கம் மேலும் மேலும் சோர்ந்து போகிறார்கள், மேலும் மேலும் தம்மை ஒடுக்கிக் கொள்கிறார்கள், இன்னொரு பக்கம் மது, போதைப்பழக்கம், சூதாட்டம், தூக்கமின்மை, ஒழுங்கீனம் என்னை தம்மை அழித்து எதிர்ப்பைக் காட்டுகிறார்கள், இருகூறாகப் பிளந்து போகிறார்கள். இதை நான் இந்தியாவுக்கு படிக்க வரும், இந்தியாவில் வேலைக்கு வரும் வெள்ளைக்கார ஆண்களிடம் பார்க்கிறேன். அவர்கள் நம்மை விட நான் நோக்க நிலம் நோக்கும் நங்கர்களாக இருக்கிறார்கள். இதைப் பற்றி பாலின பேத பண்பாட்டுச் சூழல், கல்வியமைப்பு, சமூக அமைப்பின் பின்னணியில் மேலும் விவாதிக்கும் Boys Adrift (Leonard Sax), The War Against Boys (Christina Hoff), The Boy Crisis (Warren Farrel) போன்ற நூல்களைப் படித்தேன். ஆக இது ஒரு உலகுதழுவிய பிரச்சினையே என்று புரிந்து கொண்டேன்


எனக்கு இது பாலின பேதம் சார்ந்த சிக்கல் மட்டுமல்ல எனத் தோன்றுகிறது; இதில் வேறு பல பரிமாணங்கள் உள்ளன - இன்றுள்ள சமூகப்பொருளாதார மாற்றங்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும், இன்றுள்ள பண்பாட்டு அழுத்தங்களால் தம்மை உருமாற்றிக் கொள்ள முயலும் இளைஞர்களின், மத்திய வயதினரின் நெருக்கடியே இது. நவீன முதலீட்டியத்தின் பல ரூபங்களை பெண்கள் சுலபத்தில் கையாள்வதைப் போல இன்றைய ஆண்களால் முடிவதில்லை. பெண்களும் இதே பொருளாதார அமைப்பினுள் இருந்தாலும், அவர்களுக்கு வேறு பல நெருக்கடிகள் இருந்தாலும், தமக்கு அளிக்கப்படும் அத்தனை கருத்தியல் சலுகைகளையும், ஆதரவுகளையும், வலுவையும் பயன்படுத்தி தன்னம்பிக்கையுடன் முன்னேற அவர்களுக்குத் தெரிகிறது. நீங்கள் கடந்த மூன்று பத்தாண்டுகளில் தமிழகத்து பள்ளிக்கூட தேர்வுமுடிவுகளில் ஆண் - பெண் சதவிகிதத்தை பாருங்கள், நான் சொல்வது புரியும். படிப்பை முடிக்க இயலாத ஆண்கள் மெல்ல மெல்ல சமூக உறவுகள், சம்பாத்தியம், காதல், திருமணம் என வேறு எல்லா சமூக அலகுகளின் படியும் வீழ்வார்கள்


இதற்கு தீர்வு ஆண்கள் பெண்களை நோக்கி கற்றுக் கொள்வதே; பெண்களின் அரசியலாக்கத்தை, சமூக அறிவை, சாமர்த்தியத்தை போல செய்வதே. மேலும், நீங்கள் உங்கள் பிள்ளைகளையும் சகோதரர்களையும் இந்த உலக எதார்த்தத்தையும் புரிய வைத்து கடுமையாக உழைக்கவும், தமது குறைகளைக் களையவும் ஊக்கப்படுத்துவதே. அவர்கள் தலையை குனிய போட்டுக்கொண்டால் தலையிலே தட்டி அதைத் திருத்துங்கள். தன்னம்பிக்கை என்றால் ஆதிக்கம் அல்ல, அது கெட்டது அல்ல என்று சொல்லுங்கள். தன் தோழியிடம் பேசும் போது முகத்தில் கூச்சமும் தாழ்வுணர்வும் வெட்கமும் இல்லாமல் பேச சொல்லிக் கொடுங்கள். மனதில் படுவதை சரளமாக உணர்ச்சிபூர்வமாக பேசுவது எப்படி என்று சொல்லிக் கொடுங்கள். இன்னொரு பக்கம், தான்தோன்றியாக, சோம்பேறியாகத் திரியும் இளைஞர்களிடம் நான் சொல்வதை சொல்லுங்கள். ஆரோக்கியமாக, வலுவாக, உழைப்பவர்களாக, துணிச்சலானவர்களாக இருப்பது முக்கியம் என்று சொல்லுங்கள். தம்மை மேலும் மேலும் அடிமையாக கருதி தப்பித்து செல்லாமல், அதனால் தமது சமூக, குடும்ப மரியாதைகளை மொத்தமாக இழக்காமல், துணிந்து முன்னேற சொல்லுங்கள். அப்படி செய்யாதவர்கள் ஒருவித ஒட்டுண்ணிகளாக மாறி நம் சமூகத்தில் பாதாள சாக்கடையில் மட்டுமே நிலைப்பார்கள் என்று சொல்லுங்கள்


அடுத்த முறை உங்களிடம் பேச வரும் இளைஞனின் முகத்தை உற்றுப் பாருங்கள். உங்கள் முகத்தையும் தோள்களையும் கண்ணாடியில் பாருங்கள். நான் சொல்வது புரியும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...